பன்முகப் பார்வையில் வள்ளிமலை முருகன் கோயில்
முனைவர் பீ. பெரியசாமி
முன்னுரை
ஆலயத்தின் பின்புறம் உள்ளது சரவணப் பொய்கை
என்ற குளம். அந்த மலையின் உச்சியில் இன்னம் ஓரு முருகன் ஆலயம் உள்ளது. ஒரே ஒரு
கல்லில் அமைக்கப்பட்டுள்ள அந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் 444 படிகள் ஏற
வேண்டும். அந்தப் படிக்கட்டுக்களின் சில இடங்களில் பக்தர்கள் இளைப்பாறிக் கொள்ள
வசதியாக தங்கும் இடம் உள்ளது. இக்கோயில்
தலத்தில் மஹாவிஷ்ணுவின் இரண்டு புத்திரிகளான வள்ளியும் தேவயானையும் சாத்வீக குணம்
கொண்ட கணவர்களை அடைய விரும்பி துதித்ததாகவும் இறுதியில் இருவரும் முருகப்பெருமான
மீதே காதல் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், புராதன காலத்தில்
இம்மலைப்பகுதியில் ஜைனம் தழைத்திருந்ததும் தெரிய வருகிறது. இங்குள்ள குகைகளில் ஜைன
பிக்குகள் வசித்திருந்ததற்கான ஆதாரமாக அவற்றின் சுவர்கள் கன்னட மொழியில் அமைந்த
சுவர்ப்பொறிப்புகள் காணப்படுகின்றன. இயற்கை அழகு, குகைகள்,
அகழ்வு செய்யப்பட்ட பாறைப்படிவங்கள், குளங்கள்
மற்றும் இயற்கைப்பசுமை போன்ற அம்சங்கள் நிறைந்து காணப்படும் வள்ளிமலைப்பகுதி
சுற்றுலாப்பயணிகளை வெகுவாக வசீகரிக்கிறது. சுப்ரமணிய சுவாமி கோயில், சரவணப்பொய்கை கோயில் மற்றும் வள்ளி கோயில் என மொத்தம் மூன்று கோயில்கள்
வள்ளிமலைப்பகுதியில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அமைவிடம்
•
ஊர்:வள்ளிமலை(பெண்ணையாறுமேற்குகரை)
•
மூலவர்:
1.ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-2கரங்கள்.
2.ஸ்ரீஆறுமுகன்-12கரங்கள்-வள்ளி தேவயானையுடன்
நின்றகோலம்
•
பொய்கை - சரவணபொய்கை,
•
தலமரம்: வண்ணி
•
வள்ளிமலை,
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே அமைந்த குன்றின் மீதுள்ளது.
•
வேலூர் - பொன்னை செல்லும் பேருந்துகள் வள்ளிமலை அடிவாரம் வழியே செல்கிறது.
•
இக்கோயில் வேலூரிலிருந்து 25 கி மீ தொலைவில் உள்ளது.
தலப்பெயர்க்காரணம்
அங்கு உள்ள முருகன் ஆலயத்தில் அவர் வள்ளி-
தெய்வானையுடன் அமர்ந்துள்ளார். வள்ளி பிறந்த
தலமாகும் மற்றும் முருகனை திருமணம் செய்த தலமாகும். வள்ளிமலைக் கோயிலின்
கருவறையில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி குறவர் வேடர் குலத்தில்
வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும்
நைவேத்யமாக படைக்கப்படுகிறது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே
இத்தலம் அழைக்கப்படுகிறது.
ஒரு சமயம் திருமால், முனிவர்
வேடத்தில் பூலோகத்தில் உள்ள வனத்தில் தவமிருந்தார். அப்போது மகாலட்சுமி, மான் வடிவில் அவர் முன்பு வந்தாள். முனிவர் மானை பார்த்தார். இதனால்
கருவுற்ற மான், வள்ளிக் கொடிகளின் மத்தியில் ஒரு பெண்
குழந்தையை ஈன்றது. அவ்வழியே வந்த வேடுவ தலைவர் நம்பிராஜன், அந்தப்
பெண் குழந்தையை எடுத்து ‘வள்ளி’ எனப்
பெயரிட்டு வளர்த்தார். கன்னிப்பருவத்தில் அவள் தினைப்புனம் காக்கும் பணி செய்தாள்.
அங்கு வந்த முருகப்பெருமான், வள்ளியைத் திருமணம் செய்ய
விரும்பினார். இதையறிந்த நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி
வள்ளியைத் திருமணம்
செய்து கொடுத்தார். பின்னர் நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க இங்குள்ள குன்றில்
முருகன் எழுந்தருளினார் என்கிறது தல வரலாறு. இத்தல மூலவர் பெயர், சுப்பிரமணியர்.
தாயார் பெயர், வள்ளியம்மை. 1000 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த
ஆலயம், முன்பு சின்னவள்ளிமலை என்று அழைக்கப்பட்டு
வந்துள்ளது. முருகனை கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில்
திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். இதனால் இங்கு பக்தர்களுக்கு திருமாலின் பாதம்
பொறித்த ஜடாரி சேவை செய்யப்படுகிறது. மலைக்கோவிலில் குடவறை சன்னிதியில், வள்ளி- தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சி தருகிறார்.
கோவில்களில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு ஒரு முறை
முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு
நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக்
கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது. ஆலயத்தின் தீர்த்தம்,
சரவணப்பொய்கை ஆகும். பொதுவாக விமானத்தின் கீழ்தான் சுவாமி காட்சி
தருவார். ஆனால், இங்கு முருகன் சன்னிதிக்கு மேலே கோபுரம்
இருக்கிறது. திருமணமாகாதவர்கள் வள்ளியுடன் கூடிய முருகனை பிரார்த்தனை செய்தால்
விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடனாக
சுவாமிக்கு தேன், தினைமாவு படைத்து, வஸ்திரம்
அணிவித்து, அபிஷேகம் செலுத்துகிறார்கள். தற்போதும் இந்தப்
பகுதியில் சித்தர்கள் தவம் புரிந்து வருவதாக கருதப்படுகிறது. அதனால் தான் அப்பகுதி
எவ்விதத்திலும் மாற்றியமைக்கப்படவில்லை. படிகளைக் கடந்து கோவிலுக்குச் சென்றால்
அங்கு நம் கண்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரே கல்லினால் குடைந்து செய்யப்பட்ட
கோவில் நம்மை அதிசயிக்க வைக்கிறது. மலையின் உச்சியில், திருமால்
கிரீஸ்வரர் கோவிலும் உள்ளது. மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை ‘சூரியன் காணாத சுனை’ என்று அழைக்கின்றனர். ஏனெனில்
அந்த சுனையின் மீது சூரியனின் கதிர்கள் விழுந்ததே இல்லையாம். இதற்கு ஒரு புராணக்
கதையும் உள்ளது. அதாவது முருகன் வயதான தோற்றத்தில் வள்ளியிடம் வந்து தனக்கு
பசிப்பதாகக் கூறி, தேனும்,
தினை மாவும் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி வள்ளியும்
கொடுத்தார். அதனைச் சாப்பிடும்போது முருகனுக்கு விக்கல் எடுத்ததாகவும், வள்ளி
ஓடோடிச் சென்று இந்த சுனையில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததாகவும்
கூறப்படுகிறது. திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில்
தடவிக் கொண்டு, ‘தனக்கு நல்ல கணவன் வர வேண்டும்’ என்று வேண்டிக் கொள்வது வழக்கம். (தினத்தந்தி மார்ச் 3, 4:00 am (Updated: மார்ச் 2, 7:07
am) https://www.dailythanthi.com/Others/Devotional/2021/03/02070738/The-blessing-of-marriage-Vallimalai.vpf
சமணதல வரலாறு
சமண சமயத்தில் 23-வது தீர்த்தங்கரராகத்
திகழ்ந்தவர் பார்சுவநாதர். இவர், முக்குடையின் கீழ் அமர்ந்த நிலையிலும் நின்ற நிலையிலும்
சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளார். முக்குடைக்குக் கீழ் ஏழு தலைகளைக் கொண்ட நாகம்
இவருக்கு அரணாகக் காட்டப்படுகிறது. எனவே, இவரை பார்சுவநாதர்
என்று கூறுவர். இவரது பாதுகாவலர்களாகவும், அவர்களின் சாசனா
தெய்வமாகவும் விளங்கியவர்கள் பத்மாவதி இயக்கியம்மனும், இயக்கன்
தர்னேந்திரனும் ஆவர். சிற்பங்களில் பத்மாவதி இயக்கியம்மன் சற்று ஒய்யாரமாக அமர்ந்த
நிலையில் தனது வலது காலை சற்று தூக்கி அமர்ந்துள்ள நிலையில் வடிக்கப்பட்டுள்ளது.
தனது வலது கையை அபய முத்திரையுடன், தூக்கிய தனது இடது காலின்
மேல் வைத்த நிலையில் காணப்படுகிறது. இச்சிற்பம், வள்ளிமலையில்
காணப்பட்ட சமண பெண் தெய்வமாகிய பத்மாவதி இயக்கியம்மன் ஆகும். வள்ளிமலை ஒரு சமணத்
தலமாக விளங்கிய ஒன்று. இங்கு குடவரைச் சிற்பங்களும் உள்ளன. இதன் காலம் கி.பி. 9-ம் நூற்றாண்டு என்பர். கழுகு மலையிலும்
பத்மாவதி சிற்பம் ஒன்று காணப்படுகிறது. அமர்ந்த நிலையில், நான்கு
கரங்களுடன் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. பத்மாவதி வழிபாடு கி.பி.18-ம் நூற்றாண்டு வரை காணப்படுகின்றது. மேலும் தற்போது இது இந்து தலமாக
மாற்றப்பட்டு பல புனைவுகளை உள்ளடக்கியுள்ளது. (மாலை மலர்13 மார்ச் 2021 9:42 AM) https://www.maalaimalar.com/devotional/worship/aadi-perukku-cauvery-river-devotees-holy-bath-ban-494361?infinitescroll=1
வள்ளிமலையும் அருணகிரிநாதரும்
வள்ளியை மணந்து "வள்ளிமலை' யைக் கொண்டு
விளங்குவதுதான் இந்த வேலூர் மாவட்டம். வள்ளிமலை முருகன் கோயில் மலையைக் குடைந்து
அமைக்கப்பட்டுள்ளது. இவ்வள்ளி மலை வள்ளலாகிய முருகப் பெருமானை அருணகிரிநாதர்
புகழ்ந்து பாடுங்கால்,
"வடநாட்டில் வள்ளி மலை காத்துப் புள்ளி
மயிலுக்க
வல்ல குமரேசா
வடிவாட்டி
வள்ளி அடிபோற்றி வள்ளி
மலைகாத்த
நல்ல மணவாளா
அடிநாட்கள்
செய்த பிழைநீக்கி என்னை
அருள்
போற்றும் வண்ணமை தருவாழ்வே
அடிபோற்றி
அல்லி மூடிசூட்ட வல்ல
அடியார்க்கு
நல்ல பெருமாளே''
(புலவர் செந்துறை முத்து, முருகன் தலங்கள், ப.64.)
எனப் பாடிப் போற்றுகின்றார். இத்தலத்து மலையடிவாரத்தில் திருவிழாக்கள்
நடைபெறுகின்றன.
அடிவாரத்திலும் மலையிலும் கோவில்கள். 445
படிகள். மூலவர்-குடவரைக்கோவில். சன்னதி முன் நின்றால் முருகன் மட்டும். இடப்புறம்
நின்றால் வலப்புறம் தெய்வானை, வலப்புறம் நின்றால் இடப்புறம் வள்ளி காணலாம்.சிவனை நோக்கி
திருமால் தவம் செய்தபோது மான்வடிவில் திருமகள் வர அவள்மீது மோகப்பார்வை வீச,
அது கருவாகி அந்தமான் வள்ளிக்கிழங்கு எடுத்தகுழியில் மகவை ஈன்றதும்,
அது மனித குழந்தையாக இருக்க மான் ஓடியது. குழந்தையின்றி வருத்தமுற்ற
அரசன் நம்பி காட்டில் அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தான். வள்ளி பிறந்து,
வளர்ந்த தலம். பர்வதராஜன்
குன்று மீது வள்ளி வழிபட்ட லிங்கம். வேலனுக்கு உதவ வேழமுகன் ஆனைவடிவில் வந்த தலம்-
கணேசகிரி. வள்ளியை அக்னி சாட்சியாய் மணந்து விருந்துண்டபின் திருத்தணிக்கு
எழுந்தருளல். சூரியன் காணாச் சுனை, ஆயல் ஓட்டிய மண்டபம்,
வள்ளி கோயில், சரவணப் பெய்கை, எட்டுகால் மண்டபம்-சிறப்பு. தீர்த்தமும் சடாரியும். அருணகிரிநாதர்-
திருபுகழ்(97)- பெற்ற தலம். சுக்கிர தோஷநிவர்த்தி-வெள்ளிக்கிழமை சிறப்பு.
சைவ தத்துவார்த்த முறை
இம்மலைத் தலத்தின் வரலாறு, தணிகை மலைத் தலத்தின் வரலாற்றோடு
தொடர்புடையது. எனவே, நாரதர் வேள்வி புரிய, வள்ளி நாயகியை முருகப்பெருமான்
முறைப்படி மணம் புரிந்து கொண்டார். இது முருகப் பெருமானின் வள்ளி திருமணத்
திருவிளையாடல் ஆகும். வள்ளி திருமண வரலாறு சைவத் தத்துவார்த்தமுடையது.
இச்சக்தியாகிய வள்ளி நாயகி, வேடர் உருவில் வளர்ந்து
தினைப்புனம் காத்தாள், உயிர் தன்னுடைய இயல்பை அறியாமல்
ஐம்புலன்களால் மயங்கி உலக போகங்களை நாடியிருப்பதையும், முருகன்
வேடனாக எழுந்தருளியது அஞ்ஞானத்தைப் போக்க வந்ததையும் குறிப்பிடுகிறது. முருகன்
விருத்த யோகியாகத் தோன்றியது இறைவன் உயிர்கட்குக் குரு வடிவாக வந்து தீட்சை செய்து
மலத்தை அகற்றவேயாகும். மேலும், யானையை வரவழைத்து ஓங்கார வடிவினான இறைவனே உபதேசம் செய்வான். வள்ளி
முருகனிடம் தஞ்சம் புகுந்ததன் சிறப்பை அறிந்து அறிவுரையைப் பெற்ற சிவன் புலன்களை
அடக்கிச் சிவத்தை நாடிச் செல்வதை வள்ளி திருமணம் உணர்த்துகிறது. இறைவனை அறிந்து
அவனது அருளுக்குப் பாத்திரமான உயிர் இறைவனுடன் இரண்டறக் கலப்பதை உணர்த்தும்
வகையில் முருகப் பெருமானது வள்ளி திருமண வரலாறு அமைந்து விளங்குகின்றது. இத்தகைய
சிறப்புடைய தலத்தை, அன்பரல்லாதார் இணக்கம் அற
"முல்லைக்கு
மார னங்கை வில்லுக்கு மாதர் தங்கள்
பல்லுக்கும்
வாடி யின்ப முயலாநீள்
முள்ளுற்ற
கால் மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து
பள்ளத்தில்
வீழ்வ தன்றி யொருஞான
மெல்லைக்கு
மார னங்கள் சொல்லித் தொ ழாவ ணங்கு
எல்லைக்கும்
வாவி நின்ற னருள் நாமம்
எள்ளற்கு
மால யர்ந்து வுள்ளத்தி லாவ என்று
முள்ளப்பெ
றா ரிணங்கை யொழிவேனோ;
அல்லைக்க
வானை தந்த வல்லிக்கு மார்பி லங்க
அல்லிக்கொள்
மார்ப லங்கல் புனைவோனே
அள்ளற்ப
டாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி
மெள்ளச்ச ரோரு கங்கள் பயில்நாதா;
வல்லைக்கு
மார கந்த தில்லைப்பு ராரி மைந்த
மல்லுப்பொ
ராறி ரண்டு
வள்ளிக்கு
ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு
வேடை கொண்ட பெருமானே''
(தணிகைமணி செங்கல்வராய
பிள்ளை, அருணகிரிநாதர் திருப்புகழ் உரை பாகம்-2, ப.290.)
என்று வள்ளிக்கு அவனது மார்பு விளங்கும்படித் தாமரையாலாய மார்பிலிருந்த
மாலையை அணிந்தவனே.சேறுபடாத கங்கையாற்றில் வீற்றிருக்கும் குமரனே! கந்தனே!
தில்லையில்உள்ளவரும், திரிபுரத்தை எரித்தவருமான சிவனது மைந்தனே! மல்யுத்தப் போருக்குப்
பொருந்திய நெருங்கிய வள்ளிமலை மேல் சென்று
வள்ளியம்மையைப் பெற வேட்டையாடிய பெருமானே! என்றும் அருணகிரிநாதர் புகழ்ந்து
பாடியுள்ளமை புலனாகும்.
சைவமும் வள்ளிமலையும்
கி.பி.15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவக்குரவர்
அருணகிரிநாதர் இத்தலத்தைப் பற்றி 11 பாடல்கள் இயற்றியுள்ளார். பல முனிவர்கள் தவம்
புரிந்து இறையருளைப் பெற்றுள்ளனர்.
இம்மலைக் கோயிலில் முருகனும் வள்ளியும் அருள்பாலித்து வருகிறார்கள். கச்சியப்பசிவாச்சாரியார்
தம்முடைய கந்தபுராணத்தில் வள்ளிமலையில் முருகன் மணம் முடித்த பெருமையை 267
விருத்தங்களில் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. வள்ளிமலைக் கோயிலின்
அடிவாரத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் அருள்பாலித்து வரும் திருக்காட்சி
காணக் கிடைக்காத அற்புதக் காட்சியாகும். வள்ளிநாயகி அவதரித்த தலம் வள்ளிமலை.
வள்ளிமலையில் தினைப்புனங்காத்த
வள்ளியம்மையை, முருகப் பெருமான் களவு முறையில் காதலித்து, அண்ணன்
கணபதி உதவி புரிய கற்பு முறையில் திருமணம்
செய்து கொண்டார். பல சித்தர்கள் வாழ்ந்த,
வாழ்கின்ற மலை இயற்கை வனப்புடன் திகழ்கிறது. சிவகுமரனுக்குப் பல
பெயர்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று குகன்; குகையில்
எழுந்தருளியிருப்பதால் மட்டுமின்றி அன்பர்கள் மனமாகிய குகையில் வீற்றிருப்பதாலும் அவனுக்கு அப்பெயர்.
முருக வழிபாடு
குறிஞ்சி நிலக் கடவுளான முருகன், கைபுனைந்தியற்றாக்
கவின் பெரு வனப்போடு மக்களின் உள்ளத்தைப்
பிணித்தவன். அவன் சேயோன் எனப்பட்டான். அவன் போரிற் சிறந்த தெய்வம். இம்முருகன்
போரில் வல்லவன் என்றும், கடப்பந்தாரை அணிந்து கடம்பின் கீழ்
வீற்றிருப்பவன் என்றும், திருத்தகுசேய் என்றும், போரை விரும்புகிறவன் என்றும், போர் வன்மை மிக்கவன்
என்றும், அவனுடைய தாய் வெற்றித் தெய்வமான கொற்றவை என்றும்
சிறப்பிக்கின்றனர். அக்காலத்தே முருக வழிபாட்டின்போது ஆரவாரமிக்க ஆடல்களும்
பாடல்களும் சிறந்து விளங்கின. முருகன் இளம் மகளிர்க்குக் காதல் நோய் கொடுப்பவன்.
அம்மகளீர் முருகன் மீது கொண்ட மயக்கந்தீர வேலன் வெறியாட்டயர்வான், அம்மகளிரும் இசைக்கேற்ப வெறியாடுவர் அப்போது மகளிரோடு முருகன்
சேர்ந்தமைவான்.அழகும் ஆற்றலும் பற்றிப் பேசப்படும் இடங்களில் எல்லாம் முருகனைப்
பற்றிய பேச்சு இடம்பெறுகின்றது. சங்க
இலக்கியங்களில் "சேயோன்' என முருகனை அழைப்பர். முருகனுக்கு
விழாவெடுத்துக் குறவர் வழிபடும் முறையை முருகாற்றுப் படையினின்று அறிய முடிகிறது.
வழிபாடு நடத்தும் குறமகள் கோழிக் கொடியை உயரிய இடத்தில் நாட்டுவாள். அதன் மீது
நெய்யுடன் வெண்சிறு கடுகையும் அப்புவாள். தான் வழிபடுவதற்குரிய மந்திரத்தைப் பிறர்
கேட்காவண்ணம் வாய்க்குள் கூறித் துதிப்பாள். தலைகுனிந்து வணங்கி மலர்களைத் தூவி
வழிபடுவாள். பிறகு அவள் வெவ்வேறு நிறமுள்ள இரண்டு
ஆடைகளை உள்ளொன்றும் புறமொன்றுமாக உடுத்திக் கொள்வாள். சிவப்பு நூலைத் தன்
கையில் காப்பாகக் கட்டிக் கொள்வாள். இவ்வாறு கோலங் கொண்ட அவள், வெண்ணிறப் பொறியைத் தூவிய பின் ஆட்டுக்கிடாவின் இரத்தங் கலந்த அரிசியைப்
பலியாக்கிக் கொடுப்பாள். மேலும், தானியம் நிறைந்த கூடைகளை
எங்கும் வைப்பாள். மஞ்சள் பொடியுடன் சாணத்தை எங்கும் தெளிப்பாள். செவ்வலரி மாலைகளை
அளவாக அறுத்து அசையும்படி தொங்க விடுவாள். பிறகு அவள் மலையகத்து ஊரை வாழ்த்தி
மணப்புகையிடுவாள். அப்போது அனைவரும் குறிஞ்சிப் பண்பாடி இசைக் கருவிகளை
முழக்குவர். குறமகள் செந்நிறப் பூக்களைத் தூவி, இரத்தங்
கலந்த தினையரிசியைப் பரப்பி வைத்து, மேலும் முருகனுக்குரிய
இசையை ஒலிக்கச் செய்வாள். தெய்வம் இல்லை என்பார் அஞ்சும்படியாக முருகக் கடவுளை
அங்கு எழுந்தருளும்படி வேண்டிக் கொள்வாள். இவ்வாறு விழா நடத்தும் குறவர் - ஆரவாரம்
எழுப்பப் பாடியும் கொம்புகளை ஊதியும், மணிகளை ஒலித்தும்,
பிணிமுக யானையை வாழ்த்தியும் முருகனுக்கு வழிபாடு செய்வார்கள்.
ஆண்டுதோறும் முருகன் தலங்களில் "வேடர் பறி விழா' உற்சவம்
சிறப்புடன் நடைபெறுகிறது. எட்டு நாட்கள் நடைபெறும் பெரிய விழா - பிரமோத்சவம் -
விசேடமானது. இப்பெரிய விழாவில் எட்டாம் நாள் "வேடர் பறி' விழா நடைபெறுகிறது. அன்றிரவு முருகப் பெருமான் தனியாகக் குதிரை மீது
எழுந்தருளி வந்து வள்ளியையும் அழைத்துச் செல்வார். இது முருகன் வள்ளியைச் சிறை
எடுத்துச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர், இம்மலையைச்
சுற்றி வந்ததும், வள்ளி கோயிலின் அருகில் கூடியிருக்கும்
வேடர்கள், முருகனிடமிருந்து வள்ளியை மீட்டுச் சென்று
கோயிலுள் வைப்பார்கள். அதன் பின்னர், முருகனுக்கும்
வேடர்களுக்கும் போர் நடத்தி இறுதியில் தோல்வியுற்ற வேடர்கள், தாங்களே முருகனுக்கு வள்ளியைத் தேன், தினைமாவு,
புத்தாடை முதலியன அளித்து மணம் முடித்துக் கொடுக்கும் விழா
நடைபெறும்.
வழிபடும் முறை
முருகப் பெருமான் வள்ளிக்கு அருள்புரிந்தது
போன்றே நமக்கும் அருள்புரிய வேண்டும்
என்று கருதி வள்ளியின் திருப்பெயரை முதலில் அமைத்து "வள்ளி தெய்வானை சமேத
முருகன்' என்று நாமணக்க நவின்று, நெஞ்சுருக நினைத்து
வழிபடுதல் வேண்டும். இத்தகைய வழிபாட்டினையே எம்பெருமான் முருகனும் விரும்பி இத்தலத்தில் உறைவதாகவும் இத்திருத்தலத்திற்குச்
சென்று வழிபட திருப்புகழ்ப் பாடலைப் பாடியுள்ளார்.
"ஐயமுறு
நோயு மையாலும் வாவி
னைவருமு
பாயப் பலநூலின்
அள்ளல்கட
வாது துள்ளியதில் மாயு
முள்ளமுமில்
வாழ்வைக் கருதாசைப்
பொய்யுமக
லாத மெய்யைவள ராவி
உய்யும்வகை
யோகத் தணுகாதே
புல்லறிவு
பேசி யல்லல்படு வேனை
நல்ல
இரு தாளிற் புணர் வாயே
மெய்ய
பொழில் நீடு தையலைமு னாலு
செய்ய
புய மீதுற் றணை வோனே
வெள்ளையிப
மேறு வள்ளல்கிளை வாழ
வெள்ளமுது
மாவைப் பொருதோனே
வையமுழு
தாளு மைமயில் வீர
வல்லமுரு
காமுத் தமிழ் வேளே
வள்ளிபட
சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண
வாளப் பெருமாளே''
(தணிகைமணி செங்கல்வராயன், திருப்புகழ்
உரை, பாகம் -2, பக்.286 - 288.)
என்று மயிலின் மேல் ஏறி வருகின்ற வீரர் திருவல்லத்திலே எழுந்தருளியுள்ள
முருகா! முத்தமிழ் வல்ல செவ்வேளே என்றும், வள்ளிக்கொடி படர்ந்துள்ள மலைப்
பக்கத்தையுடைய வள்ளிமலையில் எழுந்தருளியிருக்கும் வள்ளிக் குறத்தியின் கணவனான
பெருமாளே என்றும் வேண்டி நிற்கின்றாள்.
முருகப் பெருமானும் வள்ளிமலையும்
முருகக் கடவுள் வள்ளியை மணந்து கொண்டது தொண்டை
நாட்டு மேற்பாடி என்னும் ஊருக்கு அருகிலுள்ள வள்ளிமலையில் என்று கந்தபுராணமும்
தணிகைப் புராணமும் கூறுகின்றன. முற்காலத்தே சேர நாட்டினதாக இருந்த வள்ளிமலை
பிற்காலத்தில் தொண்டை நாட்டினதாக ஆயிற்று என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
"சேரமலை
நாட்டில் வாரமுடன் வேட்ட
சீலி
குறவாட்டி மணவாளா''
(தணிகை செங்கல்வராயபிள்ளை, திருப்புகழ்
உரை, பாகம்-2, ப.324)
எனவும்,
"வள்ளி
படர்கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியை
மணந்த பெருமானே''
(தணிகை செங்கல்வராயபிள்ளை, திருப்புகழ்
உரை, பாகம்-2, ப.324)
என்றும் அருணகிரியார் திருப்புகழில் வள்ளிமலையையும் சேர நாட்டையும்
தொடர்புபடுத்தியுள்ளதன் வாயிலாக சேரர் ஆட்சியின்கீழ் வள்ளிமலை இருந்தது
புலனாகிறது. இந்த வள்ளிமலை தற்போது வேலூர் மாவட்டத்தில் உள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக, வேலூர்
மாவட்டத்தில் உள்ள மக்கள் முருகனை விரும்பி வழிபட்டு வந்துள்ளனர். திருமுருகன்
பெயர்கள் பலவற்றுள் வள்ளி கணவன், வள்ளிமணாளன் என்பவை உள்ளன.
வள்ளி கணவனாக முருகப் பெருமான் எவ்வாறு விளங்கினார் என்பதற்கு இம்மாவட்டத்தில்
உள்ள வள்ளிமலை மற்றும் மேல்பாடி போன்ற ஊர்களே சாட்சிகளாகின்றன. கந்த புராணத்தில்
குறிப்பிடப்பெறும் மேற்பாடி என்னும் சிற்றூர் வேலூர் மாவட்டத்தில் உள்ளது.
இதனருகில் ஒரு மலை அமைந்துள்ளது.
முற்காலத்தில் அம்மலைச் சூழலில் அதனைச்
சார்ந்து வேட்டுவர்கள் வாழ்ந்தனர். அவர்களுக்குத் தலைவனாக நம்பி என்பவன்
வாழ்ந்தான். அவனுக்கு ஆண் மக்கள் பலர் தோன்றியிருந்தும் பெண் மகவு வாய்க்கவில்லை.
ஆதலின் பெண் மகவு விழைந்து குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகப் பெருமானை நோன்புகள்
நோற்று வழிபட்டு வந்தான்.
பூர்வத்தில் திருமாலின்
புத்திரிகளாகத் தோன்றிய அமுதவல்லி, சுந்தரவல்லி
என்னும் இருவரும் முருகக் கடவுளை மணந்துகொள்ளும் பொருட்டு சரவணப் பொய்கையில்
அருந்தவங்கள் இருந்தனர். முருகக் கடவுள் அவர்களுடைய தவத்துக்கு உவந்து, அங்கு வந்து அமுதவல்லி வானுலகில் இந்திரனை அடைந்தும், சுந்தரவல்லி மேற்பாடி என்னும் ஊரிலுள்ள
ஒரு முனிவனுக்கு மகளாகப் பிறக்கும்படியும் செய்தார். குமுதவல்லி வானுலகத்தை
அடைந்து ஐராவதம் என்னும் தெய்வானையால் தேவேந்திரனிடத்துச் சென்று "தெய்வானை'
என்று பெயர் பெற்றாள். தேவேந்திரனால் வளர்க்கப்பட்ட இவள் முருகக் கடவுளை மணந்தாள் என இலக்கியங்களும்
புராணங்களும் கூறுகின்றன.
அருள் நோக்கால் கருவுற்று மான் வயிற்றில்
மானிட மகவாய்த் தோன்றி அம்மலைச் சாரலில் வள்ளிக்கிழங்கு அகழ்ந்த குழியில்
கிடந்தனள்.
"நாதளர்ந்து சோர்ந்து
நடுக்கமுற்றுப் பற்கழன்று
முத்து நரை முதிர்ந்த மூதாளர் வந்தீண்டிப்
பரந்திபடுவள்ளிப் படுகுழியில் வந்திடலாய்
வாய்த்த இவள் நாமம் வள்ளியெனக் கூறினரே''
(ச.சாம்பசிவன், கந்தபுராணம்
உரை, பக்.2-3.)
இதன் வழி நா தளர்ந்து சோர்ந்து நடுக்கமுற்றுப்
பல்கழன்று முத்துநரை நிறைந்த முதியவர்கள் பல பேர் நம்பியரசனது, வீட்டிற்கு
வந்து குழுமிப் பாத்திகள் அமைக்கப்பட்ட வள்ளிக்கிழங்கைத் தோண்டி எடுக்கும்
குழியிலிருந்து இக்குழந்தை கிடைத்தமையால் இவளது பெயரும் வள்ளி எனப் பெயரிட்டதாகக்
கந்தபுராணம் கூறுகிறது.
வேட்டுவர் குலத் தலைவன் நம்பிராசன் அவ்வழியே
வந்தபோது அம்மகவைக் கண்டெடுத்து அதனை தன் துணைவியைக் கொண்டு வளர்த்தான். வள்ளி
முறையே வளர்ந்து பன்னிரண்டு வயதடைந்துபோது வேடுவர் குல முறைப்படி நம்பிராசன்
அவனைத் தினைப்புனம் காவல் புரியுமாறு அமர்த்தினான். அங்கே அவள் பரண் மீது அமர்ந்து
குருவியை ஓட்டியும் கிளியைக் கடிந்தும் மானை விரட்டியும் தினைப்புனம் காத்தும் வந்தாள்.
முன்னர் தாம் அளித்த வரத்திற்கேற்ப வள்ளிமலைக்கு அருள்புரிய நினைத்த முருகன் தணிகை
மலைக்கு அருள்புரிய, அங்கு நாரத முனிவர் வள்ளியம்மைக்கு அருள்புரியும் நேரம் நெருங்கிற்று
என்றார். அதற்கிசைந்த முருகன் மானிட வேடம் தாங்கி சுழலும் கச்சும் அணிந்து வேடர்
கோலம் ஏற்று, வளமிக்க வள்ளிமலைச் சாரலை அடைந்து
வள்ளியம்மையிடம் காதல் உரைகள் பேச வள்ளியோ நாணி நின்றாள்.
தவவேடம் பூண்ட கிழவராக இருந்த முருகன் "யான் பசியால் மெலிவுற்றேன்' என்றார்.
வள்ளியம்மை தேனும் தினைமாவும் கொணர்ந்து அளித்தாள். அதனை ஏற்ற முருகன்
"நீர்வேட்கை மிகுந்துள்ளது' என்று வினவ நீரையும் தந்தாள். (இன்றும் இவ்விடம் சூரியன் காணாச் சுனை
ஒன்று இருக்கிறது). ஆயினும், "என் தளர்ச்சி நீங்க யான்
கொண்ட மோகத்தைத் தணிப்பாய்" என வினவ, வள்ளியோ வேடர்
கூட்டத்திற்கு இது பெரும் பழி எனச் சினந்து கூறித் தன் இருப்பிடம் செல்ல முற்பட்டாள்.
அப்போது முருகப் பெருமான் தமையனாகிய விநாயகரை நினைக்க, உடனே
தோன்றிய விநாயகர் தன் உருவத்தால் வள்ளியை பயமுறுத்த வள்ளி பயந்து, "என்னைக் காப்பாற்றி அருள்க' என வேண்டுகிறாள். இப்படி
விநாயகர் வள்ளியை அச்சுறுத்திய இடம் என்பதால் கணேசகிரி என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
பின்னர், முருகன் பன்னிருகையோடு தோற்றமளித்தான். இதனைக் கண்ட
வள்ளி "இன்னார் என அறியாது யான் கூறிய இகழ்ச்சி உரைகளைப் பொருத்தருள்க'
எனப் பணிந்து தன்னை ஆட்கொள்ளுமாறு வேண்டினாள். இப்பாடலில்,
"வடநாட்டில்
வள்ளி மலைகாத்துப் புள்ளி
மயிலூக்க
வல்ல குமரேசா
வடிவாட்டி
வள்ளி அடிபோற்றி வள்ளி
மலைகாத்த
நல்ல மணவாளா
அடிநாட்கள்
செய்த பிழைநீக்கி என்னை
அருள்
போற்றும் வண்மை தருவாழ்வே
அடிபோற்றி
அல்லி முடிசூட்டவல்ல
அடியார்க்கு
நல்ல பெருமாளே''
(புலவர் செந்துறை முத்து, முருகன்
தலங்கள்-33, ப.64.)
என முருகனை நோக்கி வள்ளி வணங்கி தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறாள்.
முருகனும் வள்ளியை ஏற்றுக் கொள்கிறார். வள்ளியின் உயிர்த் தோழியாகிய "பொங்கி' என்பவள்
வள்ளிமலையில் காவல் தெய்வமாக இன்னும் போற்றப்படுகிறாள். வள்ளி மலையிலிருந்து
முருகப் பெருமான் வள்ளியோடு திருத்தணிகை சென்றதை நினைவூட்டும் வகையில்
இவ்வூரிலிருந்து திருத்தணிகை செல்லும் வழியிலுள்ள ஊர்கள் மயிலாடி, வெடியங்காடு என்னும் பெயர்களைக் கொண்டுள்ளன.
வள்ளியம்மை திருமண வரலாறும் அதன் நுட்பங்களும்
தமிழக மக்களின் உள்ளங்களைக் கவர்ந்துள்ளன. இது பற்றிய தொல்காப்பியர் தம் பொருளதிகாரத்தில்
புறத்திணையியலில் 1006 வது பாடலில்,
""வாடாவள்ளி''
(ச.வே.சுப்பிரமணியம், தொல்காப்பியம்
தெளிவுரை, ப.378.)
என்று ஆடல் கூத்தினைக் குறிப்பிடுகையில்
வள்ளியைக் கூறுகிறார். வள்ளியம்மை முருகனை மணம் புணர்ந்து, உயிரானது
இறைவனோடு இரண்டறக் கலக்கும் பேற்றைப் பெறும் நிலையினை உணர்த்தும் என்பர்.
வள்ளியம்மை - உயிர்; முருகன் - இறைவன்; மணம் புணர்தல் - இரண்டறக் கலத்தல். முருகன் வள்ளியை நாடி வந்து முறைப்படி
மணத்தல் இறைவன் வெளிவந்து உயிர்களை வலிந்து ஆட்கொள்ளும் அருள் திறனை அறிவிக்கிறது.
வள்ளியம்மை முருகனுடன் இயைந்து நிற்றல்,
உயிர் மலங்கழிந்த நிலையில் இறையருளில் கலந்து கொள்ளும் முக்தி
நிலையைக் குறிக்கிறது. கந்தபுராணத்தில்,
"அயன்
படைத்திடும் அண்டத்துக் காவியாய்ப்
பயன்
படைத்த பழம்பதி என்பவரால்
நயன்
படைத்திடு நற்றொண்டை நாட்டினுள்
வியன்
படைத்து விளங்கு மேற்பாடியே''
(ச.சாம்பசிவன், கந்தபுராணம்
உரை, பக்.2-3)
இதன் வழி, தொண்டைநாடு சான்றோ ருடைத்து என்னும் பழமொழிக்கு மென்மேலும் மெருகு
சேர்க்கிறது. திருக்கோயில் மிகுந்திருத்தல், ஆறுகளைப்
பெற்றிருத்தல் முதலான நன்மைகள் பெற்றிருப்பது தொண்டைநாடு. அதன் கண் அமைந்த
நகரங்களுள் ஒன்று மேற்பாடி, அது நறுஞ்சுனைநீர், தினைப்புனங்கள் இன்ன பிற வளப்பங்களால் பெருமை பெற்றது என உரைக்கிறது.
அதைப் போலவே முருகன் வள்ளி நாயகியைத் தன்பால் கொண்டுள்ளதால் பெயர் பெற்றதாக வரும்
பாடல்,
"கள்ளிறைத் திருப்பூந் தண்டார்க் கடம்பணி
காளை பன்னாட்
பிள்ளைமைத் தொழிற் மேற்கொண்டு பெட்புடன்
ஒழுகும் வண்ணம்
வள்ளியைத் தன்பால் வைத்து வள்ளி வெற்பென்று
நாமம்
உள்ளவைக் கிரியின் மேன்மை உரைத்திடும் அளவிற்றாமோ''
(ச.சாம்பசிவன், கந்தபுராணம் உரை, பா.7, ப.5)
என்று கந்தப் பெருமான் களவொழுக்கத்தை விரும்பிப் பல வேடங்களைப் பூண்டு, திருவிளையாடற்
செய்தொழுகு வதற்குரிய வள்ளி நாயகியைத் தன்பால் கொண்டு திகழ்வதால் இம்மலை
"வள்ளிமலை' என்னும் வனப்புறு பெயரைப் பெற்றிலங்குகிறது.
தலமோங்கு கந்தவேளின் திருத்தலங்களுள் வள்ளிமலை
என்னும் மலைத்தலம் தனிப் பெருமையும் சிறப்பும் கொண்டது. இத்தலத்துத் திருக்கோயில், மலைக்
கோயில்; ஆகையால், மலையைக் குடைந்து
அமைக்கப் பெற்றுள்ளது. இத்தலத்து மலையடி வாரத்தில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
இத்திருவிழாவில் "வேடர் பறி' மிகவும் விசேடமானது. இதில்
வெறியாட்டுத் தனிச் சிறப்பினையுடையது. திருமணத்தின் போது விழா கொண்டாடி முருகனை
வெறியாடல் செய்வித்ததையும்,
"காலையதன்
பின் கடவுட் பலி செலுத்தி
வாலரிசி
மஞ்சள் மலர்சிந்தி மறியறுத்துக்
கோல
நெடுவேள் குமரன் விழாக் கொண்டாடி
வேலை
முதற்கொண்டு வெறியாட்டு நேர்வித்தான்''
(ச.சாம்பசிவன், கந்தபுராணம்
உரை, பா.40, ப.23.)
காலைப் பொழுதில் முருகக் கடவுளுக்குப் பூசை
செய்து, வெண்மையான அரிசியையும் மஞ்சளையும் மலரையும் தூவி, ஆடு
வெட்டி, அழகிய நீண்ட வேல்படை தாங்கிய முருகனுக்குத்
திருவிழாக் கொண்டாடி, வெறியாடுகின்ற வேலனை முன்னால் நிறுத்தி
வெறியாட்டைச் செய்வித்தான் எனக் கந்தபுராணம் கூறுகிறது. மேலும், இதனைப் பழம்பெரும் தமிழ் நூலான தொல்காப்பியத்தின் புறத்திணையியல்,
"வெறியறி
சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட்டு
அயர்ந்த காந்தளும்''
(ச.வே.சுப்பிரமணியம், தொல்காப்பியம்
தெளிவுரை, ப.378.)
என வெறியாடலின் சிறப்பினை அறிந்த கொடிய வாயினையுடைய வேலன் சூடிய காந்தளும்
என்னும்போது இவ்விரண்டுக்கும் உள்ள ஒற்றுமை புலனாகிறது.
வள்ளிமலையில் சித்தி பெற்ற ஞானிகள் பலராவர்.
அருணகிரிநாதர் இத்தலத்தைத் திருப்புகழில்
பாடிப் பேறு பெற்றார். அந்த உன்னதமான திருப்புகழை நாடெங்கும் பரப்பியதோடு
வள்ளிமலையில் தங்கிச் சித்தி பெற்றார். வள்ளிமலையடுத்துத் தங்கால் என்னுமிடத்தில்
வள்ளிமலை சுவாமிகள் எனப்படும் மௌனகுரு சுவாமிகளும் முருகப் பெருமானைத் தொழுது பேறு
பெற்றனர். அடியவர்கள் முதல் பெரியோர்கள் வரை திருவடிப் பெற வேண்டி முருகனைத்
தொழுது நின்றனர்.
வள்ளியம்மையைப் போல் மணம் புணர்ந்து இறைவனோடு
இரண்டறக் கலக்கும் பேற்றைப் போல் பழங்காலம் தொட்டே இத்தலத்தில் மக்கள் திருமணங்களை
நடத்தி மகிழ்வுறுகின்றனர். குன்றுதோறும் குமரன் என்பார்கள். அதற்கிணங்க முருகனைத்
தொழுவோர் எல்லா நலங்களையும் பெறுவர். இதனையுணர்ந்த அருணகிரிநாதர் தாம் இயற்றிய பல
பாடல்களில் திருவடியைப் பெறுதலையே நோக்கமாகக் கொண்டு தொழுததோடு பாடியும் உள்ளார்.
வள்ளிமலையில் வீற்றிருக்கும் முருகப் பெருமானை
யமன் வரும் நாளில் திருவடிப் பெறுதல் பற்றி பாடுகையில்,
"அல்லிவிழி
யாலு முல்லைநகை யாலு
மல்லல்பட
ஆசைக் கடலீயும்
அள்ளவினி
தாகி நள்ளிரவு போலு
முள்ளவினை
யாரத் தனமாரும்
இல்லுமிளை
யோரு மெல்ல அயலாக
வல்லெருமை
மாயச் சமனாரும்;
எள்ளியெனத்
தாவி கொள்ளைகொளு நாளில்
உய்யவொருநீ
பொற்கழல் தாராய்;
தொல்லைமறை
தேடி யில்லையெனு நாதர்
சொல்லு
முபதேசக் குருநாதா
துள்ளிவிளை
யாடு புள்ளியுழை நாண
வெள்ளிவன
மீதுற் றுறைவோனே
வல்லசுரர்
மாள நல்லசுரர் வாழ
வல்லைவடி
வேலைத் தொழுவானே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண
வாளப் பெருமாளே''
(தணிகைமணி செங்கல்வராய
பிள்ளை, திருப்புகழ் உரை, பக்.284-285.)
முருகப்பெருமானை உள்ளத்தில் நிறுத்தியிருந்த
வேலூர் மக்கள் முருகனுடைய அத்தனை அசைவுகளையும் அருள்பாலிக்கு கலன்களாகவே கொண்டனர்.
இத்தகைய தன்மை படைத்த முருகப்பெருமானை, வல்லசுரர்கள் சாகவும், தேவர்கள் வாழவும் விரைவில் கூரிய வேலாயுதத்தைச் செலுத்தியவனே என்றும்
வள்ளிக்கொடி படர்ந்திருந்த சாரல் கொண்ட வள்ளிமலையில் வீற்றிருக்கும் வள்ளி மணவாளப்
பெருமானே எனவும் திருப்புகழில் அருணகிரியார் முருகனைப் புகழ்வார்.
முருகப் பெருமானை இப்பாடலால் மட்டுமின்றி, மனோலயம்
பெறவும், அன்பரல்லாதர் இணக்கம் அறவும், பிறப்பறவும், சமயவாதத் துன்பம் அறவும், உண்மைப் பொருளைக் காணவும், அகப் பொருளாகிய கடப்ப
மாலைப் பெறவும், திருவடியை உணரவும், இறைவனை
நினைக்கவும், அன்பு உறவும்
எனப் பல பாடல்களையும் பாடியுள்ளார். இவற்றில் "அன்பு உற' என்னும் பாடல் சிறப்பானதும் புகழ் வாய்ந்ததும் ஆகும். இதனை அருணகிரிநாதர்
தனியொரு இன்பமாக முருகனை நினைத்துப் பாடியமையைக் கீழ்வரும் பாடலானது
மெய்ப்பிக்கின்றது.
""தனதந்த
தந்தனம் தனதந்த தந்தனம்
தனதந்த
தந்தனம் தனதான
சிரமங்க
மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சு செஞ்
சலமென்பு
திண் பொருந் திடுமாயம்
சிலதுன்ப
மின்ப மொன் றிறவந்து பின்புசெந்
தழலின்கண்
வெந்துசிந் திடஆவி;
விரைவின்கணந்தகன்
பொரவந்த தென்று வெந்
துயர்கொண்ட
லைந்து லைந் தழியாமுன்
வினையொன்று
மின்றிநன் றியலொன்றி நின்பதம்
வினவென்று
அன்புதந் தருள் வாயே
அரவின்
கண்முன் துயின் றருள்கொண்ட லண்டர்கண்
டமரஞ்ச
மண்டி வந் திடுசூரன்
அகலம்
பிளந்தணைந் தகிலம் பரந்திரங்
கிடஅன்
றுடன்று கொன் றிடும் வேலா;
மரைவெங்
கயம் பொருந் திடவண்டி னங்குவிந்
திசையொன்ற
மந்தி சந் துடனாடும்
வரையின்கண்
வந்துவண் குறமங்கை பங்கயம்
வர
நின்று கும்பிடும் பெருமாளே''
(தணிகைமணி செங்கல்வராய
பிள்ளை, திருப்புகழ் உரை, பக்.308-324.)
வேலூர் மக்கள் தங்களுடைய இன்ப மற்றும்
துன்பங்களின் நிகழ்வுகளுக்கு இறைவனையே மூலகாரணமாகக் கருதினர். இப்பாடலும் அதையே உணர்த்துகிறது. உதாரணமாக, சூரனுடைய
மார்பைப் பிளந்து குறமங்கை தாமரை வரக் கண்டு அங்கேயே நின்று கும்பிட்ட பெருமானே
என்று அன்புகூறி இறைவனை நெருங்கும் வழியை உரைக்கிறார்.
வள்ளிமலை அற்புதம்
இந்த கோயிலில் அமைந்துள்ள குளத்திற்கு சரவண
பொய்கை என்று பெயர். குளத்திற்கு அருகே வள்ளியின் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.
குளத்தை அடுத்து வரும் படிகட்டுகளில் ஏறித்தான் முருகனை வழிபட முடியும்.
படிகட்டுகளின் பாதையில் ஆங்காங்கே மண்டபங்களும் அமைந்துள்ளது. அதில் 8 கால்
மண்டபத்தை தவிர மற்றவைகள் சில ஆண்டுகளுக்கு முன்புதான் புதுப்பிக்கப்பட்டன. ஆனால்
அந்த 8 கால் மண்டபம் மட்டும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வள்ளிமலைக் கோயிலை புதுப்பிக்கும்
பணிகள் நடந்த போது, 8 கால் மண்டபப் பகுதியில் உள்ள ஒரு கல்லை அகற்றும்போது அங்கிருந்து
வாசனை நிரம்பிய புகை வந்ததாகவும், அதற்குள் சித்தர்கள் தியான
நிலையில் இருந்ததைப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் அவ்விடத்தில் மட்டும்
எந்தவித மாற்றமும் செய்யாமல் அந்த கல்லை அப்படியே மூடிவிட்டனர் என்றும்
தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதும் அப்பகுதியில் சித்தர்கள் தவம் புரிந்து
வருவதாகவும் கருதப்படுகிறது. அதனால் தான் அப்பகுதி எவ்விதத்திலும்
மாற்றியமைக்கப்படவில்லை. படிகளைக் கடந்து கோயிலுக்குச் சென்றால் அங்கு நம் கண்களை
வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரே கல்லினால் குடைந்து செய்யப்பட்ட கோயில் நம்மை
அதிசயிக்க வைக்கிறது. நுழைவாயிலில் உள்ள ஒரு சந்நதியில் வள்ளி அம்மன்
பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. அந்த சிற்பத்திற்கும் ஆடைகள் அணிவிக்கப்பட்டு
தீபாராதனைகள் நடைபெறுகின்றன. அவரை வணங்கிவிட்டு உள்ளே செல்லும் போது
சாதாரண உயரம் கொண்டவர்களும் குணிந்துதான் செல்ல வேண்டும். அவ்வளவு தாழ்வான
நுழைவாயிலை அடுத்து முருகன் கர்ப்பகிரகம் காட்சி அளிக்கிறது. மேலே பார்த்தால்
பாறை எங்கே நமது தலையில் விழுந்துவிடுமோ என்ற அச்சம் உருவாகிறது.
பாறைகளைக் குடைந்து அதற்குள் முருகனை வைத்து வழிபட வேண்டும் என்ற எண்ணம்
எப்படி தோன்றியிருக்கும் என்று பிரம்மிப்பாக உள்ளது. எப்படித்தான்
இந்த கோயிலை உருவாக்கியிருப்பார்கள் என்று நாம் பிரம்மித்து நிற்கும்போது, கோயில் கருவறைக்குள் உள்ள ஒரு துளையைக் காண்பித்து, இது
சித்தர்கள் சென்று வந்து கொண்டிருந்த இடம் என்றும், தற்போதும்
இதற்குள் சித்தர்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது என்று கூறுகிறார் கோயில்
பூசாரி. மேலும், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பாறையைப் பார்த்தால்
யானையின் உருவம் தெரிகிறது.
வள்ளியை தன்பால் கவர முருகனுக்கு உதவி செய்ய
வந்த விநாயகர் பெருமான் தான் அந்த யானையின் உருவம் கொண்ட பாறை என்று நம்பும்
பக்தர்கள் அதனை கணேச கிரி என்று பக்தியோடு வணங்குகிறார்கள். கோயிலில்
இருந்து 2 கி.மீ. தொலைவில் சுவாமி சட்சிதானந்தர் சமாதி அடைந்த ஆசிரமும்
அமைந்துள்ளது.
மலையின் உச்சியில், திருமால்
கிரீஸ்வரா கோயிலும் உள்ளது. ஆசிரமத்தின் மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை
சூரியன் காணாத சுனை என்று அழைக்கின்றனர். ஏனெனில் அந்த சுனையின் மீது சூரியனின்
கணைகள் விழுந்ததே இல்லையாம். இந்த கோயில் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
கோயிலுக்குள் 4 மணிக்கெல்லாம் சென்றுவிட்டால் அதற்கு பின்னர் 2 கி.மீ.
தூரம் நடந்து சென்று ஆசிரமம், சுனை, திருமால் கிரீஸ்வரர் கோயில்களை தரிசனம் செய்துவிட்டு திரும்ப
இயலும். கோயிலின் நடை சார்த்தப்பட்டாலும், மற்ற
பகுதிகளுக்குச் சென்று திரும்ப தனி வழி உள்ளது. (https://tamil.webdunia.com/article/special-articles-on-religion/வள்ளிமலை-அற்புதம்-109032000031_1.htm)
வள்ளிமலை முருகன் கோயில்
இம்மலைக் கோயில் முறையாகக் கட்டப்படவில்லை.
பெரும் பாறைகளுக்கு இடையில் அமைந்த இடைவெளிக்குத் தேவைப்பட்ட இடங்களில் சுவர்
எழுப்பி அச்சுவர்களால் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு நான்கு கால வழிபாடுகள்
சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இதனை, நம்பிராசன் வாழ்ந்த மலை பர்வதராசன்
குன்று எனப்படுகிறது. அதனுச்சியில் சிவலிங்கம் காணப்படுகிறது. வள்ளி, குமரனை அடைய வேண்டிச் சிவனை நோக்கி வழிபாடு செய்த இடம். ஆகவே, இங்கு இறைவனை வேண்டி வழிபட்டால் கேட்ட யாவையும் கிட்டும். அதைப் போலவே,
நம்பிராசன் பரம்பரையினர் நடத்தும் "வேடர் பறி' உற்சவத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியத்தினை நல்கும் என்று
வழிபாட்டினை மேற்கொள்ளும் பாலமுருகன்
என்னும் குருக்கள் உரைக்கின்றார். வள்ளியும் முருகனும் மனித வடிவந்தாங்கி, தமிழர் கண்ட களவு வாழ்க்கையையும்,
கற்பு வாழ்க்கையையும் கண்ட இடம் இதுவேயாகும். இங்கு அருணாசல
ரெட்டியார், திருமுருக கிருபானந்த வாரியார் போன்றோரும்
வழிபாடு செய்துள்ளனர். அடிவாரம் மற்றும் மலைக்கோயிலில்; குமரி
வள்ளிக்கு தனி சன்னதி இருக்கிறது. வள்ளி கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி
வில், கவண் கல் வைத்திருக்கிறாள். முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு
நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக்
கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது. அருணகிரிநாதரால்
திருப்புகழ் பாடப்பெற்ற தலம் இது. மலைக்கோயிலில் கொடி மரத்திற்கு எதிரே விநாயகர்
இருக்கிறார். முன் மண்டபத்தில் நவவீரர்கள், நம்பிராஜன்
இருக்கின்றனர். இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள வனத்திற்குள் வள்ளி பறவைகள்
விரட்டிய மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள்
தேய்த்த மண்டபம், முருகன் நீர் பருகிய குமரி தீர்த்தம்
என்னும் சூரிய ஒளி படாத தீர்த்தம் ஆகியவை உள்ளன. யானையாக வந்து வள்ளியை
பயமுறுத்திய விநாயகர், மலை வடிவில் இருக்கிறார். இதை
யானைக்குன்று என்றழைக்கிறார்கள். (https://ta.wikipedia.org/s/6zmc)
கட்டிடக்கலை
வள்ளிமலையில் தீர்த்தங்கரரின் பல சிற்பங்களைக்
கொண்ட முக்கிய சமண தளமாகும். குகைகள் 40 by 20 அடிகள் (12.2 மீ × 6.1 மீ) உயரம் 7–10 அடிகள் (2.1–3.0 m) . இப்பகுதியில் இந்து கோயிலாக மாற்றப்பட்ட
கோயிலும் உள்ளது. (Chennai museum Vallimalai, பக். 138.)
குகைகள் மூன்று அறைகளைக் கொண்டுள்ளன, இந்த
அறைகளில் இரண்டு சமண தீர்த்தங்கரரின் உருவங்களைக் கொண்டுள்ளது. இந்த குழுவிற்கு
மேலே காணப்படும் சுவரின் எஞ்சியப்பகுதி சமணர்களால் ஆழப்பட்ட சிறிய கோட்டையின்
பகுதி என்று நம்பப்படுகிறது. (Sewell 1882, பக். 156.) சமண உருவங்களுக்கு மேலே பாதாமி குகைக்
கோயில்களின் சிற்பங்களை ஒத்த ஒரு டோரானா காணப்படுகிறது. (Owen 2012, பக். 60) சுகசனா
நிலையில் கழுத்தணி, அம்புகள் மற்றும் கிரீடத்துடன் கூடிய
அம்பிகாவின் உருவம் காணப்படுகிறது.(The Hindu & 2012
icons of grace) சிங்கத்தின் மீது அம்பிகா தனது இரண்டு
மகன்களுடன் அமர்ந்திருக்கும் சிற்பமும் உள்ளது.( Chennai museum
Vallimalai.) மேல் வலது மற்றும் இடது கைகளில் ஆடு மற்றும்
சுருக்குடன் கூடிய நான்கு கைகளுடன் கூடிய பத்மாவதியின் சிலையும் உள்ளது.(
Chennai museum Vallimalai.)
வள்ளிமலை திருமாலீசுவரர் கோயில்
திருமால் வள்ளியம்மையைத் தம் திருமகளாகவும்
முருகப் பெருமானைத் தம் மருமகனாகவும் அடைய வேண்டி சிவபெருமானை நோக்கித் தவம்
செய்து நிறுவிய சிவலிங்கம் இங்குத் திருமாலீசுவரர் என்னும் பெயரில் விளங்கி
வருகிறது. இங்குக் கருவறையில் திருமாலீசுவரர் சிவலிங்க வடிவில் கிழக்கு நோக்கியவாறு காட்சியளிக்கிறார்.
திருமால் தவக்கோலத்தில் இருப்பது இக்கோயிலின் சிறப்பம்சம் ஆகும். சைவக் குரவரான
அருணகிரிநாதர் இத்தலத்தைத் திருப்புகழில் பாடி சைவ சமயத்துக்குப் பெருமை
சேர்த்துள்ளார். வள்ளி மலையில் கோபுர வாயிலைக் கடந்ததும் முன்மண்டபக் கூரையின்
முகப்பில் சுதையாலான வள்ளித் திருமணக் காட்சி சுற்றாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் தென்புறம் மலைக் கோயிலுக்குச் செல்லப்பாதையுள்ளது. வலப்புறம்
நடுமண்டபமும் அதனையடுத்து ஆயலோட்டும் வள்ளியம்மையின் உருவச் சிலையுள்ளது.
ஆறுவேல்கள் ஊன்றப்பட்டுள்ள மண்டபம், அருணகிரிநாதர் மண்டபம் மற்றும்
படிக்கட்டுகளின் ஊடே நாற்கால் மண்டபங்கள் உள்ளன.
வள்ளிமலை குகைக் கோயில்
வேலூர் மாவட்டத்தில் உள்ள இவ்வள்ளி மலை
இயற்கையான குகை அமைப்பினைக் கொண்டது. இம்மலையிலுள்ள குகைதான் சமணச் சான்றுகளைக்
கொண்டு விளங்குகிறது. இதன் உட்புறத்திலுள்ள பாறையில் இரண்டு தொகுதிகளாகச் சமணச்
சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. முதல் தொகுதிச் சிற்பங்கள், வலது
பக்கமாகவும், இரண்டாம் தொகுதிச் சிற்பங்கள், இடதுபக்கமாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் முதலாவது சிற்பம்
மிகவும் சிறியதாகவும், நான்காவது திருவுருவம் பெரிதாகவும்,
ஏனையவை இதைவிட சிறியவையாகவும் உள்ளன. நான்காவது சிற்பம் தீர்த்தங்கரரையும்,
பிற திருவுருவங்கள் சமணசமய அறவோரையும் குறிப்பவையாகும். இந்தத்
தீர்த்தங்கரர் தியானத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறார். இவரது தலைப் பகுதிக்கு
மேல் முக்குடை வடிக்கப்பட்டிருக்கிறது. இச்சிற்பம் முதலாவது தீர்த்தங்கரராகிய
ஆதிநாதர் எனக் கருதப்படுகிறது. ஆனால் இவருக்குரிய இலச்சினையோ அல்லது இயக்கர்,
இயக்கியரது வடிவமோ அருகில் இல்லை. பிற சிற்பங்கள் இந்தத்
தீர்த்தங்கரரைப் போன்ற உருவ அமைப்பினைக் கொண்டிருந்தபோதிலும், அவற்றின் தலைக்கு மேலாக முக்குடை வடிவம் காணப்படவில்லை. இங்குள்ள
சாசனங்களும் இவர்களைச் சமண அறவோர் என்றுதான் கூறுகின்றன. வரிசையாக உள்ள
இத்திருவுருவங்களுள் ஆறாவது சிற்பத்திற்குக் கீழாகவுள்ள இடத்தில் மேலைக் கங்க
மன்னனான இரண்டாம் இராசமல்லனது (கி.பி.873-907) சாசனம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
கன்னட மொழியில் எழுதப்பெற்ற இக்கல்வெட்டு இந்தக் குகைக்கோயிலைச் சிவமாரனின்
கொள்ளுப் பேரனும், இரணவிக்கிரமனின் மைந்தனுமாகிய இராசமல்லன்
அமைத்தான் எனக் கூறுகிறது. கர்நாடக மாநிலத்தின் தென் பகுதியாகிய கங்கவாடியை
மேலைக்கங்கர் என்னும் சிற்றரச பரம்பரையினர் ஆட்சி புரிந்து வந்தனர். இவர்கள்
தமிழகத்தை ஆண்ட பல்லவ சோழ அரசர்களுடன் நட்புறவு கொண்டும் சில சமயம் பகைமை பூண்டும்
இருந்திருக்கின்றனர். இவ்வழியில் தோன்றிய அரசர்களுள் இரண்டாம் இராசமல்லனது
ஆட்சியின் கீழ் தமிழகத்தின் வடபகுதியும் உட்பட்டிருந்ததை வள்ளிமலை, சீயமங்கலம் முதலிய இடங்களிலுள்ள கல்வெட்டுகள் அறிவுறுத்துகின்றன.
வள்ளிமலையிலுள்ள சாசனம் நான்கு தலைமுறை மன்னர்களாகிய சிவமாரன், புருசன், இரணவிக்கிரமன், இராசமல்லன்
ஆகியோரைக் குறிப்பிடுவது சிறப்பிற்குரியதாகும்.
ஆறாவது சிற்பத்தின் ஆசனத்தை ஒட்டி மற்றொரு
கன்னடக் கல்வெட்டும் உள்ளது. இது பாலச்சந்திர தேவரின் சீடராகிய ஆரிய நந்தி என்பவர்
இந்தக் கோவர்த்தனரது சிற்பத்தைச் செதுக்க ஏற்பாடு செய்தார். எனவே இந்தச் சிற்பம்
கோவர்த்தனர் என்னும் சமணப் பெருந்தகையைக் குறிக்கிறது என்பது அறியற்பாலதாகும். இரண்டாவது
திருவுருவத்தின் கீழ்ப்பகுதியில் இரு கன்னடக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
அவற்றுள் ஒன்றின் மூலம் இந்தச் சிற்பத்தையும் ஆரிய நந்தியே செதுக்க ஏற்பாடு
செய்துள்ளார் எனக் கூறுகிறது. அடுத்த சாசனம், இந்தச் சிற்பம் பாணராயனின் குருவாகிய
பவணந்தி பட்டராயனின் சீடராகிய தேவசேனரைக்
குறிக்கும் எனக் கூறுகிறது. எனவே இரண்டாவதாக உள்ள சிற்பம் தேவசேனர் என்ற
துறவியரின் திருவுருவம் எனவும், இவர் பவணந்தி என்பவரது சீடர்
எனவும், பாணராயன் என்ற சிற்றரசனுக்குச் சமய குருவாகவும்
திகழ்ந்தவர் எனவும் கூறுகிறது. இந்தச் சிற்ப வரிசையிலுள்ள முதலாவது, மூன்றாவது, ஐந்தாவது திருவுருவங்களும் சமண அறவோரைக்
குறிப்பவையாக இருந்தபோதிலும், அவர்களது பெயர்களோ அல்லது
அவற்றைச் செய்விக்கத் துணை நின்றவர்களது பெயர்களோ இங்குப் பொறிக்கப்படவில்லை. குகையின்
இடது பக்கத்தில் இரண்டாவது தொகுதிச் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. இவை
இரண்டு இடங்களில் தனித் தொகுதிகளாக உள்ளன. இடது கோடியில் தீர்த்தங்கரர் சிற்பங்கள்
இரு வரிசைகளாக வீற்றிருப்பதைக் காணலாம். முதல் வரிசையில் இரண்டு பார்சுவநாதர்
சிற்பங்களும் அதனையடுத்து மற்றொரு தீர்த்தங்கரரும் இடம் பெற்றிருக்கின்றனர்.
பார்சுவதேவியின் தலைக்கு மேல் ஐந்து தலைப் பாம்பு படம்விரித்த நிலையிலிருக்கிறது.
இரண்டாவது வரிசையில் பார்சுவநாதர் பீடமொன்றில் வலப்புறம் மாதங்கயக்சன் யானை
மீதமர்ந்தவாறு, இடப்புறம் யக்சியின் அழகான சிற்பமும்
சிறியனவாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. தரணேந்திரனுக்குப் பதிலாக இங்கு
மாதங்கயக்சன் சிற்பம் காணப்படுகின்றது.
இதற்கு அடுத்து சுருத தேவியின் திருவுருவம்
சற்று பெரிய அளவில் அரை வட்ட வடிவ மாடத்தினுள் அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தேவி
பீடமொன்றில் அமர்ந்தவாறு வலது காலைத் தொங்க விட்டும், இடது காலைப்
பீடத்தில் மடக்கி வைத்தும் காணப்படுகிறாள். இவளது நான்கு கரங்களுள் மேலுள்ள வலது
கை அங்குசத்தையும், இடது கை பாசக் கயிற்றினையும் கொண்டுள்ளன.
கீழுள்ள வலது கை அபய முத்திரையைக் குறித்தும் இடது கை தொடையின் மீது வைத்தவாறும்
இருக்கின்றன. தடித்த உடலமைப்பும், பருத்துத் திரண்ட
மார்பகமும், ஒடுங்கிய இடையும் இச்சிற்பத்திற்கு அணி செய்வனவாகும்.
மேலைக்கங்கர்களது கலைப்பாணியினைக் கொண்ட இவ்வெழில் மிக்க திருவுருவம்
கி.பி.9-10ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். சுருததேவிக்குச் சற்றுத் தொலைவில்
அமர்ந்த கோலத்தில் இரு தீர்த்தங்கரர்களது சிற்பங்கள் சற்றுப் பெரியவையாகச்
சமைக்கப்பட்டிருக்கின்றன. தியான நிலையில் பீடத்திலிருக்கும் இவ்விரு உருவும்
சற்றுத் தடித்த உடலையும், பரந்த மார்பினையும், பீடத்தில் சிங்க வடிவங்களையும், இருக்கையின்
மேற்பகுதியில் சாமரம் வீசுவோர் சிற்றுருவங்கள் நான்கு தீட்டப்பட்டுள்ளன.
இவ்வுருவங்களில் முக்குடை இடம்பெறவில்லை. இவ்விருவருள் முதலாவது தீர்த்தங்கரரின்
வலதுபுறம் மாதங்கயக்சன் யானையின் தலைப்பகுதியில் வீற்றிருப்பதைக் காணலாம்.
இரண்டாவது தீர்த்தங்கரரின் இடதுபுறம் யக்சி சிற்பம் ஒன்றுள்ளது. அமர்ந்த வண்ணமுள்ள
இந்த யக்சியின் வலதுகை அபய முத்திரையைக் (அல்லது சிம்ம கர்ண முத்திரை) குறித்தும்
இடதுகை பழம் ஒன்றினைக் கொண்டும் விளங்குகின்றன. இவளது காலின் அருகில் தனித்தனியாக
இரு குழந்தைகளும், அதற்குக் கீழ் சிங்க வாகனம் இருப்பதை
காணலாம். இவளது தலையையும் அலங்கரிக்கும்
கரண்ட மகுடத்தின் மேல் சிறிய அளவில் தீர்த்தங்கரர் உருவம்
பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த யக்சி அம்பிகா, ஆம்ர
கூச்மாண்டினி என அழைக்கப்பெறும் பெயர்கள் தருமதேவியைக் குறிக்கும். இந்தச் சிற்பத்
தொகுதியில் தீர்த்தங்கரர் மகாவீரரைக் குறிப்பதால் அவரது வலது புறம்
மாதங்கயக்சனையும், அடுத்துள்ள தீர்த்தங்கரர்
நேமிநாதராகையால் அவரது இடதுபுறம் அம்பிகா
யக்சியையும் செதுக்கியுள்ளனர். இந்தச்
சிற்பங்களும் கங்கர்களது கலைப் பாணியைக் கொண்டவையாக இருப்பதால் கி.பி.9-10 ஆம்
நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவையென்பது தெளிவாகும்.
வள்ளிமலையிலுள்ள கல்வெட்டுகளையும், சிற்பங்களையும் ஒருசேர நோக்கும்போது, இங்குக்
கி.பி.9-10ஆம் நூற்றாண்டுகளில் சமணசமயம் மிகுந்த செல்வாக்குடன் இருந்தமை தெரிய
வருகிறது. இங்குள்ள கன்னட சாசனங்களும், கங்க அரசனது
ஆதிக்கமும் வரலாற்றுச் சிறப்புடையவையாகும். இங்குத் தீர்த்தங்கரர்களுக்கு
மட்டுமின்றி சமணசமய ஆன்றோர்களுக்கும் சிற்பம் தோற்றுவிக்கப்பட்டிருப்பது
பெருமைக்குரியதாகும். இதுபோன்று சுருததேவி சிற்பம் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். தமிழகத்தில்
இதுபோன்ற காலத்தால் முந்திய திருவுருவம் வேறெங்குமில்லை. கி.பி.9ஆம் நூற்றாண்டின்
இறுதியில் அல்லது 10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கர்நாடக மாநிலத்திலுள்ள
சரவணபெலகுலாவைச் சார்ந்த சமணத் துறவியர் சிலர் தமிழகத்திற்குவந்து சென்றுள்ளனர்.
இவர்களுள் ஆரிய நந்தி என்பவர் குறிப்பிடத்தக்கவராவர். இதனை வள்ளிமலை, மதுரை மாவட்டத்தைச்சார்ந்த கீழ்க்குடி ஆகிய இடங்களிலுள்ள கன்னடக்
கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. வள்ளி மலையிலுள்ள ஆறாவது சமணச் சிற்பம் கோவர்த்தனர்
என்ற துறவியைக் குறிக்கும் என்பதையும்,
அதனை உருவாக்க ஏற்பாடு செய்தவர் பாலசந்திர தேவரின் சீடராகிய
ஆரிய நந்தி என்பதையும் முன்பே கண்டோம். இரண்டாவது உள்ள சிற்பத்தினையும் இவரே
உருவாக்கியுள்ளார் என்பதும் தெரிய வருகிறது. கீழக்குயில் குடியிலுள்ள (சமணர் மலை)
கன்னடக் கல்வெட்டு பெலகுலாவிலுள்ள
மூலச்சங்கத்தைச் சார்ந்த ஆரியதேவர் (ஆரிய நந்தி), பாலசந்திரதேவர்
ஆகியோரது பெயர்களையும் நேமிதேவர், ஆசிதசேனதேவர், கோவர்த்தனதேவர் ஆகிய துறவியரது
பெயர்களையும் குறிப்பிடுகிறது. கீழக்குடியிலுள்ள இந்தக் கன்னட சாசனம் கி.பி.12ஆம்
நூற்றாண்டைச் சார்ந்ததெனக் கல்வெட்டுத் துறையினர் கருதுகின்றனர். இது சரியாகத்
தோன்றவில்லை. 10-ஆம் நூற்றாண்டு என இருப்பதே பொருத்தமானதாகும். ஆரிய நந்தி,
பாலசந்திர தேவர் மட்டுமின்றி எஞ்சியுள்ள கோவர்த்தனர், அசிதசேனதேவர். நேமிதேவர் ஆகியோரும் சரவணபெலகுலாவைச் சார்ந்த துறவியராக
இருத்தல் வேண்டும். இவர்களுள் கோவர்த்தனருக்கு வள்ளி மலையில் சிற்பமும்
சமைக்கப்பட்டிருக்கிறது.
வள்ளிமலையில் முதலாவது தொகுதியில் வரிசையாகக்
காணப்படும் சிற்பங்களுள் நாலாவது திருவுருவம் தீர்த்தங்கரர் வடிவமாகும். இங்குள்ள
கல்வெட்டின்படி இரண்டாவது தேவசேனரையும், ஆறாவது கோவர்த்தனரையும் குறிக்கும்
சிற்பங்களாகும். ஒன்றாவது, மூன்றாவது, ஐந்தாவது
திருவுருவங்கள் எந்த முனிவரைக் குறிப்பவை எனக் கல்வெட்டுகள் கூறவில்லை.
கீழ்க்குயில் குடியிலுள்ள சாசனம் கூறும் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு
வள்ளிமலையிலுள்ள முதல் சிற்பம் ஆரிய நந்தியையும், இரண்டாவது
தேவசேனரையும், (அசிதசேனதேவர் என்னும் பெயரை வள்ளிமலையில்
தேவசேனர் என்று பொறித்திருக்கலாம்), மூன்றாவது
பாலச்சந்திரரையும், (நான்காவது தீர்த்தங்கரர்), ஐந்தாவது நேமிதேவரையும் குறிப்பவையாகத் தானிருக்க வேண்டுமென்று கூறலாம்.
இந்த ஐந்து அறவோர் சிற்பங்களுக்கேற்ப ஐந்து பெயர்கள் கீழக்குயில்குடி சாசனங்களும் வள்ளிமலைக் கல்வெட்டிலும் இடம்பெற்றுள்ள மூன்று
பெயர்களும் இக்கருத்தை மெய்ப்பிக்கும்
வண்ணம் உள்ளன. இதிலிருந்து முக்கியமான ஓர் உண்மைப் புலப்படுகிறது. இந்த ஐந்து
துறவியரும் சரவணபெலகுலாவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்களாக (தலைமைத் துறவியராக)
இருக்கலாம். இவர்களுள் கடைசியில் வாழ்ந்தவர் பாலச்சந்திர தேவரின் சீடராகிய ஆரிய
நந்தியாவார். இவர் கங்க மன்னனாகிய இராசமல்லன் காலத்தில் வாழ்ந்தவாரதலால் வள்ளிமலைக்கு வந்தபோது தமக்கு முன்பு வாழ்ந்த
துறவியரின் சிற்பங்களை இங்கு வடிக்க வழிவகை செய்துள்ளார். இவர் இச்சிற்பங்கள்
அமைக்கப்பட்ட போது உயிர் வாழ்ந்தவராதலாலும், மேற்கூறிய
துறவியருக்குப் பின்னர் வந்தவராதலாலும்
இவரது சிற்பம் மட்டும் சிறியதாக
வடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரிசையில்
இவரது திருவுருவம் (வலமிருந்து இடப்புறமாகப் பார்த்தால்) இறுதியில் இடம்
பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு கங்க மன்னனான இராசமல்லனது ஆட்சிக்
காலத்தில் தமிழகச் சமணத் தலங்களாகிய வள்ளிமலை, கீழக்குடி
ஆகியவற்றிற்குச் சரவணபெலகுலாவிலுள்ள மூலசங்கத்தைச் சார்ந்த ஆரியநந்தி வந்து
அறநெறிப் போதித்தும், சிற்பங்கள் சமைக்க ஏற்பாடு செய்தும்
உள்ளமைப் பெருஞ்சிறப்பிற்குரியதாகும்.
வள்ளிமலை சமண குகைகள்
- வள்ளிமலை
சமணப் படுக்கை
- வள்ளிமலை
சமண குகைகள்
- வள்ளிமலை
சமண குகைகள்
- அடிப்படைத்
தகவல்கள்
- அமைவிடம் வள்ளிமலை, வேலூர்
மாவட்டம், தமிழ்நாடு
- புவியியல்
ஆள்கூறுகள் 13°04′24.6″N 79°15′50.9″E
ஆள்கூறுகள்:
13°04′24.6″N 79°15′50.9″E
- சமயம் சமணம்
- கட்டிடக்கலை
தகவல்கள்
- கட்டிடக்கலைப்
பாணி திராவிட கட்டிடக் கலை
- அளவுகள்
- பொருட்கள் குடைவரை
வள்ளிமலையின் கருவறை அமைப்பு
இக்கோயிலின் கருவறையில் சுவாமி மயில் மீது
அமர்ந்து தேவியருடன் காட்சியளிக்கிறார். மேலும், வள்ளி, தேவகுஞ்சரி,
அருணகிரிநாதர், கணபதி முதலாகப் பல
உற்சவமேனிகள் உள்ளன. இவை குடைவரையின் உள் அமையப் பெற்றுள்ளன.
வள்ளி எனும் பொங்கி அம்மன்
திருச்செந்தூரில் கந்தர் சஷ்டியை முடித்துக்
கொண்ட பின் வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திரப் பிரதேசத்தின் அருகில் உள்ள வேலூர்
மாவட்டத்தை சென்று அடைந்தால் வள்ளி மலையை அடையலாம். அங்குதான் வள்ளி அவதரித்தாள்.
இருபதாம் நூற்றாண்டின் முதல் காலத்தில் தென் இந்தியா முழுவதும் வள்ளி மலை
மகாத்மியம் பற்றியும் துறவி அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழையும் பரப்பி வந்த
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள் 22.11.1950 ல் சமாதி அடைந்தார். ஆனால் முருக
பக்தர்களுக்கு இந்த சக்தி பீடத்தின் சக்தி புரியும், தெரியும். வள்ளிக்கு வள்ளி
மலையே விளையாட்டு மைதானமாக இருந்து உள்ளது. அங்குதான் அவள் முருகனுடன் ஆடிப்பாடி,
கண்ணாமூச்சி ஆட்டமாடி விளையாடினாள். அந்த
மலையை சுற்றி உள்ள இயற்கைக் காட்சிகள், குகைகள், பசுமை நிலங்கள், நீரூற்றுக்கள் எனப் பலவும் அந்த
வள்ளி மலைக்கு அழகு சேர்த்து கடவுள் அங்கு இருப்பதை நமக்கு உணர்த்துகின்றன. கடும்
குளிரில் வசிக்கும் சிவபெருமானின் இருப்பிடமான இமயமலை சரிவுகளுடன் வள்ளி மலையை
ஒப்பிட்டுப் பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும். வள்ளி மலை முழுவதுமே வள்ளி அம்மா அல்லது பொங்கி
(பொங்கி எழும் சந்தோஷம்) என்றக் கடவுள் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு இருக்க
ஏற்படுத்திய இடம் போல உள்ளது. என்றும் குமாரனாக உள்ள முருகனைப் போலவே உள்ள
பொன்னிக்கும் என்றும் பன்னிரண்டு வயதே. வள்ளி மலையில்தான் முருகனின் மனம் கவர்ந்த
மங்கையான வள்ளி பிறந்தாள் என்பதால் அவளுடைய ஆத்மா அங்கு மட்டும் அல்ல அங்கு வரும்
பக்தர்களின் உள்ளத்திலும் நிறைந்தே உள்ளது.
ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகளிடம் இருந்து
பொறுப்பை ஏற்றுள்ள வள்ளிமலை பாலானந்த ஸ்வாமிகள், பொங்கியின் நெருங்கிய நண்பர்
எனவும் அவர் தரும் திருப்புகழ் விளக்க உரைகள் உலகம் முழுவதிலும் உள்ள பக்தர்களிடம்
பெறும் வரவேற்பைப் பெறுகின்றது.
மிகவும் நலிவுற்று இருந்த வள்ளிமலை
சச்சினாநந்த திருப்புகழ் ஆசிரமத்தை தன் சொந்த முயற்சிகளினால் புதுப்பித்தார். அதை
ஒரு உதாரணமாகக் கூறும் வகையில் சிறப்பு மிக்க ஆஸ்ரமமாக மாற்றி தினமும் அன்னதானம்
செய்யும் அளவுக்கும், விழாக் காலங்களில் அங்கு வரும் பக்தர்களுக்கும் அன்னதானம் செய்யும்
அளவுக்கும் முன்னேற்றம் அடையச் செய்து உள்ளார். என்றும் பிரும்மசாரியாகவே இருந்து
வரும் பாலானாந்தா சாது தான் இயங்கி சக்தி ஊட்டும் அலுவலகத்தில் தொழில் நுட்பனராக
இருந்தார். அவர் பொங்கி அம்மனின் சமையல்காரர், வாகனம்
ஓட்டுபவர், பூசாரி, கணக்காளர், உதவியாளர், நிர்வாகி, மேற்பார்வையாளர்
என அனைத்தையும் உள்ளடக்கி வேலை செய்பவர்.
முதலில் குவைத், அடுத்து 2000 ஆம் ஆண்டு மே -
ஜூன் மாதத்தில் அமெரிக்க போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்தார். இப்போது எல்லாம்
வள்ளி மலைக்கு செல்பவர்கள் அதை சக்தி பீடம் எனக் கருதாமல் சுற்றுலா செல்லத் தகுந்த
இடமாகவே நினைக்கத் தொடங்கி உள்ளார்கள். அதனால் அங்கு இருந்த தெய்வீக சூழ்நிலை
மாறிவிட்டது. அதைக் கண்ட பாலனந்தா ஸ்வாமிகள் அந்த நிலையை மாற்றி அமைக்கவும் வள்ளி
மலை, பொங்கி அம்மா மற்றும் அதன் பண்பாட்டை நிலை நிறுத்தும்
முறையில் இளைஞர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் அங்கு
வருகைத் தரும் அனைத்து பிரிவினருக்கும் போதனை செய்தவண்ணம் உள்ளார். வள்ளி மலைக்கு
வருபவர்களுக்கு அதிக வசதிகள் இல்லை என்பதினால் அங்கு செல்பவர்கள் பாலனந்தாவைப் போல
வெற்றுத் தரையில் படுக்கப் பழகிக் கொள்ள வேண்டும். ஒருநாள் வள்ளிமலை சச்சிதானந்த
ஸ்வாமிகள் மலை மீது நடந்து கொண்டு இருந்தபோது அவர் வள்ளியை ஒரு சிறு பெண் உருவில்
காண நேர்ந்தது. அவள் விரகர நோக்கியம் (Virakara Nokkiyam) அவளைப்
பார்த்து 'நீ யார்?' என்று கேட்க 'நான் யார் என்று தெரிவது முக்கியம் அல்ல. ஆனால் என் பாடலைக் கேட்டால் உன்
மனதில் மகிழ்ச்சி ஏற்படவில்லையா?' என்றாள். அது முதல் வள்ளி
மலை ஸ்வாமிகள் ராக தாளங்களுடன் பாடத் துவங்கினார். அங்கேயே ஒரு பாறையில் அவளை
ஸ்தாபனம் செய்தார்.
வள்ளி மலை சக்தி பீடம்
இந்த மலையில் பல சித்தர்கள் தவம் இருந்து
இருக்கின்றனர். இதை சக்தி பீடம் என்று கூடக் கூறலாம். அந்த மலை உச்சியில்
வள்ளியின் பக்கத்தில் முருகன் தன்னை மரமாக மாற்றி காட்டிக் கொண்ட இடமும் உள்ளது.
பட்டுப் போய்விட்ட அதை வள்ளி மலை ஸ்வாமிகள் எடுத்து விட்டு அங்கு தண்ணீர்
குளத்தைக் கட்டினார்.
கணேஷ் கிரி
வள்ளித் திருமணத்திற்கு உதவிய யானை மற்றும்
பிள்ளையார் உருவச் சிலைப் பதித்த பாறை ஒன்று அங்கு உள்ளது. இயற்கையிலேயே பிள்ளையார்
போல் அமைந்து உள்ள அந்தப் கணேஷ் கிரிப் பாறை பக்தர்களை பாதுகாக்கின்றது.
திருப்புகழ் ஆஸ்ரமம்
வள்ளிமலை பாறைக்குப் பக்கத்தில்தான் இந்த
ஆஸ்ரமம் அமைந்து உள்ளது. ஸ்வாமி சச்சிதானந்தா அவர்கள் திருப்புகழை வேத மந்திரம் என
ஏற்றுக் கொண்டு அதை இசையுடன் கூடிய பாடலாக அமைத்து பாடச் சொல்லித் தந்தார். 1950
ஆம் ஆண்டில் அவர் சமாதி எய்தினார். அந்த சமாதி ஒரே பாறையில் அமைக்கப்பட்டு உள்ளது.
தற்பொழுது அந்த ஆஸ்ரமம் ஸ்ரீ பாலநந்தா ஸ்வாமிகளினால் நிர்வாகிக்கப்படுகின்றது.
சிவா விஷ்ணு
திருமால் கிரீஷ்வரா என்ற சிவலிங்கம் அந்த மலை
மீது உள்ளது. பூஜைகள் முடிந்த பின் அங்கு உள்ள பூசாரி பக்தர்களை சடரி என்பதால்
ஆசிர்வதிக்கிறார். அதனால் இது ஒரு வைஷ்ணவத் தலம் என்று நினைக்கத் தோன்றுகின்றது.
குமரி தீர்த்தம்
ஆஸ்ரமத்தின் கிழக்குப் பக்கத்தில் உள்ளது
சூரியன் காண சுனை (Suriyan kaanak
cunnal) என்ற நீர் ஊற்று. அதாவது சூரிய ஒளிகளே தன் மீது படாமல் உள்ள
ஊற்று அது. புராணக் கதையின்படி அங்கு முருகன் வந்து வள்ளியிடம் தனக்கு தினையும் ,
தேனும் தருமாறுக் கேட்டாராம். அதைத் சாப்பிட்டதும் விக்கல் எடுக்க
தனக்கு சூரிய ஓளியே படாத நீர் ஊற்றில் இருந்துத் தண்ணீர் கொண்டு வந்துத் தருமாறு
அவர் கேட்டார். அந்தக் குளம் கங்கையைப் போல வற்றாத குளம். இளம் பெண்கள் அங்கு
வந்து தங்களுடைய தலை மீது அந்த குளத்து நீரைத் தெளித்துக் கொண்டு தனக்கு நல்ல
கணவன் அமைய வேண்டும் என வள்ளியிடம் வேண்டிக் கொள்வது உண்டு என்று பனை ஓலைகளில்
எழுதப்பட்டு உள்ள செய்திகள் மூலம் அறியப்படுகின்றது.
வள்ளி மற்றும் தேவசேனா ஆலய வரலாறு
வள்ளியும் தேவானையும் மகாவிஷ்ணுவின் மகள்
ஆவர். அவர்கள் தங்களுக்கு கோபமே இல்லாத கணவன் வேண்டும் என எண்ணினர். அவர்கள்
அதற்காக தபம் இருக்க அவர்கள் முன் வந்த முருகக் கடவுள் வள்ளியை வேத்தாஸின்
மகளாகவும் தெய்வானையை இந்திரனுக்கும் மகள்களாகப் பிறந்த பின் அவர்களை தான் வந்து
திருமணம் செய்து கொள்வேன் என்றார். சூரபத்மனை அழித்து இந்திர லோகத்தை இந்திரனிடம்
கொடுத்ததின் காரணமாக மகிழ்சியுற்ற இந்திரன் தன் பெண் தெய்வானையை அவருக்கு மண
முடித்தார். வள்ளியும் வேத்தாக்களின் மன்னன் நம்பி ராஜுக்கு மகளாகப் பிறந்தாள். பன்னிரண்டு
வருடம் வள்ளியும் முருகனும் லீலைகள் பல புரிந்து திருமணம் செய்து கொண்டனர். வள்ளி
பிறந்த மழைப் பகுதியை வள்ளி மலை என அழைத்தனர். பத்து நாட்கள் நடைபெறும் வள்ளித்
திருவிழாவில் அனைத்து சுமங்கலிப் பெண்களுக்கும் திருப்புகழ் ஆசிரமத்தின் சார்பில்
மஞ்சள், குங்குமம், தாலிக் கயிறு முதலியவைகள்
கொடுக்கப்படுகின்றன. வள்ளி அமர்ந்து
தவம் புரிந்த ஒரு இடம் உள்ளது. அந்த தவ பீடத்தை கிருபானந்தவாரியார் முருகனின்
ஆலயத்தின் அருகில் அமைத்து உள்ளார். அந்த தவ பீடத்தில் ஆறுபடை முருகன் சன்னதி
ஒன்றும் உள்ளது. ஒவ்ஒருவரும் தன் வாழ்நாளில் ஒரு மறையாவது வள்ளி மலையில் உள்ள
முருகனின் ஆலயத்துக்கு சென்று தரிசிக்க வேண்டும் என கிருபாந்தவாரியார் கூறுவது
உண்டு. (http://murugan.org/tamil/vallimalai.htm)
ஜெயின் குகைகள்
வள்ளிமலைக்கு சென்ற பின் திரும்பும் வழியில்
ஜெயின் மதத்தினரின் குகைகளும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளும் அமைந்துள்ள
குகைகளும் உள்ளன. அவைகள் தொல்பொருள் ஆராய்ச்சிப் மையத்தினால் பராமரிக்கப்பட்டு
வருகின்றன. வள்ளிமலை சமண குகைகள் என்பது வரலாற்றிற்கு முந்தைய காலத்தில் திகம்பர்
துறவிகள் வசித்து வந்த இயற்கை குகைகளாகும். Ramaswamy 2017, பக்.
384., The Hindu & 2018 Vallimalai.)இத்துறவிகள் பீகாரில் இருந்து மெளரியக் காலத்தின் பிற்பகுதியில் இங்கு
வந்தனர். இக்குகைகளில் காணப்படும் மென்மையான மற்றும் மெருகூட்டப்பட்ட படுக்கைகள்
சதாவகன வம்சத்தின் ஆட்சியில் செதுக்கப்பட்டன. (Ramaswamy 2017,
பக். 52.) இக்குகையில் ஐந்து கல்வெட்டுகள்
காணப்படுகின்றன. (Umamaheshwari 2018, பக்.
38.) இவற்றுள் ஒன்று 8ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது.(
Subramanian 2002, பக். 36.) பொ.ச. 870 சோழ மன்னர்களிடமிருந்து
இந்த பகுதியைக் கைப்பற்றிய கங்கை மன்னர் இரண்டாம் ராச்சமல்லாவின் ஆட்சிக்
காலத்தில் சமண சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. (Aravamuthan 1992,
பக். 30., Chennai museum Vallimalai, பக்.
59., The New Indian Express & 2014 Vallimalai.) வள்ளிமலை 8 மற்றும் 9ஆம் நூற்றாண்டில் முக்கியமான சமண மையமாக இருந்தது. (Chennai
museum Vallimalai, பக். 59.,)
பாதுகாப்பு
இந்த குகைகள் இந்தியத் தொல்பொருள் ஆய்வு
மையத்தால் பாதுகாக்கப்படுகின்றன. (ASI Vellore sub-cirle.) 2014 ஆம் ஆண்டில், இந்த இடத்தை விளம்பரப்படுத்துவதற்காக இப்பகுதியில் "அகிம்சை
நடை" ஏற்பாடு செய்யப்பட்டது. (The New Indian Express & 2014 Vallimalai.)
வள்ளிமலை முருகன் கோவில் விழாக்கள்
சுப்பிரமணியர் கோயில்களில் கிருத்திகை
நட்சத்திரத்தில் வழிபாடுகளும் பூசைகளும்
சிறப்பாக நடைபெறுகின்றன. சுப்பிரமணியர் தோன்றிய நட்சத்திரம் விசாகம்.
இதனடிப்படையில் அவருக்கு விசாகப் பெருமாள் என்னும் பெயர் வழங்கி வருகிறது. விசாக
நட்சத்திரத்தைவிடப் பன்மடங்கு கிருத்திகை நட்சத்திரம் கொண்டாடப்படுகிறது. இதற்குக்
காரணம், முருகப் பெருமான் ஆறு குழந்தைகளின் வடிவில் சரவணப் பொய்கையில் இருந்தபோது
கார்த்திகைப் பெண்கள் அறுவர் அவருக்குப் பாலமுதம் ஊட்டினார். அவர்களை
நினைவுப்படுத்தும் வகையில் அவர்கள் பெயரில் கிருத்திகை நட்சத்திரம்
கொண்டாடப்படுகிறது. இதனடிப்படையில் முருகப்பெருமான் கோயில்களிலும் கிருத்திகை விழா
கொண்டாடப்பட்டு வருகிறது. வேலூரில் உள்ள விரிஞ்சிபுரத்தில் கார்த்திகை
ஞாயிற்றுக்கிழமையில் மகப்பேறு வேண்டுவோர் சிறப்பு வழிபாடு ஆற்றுவார்கள்.
கார்த்திகை மாதத்திற்குரிய விருட்சிகராசி பனை வீடு எனப் பழம் நாடி சாத்திரம்
கூறுகிறது. இதனால் இம்மாவட்டத்தில் பல கோயில்களில் பனைமரம் தல விருட்சமாக உள்ளது.
கார் காலத்தை உள்ளடக்கிய மாதம்
கிருத்திகை. இதை இன்று "கிருத்திகா' என்பர். விவசாயத்தை
வளர்ப்பதாகிய மழையைத் தெய்வமாகப் போற்றப்படுகிறது. பல தலங்களில் பழங்காலம் தொட்டே
தண்ணீர் கிணறுகளைச் சுற்றிலும் மண்டபம் அமைத்துப் பாதுகாத்து அவற்றை வழிபட்டனர்.
வள்ளிமலை முருகன் கோவிலை பெரிய அளவில் விழா
எடுத்து பிரபலமாக்கியவர் இந்த கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்து இந்த மலையிலேயே
நீண்ட காலம் வாழ்ந்து மறைந்த வள்ளிமலை சுவாமிகள். அவர்தான் இந்த மலை முருகன்
கோவிலை உலகறிய செய்தார். அனைவரும் இந்த கோவில் வாழ்நாளில் ஒருமுறையேனும் சென்று
வந்தால் சிறப்பு என வாரியார் சுவாமிகள் கூறியுள்ளார். இந்த மலை முருகன் கோவில்
அடிவாரத்தில் இருந்து 800 படிகளுடன் உள்ளது. அனைத்து படிகளுக்கும் கற்பூரம் வைத்து
தீபமேற்றி, வெற்றிலை பாக்கு தாம்பூலம் வைத்து வணங்கி செல்வதுதான் படி பூஜை. வணங்கி
சென்று பின்பு மேல் ஏறி மலையை சுற்றி கிரிவலம் வந்து முருகனை வணங்குவது மரபு.
இன்று பெரும்பாலான முருகன் கோவில்களில் படி பூஜை செய்யப்பட்டாலும் இங்கு
செய்யப்படும் பூஜையே பிரதானமாகும். தமிழ்ப்புத்தாண்டுக்கு முதல் நாள் வருடா வருடம்
இங்கு சிறப்பாக இந்த படி பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையை மக்களிடத்தில்
பிரபலப்படுத்தியவர் மறைந்த வள்ளிமலை சுவாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது
ஜீவசமாதியும் இந்த மலை மேல் உள்ளது.அடிவாரத்திலேயே வள்ளிக்கு தனி சன்னதி உள்ளது. (Feb
23, 2021, 20:34
PM) https://tamil.thesubeditor.com/news/special-article/29633-vallimalai-sri-murugaperuman-temple-prom-festival-organized
வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் நடைபெறும்
பிரசித்தி பெற்ற தை - மாசி பிரம்மோற்சவ தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும். அதற்கு முன்னதாக
விநாயகர் உற்சவம் நடத்தப்படும். கொடியேற்றத்தை தொடர்ந்து பகல் மற்றும் இரவில்
பல்வேறு வாகன உற்சவங்கள் நடைபெறும். பிரம்மோற்சவ விழாவின்
முக்கிய நிகழ்வான முதல் நாள் தேர்த்திருவிழா நடைபெறும்.
அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி தெய்வானை சமேதராய் சுப்பிரமணிய சாமி
அமரவைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர்
பக்தர்கள் தேரை வடம் பிடித்து மலை சுற்றுப்பாதையில் பக்தியுடன் இழுத்து செல்வர்.
அப்போது கூடியிருந்த பக்தர்கள் வள்ளிமலை முருகனுக்கு அரோகரா, வள்ளி, தெய்வானை மணாளனுக்கு அரோகரா என்று பக்தி
கோஷங்களை எழுப்புவர். தேர்த்திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரி,
கேரளா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில்
இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். முக்கிய விழாக்கள் முதல் நாள்
தேர் நேற்று மலை சுற்றுப்பாதையில் சுற்றி வந்து, துண்டுகரை
பகுதியை வந்தடைந்தது. இன்று இரண்டாம் நாள்
தேர் துண்டுகரையில் இருந்து மாலை புறப்பட்டு மலை சுற்றுப்பாதையில் உள்ள
சோம்நாதபுரம் என்ற பகுதியை சென்றடைய உள்ளது. மீண்டும் அங்கிருந்து மாலை மூன்றாம்
நாள் தேர் புறப்பட்டு பெருமாள் குப்பம் பகுதியை சென்றடைகிறது. மீண்டும்
அங்கிருந்து புறப்பட்டு, கோவில் அருகில் உள்ள நிலையை வந்து
சேருகிறது. தேர் இரவு தங்கும் இடங்களில் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், பக்தி சொற்பொழிவுகள், நாடகங்கள் உள்ளிட்ட கலை
நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இறுதியாக வேடர்பரி உற்சவமும், வள்ளியம்மை
திருக்கல்யாணமும், மாலையில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
அடுத்து 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
முடிவுரை
வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் வீற்றிருக்கும் முருகன்
திருமண வரம் அருள் பவனாகவும், பக்தர்களின் பிணிகளுக்கு மருந்தாக இருப்பவனாகவும் வள்ளி தெய்வானை
சமேத சுப்பிரமணியராக காட்சியளிக்கிறான். இந்த சந்நிதி சமணதீர்ந்தங்கரர்கள்
வாய்ந்தமைக்கான சான்றுகளுடனும் காட்சியளிக்கிறது. சைவ,
சமண சமயத்தவர்களின் வழிபாட்டுத்தலமாக இத்தலம் விளங்கிவருகிறது.
முருகனின்திருவிளையாடல்களில்ஒன்றான வள்ளித்திருமணம் குறித்த பல ஆதாரங்கள்
நமக்கு இத்தலத்தில் கிடைக்கிறது. இத்தலம் வரலாற்றுச் சிறப்புமிக்க
தலம்மட்டுமல்லாது இத்தலம் முருகனின் பக்தர்களுக்கு சிறந்த முக்தி தலமாகவும் விளங்கிவருகிறது.
இங்கு பல சித்தர்கள் காணப்படுவதாகவும் அவர்கள் தவம் மேற்கொண்டு வருவதாகவும்
கூறப்படுகிறது. இவ்வாறு பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள
இத்தலத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை தேவை என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக
உள்ளது.
1.
Subramanian, K.
R. (2002), [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] வள்ளிமலை சமண குகைகள் Origin of Saivism
and Its History in the Tamil Land] Check |url= value (உதவி),
Asian Educational Services, ISBN 9788120601444
2.
https://tamil.nativeplanet.com/vellore/attractions/vallimalai/#overview
3.
புலவர் செந்துறை முத்து, முருகன் தலங்கள்
4.
தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, அருணகிரிநாதர் திருப்புகழ் உரை
பாகம்-1&2
5.
ச.சாம்பசிவன், கந்தபுராணம் உரை
6.
ச.வே.சுப்பிரமணியம், தொல்காப்பியம் தெளிவுரை
7.
(https://tamil.webdunia.com/article/special-articles-on-religion/வள்ளிமலை-அற்புதம்-109032000031_1.htm)
8.
https://www.dailythanthi.com/Others/Devotional/2021/03/02070738/The-blessing-of-marriage-Vallimalai.vpf
10.
https://ta.wikipedia.org/s/6zmc
11.
Chennai museum
Vallimalai.
12.
Sewell 1882
13.
The Hindu &
2012 icons of grace14. http://murugan.org/tamil/vallimalai.htm
இணைப்புகள்
தய்யதன தந்த தய்யதன தந்த
தய்யதன தந்த ...... தனதான
......... பாடல் .........
அல்லசல டைந்த வில்லடல நங்கன்
அல்லிமல ரம்பு ...... தனையேவ
அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற
லையமது கிண்ட ...... அணையூடே
சொல்லுமர விந்த வல்லிதனி நின்று
தொல்லைவினை யென்று ...... முனியாதே
துய்யவரி வண்டு செய்யமது வுண்டு
துள்ளியக டம்பு ...... தரவேணும்
கல்லசல மங்கை யெல்லையில்வி ரிந்த
கல்விகரை கண்ட ...... புலவோனே
கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று
கல்லலற வொன்றை ...... யருள்வோனே
வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச
வல்லமைதெ ரிந்த ...... மயில்வீரா
வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியைம ணந்த ...... பெருமாளே.
- திருப்புகழ் 537 அல் அசல்
அடைந்த (வள்ளிமலை)
தனதன தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன ...... தனதான
......... பாடல் .........
வரைவில்பொய் மங்கையர் தங்க ளஞ்சன
விழியையு கந்துமு கந்து கொண்டடி
வருடிநி தம்பம ளைந்து தெந்தென ...... அளிகாடை
மயில்குயி லன்றிலெ னும்பு ளின்பல
குரல்செய்தி ருந்துபி னுந்தி யென்கிற
மடுவில்வி ழுந்துகி டந்து செந்தழல் ...... மெழுகாகி
உருகியு கந்திதழ் தின்று மென்றுகை
யடியின கங்கள்வ ரைந்து குங்கும
உபயத னங்கள்த தும்ப அன்புட ...... னணையாமஞ்
சுலவிய கொண்டைகு லைந்த லைந்தெழ
அமளியில் மின்சொல்ம ருங்கி லங்கிட
உணர்வழி யின்பம றந்து நின்றனை ...... நினைவேனோ
விரவி நெருங்குகு ரங்கி னங்கொடு
மொகுமொகெ னுங்கட லுங்க டந்துறு
விசைகொடி லங்கைபு குந்த ருந்தவர் ...... களிகூர
வெயில்நில வும்பரு மிம்ப ரும்படி
ஜெயஜெய வென்றுவி டுங்கொ டுங்கணை
விறல்நிரு தன்தலை சிந்தி னன்திரு ...... மருகோனே
அருகர்க ணங்கள்பி ணங்கி டும்படி
மதுரையில் வெண்பொடி யும்ப ரந்திட
அரகர சங்கர வென்று வென்றருள் ...... புகழ்வேலா
அறம்வளர் சுந்தரி மைந்த தண்டலை
வயல்கள்பொ ருந்திய சந்த வண்கரை
யரிவைவி லங்கலில் வந்து கந்தருள் ...... பெருமாளே.
- திருப்புகழ் 540 வரைவில்
பொய் (வள்ளிமலை)
தய்யத்த தாத்த தய்யத்த தாத்த
தய்யத்த தாத்த ...... தனதான
......... பாடல் .........
கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை
துள்ளிக்க னார்க்க ...... யவுகோப
கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை
கொள்ளைத்து ராற்பை ...... பசுபாச
அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை
வெள்ளிட்ட சாப்பி ...... சிதமீரல்
அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்
கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ
தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்
வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே
சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்
புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே
வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க
வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே
வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.
- திருப்புகழ் 534 கள்ளக் குவால் பை (வள்ளிமலை)
தனதன தனதன தனதன தனதன
தய்யத்த தாத்த ...... தனதான
......... பாடல் .........
ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை
கள்ளப் புலாற்கி ...... ருமிவீடு
கனலெழ மொழிதரு சினமென மதமிகு
கள்வைத்த தோற்பை ...... சுமவாதே
யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள்
உள்ளக்க ணோக்கு ...... மறிவூறி
ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
லுள்ளத்தை நோக்க ...... அருள்வாயே
ம்ருகமத பரிமள விகசித நளினநள்
வெள்ளைப்பி ராட்டி ...... இறைகாணா
விடதர குடிலச டிலமிசை வெகுமுக
வெள்ளத்தை யேற்ற ...... பதிவாழ்வே
வகுளமு முகுளித வழைகளு மலிபுன
வள்ளிக்கு லாத்தி ...... கிரிவாழும்
வனசரர் மரபினில் வருமொரு மரகத
வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.
திருப்புகழ் 536 ககனமும்
அநிலமும் (வள்ளிமலை)