6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

வேலையில்லா பட்டதாரி - முனைவர் பீ. பெரியசாமி

 

வேலையில்லா பட்டதாரி

1. கல்விக்கடன் சுமை

கற்ற கல்வி கண்ணீரில் வாடுதே

பெற்ற கடன் பேயாய் மிரட்டுதே - நற்றவமாய்

வேலை தேடி வீதி அலைகின்றேன்

நாளை விடியும் நனி.

2. சமூகப் பார்வை

பட்டங்கள் ஏந்திப் பகலெல்லாம் அலைந்தும்

ஒட்டவில்லை வேலை ஒருகாலும் - சுற்றத்தார்

ஏளனப் பேச்சால் இதயமே புண்ணாகிக்

காலம் கழிகிறதே காண்.

3. நேர்காணல் ஏமாற்றம்

ஆயிரம் நேர்காணல் ஆவலாய்ச் சென்றும்

வாய்க்கவில்லை நல்லதொரு வாய்ப்பே - போயின

செருப்பின் வாரோடு தேய்ந்தன கால்கள்

விருப்பம் நிறைவேறா வீண்.

4. பெற்றோரின் ஏக்கம்

தந்தை உழைக்கத் தளர்ந்து போனார்

சிந்தை வாடிச் சிலையாகிப் போனார் - மைந்தன்

பணிபெற்றுப் பார்புகழப் பார்ப்பார் எனவாடிப்

பிணிபெற்று நின்றார் பிரிந்து.

5. தகுதிக்கு மீறிய வேலை

பொறியியல் கற்றும் பொதிசுமக்கச் சென்றேன்

அறிவைத் தொலைத்து அழுதேன் - நெறிகெட்ட

உலகில் பிழைக்க உழைப்பதே மேலென்று

விலகி நின்றேன் வீணாய்த் தவித்து.

6. கனவு கலைந்தது

மாட மாளிகை வாழ்வென்று எண்ணினேன்

கோடி கனவுகள் கண்டேனே - ஓடி

இளைத்த பின்னே இஃதுணர்ந்தேன் மண்ணில்

பிழைப்பதே பெரும் போராட்டம்.

7. ஊக்கமது கைவிடேல்

முடங்கிக் கிடந்தால் முன்னேற லாகா

தொடர்ந்து முயன்றால் துலங்கும் - இடர்நீக்கி

வெற்றி வசப்படும் வேகமாய் உழைத்தால்

கற்றுத் தெளிந்தனை நீ.

8. அரசுத் தேர்வு

இரவும் பகலும் இமைமூடா தேகி

உரமேற்றித் தேர்வு எழுதி - வரவுக்காகக்

காத்துக் கிடக்கின்றேன் கண்ணுறக்கம் இன்றி

நாத்தழும்பு ஏறும் வரை.

9. வறுமையின் கொடுமை

பசியின் கொடுமை பகலெல்லாம் வாட்ட

விதிவிலக்காய் வேலை கிடைக்க - கதியாக

நூலகமே தஞ்சம் எனநின்று வாடுகிறேன்

பாலகன் நானே பரிந்து.

10. நம்பிக்கை ஒளி

இன்றைய துன்பம் நாளைப் பனிபோலச்

சென்று மறையும் சினமேற்க - நன்றுதவழ்

நம்பிக்கை கொண்டால் நலிவு அகன்றிடும்

வெற்றி உனதே விழை.

 

கருத்துகள் இல்லை: