4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 3 ஜூன், 2020

அறிவா! ஞானமா! (பொதுக்கட்டுரை) - திருமதி. கா. இந்திராணி

திருமதி. கா. இந்திராணி

indhiranik5@gmail.com

9025670811

அறிவா! ஞானமா!

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அறிவு, ஞானம் பற்றி ஐயம் இருந்தது. அறிவு என்றால் என்ன? ஞானம் என்பது எது என்று குருவிடம் கேட்டனர். அவர் அறிவு, ஞானம் பற்றி பல நாட்கள் பாடம் எடுத்தும் அவர்கள் மூவருக்கும் அது முழுவதுமாக விளங்கவில்லை. இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை உணர முடியவில்லை.

ஒரு நாள் பகவான் ஸ்ரீராம கிருஷ்ணர் தன்னுடைய மூன்று மாணவர்களையும் அழைத்து இன்று உங்களுக்கு ஞானம் என்பது எது என்பதனை ஒரு செயல் மூலம் விளக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார். அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்தமர்ந்தார்.

முதல் மாணவனைப் பார்த்து நான் போய் வந்த அந்த அறையினுள் மூன்று தம்ளரில் பால் உள்ளது. அதில் நீ            ஒரு தம்ளர் பாலை மட்டும் பருகிவிட்டு வா! என்றார். அவன் உள்ளே சென்றான். தங்கம், வெள்ளி, வெண்கலம்  ஆகிய மூன்று தம்ளர்களில் பால் இருந்தது. உடனே தங்கத்தம்ளரில் இருந்த பாலை எடுத்து மிகுந்த சந்தோஷத்தோடு பருகினான். பிறகு வெளியே வந்தான்.

அடுத்த இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத்தம்ளரில் பால் இல்லாததைப் பார்த்த அவன் அதிலிருந்த பால் தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆதங்கமுற்றான். ஆயினும் அதற்கடுத்த மதிப்பினைக் கொண்ட வெள்ளி தம்ளரில் இருந்த பாலை எடுத்துக் குடித்துவிட்டு ஓரளவு நிறைவோடு வெளியே வந்தான்.

மூன்றாவது மாணவன் உள்ளே சென்றதும் காலியாகக் கிடந்த தங்கம், வெள்ளி தம்ளர்களைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. எனக்கு வெண்கல தம்ளர் பாலா? யாருக்கு வேண்டும் இது? நான் என்ன அவ்வளவு இளக்காரமானவனா? எந்த விதத்தில் நான் தாழ்ந்தவனாகி விட்டேன்? என்று அவன் மனதில் எண்ணங்கள் ஓடின. ஆயினும் குரு பாலைக் குடித்து வா என்றதை நினைவில் கொண்டு வருத்தத்தோடு பாலைக்குடித்து விட்டு வெளியே வந்தான். அவன் முகத்தில் சுரத்தே இல்லை!

பகவான் ஸ்ரீராம கிருஷ்ணன் மூவரையும் பார்த்து பாலைக் குடித்தீர்களா? என்றார். முதல் மாணவன் மகிழ்ச்சிப் பூரிப்புடன் தங்கத்தம்ளரில் பால் குடித்தேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, கொடுத்து வைத்தவன் குருவே! என்றான். இரண்டாவது மாணவன், எனக்கு தங்கத்தம்ளரில் பால் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், வெள்ளித்தம்ளரிலாவது கிடைத்ததே என்கிற மகிழ்ச்சி ஓரளவு இருக்கிறது குருஜி என்றான். மூன்றாவது மாணவன் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே அழுகை வந்து விட்டது. மூன்று மாணவர்களிலேயே நான்தான் மிகவும் துரதி

ர்ஷ்டசாலி குருஜி எனக்கு வெண்கலத் தம்ளரில் தான் பால் கிடைத்தது என்றான்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அமைதியாக எல்லாவற்றையும் கேட்ட பின்பு பேச ஆரம்பித்தார். மாணவர்களே! தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று தம்ளர்களிலும் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து சுண்டக்காய்ச்சிய சுவையான பசும்பால் தான் ஒரே அளவில் இருந்தது. அதில் எந்த வேறுபாடும் இல்லை. பாலை பருகப் போகிற மூவருக்குமே அதிலிருந்து ஒரே மாதிரியான சுவையும், சத்தும் தான் கிடைக்கப்போகிறது. அதிலும் எந்த விதமான வேறுபாடும் இல்லை. ஆனால் நீங்கள் மூவரும் நினைத்தது வேறு.

பால் ஊற்றி வைத்திருக்கும் தம்ளர்களின் மதிப்பைப் பற்றியே உங்கள் மனம் யோசித்தது. பாலின் குணம், சுவை, சத்து ஆகிய அனைத்தும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதை யோசிக்கவே இல்லை. நீங்கள் பண்டத்தை அதாவது பாலை விட்டு விட்டு பாத்திரத்தையே பார்த்துள்ளீர்கள்! பாத்திரத்தைப் பார்த்து சந்தோஷப்படுவது அறிவு. அதில் உள்ள பண்டத்தைப் பார்த்து இன்புறுவது ஞானம். ஞானிகள் பண்டத்தைப் பற்றியும் அதன் பயன் பற்றியுமே பார்ப்பார்கள். பாத்திரங்களுக்கு மதிப்பு தர மாட்டார்கள். மண் சட்டியில் ஊற்றிக் கொடுத்தால் கூட ஆனந்தமாகப் பருகிச் செல்வார்கள்.

நீங்கள் அறிவு கொண்டு பார்க்காமல், ஞானம் கொண்டு பார்த்திருந்தால் மூவருமே ஒரே மாதிரியான மனோ நிலையை எட்டியிருப்பீகள் என்றார். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்லி முடித்ததும் மூன்று பேர்களுக்கும் அறிவிற்கும். ஞானத்திற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக விளங்கியது.

Click to Download