கதிர் சூர்யா பதிப்பகம்
வேலூர் – 9. செல் : 9843498415
முகவுரை
வெற்றிக்கும், வீரத்திற்கும் அதிபதியாக உலக மக்கள் அனைவரையும் அன்போடும், பாசத்தோடும் காத்து நின்று ஜெகத்தினை
ஆளும் அன்னை ஆதிபராசக்தியின் அவதாரங்களில் ஒன்றான துர்க்கை. கொற்றவையாக, மகிஷாசுரமர்த்தினியாக மக்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். சரித்திரம் போற்றும் பல்லவ மன்னர்கள்
முதல் சேர, சோழ, பாண்டியர் வரை அன்னை துர்க்கையை
வழிபட்டு வந்துள்ளனர். தமிழ் இலக்கியங்களில் பரிபாடல், திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம் முதலான இலக்கிய வகைகளில் அன்னை மகிஷ சுரமர்த்தினியின் குறிப்புகள் உள்ளன. பாலை நிலத்தவர்களின் குலதெய்வமாக இவ்வன்னை வணங்கப்பட்டு வந்துள்ளார். பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட அன்னை மத்தூர் மகிஷாசுரமர்த்தினி திருக்கோயில் குறித்த செய்திகளை இவ்வாய்வுக் கட்டுரை விளக்குகிறது.
உருவ இலக்கணம்
சில்ப ரத்தினம் எனும் நூலின்படி, மகிஷாசுரமர்த்தினி, முக்கண்ணி, எண்கரத்தி, சந்திரன் அலங்கரிக்கும் சடாமகுடம் கொண்டவள். வலக்கரங்களில் திரிசூலம், வாள், சக்கரம், வில் என்பனவும், இடக்கையில் பாசம், கோடரி, கேடயம், அங்குசம் என்பனவும் விளங்க, குருதி வடியும் எருமைத்தலை காலடியில் கிடக்கச் சிங்கம் மீது
ஒரு காலூன்றி, கம்பீரமாக நிற்பவள். தலை துண்டான எருமை உடலிலிருந்து, கையில் வாளும், கேடயமும் ஏந்தி, மேதியன் வெளிவந்து, தன்னைப் பாசத்தால் கட்டும் தேவியை
எதிர்ப்பான். அன்னையின் மறுகால் அவ்வெருமையின் உடல் மீது நிற்கும் வடிவினள் என்பது பொதுவாக மகிஷாசுரமர்த்தினியின் உருவத்திற்கான வர்ணனையாக உள்ளது.
மகிஷாசூரன் பெற்ற வரம்
பிரம்மதேவனிடம் யுகாந்த காலத்தில் மகிஷாசூரன் தவமிருந்து ஏராளமான வரங்களைப் பெற்றான். தன் சினத்தால் கிடைத்த வரங்களை அழிவிற்குப் பயன்படுத்தி வந்தவன். தேவர்கள், மானிடர்கள், முனிவர்கள் முதலானவர்களைத் துன்புறுத்தி வந்தான். தனக்கு எவராலும் மரணம் நிகழக்கூடாது
என நினைத்த அவன் பிரம்மனிடம் இறவாவரம் கேட்டு தவமிருந்தான். சீரிய தவம் மேற்கொண்ட மகிஷனின்
செயலால் மகிழ்ந்த
பிரம்மன் அவன் முன் தோன்றி அசுரன் கேட்ட வரம் தன்னால் கொடுக்க இயலாது. பூமியில் பிறந்த உயிரினம் என்றாவது ஒரு நாள் மரணம் நிகழும் என்று கூறினார். மகிஷாசூரனோ சமயோஜித புத்தியால் தனக்கு ஒரு பெண்ணால் தான் மரணம் நிகழ வேண்டும் என்று வரம் பெற்றுக்கொண்டான். பெண் என்பவள் மெல்லிய தேகம் கொண்டவள். பலவீனமானவள். அவளால் தனக்கு எந்த காலத்திலும் மரணம்
நிகழாது என்று
எண்ணினான். மகிஷனின் அட்டகாசத்தைப் பொறுக்க முடியாமல் தேவர்கள், முனிவர்கள் மும்மூர்த்திகளிடம் சென்று முறையிட்டனர். மும்மூர்த்திகளான பிரம்மன், சிவன், விஷ்ணு தங்களது அம்சமாகத் துர்க்காதேவியைப் படைத்து மகிஷனை அழிக்க அனுப்பினர். அன்னை துர்க்கை ஒன்பது நாள் விரதம் இருந்து ஆயுதபூஜை செய்து பத்தாம் நாளில் வளையல்கள் அணிந்த கைகளில் வாள் பிடித்து மகிஷனை அழிக்க புறப்பட்டு வெற்றி பெற்ற இந்நிகழ்வே நவராத்திரி
என்று உலகமக்களால் அன்புடன் அழைக்கப்பட்டு ஆயுதபூஜை, விஜயதசமி, தசரா என்று பண்டிகைகளாகக்
கொண்டாடப்பட்டு வருகிறது. மகிஷாசூரனை அழித்ததால் மகிஷாசூரமர்த்தினி என்று அழைக்கப்படுகிறாள் அன்னை.
புராண நூல்களில் துர்கை
பதினெண் புராணங்களில் ஏழாம் வரிசையில் உள்ள மார்க்கண்டேய புராணத்தில் சண்டி ஹோமத்திற்கு அடிப்படையான துர்கா சப்தசதி எழுநூறு மந்திரங்கள் கொண்டது. இம்மந்திரங்களை நவராத்திரி தினத்தில் பாராயணம் செய்து வந்தால்
அன்னை துர்கையின் அருளைப் பெறுவது குறித்து
விளக்கப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் நடுநாயகமாக எழுநூறு சுலோகங்களை உள்ளடக்கியது பகவத்கீதை. அதுபோல எழுநூறு மந்திரங்களை உள்ளடக்கியதால் ஸப்தசதீ என்று கூறப்படுகிறது.
உலக நன்மைக்காகவும், பாரத தேசம் முழுவதும் பாராயணத்திற்கும், ஜபத்திற்கும் உரிய நூலாகத் தேவி
மஹாத்மியம் விளங்குகிறது. சாந்தனவீ, புஷ்பாஞ்ஜலி, ராமாச்ரமீ, நாகேசீ, குப்தவதீ, தம்சோத்தாரம், துர்க்காபிரதீபம் போன்ற உரைகள் அன்னையின் மகாமந்திரங்களை எடுத்துரைக்கிறது.
“கலௌ சண்டி வினாயகௌ” அதாவது கலியுகத்தில் விரைவாகப் பலனை வழங்கக்கூடியவர்கள் சண்டி என்று அழைக்கப்படும் சண்டிதேவியின் பெருமைகளைக் கூறுவதே ஸ்ரீதேவி மஹாத்மியம்
என்னும் நூலாகும். இந்நூலை வேத வியாசரின் சிஷ்யரான ஜைமினி முனிவருக்கு ஸ்ரீமார்க்கண்டேய மஹரிஷி உபதேசித்ததாகக் கூறுவர். 13 அத்தியாயங்களில் மதுகைடப வதம், மஹிஷாசுர வதம் மற்றும் சும்ப நிசும்ப வதம் ஆகியவைகளை
விவரித்துள்ளார் மகரிஷி மார்க்கண்டேயர். சுரதன் என்னும் மன்னன் தான் இழந்த இராஜ்ஜியத்தை மீட்க துர்க்காதேவி மந்திரத்தை ஜபித்து வெற்றி பெற்றான். மறுஜென்மத்தில் மனுவாகப் பிறந்தான். வைச்யனான சமாதி ஞானமடைந்து மோட்ச ப்ராப்தம் அடைந்தான். சுரதன் ஆற்றுக் களிமண்ணால் அம்பிகையின் உருவத்தைச் செய்து வழிபட்டதன் நிகழ்வை இந்நாளில் களிமண்ணால் செய்த பொம்மைகள் வைத்து நவராத்திரியன்று கொலு வைக்கும் முறையை விவரித்துள்ளது இந்நூல்.
சைவ ஆகமங்களில் ஒன்பது வகையான துர்க்கையைப் பற்றிக் கூறப்படுகிறது. இரண்டு கைகள் முதல் பதினெட்டுக்கரங்கள் கொண்ட நிலை. ஆனால் ஒவ்வொரு சிற்பத்திலும் அவர்கள் கைகளில் வைத்துள்ள ஆயுதங்களும், வாகனங்களும் மாறி வருவதைக் காண முடிகிறது. 1. சைலபுத்ரி - இவள் நந்தி வாகனத்தில் வலம் வருவாள். பிறைச்சந்திரனைத் தலையில் அணிந்து கைகளில் சூலத்துடன் காட்சியளிப்பாள். 2. பிரம்மசாரிணி - தண்ணீர்க் குடமும், அக்கமாலையையும் கொண்டவள். 3. சண்டிகந்தா - கோபமான பார்வை, வவ்வால் வாகனம். 4. ஸ்கந்தமாதா - சிம்ம வாகனமும், தாமரை மொட்டை கையிலேந்தியும் காணப்படுவாள். 5. கூஸ்மந்தா – துர்க்கை இரண்டு கைகளிலும் குடங்களில் ரத்தத்தை ஏந்தியவளாகக் கொடூரமாகக் காட்சியளிப்பவள். 6. கார்த்தியாயினி - புலி மேல் வருபவள் கையில் கத்தியுடன் அசுரனை அழிப்பவளாகக் காட்டப்படுவாள். 7. காளாரத்திரி – பயந்த பொழிவுடன் மெல்லிய புன்னகையும் அவரது முகத்தில் காணப்படும். 8. மகாகௌரி - வெள்ளை உடையில் வருபவள். 9. சித்திதாயினி - துணைக் கடவுளாக வருபவள். இவையனைத்தும் பதினாறு மற்றும் பதினெட்டு கரங்கள் கொண்டும் எருமைத்தலை மீது உட்கார்ந்தபடி கபால மாலை அணிந்தும் காணப்படுவாள். கரணாகமத்தில், மேற்குறித்த ஒன்பது துர்க்கையின் நாமகரணமும் பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகிறது. அவற்றில்ஒன்றைத் தவிர மற்ற அனைத்துக்கும் பதினாறு கரங்களும் ஒன்றுக்கு மட்டும் பதினெட்டு கரங்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்க இலக்கியத்தில் துர்க்கை
சங்க கால இலக்கியங்கள் வழி கொற்றவையும், பார்வதிதேவியும் அறிமுகமாகின்றனர். அப்பெண் தெய்வங்களைப் போற்றி வணங்கவும் செய்தன. கைலாயத்தில் சிவனும், தேவியும் உடன் இருப்பது போல்
காட்டப்படுகிறது. சிற்பங்களில் அதிகம் காணப்படுவது துர்க்கை அம்மனாகிய மகிஷாசூரமர்த்தினியே என்றால் அது மிகையல்ல. எங்கு காணினும் அம்மன். காளி, சாமுண்டா, துர்க்கா பரமேஸ்வரி போன்ற கோலங்களே தென்படுகின்றன. அத்தகு துர்க்காதேவியைப் பற்றியும் அவளே மகிஷாசுரமர்த்தினியாக மாற்றம் பெற்றதையும் இங்குக் காண்போம்.
பல்லவர்களின் சிற்பவேலைகள் காஞ்சிபுரம், மாமல்லபுரம், பனைமலை போன்ற இடங்களில் மிகுதியாகக் காணப்படுகிறது. குடவரைக் கோயில்களான மாமல்லபுரம் குடவரைக் கோயிலில் சோமாஸ்கந்த சிவனும் பார்வதியுமாகக் காட்சியளிக்கிறது. அடுத்து மகிஷாசூர மண்டபத்தில் அரக்கர் தலைவனான மகிஷனுடன் போரிட்டு அவனையும் அவனது கூட்டத்தினையும் வீழ்த்தி அவனைத் தனது காலடியில் கிடத்தி வெற்றிக் களிப்புடன் மிகுந்த இறுமாப்புடன் காட்சியளிப்பது போல அம்மண்டபத்தின் வடக்குப்புறச் சுவர் முழுவதும் இப்போர்க் காட்சி தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. பல்லவர்கள் பெண் தெய்வத்தைப் போற்றிய விதங்கள். 1. போருக்கு முன் துர்க்கை. 2. போர்க்களத்தில் துர்க்கை அம்மன்.3. போர்க்களத்தில் வெற்றி வாகை சூடிய பின் துர்க்கையம்மன் என அவர்கள் வடித்த சிலைகளில் கலை தென்படுகிறது.
“மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே” என்பது அந்நூற்பா. வெட்சித் திணைக்கு இலக்கணம் கூறி அவற்றின் துறைகளை விரித்தோதிய தொல்காப்பியர் அத்துறைகளோடு கொற்றவை நிலையையும் ஒன்றாகத் தனியே கூறியுள்ளார்.
கொற்றவை வழிபாடு பற்றிய
விரிவான விளக்கங்கள் சிலப்பதிகாரத்து வேட்டுவ வரியுள்தான் முதன்முதலில் பதிவாகி உள்ளன. ஆறலைக் கள்வர்கள் என்று சுட்டப்படும் எயினரும், வேட்டுவரும் வணங்கும் கடவுளாகக் கொற்றவை சித்தரிக்கப் பெற்றுள்ளாள். தமிழிலக்கியத்தில் கொற்றவை என்பதற்கு “ஆறலை கள்வர்களுக்குக் கொற்றம் தருபவள், வெற்றி தருபவள்” என்ற பொருள் இருப்பதைக் காணலாம். பழங்கால வேட்டை தெய்வமே கொற்றவையாக மாறி இருக்கிறது. உரோமானியதின் கன்னித் தேவதையான “டயானா” வும் வேட்டை தெய்வமே. ஆற்றுத்துறைகளில் காவல் செய்பவள், காட்டு விலங்குகளையும், வேட்டுவர்களையும் காப்பவளாகக் கருதப்படுகிறாள். கொற்றவை வழிபாடு ஒருவிதச் செவ்வியல் பண்போடு வேட்டுவ வரி
எனும் பெயரில் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றதற்கு வலுவான சமூகவியல் காரணங்கள் உண்டு. “குறிஞ்சிக்கு முருகவேளேயன்றிக் கொற்றவையும் தெய்வம் என்பது பெற்றாம்” என்கிறார் இளம்பூரணர். நச்சினார்க்கினியர் ஒருபடி மேலே சென்று
“வருகின்ற வஞ்சிக்கும் கொற்றவை நிலை காரணமாயிற்று, தோற்றோர்க்குக் கொற்றம் வேண்டியும் வென்றோர்க்கும் மேற் செல்லுங்காற் கொற்றம் வேண்டியும் வழிபடுவராதலின்” என்று விளக்கியுள்ளார்.
இதன் மூலம் சங்க இலக்கியங்கள் கொற்றவை தெய்வத்தை ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் வழிபாடு செய்யப்பட்ட விவரங்களைப் பதிவிடுகிறது.
துர்க்கைக்கு உகந்த ராகுகால பூஜை
மகிஷாசூரனை வதம் செய்ய ஈசனது நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறிகள் மூலம் வாமை, ஜயேஷ்டை, ரவுத்ரி, சர்வபூதமணி, மனோன்மணி என்னும் நவசக்திகளைக் கொண்ட நவதுர்க்கைகளைத் தோற்றுவித்தார். நவசக்திகளே துர்க்கையாக மாறி மகிஷனை வதம் செய்தது. அதன் பயனாக மகிஷாசுரமர்த்தினி
என்னும் திருநாமம் துர்க்கைக்குக் கிடைத்தது.
“ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யாகுமாரி தீமஹி தன்னோ துர்கி பரசோதயாத்” என்ற துர்க்கை காயத்ரி மந்திரத்தை ஜபித்து ராகுகாலத்தில் வழிபட்டு வந்தால் பிறவிப்பிணி நீங்கி நீடூழி வாழலாம் என்பது புராணச் செய்தியாகும். அன்னையைத் துதிக்க ராகு காலமே சிறந்தது. செவ்வாய்க் கிழமைக்குரிய அங்காரகன் துர்க்கையை மங்கள சண்டிகையாக வழிபட்டு முழுபலனையும் பெற்றவன். இக்கிழமையில் வரும் ராகுகாலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை திருமணத்தடைகள், செவ்வாய் தோஷம், முதலான தோஷங்கள் நிவர்த்தியாகின்றன.
திருக்கோயில் அமைவிடம்
ஜகத்தினை ஆளும் அன்னைக்கு ஜகமெங்கும் கோயில்கள் பக்தர்கள் எண்ணிக்கையோ கோடானு கோடி. எங்கெங்கு காணினும் சக்தியடா என்னும் பாடலுக்கேற்ப அன்னையின் திருவுருவம் அனைத்து ஊர்களிலும் உள்ளது. அன்னை ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினியின் ஆலயம் திருத்தணி - திருப்பதி சாலையில், திருத்தணியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், பொன்பாடி ரயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது மத்தூர். 1962ம் ஆண்டில் அரக்கோணம் - ரேணிகுண்டா ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. மத்தூர் வழியாக ரயில் தண்டவாளம் அமைக்கும் பணியை ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டனர். அப்போது சிலர் மயங்கி விழுந்துள்ளனர்;. சில நேரத்திற்குப் பிறகு ஊழியர்களின் பணியில் தடங்கல் ஏற்பட்டதை அறிந்து பொதுமக்களின் ஒத்துழைப்போடு அந்த இடத்தை தோண்டினர். அங்கே மகிஷாசுரமர்த்தினியின் கற்சிலை கிடைக்கப்பெற்றது. அச்சிலையைக் காஞ்சி சங்கராச்சாரியாரின் அறிவுரையின் பேரில் அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்து கிராம மக்கள் திருக்கோயிலை எழுப்பினர். அவ்விடத்தை “சக்திமேடு” என்று பெயரிட்டு அழைக்கப்பட்டு வருகிறது. இக்கற்சிலையானது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பல்லவர்களால் வடிக்கப்பட்ட சிலையாகும்.
மூலவர் :
ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி
அம்மன்.
கற்சிலை : மூன்றாம் நூற்றாண்டைச்
சேர்ந்தது.
தலவிருட்சம் : வேப்பமரம்.
தலவிருட்சம்
இத்திருக்கோயிலின் தல விருட்சம் வேப்பமரம். இந்த வேப்பிலை கசக்காது. அன்னைக்கு எலுமிச்சை பழமாலை
சூட்டி வழிபாடு மேற்கொள்வது சிறப்பிற்குரியது. மருத்துவகுணங்கள்
கொண்ட வேப்பிலையும், எலுமிச்சம் பழமும் பக்தர்களுக்கு பிரசாதமாக
வழங்கப்படுகிறது. இங்கு எடைக்கு எடையாக தானியங்களும் பழங்களும்
வழங்கும் துலாபார பீடம் அமைந்துள்ளது. பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை
இங்கு செலுத்தி வருகின்றனர்.
திருக்கோயில் செயல்பாடுகள்
இத்திருக்கோயில் திருத்தணி தேவஸ்தான கட்டுப்பாட்டில்
இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 2017ம் ஆண்டு டிசம்பர்
12ம் நாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தமிழக முதல்வர் அவர்களின் மதிய உணவு அன்னதானத் திட்டம் இக்கோயிலில் நடந்து
வருகிறது. தினமும் பக்தர்கள் அன்னதானம் உண்டு நன்கொடை அளித்து
வருகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அன்னையை தரிசித்து
நல்லருள் பெறுகின்றனர்.
வழிபாடு செய்யும் அருநெறிகள்
கோயிலின் வடபுறப்பிரகாரத்தில் உள்ள வேப்பமரத்தில்
திருமணம் நடக்க வேண்டியும்,
பிள்ளைவரம் கிடைக்கவும் பக்தர்கள் வண்ண வண்ண நிறங்களாலான துணிகளை கட்டியும்,
சிறிய மரக்குச்சிகளால் செய்த தொட்டிலையும் மரத்தில் கட்டி வேண்டிக்கொள்கின்றனர்.
பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால வேளையில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
நவராத்திரி காலத்திலும், ஆடி மாத காலங்களிலும்
பங்குனி மாதங்களிலும் அம்மன் திருக்கோயில் விழாக்கோலம் பூண்டு பக்தர்களுக்கு காட்சி
தருகிறது.
முடிவுரை
அண்டத்தைக் கட்டி அருளாட்சி புரியும் அகிலாண்ட கோடி
பிரம்மாண்ட நாயகியாம் மத்தூர் ஸ்ரீ
மகிஷாசுரமர்த்தினி கலியுகத்தில் கற்பக விருட்சமாய், மக்களுக்கு
காமதேணுவாய் அருளாட்சிப் புரிந்து பக்தர்களைக் காத்து வரும் அற்புதங்களை இவ்ஆய்வுக்
கட்டுரை மூலமாக உய்துணர முடிகிறது.
ஆதார நூல்கள்
1. வலைப்பக்க
தினமணி நாளிதழ் செய்திகள்.
2. முகநூல் தேவி மகாத்மியம்.
3. http://www.yarl.com/forums/
கொற்றவை
4. http://www.tamilsurangam.in
6. http://www.dosa365.wordpress.com
7. http://www.inithal.blogspot.com