முனைவர் சு. சத்தியா
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
தஞ்சாவூர்.
ஆய்வுச்சுருக்கம்
இன்று நவீனயுகத்தில் தாய்வயிற்றில் கருஉருவாகும் நாள்முதல் குழந்தை வெளிவரும் நாள்வரை பல்வேறு பரிசோதனைக் கருவிகள் வழிதாய்சேய்நலம் அறிகின்றனர். ஆனால் இரண்டாயிரம் ஆண்களுக்கு முற்பட்ட காலத்திலேயே நம்முன்னோர்கள் பெண்வயிற்றில் கருஉருவாகும் காலம் அதன் வளர்ச்சிநிலைகளை அறிந்திருந்தனர் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. மேலும் கருவில் உருவாகும் குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளதா? ஆணா? பெண்ணா? போன்ற பல்வேறு செய்திகள் தொல்காப்பியம், சங்கஇலக்கியங்கள், பக்திஇலக்கியங்களில் இடம்பெற்றிருப்பதை இக்கட்டுரை புலப்படுத்துகிறது.
கலைச்சொற்கள்
1. உறுப்பில்பிண்டம்
- வடிவில்லாததசைத்திரள்
2. சிதடு–குருடு
3. ஏற்றை–முதலையின்ஆண்இனம் (மரபுப்பெயர்)
4. இனமீன்
- மீனின்திரள்
5. கவைமக–மகவடிவுஇல்லாமல்ஒட்டிப்பிறந்தஇரட்டைக்குழந்தை
6. நயன் -
விருப்பம்
7. மடன் -
இளமையால்தோன்றியஅறியாமை
8. காயம் – உடல்யாக்கை
முன்னுரை
நம் தமிழ்மொழி காலத்தால் மூத்தது. தனித்து இயங்கும் ஆற்றல் படைத்தது. இதற்கு மூலக்காரணம், நம்முன்னோர்களின் வளமான வாழ்வும் பண்பாடும்தான்! இத்தகைய வாழ்வியலை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலேயே அறிவியல் சிந்தனையோடு வாழ்ந்துள்ளனர். இதனை இலக்கியங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. அவற்றை நோக்குங்கால் மண்ணியல், தாவரவியல், விண்ணியல், மருத்துவவியல், அளவியல் எனப் பல்வேறு துறைகளிலும் இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அன்றே முன்னோடியாய் வாழ்ந்துள்ளனர் என்பதும் புலனாகிறது. இவற்றுள் மருத்துவ ஆராய்ச்சியில், உலக உருவாக்கத்தின் கருவாகிய பெண்ணிடமிருந்து கரு உண்டாவது முதல் அனைத்து வளர்ச்சிப்படி நிலைகளையும் கண்டறிந்துள்ளனர். இதனை ஆராயும் வண்ணம் இக்கட்டுரை அமைகிறது.
தொல்காப்பியர்வகுத்தஉயிரினப்பாகுபாடு
தொல்காப்பியர் மரபியலில் உயிரினப் பாகுபாட்டினை,
ஒன்றுஅறிவதுவேஉற்றுஅறிவதுவே
இரண்டுஅறிவதுவேஅதனோடுநாவே
மூன்றுஅறிவதுவேஅவற்றொடுமூக்கே
நான்குஅறிவதுவேஅவற்றொடுகண்ணே
ஐந்துஅறிவதுவேஅவற்றொடுசெவியே
ஆறறிவறிவதுவேஅவற்றொடுமனனே
நேரிதின்உணர்ந்தோர்நெறிப்படுத்தினரே(தொல்.பொருள்.மரபியல் 27)
என்று ஆறு பெரும்பிரிவுகளாகப் பிரித்ததோடு அதன் கருவளர்ச்சியினையும்
மரபியலில் விரித்துக் கூறியுள்ளார் இதேபோன்று மாணிக்கவாசகரும்,
புல்லாகிப்பூடாய்ப்புழுவாய்மரமாகிப்
பல்விருகமாகிப்பறவையாய்ப்பாம்பாகிக்
கல்லாய்மனிதராய்ப்பேயாய்க்கணங்களாய்
வல்லசுரராகிமுனிவராய்த்தேவராய்
செல்லாஅநின்றஇத்தாவரசங்கமத்துள்
எல்லாப்பிறப்பும்பிறந்திளைத்தேன்எம்பெருமான்(திருவம்மானை 14)
என்றுதான் எடுத்தப் பிறவிகளைப் பாடியுள்ளார்.
தொல்காப்பியரின்மருத்துவஅறிவு
ஒரு பெண் தன்கணவனோடு எந்நாட்களில்
சேர்ந்திருந்தால் குழந்தை உண்டாகும் என்பதை,
பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர்(தொல்.கற்பியல் 46)
என்று தொல்காப்பியர், தலைவிக்குப் பூப்புத்தோன்றி 12நாட்களும் தலைவன் அவளைப்
பிரிந்திருத்தல் கூடாது என்று கூறுவர் அறிவுடையோர் என்பதிலிருந்து, தொல்காப்பியருக்கு முற்பட்டகாலத்தின் கருவளர்ச்சி குறித்த அறிவினை நம்மால் அறியமுடிகிறது. மேலும் நம்பியகப்பொருள் அகத்திணையியலில்,
பூத்தகாலைப்புனையிழைமனைவியை
நீராடியப்பின்ஈராறுநாளுங்
கருவயிற்றறூஉங்காலமாதலிற்
பிரியப்பெறாஅன்(நம்பி.91)
என்று கருஉருவாகும் காலத்தை நாற்கவிராசநம்பியும் குறிப்பிட்டுள்ளார்.
உறையூர்முதுகண்ணன்சாத்தனார்
பொதுவாக ஏழாவது மாதத்தில் கருநன்கு
வளர்ச்சியடைய வேண்டும் அவ்வாறு வளராவிடில் குழந்தை குறைப்பாட்டுடன் பிறக்கும் என்பதை
எந்தவிதக் கருவியுமில்லாமல் மக்கட்பிறப்பில் சிறப்பில்லாத குருடும் வடிவில்லாத தசைத்திரளுடன்
இருக்கும் குழந்தையையும் அதன் மற்ற உறுப்புகள் அடையும் குறைப்பாட்டினையும்,
சிறப்பில்சிதடு; முறுப்பில்பிண்டமும்
கூனும்குறளுமூமுஞ்செவிடும்
மாவுமருளுமுளப்படவாழ்நர்க்(புறம்.28)
என்ற புறநானூற்றுப் பாடலில் பிறப்பின் மகத்துவத்தை, உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளிக்கு நல்லறிவு புகுத்தப் பாடியுள்ளார்.
கவைமகனார்உரைத்த -கவைமக
கவைமக என்ற சொல்லுக்கு இரட்டைக்குழந்தை
என்று பொருள்படும்.
இப்பொருளினை மையமாகக் கொண்டு குறுந்தொகையில்,
கொடுந்தாள்முதலைக்கோள்வல்ஏற்றை
வழிவழக்குஅறுக்கும்கானல்அம்பெருந்துறை
இனமீன்இருங்கழிநீந்திநீநின்
நயன்உடைமையின்வருதிஇவள்தன்
மடன்உடைமையின்உவக்கும்யான்அது
கவைமகநஞ்சுஉண்டாஅங்கு
அஞ்சுவல்பெருமஎன்நெஞ்சத்தானே(குறுந்தொகை 324)
என்று புலவர் பாடியுள்ளார். அவரின் பெயர் எதுவும் தெரியாததனால், கவைமகவின் செய்தியை உவமையாகக் கூறிய சிறப்பால், இப்பாடலாசிரியருக்கு கவைமகன் என்பதே சிறப்புப் பெயராயிற்று. இப்பாடலில் மகவடிவு இல்லாது ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளுள், ஒருகுழந்தை நஞ்சுஉண்டவழி, அந்நஞ்சு மற்றொரு குழந்தையையும் தாக்கிக் கொல்லும் என்பதைக் கூறுவதோடு ஆண்இரட்டை, பெண்இரட்டை, ஆணும்பெண்ணுமாய் இரட்டை, ஓருடலில் இருதலையுடன் பிறக்கும் இரட்டை, ஓருடலில் ஒட்டிப்பிறக்கும் இரட்டைப் பிறப்புகள் உள்ளன என்பதை, மேற்கண்ட பாடல்வழி அறியமுடிகிறது.
திருமூலரின் கர்ப்பக்கிரியை
திருமூலர் தான் எழுதிய திருமந்திரத்தில் கர்ப்பக்கிரியை எனும் தலைப்பில், குழந்தை உருவாவது முதல் வெளிவருவது வரை உள்ள அனைத்துப் பருவவளர்ச்சியினையும் விரிவாகக் கூறியுள்ளார்.
தூயமனம்
ஆண் பெண் இருவரும் சேரும்போது
தூயஎண்ணத்துடன் இருக்க வேண்டும் என்றும், இருவரின் எண்ணங்களும்
கருவாகும் குழந்தையைச் சென்றடையுமென்பதை,
ஏயங்கலந்தஇருவர்தம்சாயத்துப்
பாயும்கருவும்உருவாம்எனப்பல
காயம்கலந்ததுகாணப்பதிந்தபின்
மாயம்கலந்தமனோலயம்ஆனதே(திருமந்திரம்459)
என்றவாறு விவரித்துள்ளார். ஏனெனில், ஆண்கள் குடித்துவிட்டோ அல்லது ஏதேனும் போதைவஸ்துகளை உட்கொண்டோ புணரும்போது, அக்கருவில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் ஊனம் ஏற்படும் என்பதை இன்றைய மருத்துவர்கள் கூறினாலும், அன்றே இந்நிலையினை முன்அறிந்து விழிப்புணர்வு ஊட்டியவர் திருமூலர்.
ஆண் –பெண் -அலி
ஒருபெண் கருவுற்றபோதே அக்கரு ஆணா,பெண்ணா என்று அறிதலை,
ஆண்மிகில்ஆணாகும்பெண்மிகில்பெண்ணாகும்
பூண்இரண்டுஒத்துப்பொருந்தில்அலியாகும்
தாள்மிகும்ஆயின்தரணிமுழுதாளும்
பாழ்நவம்மிக்கிடின்பாய்ந்ததும்இல்லையே(திருமந்திரம் 478)
என்று ஆண், பெண் கலப்பில் ஆண் விந்தில் சுக்கிலம் மிகுதியானால் ஆண்குழந்தையும், கருமுட்டையில் சுரோணிதம் மிகுதியானால் பெண்குழந்தையும், இரண்டும் சமமானால் அலியும் பிறக்கும். மேலும், ஆண்விந்தில் ஆற்றல் மிகுந்திருந்தால் ஆண்குழந்தை அரசாளும். இரண்டில் ஏதாவது ஒன்றில் பாழாக்கும் பொருள்மிகுதியானால், கருஉண்டாகாது எனும் நுணுக்கத்தை மருத்துவர்போல விளக்கியுள்ளார்.
கருவளர்ச்சி–குறைபாடு
இன்று கருவளர்ச்சியைக் கண்டறிய
நவீனக்கருவிகள் உள்ளன.
ஆனால் திருமூலர் இதனை,
பாய்கின்றவாயுகுறையின்குறள்ஆகும்
பாய்கின்றவாயுஇளைக்கின்முடமாகும்
பாய்கின்றவாயுநடுப்படிற்கூனாகும்
பாய்கின்றவாயுமாதர்க்கில்லைப்பார்க்கிலே(திருமந்திரம் 480)
இவ்வாறு விந்துவை செலுத்தும் வாயுவின் அளவினைப் பொருத்தே குழந்தையின் ஊனத்தையும் மற்ற செயல்களையும் அறியமுடியும் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
மாணிக்கவாசகர்உரைத்தகருவளர்ச்சி
பிறவிப்பிணியை அகற்றிப் பேரின்பத்தை
அடையும் வழியினைப் பாடிய மாணிக்கவாசகர் திருவாசகத்தில்,
யானைமுதலாஎறும்பீறாய
ஊனமில்யோனியின்உள்வினைப்பிழைத்தும்
மானுடப்பிறப்பினுள்மாதாஉதரத்து
ஈனமில்கிருமிச்செருவினிற்பிழைத்தும்
ஒருமதித்தான்றியின்இருமையிற்பிழைத்தும்
இருமதிவிளைவின்ஒருமையிற்பிழைத்தும்
மும்மதி; தன்னுள்அம்மதம்பிழைத்தும்
ஈரிருதிங்களில்பேரிருள்பிழைத்தும்
ஐஞ்சுதிங்களில்உஞ்சுதல்பிழைத்தும்
ஆறுதிங்களில்; ஊறலர்பிழைத்தும்
ஏழுதிங்களில்தாழ்புவிபிழைத்தும்
எட்டுத்திங்களில்கட்டமும்பிழைத்தும்
ஒன்பதில்வருதருதுன்பமும்பிழைத்தும்
தக்கதசமதிதாயொடுதான்படும்
துக்கசாகரத்துயரினைப்பிழைத்தும்(மாணிக்கவாசகர்போற்றித்திருஅகவல்)
என்று குழந்தையின் கருவளர்ச்சியினை நுண்ணியமுறையில்
துள்ளியமாகக் கூறியுள்ளது,
நம்முன்னோரின் ஆழ்ந்த அறிவியல் நுட்பத்தை விளக்குகிறது. மேலும்,
கருவாகிக்குழம்பிருந்துகலத்துமூளை
கருநரம்பும்வெள்ளெலும்புஞ்சேர்ந்தொன்றாகி
உருவாகிப்புறப்பட்டிங்கொருத்திதன்னால்வளர்க்கப்பட்டு (தேவா.6:25:6)
என நாவுக்கரசரும் உயிர் உருவாக்கத்தினைப் பாடியுள்ளார்.
முடிவுரை
இவ்வாறு நம்முன்னோர்கள் உலக உயிரினப் பாகுபாட்டினை வகுத்ததோடு, அவற்றின் வளர்ச்சிப் படிநிலையினை அறிவியல் சிந்தனையோடு மெய்ப்பித்துள்ளனர். குறிப்பாக தாயின் கருவில் குழந்தை உருவாவது முதல் வெளிவரும் நாள்வரை உள்ள அனைத்து வளர்ச்சிநிலைகளையும், இன்றைய மருத்துவத்தில் கண்டறியாத நுணுக்கமான சில உண்மைகளையும் அறிவியல் நுட்பத்துடன் அன்றே ஆராய்ந்துள்ளனர். ஆண்பெண் இருவரின் ஒருமித்த அன்பினால் உருவாகும் கருவின் மகத்துவத்தை இன்றைய சமூகத்தினர் சரியான முறையில் புரிந்து கொண்டு வாழ முயலவேண்டும். இதனையே நம்முன்னோர்கள் நமக்கு எடுத்துரைத்துள்ளனர்.
துணை நூற்பட்டியல்
1.
ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை, புறநானூறு,
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை.
1962
2.ச.வே.சுப்பிரமணியன்,
தமிழ் இலக்கணநூல்கள் மூலம்முழுவதும் - குறிப்புவிளக்கங்களுடன்,
மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007
3. க.வெள்ளைவாரணனார்,பன்னிருதிருமுறை வரலாறு,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
சிதம்பரம். 1969