வாமனனின் மூன்றடி வரம் இன்று
நாம்வாழ மகாபலியிடம் அல்ல
மக்களிடம் கேட்கிறோம்
ஊரடங்கு காலத்தில் தான்நாம்
உறவுகளிடம் உரையாடுகின்றோம்
தொலைக்காட்சி தொடர்தொல்லையின்றி
தாயம் பல்லாங்குழிக்கெல்லாம்
மறுவாழ்வு வரம்
வந்து தந்தது வைரஸ்
குழந்தைகளோடும் குடும்பத்தோடும்
பழக ஒதுக்கி பல மணிநேரம்
வரமாய் தந்தது வைரஸ்
வெளியே எங்கும் செல்லாமல் வீண்
செலவு ஏதும்இல்லாமல் இரண்டரை
மாத இல்லற வேள்வி
வீட்டுவேலைகள் எல்லாம் பெண்ணிற்கு
ஆண் சரிநிகர் சமானமாய்
முழுநேரமாய் கலையம் கலைந்து
நோய் அதுமட்டும்தான் மற்றதெல்லாம்
தன்னியல் பாய்சரியாகும் என்ற
அறிவை தந்தது வைரஸ்
தேவையின்றி வெளியில் சுற்றி
திரியாது இருக்க பாடம்
கற்றுத் தந்த ஆசான் வைரஸ்
கடவுள்கூட தனிமைபடுத்தி
காத்திருக்க வைக்கப்பட்டார் பக்தனுக்காக
காக்கும் கடவுள்?!
உலகையே ஊரடங்கவைத்த
அழிக்கும் அவதாரமாய்
ஒரு வைரஸ் அரக்கனாய்
சமரசம் உலாவும் இடமாய்
உலகையே நிசப்தமாக்கிய
நிமலன்நிர் மூலன் வைரஸ்
புலம்பெயர் தொழிலாளர்கள்
மீண்டும் ஓர் நாடோடியாய்
நிர்க்கதியாகிய வைரஸ்
உலகை சுத்திகரிக்கப்பட
வந்த ஓர் நோய் பிரளயம்
மறுசுழற்சி மனிதருக்கும் உண்டு!
ந.திருமால்
உதவிப்பேராசிரியர்-தமிழ்த்துறை