4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

முயற்சி திருவினையாக்கும்

 


அக்ரி.கோ.ஜெயகுமார்,

மேனாள் வேளாண்மை இணை இயக்குநர்,

காந்திநகர், வேலூர் -6.

அலைபேசி எண்.: 94869 38900.

நம் வாழ்வில் வெற்றி பெற நாம் அமைத்துக் கொண்ட வேலிகளைத் தாண்டி முயற்சிகள் செய்ய வேண்டும். சிலர் கடுமையாக முயற்சி செய்தும் வெற்றி பெறாமல் இருப்பதற்கு உண்மையான காரணம் அவர்கள் வெற்றி பெறும் வரை முயற்சிப்பதில்லை. 

 

கிழக்கு ஆசிய நாடுகளில், ஒரு விதமான பூச்சியைப் பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடி விடுவார்கள். அந்த கண்ணாடி பெட்டியினுள் சிறு, சிறு துவாரங்கள் சுவாசிப்பதற்காக இருக்கும். அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து வெளியே போக முயற்சி செய்யும்........... ஆனால் மேலே உள்ள கண்ணாடியில் இடித்துஆ! அம்மா!! வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும் போது பார்த்து போகனும் என்று தீர்மானித்துக் கொள்ளும்.

 

அதே போல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக வெளியே செல்ல முயற்சி செய்யும்.......... ஆனால் அதே அடி! அதே வலி!! மீண்டும் அதே தீர்மானம். இப்படியாக எல்லா திசைகளிலும் பறந்து, பறந்து வெளியே செல்ல முயன்று தோற்றுப் போன பின்னர் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து விடும். அதாவது சரி, இனி இதுதான் நமது வாழ்க்கை. இந்த கூண்டுக்குள் தான் இனி நம் வாழ்நாளை கழிக்க வேண்டும் போல இருக்கு.......... இனியும் முயற்சி செய்து பலனில்லை என்று நினைத்துக் கொள்ளும். பின் இந்த கூண்டுக்குள், நாம் எப்படி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கிவிடும்.

 

பின்னர் அந்த கூண்டை தாண்டி வெளியே செல்லும் முயற்சியை கை விட்டு விடும். இப்போது மேலே நோக்கி பறக்கும்........சரியாக ஒரு இன்ச் தூரத்தில் பிரேக் போட்டது போல் நின்று விடும். இப்போது கண்ணாடியில் இடியும் இல்லை, வலியும் இல்லை. அதேபோல் இடது பக்கம் பறக்கும். ஒரு இன்ச் தூரத்தில் நின்று விடும். இப்படியாக அனைத்துப் பக்கங்களிலும் பறக்கும்.......... கண்ணாடியின் எந்தப் பக்கத்திலும் இடிக்காமல் பறக்கும். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். இதை தன்னுடைய திறமையாக கருதி, வாழ்க்கை நமக்கு அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக் கொண்டு தன் மீதி நாள் வாழ்க்கையையும் அந்த கண்ணாடிக் கூண்டிலேயே முடித்து விடும்.

 

இப்படி, அந்த பூச்சி, எந்த பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதைப் பார்த்தவுடன், அவர்கள் மேலேயுள்ள கண்ணாடி மற்றும் பக்கங்களில் உள்ள கண்ணாடிகளை எடுத்து விடுவார்கள். இப்போது கண்ணாடி மேலேயும் இல்லை, நான்கு பக்கங்களிலும் இல்லை. ஆனாலும் அந்த பூச்சியானது ஆனந்தமாக இன்னும் ஒரு இன்ச் தூரத்தில் பிரேக் போட்டு நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி இல்லாத பெட்டிக்குள்ளேயே தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வாழும். அந்த பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து மீண்டும் முயற்சி செய்திருந்தால் அந்த ஒரு இன்ச் தூரத்தைக் கடந்து, வெளியே வந்து இந்த உலகத்தையே சுற்றி வலம் வந்திருக்கலாம்.

 

இந்த பூச்சியைப் போலத் தான் நம்மில் பலர் தொடர்ந்து முயற்சி செய்வதை கை விட்டு விட்டு, வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தொடர்ந்து முயற்சி செய்பவர்கள் கண்டிப்பாக ஒருநாள் வெற்றி பெறுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எனவே எப்போதும் முயற்சியை மட்டும் விட்டு விடக்கூடாது. காலம் கடந்தாலும், பொறுமையாக முயற்சி செய்ய வேண்டும்.

 

முயற்சி செய்யுங்கள், "வெற்றி கிடைக்கும்". 

முயற்சி செய்யுங்கள், "தோல்வியும் கிடைக்கும்".

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், தோல்வியும் வெற்றியாக மாறும்.

வெற்றி பெற எனது இனிய நல் வாழ்த்துகள்.