6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 நவம்பர், 2020

குலதெய்வம் - முனைவர் கிட்டு முருகேசன்

 

குலதெய்வம்

முனைவர் கிட்டு முருகேசன்

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி

காளப்பட்டி சாலை, கோயம்புத்தூர் – 641 048.

மின்னஞ்சல் : muruganthirukkural@gmail.com

செல்பேசி : 9751809470, 8072794623

 

அங்கே மட்டும் ஏன்? இவ்வளவு பச்சைப் பசேள்னு இருக்கு. ஒரு வேலை அந்தத் தோட்டத்துக்காரன் கரண்ட் கம்பியை வேலியாப் போட்டு யாரையும் பக்கத்துல வரவிடாம மரம், செடி கொடியெல்லாம் வளப்பானோ!

அப்புடி இருந்தாலும் நம்ம ஊருக்காரனுங்க விட்டு வைக்க மாட்டாங்களே; நல்ல நல்ல கிளைகளைக் கொண்ட வேப்பமரம், நுனா மரம், ஆலமரம், அரசமரமுன்னு நிறைய இருக்கே.

 

ஆட்டு மாட்டுக்கு இல்லன்னாலும் உழவுத் தொழிலுக்காவது வெட்டி போட்டிருப்பாங்களே! என்று யோசித்தபடியே டவுன்ல இருந்து ஊருக்கு வந்த முருகன் தைல மரக்காட்டின் வரப்போரம் சென்று கொண்டிருந்தான்.

 

எதிரே வந்த சின்னசாமியைப் பார்த்ததும், அவரிடம் இதைப்பற்றி கேட்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

 

அருகே வந்த அவர்; என்ன முருகா ஊர்ப்பக்கமே வரமாட்டேங்கிர எனக் கேட்டார்.

 

இல்ல பெரியப்பா, வேலை கொஞ்சம் அதிகம். அதான் ஊர்ப்பக்கம் சரியா வரமுடியிறதில்லை.

 

உங்கள மாதிரிப் பசங்க என்னாதான் பணம் பணம்னு  ஊரவிட்டுட்டு ஒடுனாலும் நம்ம குல தெய்வம் இங்கேதாண்டா இருக்கு வராம விட்டுராதே. குலதெய்வங்கிரது சும்மா இல்லடா; நீ எங்கெங்கே போயி பெரிய பெரிய கோவில்ல சாமி கும்பிட்டாலும் உன்கூட இருந்து உன்னை காவல் காக்குர தெய்வம் குலதெய்வம் தாண்டா அத மட்டும் மறந்துராதே.

 

என்ன பெரியப்பா இப்புடி சொல்லிட்டீங்க, நம்ம சாதிசனத்தை விட்டுட்டு நான் தனியா கஷ்டப்படுறேன். இதுக்கெல்லாம் நீங்கதானே காரணம்.

 

என்னடா சொல்லுர; நீ கஷ்டப்பட நான் காரணமா?

 

ஆமாம் பெரியப்பா. நீங்கதான் அப்பாகிட்ட, நாமதான் வாய்க்கா வரப்புல கெடந்து சாகுறோம். பையனையாவது நல்லா படிக்க வச்சு டவுன்ல வேலைக்கு அனுப்புன்னு சொன்னது மறந்து போச்சா?

 

ஆமாடா சொன்னேன். அது உன் நல்லதுக்குத்தானே!

 

நான் இங்கேயே இருந்திருந்தா கெடைக்கிர வேலையை செஞ்சிக்கிட்டு அம்மா, அப்பா, மாமன், மச்சான், பங்காளின்னு இருந்திருப்பேன். ஆனா இதையெல்லாம் விட்டுட்டுதானே அங்கே அனாதையா கெடக்குறேன்.

 

முருகா! நீ சொல்லுறதெல்லாம் உண்மைதான். இந்த காலத்துல இருக்குர உறவுமுறையெல்லாம் காசு பணம் இருந்தாத்தான் கூட வரும். இல்லைன்னா நாம தனி மரமாத்தான் இருக்கணும்.

 

சரி பெரியாப்பா; நான் ஓங்ககிட்ட எதையோ கேக்கவந்துட்டு, எதையெதையோ பேசிக்கிட்டு இருக்கேன்.

என்னடா முருகா சொல்லுடா?

நம்ம ஊருக்கு கெழக்கே ஒரே கூட்டமாக மரங்கள் அடர்ந்து வளர்ந்து கெடக்கே நம்ம ஊரு ஆளுக விடமாட்டாங்களே என்ன காரணம்.

 

அதாடா! அதாண்டா  நம்ம குலதெய்வம் இருக்குர இடம். இதுகூடவா தெரியாம இருக்க.

 

நான் அந்த பக்கமே போனதில்ல பெரியப்பா. படிச்சதெல்லாம் ஹாஸ்டல்ல இருந்துதான். வேலை பாக்குரதும் டவுன்ல அப்புறம் எங்கே நான் அந்த இடத்துக்கு போரது.

 

நீ சொல்லுறதும் நெஜந்தான். அந்த கோயில் பக்கமா சில வருஷமா யாரும் போரதில்ல.

 

ஏன் பெரியப்பா. என்ன ஆச்சு?

 

பாம்புக்கு பல்லுலதான் வெசம்; ஆனா பங்காளிக்கு உடம்பெல்லாம் வெசம்னு சொல்லுவாங்க, அதுக்கேத்த மாதிரி பங்காளிக்குள்ள நீ பெரியவனா நான் பெரியவனான்னு சண்டை போட்டுக்கிட்டு நம்ம குலதெய்வத்துக்கு பூசை போடாம விட்டுட்டாங்க. இப்ப நம்ம ஊருக்குள்ள உறவு செதஞ்சு போச்சு. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் மாதிரி திமிரா திரியுரானுங்க.

 

அதோட மட்டுமில்ல முருகா; இப்ப சில நாளாவே சின்ன வயசுப் பசங்கள்லாம் திடீர் திடீர்னு செத்துப் போரானுக, நோய்வாய் படுறாங்க இதுக்கெல்லாம் குலதெய்வந்தான் காரணமுன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

 

இப்புடியெல்லாம் நடந்துமா பெரியப்பா, குலதெய்வத்துக்கு பூசை போடாம இருக்காங்க.

 

என்ன பன்றது முருகா; எல்லாம் போட்டி பொறாமைதான். பாதிக்கப்பட்டவன் வருத்தப்படுறான். மத்தவன் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டு திரியுரானுங்க. குலதெய்வங்கிரது சும்மா இல்ல முருகா, நம்ம குலத்தோட காவல் தெய்வம். நமக்கு ஆபத்து வரும்போதெல்லாம் கூட இருந்து காப்பாத்துர குலசாமி. எத்தனையோ முறை இதை என் அனுபவத்துல பாத்துருக்கேன்.

 

டவுன்ல இருந்து வந்த உனக்கு. அந்த மரக் கூட்டம் வெறும் பொதராவும், வேல் கம்பு வீச்சருவாளாவுந்தான் தெரியும். அதுக்குப் பின்னால இருக்குர சக்தியை நம்ம உணரனும். அப்பத்தான் இப்புடி சண்டை போட்டுக்கிட்டு திரிய மாட்டானுங்க.

 

இதல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு பெரியப்பா?

 

நான் என்னடா சொல்லுறது. பங்காளிங்கதான் இப்புடி இருக்காங்கன்னு மாமன் மச்சாங்களை வச்சாவது பஞ்சாயத்து பண்ணி இதுக்கு ஒரு முடிவு கட்டலாம்னு நெனச்சேன். அதுக்கும் ஒத்துவரல.

 

என்ன பெரியப்பா சொல்லுரிங்க, பஞ்சாயத்துலயும் கேக்கலயா?

 

ஆமாண்டா முருகா. நம்ம பங்காளிங்கதான் ஊருக்குள்ளேயே பெரிய சனக்கட்டு. நம்ம புள்ளைங்களை ஊருக்குள்ளேயே கொடுத்துருக்கோம்; அங்கே இருந்து பொண்ணும் எடுத்துருக்கோம் அவங்களும் யாரைத்தான் பகைச்சிக்கிருவாங்க, அதான் பஞ்சாயத்துலயும் இதுக்கு ஒரு தீர்வும் கெடைக்கல.

 

இப்புடி விட்டுட்டு போக எனக்கு மனசு வரல பெரியப்பா. நம்ம குலதெய்வத்துக்கு திருவிழா பண்ணாம இப்புடி போட்டு வைச்சிருக்கது நியாயமில்லை. இதுக்கு ஒரு முடிவு எடுக்கனும். இன்னைக்கு உங்க வயசுல உள்ள ஆளுக செய்யிற பிரச்சினை நாளைக்கு வர்ர எங்க தலைமுறையையும் செதச்சிரும் பெரியப்பா.

 

நீ ஒரு ஆளா இருந்து என்னடா பண்ணுவா? அதுவும் ஏழை சொல்லு அம்பலத்துல ஏறுமாடா’.  

 

நான் சொல்லுறத கேட்டா ஆச்சாரியப்படுவீங்க பெரியப்பா.

 

சொல்லுடா... என்ன?

 

நான் ஒரு நாள் பைக்ல போகும் போது, ஒரு லாரி என்னைய மோத இருந்துச்சு; ஒரு நொடிதான் நான் பொழச்சது பெரிய விசயம். அந்த இடத்துல கூட்டம் கூடிருச்சு. அப்போ அங்கே நின்ற ஒரு பெரியவர் சொன்னாரு; இந்த பையன ஏதோ தெய்வந்தான் காப்பாத்திருச்சுன்னு. சொன்னதோட மட்டுமில்ல பெரியப்பா, அவரு பக்கத்துல வந்து நீ முதல்ல உன்னுடைய குலதெய்வத்தை போயி கும்பிட்டு வந்து அப்புறம் பொழப்ப பாருன்னு சொன்னாரு. அன்னைக்குத்தான் எனக்கு குலதெய்வம்னு ஒன்று இருக்கு, அத இத்தனை நாள மறந்துட்டோம்னு தோணுச்சி. அதன் உடனே ஊருக்குப் போகணும்னு வந்துட்டேன்.

 

ஆனா! இங்கே வந்து நீங்க சொல்லுரத கேட்டா புதுசால்ல இருக்கு.

 

டேய் முருகா. நம்ம குலசாமி ஒன்னும் சாதாரண தெய்வம் இல்லடா. உன்னை மாதிரி வெளி ஊர்கள்ல, வெளி நாடுகள்ல இருக்குற நம்ம சாதி சனத்தை இன்றுவரை நோய் நொடி இல்லாம பாதுகாக்குரது நம்ம சாமிதாண்டா. இன்று ஏதோ காசு, பணம் வந்திருச்சின்னு ஆளுக்கு ஆளு விதண்டாவாதம் பேசிக்கிட்டு கெடக்குராங்க. அவங்களுக்குப் புரியல பணம், காசை விட குலசாமி பெரிசுன்னு. ஒரு நாள் அதெல்லாம் புரியும். அப்போதான் ஏன் இத்தனை நாள் திருவிழா பண்ணாம போட்டு வைச்சிருந்தோம்னு வருத்தப்படுவாங்க. 

 

நான் இத சும்மா விடமாட்டேன். இவங்களுக்கு குலதெய்வத்தோட அருமை பெருமை தெரியல. அத முதல்ல உணர வைக்கணும். இப்ப இப்பிடியே விட்டுட்டா நாளைக்கு என்னுடைய புள்ளைக்கும் குலதெய்வம்னா என்னான்னே தெரியாம போயிடும். நான் உடனே நம்ம ஊர்ல இருக்குர இளைஞர்களுக்கிட்ட பேசப் போறேன்.

 

அவங்களும் இன்னைக்கு இருக்குர சூழ்நிலையை நல்லா புரிஞ்சி வைச்சிருக்காங்க. என்ன... யாராவது என்னமாச்சும் சொல்லுவாங்களேன்னு பேசாம இருக்காங்க. நான் போயிட்டு அவங்ககிட்ட பேசுறேன்.

 

முருகனின் இந்த முடிவ சின்னசாமி எதிர்பார்க்கவே இல்லை. ஏதோ நம்ம ஊருக்கு நல்லது நடக்கப் போகுதுன்னு நெனச்சு சந்தோசப்பட்டரு.

 

முருகன் இன்றுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியூர், வெளிநாடுகளிலுள்ள பங்காளி, மாமன் பசங்கள் எல்லாரையும் ஒண்ணு சேத்துப் பேசினான். அவங்களுக்கு இன்றுள்ள நிலைமையையும் இனி வருங்காலத்துல நடக்கப்போகுர எதார்த்தத்தையும் எடுத்துச் சொன்னான். அவங்களும் புரிஞ்சிக்கிட்டாங்க. உடனே அவுக அவுக வீட்டுக்குப் போன் போட்டு விபரத்த எடுத்துச் சொல்லி, திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுங்கள், முருகனுக்கும் ஒத்துழைப்பு கொடுங்க, திருவிழாவுக்கு நாள் குறிங்க நானும் இங்கேயிருந்து வந்து நம்ம குலதெய்வத்தை கும்பிடனும் என்று ஒவ்வொரு இளைஞரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

வழிபாட்டிற்கு நாள் குறிக்கப்பட்டது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து அனைத்து இளைஞர்களும் வந்தாங்க, கோயிலைச் சுற்றி இருந்த தேவையற்ற முட்செடிகள் அகற்றப்பட்டு, சாமிக்கு பூசைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. இதுவரை போட்டி பொறாமையில் இருந்தவங்க நீர் கிழியவிட்ட அம்புபோல் ஒன்றுகூடினார். புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர். அன்று வானம் கருத்தது. மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டித் தீர்த்தது. ஒன்று சேர்ந்து குலதெய்வத்தை வழிபட்டதால் விவசாயம் செழித்தது. ஊரில் இதுவரை இருந்து வந்த சிறுவயது இறப்பு, நோய்நொடி அனைத்தும் குறைந்தன.

 

நீ சாதிச்சிட்ட முருகா. உனக்கு இந்த ஊரின் மீதும் நம்ம சாதிசனங்க மீதும் இருக்குர அன்பு எல்லோருக்கும் இனிமே வரனும். அப்போதான் நம்ம யாரும் போட்டி பொறாமை இல்லாம சேர்ந்து வாழ வழிபிறக்கும். என்றாவது நம்ம நெலமை மாறும்னு நெனைச்சேன், நான் சாகுரத்துக்குள்ள நம்ம குலதெய்வ கோவில் திருவிழாவைப் பாத்துட்டேன். நல்லா இருடா முருகா. என்னைக்கும் நம்ம குலதெய்வத்தை மட்டும் மறந்துராத. அதுதான் உன் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் தொனையா இருக்கும்.

 

கண்டிப்பா பெரியப்பா. நான் என் புள்ளைங்களுக்கும் சொல்லி வளப்பேன். எத்தனையோ பெரிய தெய்வங்க இருந்தாலும் நம்ம குலதெய்வத்தை மட்டும் கைவிட்டுட்டாதீங்கன்னு.

 

திருவிழா முடிஞ்சு இளைஞர்கள் பிழைப்புத் தேடி மறுபடியும் வெளியூர், வெளிநாடுகளுக்கு போகத் தொடங்கிட்டாங்க. இப்ப எல்லோரும் தங்களுக்குள்ள ஒத்துமையா இருக்காங்க.

 

முருகனும் பேக்கை எடுத்துக்கிட்டு டவுனுக்குப் போக, பஸ் ஸ்டாப்புக்கு வந்தான். அப்போ அங்கே டீக்கடையில உக்காந்து இருந்த சின்னசாமியைப் பார்த்த உடனே அவருக்கு அருகே சென்று, நான் ஊருக்குப் போயிட்டு வர்றேன் பெரியப்பா என்றான்.

 

மனுஷ வாழ்க்கைங்கிரது சும்மா வாழ்ரதுக்கு மட்டும்னு நெனைக்காம வாழ்ர காலத்துல ஊர், உறவு, கோயில், வழிபாடு என்று இதனோடு அன்பு கொண்டு சந்தோஷமா இருந்துட்டு போகணும் முருகா.

 

சரி; நல்லபடியா போயிட்டு வா.

 

அவரிடம் வாழ்த்து பெற்று புறப்பட்டான் குலதெய்வத்தின் அருளால் பணம் என்னும் உறவைத் தேடி. 

கருத்துகள் இல்லை: