கொக்கென்று நினைத்தாயோ?
அக்ரி.கோ.ஜெயகுமார்,
மேனாள் வேளாண்மை இணை இயக்குநர்,
காந்திநகர், வேலூர் -6.
அலை பேசி எண் : 94869 38900
அனைவரும் மகாபாரதம் படித்திருப்போம் அல்லது கதையைக் கேட்டிருப்போம். அக்கதையில் உள்ள சுவாரஸ்யமான பகுதிகளை மற்றும்
ரசித்திருப்போம். ஆனால் அதற்குள் உயிரையே சுளீர் என்று சாட்டை சொடுக்கித் தாக்கும் பகுதிகளை கவனிப்பதில்லை. ஏற்கனவே
தெரிந்த கதை என்றாலும் அதில் உள்ள உண்மைகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
கவுசிகன்
என்ற வேதியர் காட்டில் பல ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். நெடுநாள் செய்த தவம்
பலித்தது. கண் விழித்துப் பார்த்தார். மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அப்போது
மரத்தின் மேலே அமர்ந்திருந்த கொக்கு ஒன்று அவர் தலையில் எச்சமிட்டது. கோபம் பொங்கக் கொக்கைப்
பார்த்தார். கொக்கு பற்றி எரிந்து நெருப்பால் செத்தது. ஆஹா!
நம் தவம் சித்தியாகி விட்டது என்கிற வெற்றிக் களிப்புடன் ஊருக்கு திரும்பினார்.
நீண்ட தூரம் பயணம் செய்ததில் அவர் வயிற்றில் பசி நெருப்பு பற்றி எரிந்தது. அருகில்
உள்ள வீட்டில் ஒரு பெண்ணிடம் உண்ண உணவு கேட்டார்.
அந்த
வீட்டுப் பெண் திண்ணையில் உட்காருங்கள் சுவாமி! உணவு கொண்டு வருகிறேன் என்று சொல்லி
விட்டு அவசரமாக உள்ளே ஓடினாள். அதற்குள் எதிர்பாராத விதமாக அவள் கணவன் வந்து
விட்டதால் அவனுக்குரிய பணிவிடைகளைச் செய்ய நேர்ந்தது. அன்புடன் அவனுக்குச் செய்ய வேண்டிய
பணிகளைச் செய்து விட்டு பின்னர் திண்ணையில் பசியுடன் காத்திருக்கும் ரிஷியின்
நினைவு வந்து உணவுடன் திண்ணைக்குச் சென்றாள். கவுசிகனுக்கோ கோபமான கோபம். கடுங்கோபத்துடன் தம் தபோ வலிமை தெரியட்டும் என்ற நினைப்பில் எரித்து
விடும் எண்ணத்தில் அந்தப் பெண்ணை நோக்கினார். ஆனால் அவளோ அலட்சியமாக சிரித்தபடியே என்ன சுவாமி! என்னைக் கொக்கு என்று நினைத்து விட்டீரோ? உம் கோபத்தில் எரிந்து போவதற்கு? என்று கேலி
பேசினாள்.
கவுசிகன்
நடுங்கி ஒடுங்கிப்போய் விட்டார். அவள் மேலும் சொன்னாள், நான் குடும்பப் பெண். என் கடவுள் என் கணவர் தான்.
அவருக்கான பணிவிடைகளைச் செய்து, கடமைகளை முடித்த பின்
தான் வேறு எதிலும் நான் ஈடுபட முடியும். நீர் பெரிய தபஸ்வியாக இருக்கலாம், ஆனால் குடும்பப்பெண் குடும்பக் கடமைகளை விட்டு விட்டு சாமியாருக்குப் பணி விடை செய்ய வேண்டுமா
என்ன? கடமைகள் முடிந்த பிறகு வேண்டுமானால் செய்ய
முடியும் என்றாள்.
இன்று எத்தனை பெண்கள் இந்த உண்மைகளைப் புரிந்து வைத்திருக்கின்றார்கள்
என்பதே என் வருத்தம். வீட்டில் குழந்தைகள், பெற்றோர், மாமனார், மாமியார், கணவன் யாரையும் கவனிக்காமல், வீட்டில் போட்டது
போட்டபடி போட்டு விட்டு ஆசிரமங்களில் போய் கூட்டிப் பெருக்கி, பூக்களைக் கட்டி, அந்தச் சாமியார்
இந்தச் சாமியார் பின்னாலும் அலைந்து, பக்திப் பயிர்
வளர்ப்பது சகிக்கக் கூடியதா என்ன? கடமைகளைச் செய்வது தான் உண்மையான வழிபாடு என்றும் சாமியாரை விடு....... மாமியாரை மதி
என்று கன்னத்தில் அறைகிற மாதிரி சொல்லவில்லையா இந்த மகாபாரதக் கதை!
கவுசிகனுக்குப் பெண் எரியாதது ஆச்சரியம்! அதைவிடத் தான் காட்டில் கொக்கை எரித்தது எப்படித் தெரிந்தது என்று பெரும்
ஆச்சரியம்!
காட்டில்
தவம் செய்கிறவன் பெறும் ஸித்தியை, வீட்டில் கடமை ஆற்றும் பெண்ணும் பெற்று விடுகிறாள் என்பதே அந்தப் பெண்ணின் பதில். அவள் மேலும் சொன்னாள், நீர் வேதங்களைக் கற்றும்
தவம் புரிந்தும் தர்மம் இன்னது என்று கற்று அறிந்தவர் தானே? ஆனால் உமக்கு எது
தர்மம் என்று தெரியவில்லை. ஆகையால் மிதிலைக்குப் போய் அங்குத் தர்ம வியாதர் என்ற
உத்தமரிடம் தர்மத்தை அறிந்து கொள்ளும் என்று அனுப்பி வைத்தாள்.
மிதிலை வந்து தர்ம வியாதரைத் தேடிய போது கவுசிகனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், தர்ம வியாதன் ஒரு கசாப்புக் கடைக்காரர். இறைச்சி வியாபாரம் செய்பவர்.
கவுசிகன் அருவருப்பை மறைத்துக் கொண்டு அவர் முன் போய் நின்றதும், என்ன முனிவரே! உம்மை அந்தக் கற்பரசி அனுப்பி வைத்தாரா? என்று கேட்டதும் கவுசிகன்
மேலும் அதிர்ச்சி அடைந்தார். கொஞ்சம் பொறுங்கள்....... மீதமுள்ள இறைச்சியையும்
விற்பனை செய்து விட்டு வருகிறேன் என்று சொல்லி கவுசிகனை உட்கார வைத்தார். பின்னர்
வீடு போனதும், தம் தாய் தந்தையருக்குச் சகல பணி விடை
களையும் செய்து அவர்கள் சந்தோஷமடையும்படி, கடமைகளாற்றி விட்டு வந்து கவுசகனிடம் பேசத் தொடங்கினார்.
வேதியரே! என் தொழில் கண்டு நீர் வெறுப்படைந்தீர்.
இது வழி வழியாக வந்த பரம்பரை தொழில். நான் உயிர்களை கொல்வதில்லை. மற்றவர்களால் மரணமடைந்த விலங்குகளின் புலாலை ஈஸ்வர
அர்ப்பணமாக விற்கிறேன். இல்லறத்தானுக்குரிய உபவாசம், அளவான பிரம்மச்சரியம் மேற்கொள்கிறேன்.
மனத்தாலும் எவருக்கும் தீங்கு செய்யேன். எனக்குத் தீங்கு செய்தவருக்கும் நான்
தீங்கிழைப்பதில்லை. அறிந்தும் அறியாததும் செய்த சகல பாவங்களுக்காகவும் கடவுளிடம்
நாள் தோறும் மன்னிப்பு கேட்பேன் என்று தர்மத்தை விளக்கினார். எல்லாவற்றிற்கும்
மேலாக இதோ உள்ள என் தாய் தந்தையர் எனக்குக் கண் கண்ட கடவுள். இவர்கள் தான் என்
வேதம். என் யாகம். அவர்கள் முதுமை காரணமாக என்னைச் சிரமப்படுத்தினாலும், இன்னுரை கூறி அவர்களுக்கு ஏற்ற உணவளித்து உபசரிக்கின்றேன். இவர்கள் ஆசியால்
எனக்குச் சகல சித்திகளும் உண்டாகி விட்டன. ஆனால், நீர்
பெற்றோரைத் தவிக்க விட்டு விட்டு தவம் செய்யப் போய் விட்டீர். உம் பெற்றோர் குருடர்களாகித் தடுமாறித் துன்புறுகிறார்கள். அவர்கள் மேலும் தவிக்காதபடி போய் உம் கடமையை
ஆற்றுங்கள் என்று கூற கவுசிகன் நாணத்துடன் புறப்பட்டுச் சென்றார்.
இக்கதையை
இன்றைய இளம் தலைமுறையினர் ஒரு முறைக்கு நூறு முறை படிக்க வேண்டும். பெற்றோரைக்
கடுஞ்சொல் பேசி, ஏசி நோகடித்து விட்டு முதியோர்
இல்லங்களில் அநாதை போல அலைய விட்டு விட்டு கோயில் கோயிலாகப் போய் கும்மியடிக்கின்றார்கள்.
இந்தப் பக்தி வெறும் வேஷமில்லையா? இன்று எத்தனை
சாமியார்களின் கார்ப்பரேட் கம்பெனிகளில் உயர வேண்டிய இளைஞர்களும், இளைஞிகளும்
வேலைக்காரர்களாக, இலவச ஊழியர்களாக வலம் வருகிறார்கள்
தெரியுமா? மரணத்திற்கு முன்பே பெற்றோர் வயிற்றில்
கொள்ளி வைத்து விட்டு பகவான்கள் பின்னாலும் ஆடிப்பாடிக் கொண்டு அலையும் அசட்டு
ஆத்மாக்களைக் கண்டு என் நெஞ்சு பதறுகிறது.
பொறுமையை விட மேலான தவறுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.
இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமுமில்லை. தோல்விகள்
சூழ்ந்தாலும், இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி
அடுத்தடுத்த வெற்றிப் படியில்
கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள்
இலக்கினை அடையும் வரை.