4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஏப்ரல், 2021

வட மொழி இலக்கியங்களில் மகப்பேறு - செல்வி.பிரமியா.பஞ்சலிங்கம்

 

வட மொழி இலக்கியங்களில் மகப்பேறு


செல்வி.பிரமியா.பஞ்சலிங்கம்

இலங்கை

ஆய்வுச்சுருக்கம்

இந்து அறிவியல் மரபிலே மருத்துவம் மிக ஒரு உன்னத இடத்தினைப் பெற்றுள்ளது. அறிவியல் வளர்ச்சியில் மருத்துவத்திற்கே முதலிடம் வழங்கப்படுகின்றது. இதனாலே மருத்துவத்தின் சிறப்பினை வள்ளுவர்,

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செய்வானென்று

 அப்பானாற் கூற்றே மருந்து  (குறள்950) 

மருத்துவத்தின் சிறப்பு பற்றி பல இலக்கியங்களும் குறிப்பிட்டுள்ளன. இத்தகைய உயிர் காக்கும் தொழில் இன்று உச்சாணியில் நின்று உலகை வாழ்விக்கின்றது. மருத்துவக்கலை தன்னகத்தே பல்வேறு பிரிவுகளைக் கொண்டு வளர்ச்சியடைந்து வருகின்றது. அவற்றுள் ஒன்றே அறுவை சிகிச்சையாகும். இவ் சிகிச்சைப் பிரிவின் ஒர் அங்கமாகவே மகப்பேற்று மருத்துவம் காணப்படுகின்றது. இதனை வரலாற்று நோக்கில் அதன் தொன்மையையும் தொடர்சியையும்  அறிந்து கொள்வதற்கு வடமொழி இலக்கியங்கியங்களான வேதம், உபநிடதம், புராணம், இதிகாசம் ஆகியவற்றை  துணைகொண்டு ஆராய்வதாக  இவ்வாய்வு அமைகின்றது.

திறவுச்சொற்கள்: மகப்பேறு, மருத்துவம், இலக்கியங்கள், கரு, உயிர் 

அறிமுகம்

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணும் இல்லற வாழ்வில் எதிர்நோக்கும் மகிழ்வான  தருணம் கருவுறுதல்தாய்மைக்குப் பாதை அமைக்கிறது. தன் உடலுக்குள்ளேயே ஓர் உயிர் உருவாவதை உணர்கின்ற பெண்ணின் உடலியல் அதிசயம் தான் கருவுறுதல் ஆகும். கரு உருவாகியது முதல் குழந்தை பிறக்கும் காலம் வரையில் உடலிலும் கருவிலும் பல்வேறு மாறுதல்களும், நோய்களும், பரிசோதனைகளும், சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற மருத்துவமுறைகள் மகப்பேற்று மருத்துவம் எனப்படும். இம்மகப்பேறு பற்;றிய சிந்தனைகள் எமது இந்து மரபில் பன்னெடுங்காலமாக நிலவிவந்தமையை அறியலாம்.

தாய்மை  என்பதனை காலத்தைக் கொண்டு வரையறுக்க முடியாத ஒரு நிகழ்வாகும். உலகில் என்று ஒரு உயிரினம் தோன்றியதோ  அன்றிலிருந்து இதன் தொன்மையும் தொடர்ச்சியும் ஆரம்பமாகியது. இது  ஆறறிவு படைத்த மனிதகுலத்திற்கு மட்டுமன்றி ஐந்தறிவு படைத்த விலங்குகளுக்கும் உரிய ஓர் உணர்வாகும். இவ்வாறான ஓர் தாய்மை எனப் போற்றப்படும் மகப்பேறு இல்லை எனில் இவ்வுலகில் உயிரினங்கள் என்ற ஒன்றே உருவாகி இருக்கமுடியாது. அத்தகைய பெருமை மிக்க மகப்பேறு உயிரினங்கள் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை உலகில் இயற்கையாக இடம் பெறுகின்ற ஓர்  உயிரின் பிறப்பாக காணப்படுகின்றது. 

மகப்பேறு என்பது  அறுவை மருத்துவத்தின் ஒரு பிரிவாக காணப்படினும் இன்று உலகளாவிய ரீதியில் தனியொரு துறையாக தனது பரினாமத்தைக் கொண்டுள்ளது. ஆரம்ப காலங்களின் மருத்துவிச்சிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த இம் மருந்துவம் தற்காலத்தில் இதற்காகவே கற்கைகளை பயின்ற மருத்துவர்களாலும் இதற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட வைத்தியசாலைகளிலும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த பல முறைகளை இன்றும் பின்பற்றி வருகின்றனர். என்பதனை நாம் அறிந்துகொள்ளமுடிகின்றது.

சிந்துவெளி கால மகப்பேறு தொடர்பான சிந்தனைகள்

மகப்பேறு என்பது பன்னெடுங்காலமாக எமது இந்து சமுதாயத்தில் நிலவி வந்துள்ளது. எனினும்; சிந்துவெளிக் (கி.மு. 3250-கி.மு.2750)  காலத்திலே அதற்கான ஆதாரங்கள் எமக்கு கிடைத்துள்ளன. 5000 ஆண்டு பழமை வாய்ந்த நாகரிகம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இந்து சமயம் தொடர்பான பல ஆதாரங்களை எமக்கு அளித்த காலமும் இதுவேயாகும். இங்கு 1922-1930 வரையான காலப்பகுதியில் புதைபொருள் ஆய்வாளர்களான சேர்.ஜோன். மார்சல் தலைமையில் அலெக்ஸ்சாண்டர் கன்னிங்காம், இராசமணிக்கனார், சி.ஆர்.ராய் முதலான ஆய்வாளர்கள்  இவ்வாய்வில் முக்கிய பங்கு வகித்தனர்.

இவர்கள் இங்கு மேற்கொண்ட ஆய்வுகளின் விளைவாக அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட நகரங்களில் யோகியின் வடிவம், பசுபதி வடிவம், சிவலிங்கங்கள், தாயத்துக்கள், முத்திரைகள், இலட்சனைகள் போன்றவற்றைக் கண்டுபிடித்தனர். இவவை அனைத்தும் இந்துமதத்தை பிரதிபலிப்பனவாகவே காணப்பட்டதாக சேர்.ஜோன்.மார்சல் குறிப்பிடுகின்றார். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகள் மிகவும் முக்கியமானவையாக காணப்படுகின்றன. அம் முத்திரைகளில் இரண்டு முத்திரைகள் மகப்பேற்றுடன் தொடர்புடையவை.

ஒன்று தரைப் பெண் முத்திரை சிந்து வெளியில் பல பெண் வடிவங்கள் காணப்படுகின்றன. இவை போன்று பலுஸ்தானம் முதல் கிரீஸ் வரையில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் கிடைத்துள்ளன. இதனை தரைத் தெய்வமாக இவர்கள் வழிபட்டாலும், இத் தெய்வத்தினை ஏனைய தெய்வங்களுடன் இணைத்து வழிபட்டதுடன் இத் தெய்வத்திற்கு கணவன், மகன்  உறவுகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. சிந்துவெளியில் கிடைத்துள்ள முத்திரையில் தரைப் பெண் தனியாக வணங்கப்பட்டுள்ளதுடன் அத் தெய்வம் அமைதியான முகத்தோற்றமுடையதாகவும், அச்சமூட்டும் தோற்றமுடையதாகவும் குழந்தையயை வைத்திருப்பது போன்றதாகவும் காணப்படுகின்றது. இது பின்னர் சக்தி வழிபாடாக மாறியதாகவும் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். 

              இவர்கள் இத் தெய்வத்தை தரைப் பெண்ணாக வழிபட்டாலும் இங்கு ஒரு தாய்மை காணப்படுவதுடன் இங்கு தாய் என்பவள் இறைவனுக்கு நிகராக போற்றப்பட்டுள்ளாள் என்பதனையும் மகப்பேறு தொடர்பான சிந்தனை சிந்துவெளிக் காலத்தில் இருந்துள்ளது என்பதனையும் ஊகிக்கமுடிகின்றது.

தரையை தாயாக உருவகப்படுத்தி அது நமக்கு அளிக்கும் பொருள்களைக் கருவுயிர்ப்பதாக காட்டும் முத்திரை ஒன்றும் கிடைக்கப்பெற்றது. இம் முத்திரையில் ஒரு பெண் கருவுயிர்க்கும் நிலையில் தலைகீழாய் நிற்கின்றாள். அவளது கருவிலிருந்து செடி ஒன்று வெளிப்படுகின்றது என சேர். ஜோன்.மார்சல் குறிப்பிட்டுள்ளார்.   குப்தர் காலத்திலும் இதனை ஒத்த ஓவியங்கள் ஐக்கிய மண்டலத்தில் உள்ள பீதாவில்கிடைத்துள்ளதாக இராசமாணிக்கனார் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வகையில் இம் முத்திரையானது தரையிலிருந்தே வளங்கள் பெறப்படுவதனை வலியுறுத்தியிருந்தாலும் இதனை ஒரு தாய்க்கு ஒப்பிட்டு இருப்பது சிறப்பு ஏன் எனில் ஒரு தாயே இவ்வுலகில் உயிர்களை உருவாக்குகிறாள் தாய் என்பவள் இல்லை என்றாள் இவ்வுலகில் உயிர் என்ற ஒன்றே உருவாகாது. ஆகையால் சிந்துவெளி முத்திரைகளிலிருந்து இக்காலத்திலும் மகப்பேறு தொடர்பான சிந்தனைகள் எழுச்சி பெற்றிருப்பதனை இங்கு கிடைத்த முத்திரைகளில் இருந்து ஊகிக்க முடிகின்றது.

வடமொழி இலக்கியங்களில் மகப்பேறு தொடர்பான சிந்தனைகள்

இந்து சமய மரபிலே அன்று தொட்டு இன்று வரை இலக்கியங்கள் மிகப் பிரதான இடத்தினை பெற்று வருகின்றது. காரணம் இந்து சமயத்தின் சிறப்பினையும், தொன்மைகளையும் நிறுவுவதற்கு உதவும் வரிவடிவ ஆதாரங்களாக இவை திகழ்கின்றமை ஆகும்.

உலக மொழிகளில் ஒன்றாகவும், திராவிட மொழிக்குடும்பத்தில் ஓர் அங்கத்துவம் பெற்ற மொழியாகவும் வடமொழி காணப்படுகின்றது. இதனை சமஸ்கிருதம் எனவும் அழைப்பார். சமயக்கருத்துக்கள் பல தொகுக்கப்பட்ட மொழியாக இம் மொழி காணப்படுகின்றது. வடமொழியில் எழுந்த பல இலக்கியங்கள் காணப்படுகின்ற பொழுதிலும் இந்து சமயம் தொடர்பாக அதிகளவான இலக்கியங்கள் எழுந்துள்ளன எனலாம். இவ் இலக்கியங்களே வட மொழி இலக்கியங்கள் என சிறப்பாக சுட்டப்படுகின்றன. இத்தகைய இலக்கியங்களாக வேத உபநிடதங்கள், இதிகாச புராணங்கள், போன்ற நூல்கள் திகழ்கின்றன. இவை தவிர்ந்த பல வட மொழிநூல்கள் காணப்படினும் ஆய்வின் தேவை கருதி மேற்குறித்த இலக்கியங்களில் மகப்பேறு தொடர்பான சிந்தனைகளை ஆராயலாம்.

வேத உபநிடதங்களில் மகப்பேறு தொடர்பான சிந்தனைகள்

வட மொழி இலக்கியங்களில் முதன்மை பெற்றுத் திகழ்வது வேதங்களாகும். வேதங்கள் வித் என்ற வினையடியில் இருந்து தோற்றம் பெற்றவையாகக் காணப்படுகின்றது. இவை இருக்கு, யசூர், சாமம், அதர்வனம் எனும் நான்கு பிரிவுகளைக் கொண்டதாக திகழ்கின்றது. இதில் இருக்கு, யசூர், சாமம் என்பன திரையிவித்தியாஎன்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகின்றது. வேதங்கள் மக்களின் வாழ்வியல், சமயம், வழிபாடு போன்ற இன்னோரன்ன விடயங்களை எடுத்துக்காட்டுகின்றது. அதனடிப்படையில் வேதங்கள் முக்கியம் வாய்ந்தவையாக காணப்படுகின்றன.

ஏனைய மூன்று வேதங்களும் இறைவனையும், இறைதுதிகளையுமே அதிகளவாக கொண்டு காணப்படுகின்றன. எனினும் நான்காம் வேதம் என்று போற்றப்படுகின்ற அதர்வன வேதம் இறைவிடயங்களிற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்காமல் மருந்து, மாந்தீரிகங்களிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அதனால் இவ் வேதத்தில் அதிகளவு மருத்துவம் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இக் குறிப்புக்களில் மகப்பேறு பற்றிய கருத்தியல்கள் இடம்பெற்றுள்ளதனை அறியமுடிகின்றது.

அதர்வண வேதத்தின் காண்டம் ஒன்றில் 11 ஆவது சூக்தத்தில் பிரசவம் என்ற தலைப்பில் மகப்பேறு தொடர்பான சிந்தனைகள் இடம்பெற்றுள்ளன. இச்சூத்தம் குழந்தை பிறக்கும் போது கூறப்படுவது இதில் 6 பாடல்கள் காணப்படுகின்றன. இதனை மொழிபெயர்த்த கிரிஃபித் 3-6 வரையான பாடல்களை மொழிபெயர்க்கவில்லை. எனினும் இவை தாய்மை, மருத்துவம் சார்ந்தவை என குறிப்பிடுகின்றார்.

பூணனே! அரியமான் இந்தப் பிரசவத்தில் ஆற்றல் உள்ள ஹோதாவாய் உனக்கு வட்டைக் கூறுக. கால கருப்பமுடனான ஸ்தீரி சற்று இளக்கமாகுக் அவளது அங்கங்கள் பிரசவத்துக்குப் பக்குவமாக்குக, சோதியின் திசைகள் நான்கு புவியின் திசைகள் நான்கு அத்திசைகளின் கருப்பாசயத்தால் சூழ்ந்துள்ள சிசுவை தேவர்கள் சலனமளிப்பார்கள். அவர்கள் ஸ்தீரியைப் பிரவசத்துக்குப் பொருத்தம் செய்க, பூணன் புறஞ்செய்க, சனனாங்கத்தை நாங்கள் விசாலமாக்குவோம். அன்னையே! உனது அங்கத்தைத் தளர்த்திக் கொள். பிஷ்கலையே! நீ பாலனை கீழே பிரேரணை செய், மாக்மிகும் பசையுள்ள நஞ்சுங்கொடி, மாமிசத்தில், கொழுப்பில் பற்றாது போல், மச்சைகளிலும்-ஸ்தாபிதமாகாமல், நாய் புசிக்கீழே வருக. நஞ்சுக்கொடி கீழே வருக.

நான் உன் மர்ம அங்கத்தை விசாலமாக்குகிறேன். நான் மூலஸ்தானத்தை அகலமாக்குகிறேன்; இரு பக்கங்களின் நாடிகளை விசாலமாக்குகிறேன். தாயையும் பாலகனையும் பிரித்து தனிமையாக்குகின்றேன். குமாரனை நஞ்சுக் கொடியின்னின்றும் நீக்குகின்றேன். நஞ்சுக்கொடியே இறங்குக. எப்படி வாயு, எப்படி மனம், எப்படி பறவை பறக்கின்றனவோ, அப்படி பத்து மாத பாலனான நீயும், ஜராயுவோடு ஓடி வா. ஜராயு இறங்கு.  எனக் கூறப்படுகின்றது. இது குழந்தை பத்து மாதத்தில் பிரசவிக்கும் என்பதையும் குழந்தை பிரசவிக்கும் போது தாய் எவ்வாறு இருக்கவேண்டும். என்பதையும் குறிப்பிடுவதிலிருந்து வேதகால மக்கள் மகப்பேற்று மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றிருந்தமை புலனாகின்றது.  

இந்து இலக்கியங்கள் வரிசையில் அடுத்து எண்ணப்படுவது உபநிடதங்களாகும். இவை அறிவை மட்டும் புகட்டுவனவாக இல்லாமல் மன அமைதியையும் மனச் சாந்தியையும்  அளித்தன. உபநிடம் எனும் சொல் உபநிஸத் என்றும் அழைக்கப்படுகின்றது. நெருங்கி கீழே அமர்தல் எனும் பொருள் உபநிடதங்களுக்கு வழங்கப்படுகின்றது. உபநிடதங்களில் பிரம்மா, ஆன்மா, பிரபஞ்சம் பற்றி அதிகளவில் பேசியிருந்தாலும் உபநிடதங்களிலும் அறிவியலின் செல்வாக்கும் இழையோடி இருப்பதனைக் காணலாம்.

இக்கருத்தியலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகவே 108 உபநிடதங்களில் 17 ஆவது உபநிடதமாக போற்றப்படும் கர்ப்போபநி~தத்தைக் குறிப்பிடலாம். இக் கர்ப்போபநிடதம் கிருஷ்ணயசூர் வேதத்தினைச் சார்ந்த உபநிடதமாகும். பிப்பலாத மஹரிஷியால் உபதேசிக்கப்பட்டதாகும்.  இவ் உபநிடதத்தில்  ஒர் குழந்தையானது எவ்வாறாக கருவில் உருவாகி வளர்ச்சியடைந்து வெளியே ஜனனம் எடுக்கின்றது என்பது வரையான நுண்ணியமான கருத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன.

இன்றைய விஞ்ஞானம் பல்வேறுபட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடனும், பல்வேறு ஆய்வுகளின் மூலமாகவும் கண்டறிந்த இக் கருவின் உற்பத்தி பற்றிய கருத்தியல்கள் எவ்வாறு கிறிஸ்து சகாப்தத்துக்கு முற்பட்ட காலங்களிவே விளக்கப்பட்டுள்ளன. என்பது இந்துக்களாகிய நம்மை மட்டுமல்ல வெளிநாட்டு ஆய்வாளர்களுக்கும் மிகவும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. வெறுமனே தத்துவங்களை மட்டும் விளக்காமல் வாழ்வியல் கருத்துக்களையும், புதுமை செறிந்த விடயங்களையும்,  மேற்குறிப்பிட்டது போன்ற அறிவியல் சார் நுண்ணாய்வுகளை தன்னகத்தே கொண்ட பெரும் இலக்கியப் பரப்பாகவே உபநிடதங்கள் காணப்படுகின்றன. இதனை நிரூபிக்கும் வகையிலேயே கர்ப்போபநிடதம் காணப்படுகின்றது.

அவ்வகையில் இக் கர்ப்போபநிடதத்தில் விளக்கப்பட்டுள்ள கரு உற்பத்தி பற்றிய கருத்தியல்களை ஆராய்வோம்.

பஞ்சாத்மகம் பஞ்சஸவர்த்தமானம் டாச்ரயம் ட்குணயோக யுக்தம் Æ தம் ஸப்த தாதும்…”

என்ற முதலாவது சுலோகத்துடன் இவ் உபநிடதம் ஆரம்பமாகின்றது. இதன் பொருள் யாதெனில் நம் சாரீரமானது ஐந்து பொருளாகி ஐந்தில் நிலைபெறுவதாகும். ஆறு ஆசிரமுடையது, ஆறு குணங்களுடன் கூடியது, ஏழு தாதுக்களும், மும்மலங்களும், இரண்டு யோனிகளும் உடையது. நான்கு விதமான ஆகாரமயமானது, என்று மனித உடல் பற்றிய உருவாக்க வர்ணணை கூறப்பட்டுள்ளதனை காணலாம். இவ் உடல் பற்றிய வர்ணனையைக் குறிப்பிட்ட பிப்பலாத முனிவர் இதன் பின்பே இவ் உடல் ஓர் கருவில் இருந்து உருவாகின்றது என்பதனை விளக்கியுள்ளார்.

“…ரஸாச்சோணிதம் சோணிதான் மாம்ஸம், மாம்

ஸான் மேதோ, மேதஸ: ஸநாயவ:, ஸ்நாயுப்ப்யோ…” 

எனும் இரண்டாவது சுலோகத்தில் எவ்வாறு தேவதத்தன் என்ற யாரோ ஓர் மனிதனுக்கு விய போகத்திற்குரிய திரவியங்கள் உண்டாகின்றனவோ அப்போது அவற்றின் கூட்டுணர்வின் நல்ல குணத்தால் ஆறுவிதமான ரஸங்கள் தோன்றுகின்றன. ரஸத்திலிருந்து ரத்தம், ரத்தத்திலிருந்து மாம்ஸம், மாம்ஸத்திலிருந்து கொழுப்பு, கொழுப்பிலிருந்து நரம்புகள், நரம்புகளிலிருந்து எலும்புகள், எலும்புகளிலிருந்து ஊன், ஊனிலிருந்து சுக்ரம் என்று ஏழு தாதுக்கள், அவற்றினால் ஆனதே சரீரம், அத்தகைய சரீரத்தில் சுக்கிரமும், சோணிதமும் சேரும் போது கர்ப்பம் உண்டாகின்றது.

அதனை இயக்குமிடம் இதயம், இதயத்தினுள் அக்கினி உள்ளது. அதில் பித்தமும் பித்தத்திலிருந்து வாயுவம் தோன்றுகின்றன. இந்த வாயு மீண்டும் கிரமமாக இருதயத்தினை நாடுகின்றது. இது மக்களை ஆழும் ஆண்டவனுடைய நியதி. என்று இவ் இரண்டாவது சுலோகத்தில் கருவுற்பத்தியின் ஆரம்ப கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

இவ் உபநிடதத்தின் மூன்றாவது சுலோகத்தில் கரு உருவாகிய பின்னர் அக் கரு ஒவ்வொரு மாதங்கங்களிலும் எவ்வாறான உறுப்புக்கள் உருவாகி வளர்ச்சியடைகின்றது. என்பது விளக்கப்பட்டுள்ளது. அதாவது ருதுகால ஸம்போகத்தால் ஓரிரவு கழிந்ததும் கருவானது கலங்குகின்றது. ஏழிரவுகளில் நீர்க்குமிழி போன்ற உருவத்தினையும், அரை மாதத்தில் பிண்டமாகின்றது. ஒரு மாதத்தில் கடினமாகின்றது. இரண்டாவது மாதத்தில் தலை தோன்றுகின்றது. மூன்றாவது மாதங்களில் பாதங்களின் பிரதேசம் தோன்றும், நான்காவது மாதத்தில் மணிக்கட்டு, வயிறு, இடுப்பு முதலிய பகுதிகள் உருவாகின்றன. ஐந்தாவது மாதத்தில் பின்புறம், மூங்கில் போன்ற முதுகெலும்பு போன்றன உண்டாகின்றன.

ஆறாவது மாதத்தில் வாய், மூக்கு, கண்கள், காதுகள் உண்டாகின்றன. ஏழாவது மாதத்தில் ஜீவனுடன் கூடுகின்றது. எட்டாவது மாதத்தில் எல்லா லஷ்ணங்களும் பூர்த்தியாகின்றன. பஞ்ச பூத வடிவமான சரீரம் ஸாமர்த்தியமுடையதாகும் போது ஐந்து ஞானேத்திரியங்களும், புத்தியும் அதனால் கந்தம், ரஸம் முதலியவற்றையும் அறியும் திறமையும் உண்டாகின்றது. அப்பொழுது அந்த ஜீவன் அழியாத அங்மாகிய ஓங்காரப் பொருளைச் சிந்திக்கின்றான். அந்த ஓரெழுத்தை உணர்த்தும் பஞ்சபூதங்கள், மனம், புத்தி, அஹங்காரம் என்ற எட்டு பிரகிருதிகளும் அவற்றின் பதினாறு விகாரங்களும் தேகத்தில் அதையுடைய தேகியாகிய ஜீவனுடையவையாகின்றன. என்பது உணரப்படுகின்றது.

தாயார் உண்டதும், பருகியதும் தாயுடன் இணைந்த நாடிகளில் பரவி அதன் மூலம் குழந்தைகளின் பிராணன் திருப்தியடைகின்றன. ஒன்பதாவது மாதத்தில் எல்லா லஷ்ணங்களும், ஞானேத்திரியங்களும் பரிபூரண நிலையை எய்துகின்றன. அப்பொழுது அந்த ஜீவனுக்கு முந்தய பிறவியின் ஞாபகம் உதிக்கின்றது. தான் செய்த பாவ, புண்ணிய செயல்களையும் உணர்கின்றது.  

ருதுகாலே ஸம்பரயோகாத் ஏக ராத்ரோஷிதம்

கலிலம் பவதி ஸப்ராத்ரோஷிதம் புத்புதம் பவதி…”  

மூன்றாவது சுலோகத்தில் ஒரு கரு உருவாகி ஒவ்வொரு மாதங்களிலும்  உறுப்புக்கள் உருவாகுவதையும் குறிப்பிட்டதனைப் போல ஒரு குழந்தை ஆண், பெண் அல்லது அலி  என்பதனை தீர்மானிப்பதனையும், அங்க குறைபாடுகளுடன் பிறப்பதற்கான காரணங்களும் கூறப்பட்டுள்ளன. அதாவது தந்தையின் வீரியம் அதிகமாக இருந்தால் பிறக்கும் குழந்தை புருஸனாகவும் (ஆண்), பெண்ணின் வீரியம் அதிகமாக இருந்தால் பிறக்கும் குழந்தை ஸ்தீரியாகவும்  (பெண்) இரண்டும் சமமானால் அலியாகவும் குழந்தை பிறக்கின்றது. புணர்வின் போது மனக்கலக்கம் ஏற்படின் மழலை குருடாகவும், முடமாகவும், கூனராகவும், குள்ளராகவும் பிறக்கின்றனர் என்று கர்ப்போபநிடதம் குறிப்பிடுகின்றது.

அதனைப் போல் இச் சுலோகத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான காரணமும், பற்றியும் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒன்றுக்கொன்று வாயுவினால் பீடிக்கப்பட்டு சுக்கிலம் இரண்டுபட்டால் இரட்டைப் பிள்ளைகள் உருவாகுகின்றனர். என்று இவ் உபநிடதம் கறிப்பிடுகின்றது. அன்யோன்ய வாயு பரிபீடித சுக்ர த்வைவித்யாத் தனுஸ்யாத்ததோ யுக்மா…” என்ற  இச் சுலோகம் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதைப் பற்றி எடுத்துரைப்பதாக அமைகின்றது.

இவ்வாறாக கர்ப்போபநிடதத்தின் மூன்று சுலோகங்களின் மூலமாக ஓர் குழந்தை எவ்வாறு உருவாகின்றது என்றும் அக் குழந்தை ஒவ்வொரு மாதங்களிலும் எத்தகைய வளர்ச்சியை அடைகின்றது என்றும் ஒரு குழந்தை ஆண், பெண், அலி, அங்கவீன குறைபாடுகள், இரட்டைக் குழந்தைகள் எவ்வாறு பிறக்கின்றன என்பதனையும் இவ் உபநிடதம் தொழில்நுட்ப வளர்ச்சியடையாத காலத்திலே குறிப்பிட்டுள்ளமை எமது இந்துமதத்தின் பெருமையையும் மகப்பேற்றின் பெருமையையும் உலகறியச் செய்துள்ளது.  

கர்ப்போபநிடதத்தில் மகப்பேறு தொடர்பான விடயங்கள் காணப்படுவதனைப் போல உபநிடதங்களில் ஓன்றான ஐதரேய உபநிடதத்திலும் கூறப்பட்டுள்ளது. இவ் உபநிடதத்தின் 2 ஆவது அத்தியாயத்தில் உயிர் உருவாதல் பற்றிக் கூறப்பட்டுள்ளது. உடல், உயிர், ஆன்மா ஆகியவற்றின் தொகுதியே மனிதன் தான் செய்த நல்வினை, தீவினைப் பயன்களுக்கு ஏற்ப உடல்களை மாற்றியபடி செல்கின்ற உயிரின் பயணமே வாழ்க்கையாகும். உயிர், பழைய உடலை விடுவது மரணம், புதிய உடலை ஏற்றுக்கொள்வது பிறப்பு ஆகும்.

உடல் தாயிடமிருந்தும் உயிர் தந்தையின் வழியாகத் தாயின் கருப்பைக்குள் புகுகிறது. இந்த உடல், உயிர் சேர்க்கையில் இறைவன் ஆன்மாவாக புகுந்து அதனை இயக்கச் செய்கின்றார். இத்தகைய கருத்தியல்கள் இவ் உபநிடதத்தில் இடம்பெற்றுள்ளன.  இதில் கருத்தரித்தலான குழந்தையின் முதற்பிறப்பு பற்றிக் கூறப்பட்டுள்ளது.

“…தேஜ: ஸம்பூதம் ஆத்மன்யேவாத்மானம் பிபர்த்தி தத்யதா ஸ்த்ரியாம்

ஸிஞ்சதி அதைனஜ்ஜயதி ததஸ்ய ப்ரதமம் ஜன்ம    (சுலோகம் 1)

இதில் (கர்பிணிகள் வெளியேறவும்.) மனிதன் ஆரம்பத்தில் ஆணிடம் விந்துவாக இருக்கின்றான். விந்து என்பது எல்லா உறுப்புக்களின் ஆற்றல் திரண்டு உருவாகியது. ஓர் ஆண் இவ்வாறு தன்னில் தன்னை தாங்குகின்றான். (விந்து வடிவில்) எப்போது விந்துவை பெண்ணில் விடுகின்றானோ அப்பொழுதே குழந்தையைப் பிறப்பித்துக்கொள்கின்றான். இதுவே முதற்பிறப்பு என்பதனை இச் சுலோகம் வெளிப்படுத்துகின்றது. அதாவது ஆணினுடைய விந்து பெண்ணின் கருப்பை நோக்கிச் செல்லும் போதே கரு உருவாகின்றது. என்பதனை தெளிவுபடுத்துகின்றது. 

அதனைப்போல் இந்து இலக்கியங்களில் பிரஸ்தான திரயங்களில் ஒன்றாக போற்றப்படுகின்ற பகவத்கீதையில் உயிரை உருவாக்குகின்ற இந்த உறவை தெய்வீகமாக போற்றுவது இங்கு நினைவுகூரத்தக்கது. இதனை, ப்ரஜனச்சாஸ்மி கந்தர்ப்ப: (கீதை 10.28) என்கிறது.

சமயத்தலைவர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக காணப்படுபவர் சுவாமி விவேகானந்தர் இது பற்றி குறிப்பிடுகையில், இனவிருத்தி என்பது கடவுளின் மிகப்புனிதமான சின்னம், கணவனும் மனைவியும் சேர்ந்து செய்கின்ற ஆழ்ந்த பிரார்த்தனை, நல்லதோ, தீயதோ செய்வதற்கான பெரும் சக்தி பெற்ற ஓர் உயிரை உலகிற்கு கொண்டு வரப்போகின்ற பிரார்த்தனை. இது என்ன வேடிக்கையா? ஆல்லது வெறுமனே நரம்புகளுக்குத் திருப்தி அளிக்கின்ற செயலா? மிருகத்தனமான உடலின்ப அனுபவமா? இல்லை, இல்லை என்று ஆயிரம் தடவை சொல்கிறான். (ஞானதீபம், 8.148) என்கிறார்.

தத் ஸ்த்ரியா ஆத்மபூயம் கச்சதி யயதா ஸ்வமங்கம் ததா…” (சுலோகம் 2) இச் சுலோகமானது உடலுக்குச் சொந்தமான ஓர் உறுப்பு போலஇ விந்து பெண்ணுடன் ஒன்றுபட்டுவிடுகிறது. ஆதனால் அது அவளை வருத்துவதில்லை. விந்துவாகத் தன்னில் புகுந்து உயிரை அவள் கருப்பபையில் பாதுகாக்கிறாள். என்பதனை புலப்படுத்துகின்றது. ஆணினுடைய விந்துவானது பெண்ணின் கரு முட்டையுடன் இணைந்து கருவாக அல்லது உயிராக உருவாகின்றது. இவ்வாறு உருவாகிய கருவை பெண் கருப்பையில் வைத்து  பத்து மாதங்கள் பாதுகாத்துவருகின்றாள்.

அடுத்துவரும் சுலோகத்தில் குழந்தையின் இரண்டாம் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. இதில் கருவைப் பாதுகாக்கின்ற பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள் குழந்தை பிறக்கும் முன் கருவாக பெண் காதுகாக்கின்றாள். பிறந்த பின்பும் முன்பும் தந்தை பாதுகாப்பதாகவும் தந்தையானவர் அக் குழந்தையை தானாக எண்ணிப் பாதுகாப்பதுடன் அவன் உயிர்களின் சந்ததிச் சங்கிலி தொடர்வதற்காகவே அவன் இவ்வாறு செய்கின்றான். தாயின் வயிற்றிலிருந்த குழந்தையாக பிறப்பதே மனிதனின் இரண்டாவது பிறப்பு என ஐதரேய உபநிடதம் குறிப்பிடுவதனை,

ஸா பாவயித்;ரீ பாவயிதவ்யா பவதி தம் ஸ்த்ரீ கர்பம்

லோகாஸ்ததஸ்ய த்வீதீயம் ஜன்ம” ( சுலோகம் 3)

பண்டைய சமுதாயம் ஒரு சிறந்த ஆரோக்கியமான சமுதாயமாக விளங்கியமைக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று உடலுறவு, கருத்தரித்தல் போன்ற விடயங்கள் சபைகளில் விவாதிக்கப்பட்டுள்ளதுடன் குருகுலத்தில் குருவால் மாணாக்களிற்கும் போதிக்கப்பட்டுள்ளது. குருகுலத்தில் போதிக்கப்பட்டமை பற்றிய செய்தியினை தைத்தீரிய உபநிடதம் பதிவு செய்துள்ளது. தாய் முற்பகுதி, தந்தை பிற்பகுதி என்றும் இருவரும் இணைவதால் உயிர் உருவாகின்றது. என்றும் இருவரையும் இணைப்பது உடலுறவு எனவும் உயிர்களின் உற்பத்தி பற்றிய சிந்தனை கூறப்பட்டுள்ளது. இதனை,

அதாதிப்ரஜம் மாதா பூர்வ ரூபம்  பிதோத்தரரூபம்  ப்ரஜா

ஸந்தி ப்ரஜனனக்ம் ஸ்ந்தானம்  இத்யதிப்ரஜம்"(தைத்தீரிய உபநிடதம் 1:3:6)

இதிகாச, புராணங்களில் மகப்பேறு தொடர்பான சிந்தனைகள்

இந்து இலக்கியங்களில் முக்கியமாவையாகக் காணப்படும் இவ் புராண இதிகாசங்கள், இந்து சமயத்தின் தொன்மைகளையும் சிறப்புக்களையும் எடுத்துக்காட்டும் ஆதாரங்களாக திகழ்கின்றன. இதிகாசங்களாக இராமாயணம், மகாபாரதம், சிவரகசியம் என்பன காணப்படுகின்றன. இவற்றில் சிவரகசியம் தவிர்ந்த மற்றய இரு இலக்கியங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. புராணங்கள் மகாபுராணங்கள், பதிணெண் புராணங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. இவை இறைவனின் முகூர்த்தங்கள்  மற்றும் அவதாரங்கள் பற்றிய செய்திகளை எடுத்துச் சொல்வனவாக அமைகின்றது. 

இவ்விரண்டு இலக்கியங்களுமே அரச வம்சர்களின் வரலாற்றையும், இறைவனின் பெருமைகளையும் குறிப்பிட்டாலும் இந்து மதத்திற்கே உரித்தான அறிவியல் விடயங்கள் பொதிந்துகிடக்கின்றன. அதிலும் குறிப்பாக மருத்துவம் தொடர்பான குறிப்புக்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. அதில் மகப்பேறு தொடர்பான சில கருத்தியல்களும் காணப்படுகின்றன. மகாபாரதத்தில் ஆதிபருவத்தில் கூறப்பட்டுள்ள கௌரவர்களின் பிறப்பு பற்றிக் குறிப்பிடலாம்.

பாண்டு மகாராசா தன் மனைவி குந்தி தேவியைப் பார்த்து, கிந்தம முனிவரின் சாபத்தால் நான் உன்னிடம் குழந்தை பெற முடியாத வகையில் உள்ளேன். எனவே, முனிவர் மூலமாகவோ, தேவர் மூலமாகவோ குழந்தைகளைப் பெற்றுக்கொள் என்று குந்தி தேவிக்கு அனுமதியளிக்கிறான். கணவனின் வேண்டுகோள்படி எமதர்மனுடன் குந்தி தேவி உடலுறவு கொண்டு தருமனைப் பெற்றாள்.

குந்திக்கு குழந்தை பிறந்ததை அறிந்த காந்தாரி ஆத்திரம் பொங்க, என் வயிற்றில் இரண்டு வருடங்களாக கரு வளர்ந்தும் குழந்தை பிறக்கவில்லையே என்று உணர்ச்சிவயப்பட்டு, தன் வயிற்றில் அடித்துக்கொள்ள, அந்த அடியால் அவள் வயிற்றிலிருந்த கரு, கருப்பையோடு கீழே குருதி சொட்ட வந்து விழுந்தது. வியாசன் அந்தக் கருவை நூறுகூறு செய்து நெய் நிரம்பிய நூறு கும்பங்களிலிட்டு, மிச்சமான மாமிசப் பகுதியை ஒரு கலசப் பானையிலிட்டு வைத்தான். இதனை,

சஞ்சலமானகோசத் தசையினைத் தாழிதோறும்

எஞ்சலவாகநூறு கூறுசெய்திழுதிலேற்றறாங்கொருகடத்தில்வைத்தான்…” (பா.எ.219)

காந்தாரியின் வயிற்றிலிருந்து கருப்பையுடன் வீழ்ந்த கருவை வியாசர் நூறு கூறாக ஆக்கி, ஒவ்வொன்றையும் நெய்யுள்ள கலயத்தில் போட்டார். அந்த சதைப்பிண்டம் ஒவ்வொன்றும் ஒரு குழந்தையாக கலயத்துள் பிறந்தது என்கிறது. இச் செய்தி மகாபாரதம் குறிப்பிடுகின்ற மகப்பேறு தொடர்பான சிந்தனை அன்றைய காலத்தில் இடம்பெற்றதனை பதிவு செய்துள்ளது.

இராமாயணத்தில் அயோத்தியை ஆண்ட தசரத மன்னரும் அவரது மூன்று மனைவிகள் கௌசல்யா, சுமித்திரை, கைகேயி ஆகியோர் இவ்விணையாளர்களிற்கு நீண்டகாலமாக பிள்ளைப் பேறு இல்லை இதனால் தன் குலக்குருவான வசிஷ்டரின் ஆலோசனைப்படி விபாகண்ட முனிவரின் மகன் ரிஷ்யசிருங்கரைக் கொண்டு பிள்ளை வரம் வேண்டி புத்திர- காமேஷ்டி வேள்ளி மேற்கொண்டு இராமன், பரதன், இலக்குமணன், சத்துருக்கன் என நான்கு மகன்மார்களைப் பெற்றதாக கூறப்படுகின்றது.     

புராணங்கள் பழமையை போற்றுபனவாக காணப்படுவதுடன் அறிவியல் எண்ணக்கருக்களையும் கொண்டுள்ளன. பதிணென் புராணங்களில் ஒன்றாக கருடபுராணம் காணப்படுகின்றது. இது பாகவத புராணவகையைச் சார்ந்தது. பகவான் கருடாழ்வார்க்கு உபதேசித்தமையே இப்புராணமாகும்.  இதில் மகப்பேறு தொடர்பான சிந்தனைகள் இடம்பெற்றுள்ளன.

இப்புராணத்தில் ஆண், பெண் புணரவேண்டிய காலம், ஆண் பிள்ளை, பெண் பிள்ளை உருவாகுவதற்கான காரணங்கள் எனப் பல விடயங்கள் போதிக்கப்பட்டுள்ளன. இந்திரனுக்கு பிடித்த பிரம்மஹத்தி தோம் பெண்களிடம் போய்ச் சேர்ந்தது. இதனாலேயே பெண்களிற்கு மாதவிடாய் ஏற்படுகின்றது.  இக்காலத்தில் பெண்கள் மிகத்தூய்மையுடன் இருந்து நான்காம் ஸ்நானத்திற்கு பிறகே அவள் தனது தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும்.

அவ்வாறு 6 முதல் 18 நாள் வரை, ஏழு இரட்டை நாளில் அவளோடு கூடிமகிழ்ந்தாள். ஆண் குழந்தை பிறக்கும் என்றும் அக்குழந்தை குணவானாக, தனவானாக, துர்மிஷ்டனாகஇ விஷ்ணு பக்தியுடையவனாக இருப்பான். ரஜஸ்வாலை ஆன ஐந்தாம் நாள் பாயசம் போன்ற மதுர பாதார்த்தங்களையே உண்ணவேண்டும். தம்பதியர் சந்தனம், புஷ்பம், தாம்பூலம் கொண்டு குளிர்ந்த மெய்யினராய் மனதில் மோகமுடையவராய் கூடி மகிழ வேண்டும். அச் சமயம் சுக்கில, சுரோணிதக் கலப்பால் ஸ்திரீ வயிற்றில் கரு ஏற்படும் என்றும் அக் கருவில் சுக்கிலம் மிகுதியானால் ஆண் குழந்தையும், சுரோணிதம் மிகுதியானால் பெண் குழந்தையும் பிறக்கும் என்று இப் புராணம் குறிப்பிடுகின்றது. 

கருவில் உருவாகும் உயிர் ஒவ்வவொரு காலத்திலும் எவ்வகையான அங்கங்களைப் பெற்று முழுவடிவம் பெறகின்றது என்பது பற்றிய விளக்கமும் காணப்படுகின்றது. புணர்ந்து ஐந்தாவது நாள் கருவறையில் ஒரு குமிழியுண்டாகும். பதினான்கு நாட்களில் தசைகளும், இருபதாவது நாளில் மேலும் தசை அதிகமாகும். இருபத்தைந்தாவது நாளில் புஷ்டி அடையும். ஒரு மாதத்தில் பஞ்சபூத சேர்க்கை உண்டாகும். இரண்டாவது மாதத்தில் தோலும், மூன்றாவது மாதத்தில் நரம்புகளும் உண்டாகும். நான்காவது மாதத்தில் மயிர், புறவடிவம் ஏற்படும்.  ஐந்தாவது மாதத்தில் காது, மூக்கு, மார்பு போன்றனவும் ஆறாவது மாதத்தில் சிரம், கழுத்து, பற்கள் உண்டாகும். எழாவது மாதத்தில் பாலின் குறி தோன்றும். எட்டாவது மாதத்தில் எல்லா அவயங்களுடன் ஜீவன் பிரவேசிக்கும் ஒன்பதாவது மாதத்தில் சுழிமுனை நாடி மூலம் பூர்வ ஜன்ம கர்மம் அறியும். பத்தாவது மாதத்தில் குழந்தை பிறக்கும்.

முடிவுரை

மேற்கூறப்பட்ட கருத்துக்களை நோக்குகின்ற போது வடமொழி இலக்கியங்கள் வெறுமனே சமயம் சார்பானவை மட்டுமன்றி அவை அறிவியல் ரீதியிலும் மிக உன்னதன இடத்தைப் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக மகப்பேறு மிகவும் உயர்வாகப் போற்றப்பட்டதுடன் அதற்காக பல்வேறுகையான உத்திகளை அக்காலத்திலே அறிந்து வைத்திருந்தமையையும் கருவின் வளர்ச்சிப் படிநிலைகளையும் தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே மிகத்துல்லியமாக கணித்தமையும் மேற்குறிப்பிட்ட வடமொழி இலக்கியங்கள் மூலமாக அறிந்துகொள்ள முடிகின்றது.

உசாத்துணை நூல்கள்

  • அண்ணா., (1998), 108 உபநித்ஸாரம் முதல் பாகம், ஸ்ரீராமகிருஷ்ணமடம், சென்னை.
  • ஆகதோஷானந்தர் சுவாமி., (20011), ஐதரேய உபநிதம் மிஞ்சும் அதிசயம், ஸ்ரீராமகிருஷ்ணமடம், சென்னை.
  • ஆச்சார்யா,பி.எஸ்., (2002), ஸ்ரீமத் வால்மீகி ,ராமாயணம் முழுவதும் சுருக்கவடிவில், புதிய புத்தக உலகம், சென்னை. 
  • கமலநாதன்,செ., (2007), ந்துப்பண்பாட்டு வரலாறு-I, அக்ய வெளியீட்டகம், களுதாவளை.
  • கிருஷ்ணமாச்சாரியார்., (2005),ஷ்டாதச புராணங்கள் என்னும் பதிணென் புராணங்கள், நர்மதா வெளியீடு, சென்னை.
  • சோ., (1998), மஹாபாரதம் பேசுகிறது (முதல் பாகம்), அல்லயன்ஸ் கம்பனி, சென்னை.
  • மாணிக்கனார்,அ., (1985), வில்லிபாரதம் மூலமும் தெளிவுரையும் முதல் பாகம்-ஆதிபருவம், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
  • வடுவூர் நாராயணன்., (2006), ருக், யசூர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிதங்களும் குறுவடிவில் எளிய தமிழ், நர்மதா பதிப்பகம், சென்னை.