4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 மே, 2021

என் வீட்டு அழகி - அக்ரி.கோ.ஜெயகுமார்

 

என் வீட்டு அழகி

 

அக்ரி.கோ.ஜெயகுமார்,

மேனாள் வேளாண்மை இணை இயக்குநர்,

காந்தி நகர், வேலூர் -6.

அலை பேசி எண்: 94869 38900

 

ஒரு பெண் தன்னுடைய அம்மாவைப் பற்றி சுவாரசியமாக கூறிய தகவல்கள்.

ப்ளீஸ்ப்பா என்ற ஒத்த வார்த்தை உச்சரித்தாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா! ஆனால் அம்மா அப்படி இல்லை. இரும்பு மனுஷி......... ஒரு காரியத்தை கூட அவரிடம் அவ்வளவு எளிதாக சாதித்துக் கொள்ள முடியாது. மண்டியிட வேண்டும், கெஞ்சி கேட்க வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும் வரையில் தூங்காமல் காத்திருந்து அவரிடம் புகார் சொல்ல வேண்டும்........ ஆனால் இந்த எதுக்குமே மசிய மாட்டார்!!

கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும். பின்னர் தான் தெரியும் நான் விரும்பிக் கேட்டது பத்து பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும். இப்படி அம்மாவின் பல கண்டிப்புகளும், திட்டுக்களும் என்னை பல வகைகளில் மீட்கவே செய்தது என்றால் அது மிகையல்ல! அம்மாவின் வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கின்றன. இறுதியில் நான் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது என்பது பின்னர் தான் புரிந்தது.

 சமையலறையில் அம்மா வியர்க்க, விறுவிறுக்க எங்களுக்காக தன்னுடைய சுய மரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள் ஏராளம். எப்போதும் துணியைக் காயப்போடு, பீரோவில் அடுக்கிவை, மத்தியானத்தில் தூங்காதே! எப்ப பாரு என்ன டி வி? புத்தகத்தை எடுத்து படி, வீட்டைப் பெருக்கு என ஒரே பல்லவி தான். கல்யாணம் பண்ணி போற இடத்துலே என்ன நினைப்பாங்க! சரியாக வளர்க்கலேன்னு என்னைத் திட்ட மாட்டாங்களா என்று நை.... நை.... புகைச்சல் காதில் விழும் போதெல்லாம் எரிச்சலின் உச்சத்திற்கு என்னை இட்டுச் செல்லும்....... பல்லைக் கடித்துக கொண்டு நகர்ந்து சென்று விடுவேன்.

இருந்தாலும் இந்த அம்மாவுக்கு இவ்வளவு கல் நெஞ்சம் இருக்கக்கூடாது..... அப்போது தான் நூடுல்ஸ் வந்த புதிது. அதன் மீது ஒரு அலாதி பிரியம் வந்து விட்டது........ ஒரு நாள் அதை வாங்கி சாப்பிட ஐந்து ரூபாய் கேட்டு அழுதது தான் மிச்சம். தரவே முடியாது என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி விட்டார். அம்மா உங்க சமையல் வெறுப்பா இருக்குதும்மா, போரடிக்குதும்மா என்று வாய் கிழிய கத்தினாலும் ரிசல்ட் என்னவோ பெயில் தான். என்னத்த சொல்ல?

அடுத்த நாள் தூங்கி எழுந்து வெளியே வந்தேன், வீட்டுக்கு வந்த பாத்திர வியாபாரியுடன் அம்மா பேசிக் கொண்டிருந்தார். அந்த வியாபாரி கையிலும், சுற்றிலும் புது புது பாத்திரங்கள் கண்ணைக் கூசின! ஆமா...... எல்லா பாத்திரத்திலேயும் என் பொண்ணு பேர பெரிசா பொறிச்சிடுங்கசெலவு பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க! என்று சொல்லிக் கொண்டிருந்தார். இன்று வரை ஒரு தம்ளரில் தண்ணீர் எடுத்துக் குடித்தாலும் அதில் உள்ள என் பெயர் என்னை குத்திக் காட்டிக்கொண்டே இருக்கிறது. ஏனோ தெரியவில்லை இன்று வரை நூடுல்ஸ் சாப்பிடும் எண்ணமே எனக்கு வரவில்லை.

இன்று..... சாம்பார் சூப்பர், வத்தக்குழம்பு பிரமாதம் என்று அடுத்தவர்கள் என்னை பாராட்டும் போது தான் அம்மாவின் அந்த குடைச்சலின் பெருமை துளிர்த்து, எட்டி எட்டி பார்த்தது. அப்போது தான் மெல்ல மெல்ல என் மர மண்டைக்கும் விஷயம் புரிய ஆரம்பித்தது. ஓயாத குடைச்சல், எப்பவுமே திட்டு, எதற்கெடுத்தாலும் அட்வைஸ். தற்போது எந்த காரியம் நான் செய்தாலும் அம்மாவின் ஃப்ளாஷ் பேக் கண் முன்னே நிழலாடிக் கொண்டே இருக்கிறது. அம்மா எப்பவுமே இப்படித்தானா என்ற நினைப்பு இளம் வயதில் வந்த படியே இருந்தது.

         இன்று நான் பிரசவ வார்டில் இருந்த போது, அம்மா அம்மா என்று எத்தனை முறை கூப்பிட்டிருப்பேன் என்றே தெரியாது. குழந்தையை பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்ததும் அவர் ஒரு நிமிடம் கூட சும்மா இல்லையே! இதை சாப்பிடு, அதைச்சாப்பிடாதே! இதைக்குடி, இப்படி திரும்பு, அப்படி படு, குழந்தையை இப்படி பிடிச்சி தூக்கு என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இவ்வளவு காலம் இல்லாமல் அன்று தான் அம்மாவின் வயிற்றில் தழும்புகள், வடுக்களைப்பார்த்தேன். பிரசவ போரில் அம்மாவுக்கு நான் தந்த பரிசு போலும்........நடு மண்டையில் சுரீரென்று உரைத்தது. அம்மா எப்பவும் போல் தான் இருக்கின்றார்நான் தான் ஒவ்வொன்றிற்கும் எரிச்சல், குடைச்சல் என டிசைன் டிசைனாக பெயர் வைத்துக் கொண்டிருந்தேன் என்று இப்போது தான் புரிந்தது.

என் மகள் குட்டி தேவதை போலவே இருப்பாள் என்று கற்பனை செய்துக்கொண்டு, தையல் மிஷினில் கைத்தறி துணியில் பாவாடை தைத்து உடுத்தி அழகு பார்க்கும் போது கூட, எனக்கு கண்ணில் பட்டது என்னவோ அதில் தொங்கிக் கொண்டும், ஒட்டிக்கொண்டும் இருக்கும் கலர் நூல்கள் தான். இந்த டிரஸ் நல்லா இல்லைம்மா! நூல் நூலா தொங்குது...... என் பிரண்ட்ஸ்கள் இதைப் பார்த்தால் கிண்டல் செய்வாங்கன்னு தைத்த இரண்டு நிமிடத்திலேயே கழற்றி முகத்தில் எறிந்த நிகழ்வின் காலம் உருண்டாலும் இன்னமும் வலித்துக் கொண்டே இருக்கிறது. இவ்வளவு பெரிய பெண்ணாகியும் இன்னும் ரிப்பன் வைத்து சடை பின்னிக்க தெரியலையா? என்று அம்மா திட்டிய அதே வார்த்தைகளை இன்று என் மகளிடம் என்னையும் அறியாமல் சொல்வது வியப்பாகவே உள்ளது. எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என் அம்மா!.

ஏனோ தெரியவில்லை.........என்னை பார்க்கும் போதெல்லாம் ஓயாமல் சொல்லும் பொய், ஏன் இப்படி இளைச்சிட்டே! ஏன் இப்படி கருத்துப் போயிட்டே!! என்பது தான். தட்டில் சட்னி மீதமிருக்குது பார், அதுக்காக இன்னும் ஒரேயொரு தோசை என்று சாக்கு சொல்லி சுடச்சுட சுட்டுப் போடும் அலாதியே இன்றும் தனி அழகு தான். சாப்பிட்டு முடித்த பிறகு தான் தெரிந்தது சட்னியை முன் கூட்டியே தட்டில் ஏன் வைத்தார் என்று? அந்த அன்பின் சூட்சுமம் கூட அப்போது தெரியவில்லை. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் நான் என் அம்மாவிடம் தோற்று கொண்டே தான் இருக்கிறேன். ஆனால் இப்போது அந்த தொடர் தோல்விகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. காரணம் என் அம்மா சளைக்காமல் வெற்றி பெற்று கொண்டே இருப்பதால்!!!

எங்கள் வீட்டின் மிகப் பெரிய பொருளாதார மேதையும் என் அம்மா தான்! எத்தனை இடர்பாடுகள், எத்தனை துயரங்கள், எத்தனை வலிகள் வந்தால் என்ன? உலக உருண்டையில் கலந்து விட்ட இந்த தாய்மையானது அனைத்தையும் புரட்டிப் போட்டு வாழையடி வாழையாக வந்துக் கொண்டேதான் இருக்கும்.