கலாம் பற்ற வைத்த அக்னிக்குஞ்சு...
எகத்தாளம் பேசுவதும்
எள்ளி நகையாடுவதுமே
செதுக்கியெடுத்துச் சீர்படுத்திய
சிரிப்பு வைத்தியர் !
நிலையாமையை ,
“இன்றைக்குச் செத்தால்
நாளைக்குப் பாலென”
சிரிப்பால் செதுக்கிய
சிந்தனைச் சிற்பி !
கசப்பு மருந்தைத்
தேன்தடவிப் புகட்டுதல் போலே ,
பெண்சிசுக் கொலை எதிர்ப்பை
வர்ணபேத மறுப்பைப்
புன்னகை மருந்தாய்ப் புகட்டிய
புதுப்புது அர்த்தம் !
ஜனத்தொகை அதிகரிப்பை
உறைக்கும்படி ,உரத்துரைத்த
ஜனங்களின் கலைஞன் !
சிறார்களையும் பெருங்கருத் தாலீர்த்த
சின்னக் கலைவாணர் !
முடக்குவாதமாம் மூடநம்பிக்கைக்கு
முற்றுப்புள்ளியிடத் துடித்த
நம்பிக்கை நட்சத்திரம் !
கலைத்தாகமும் சமூக அக்கறையும்
கொண்ட விவேகி !
கலாம் கருத்தைப்
பற்றவைத்த அக்னிக்குஞ்சு !
மரத்துப் போன மனிதர் மத்தியில்
மரம் நடுவீரென மறத்துடன்
முழங்கிய முரசு !
முப்பது லட்சம் மரங்களும்
முணுமுணுக்கும் உள்ளக் கிடக்கை
என்ன தெரியுமா ?
மரங்களின் காவலருக்கு மரணமில்லை !
வேராய் அவர் !
விழுதாய் நாங்கள் !
மரங்களும் மரங்களினூடே கலந்த
அவரின் ஆன்மாவும் கதைக்கிறது ,
ஜனங்காள் !
செயல் வீரமும் விவேகமும்
கொள்ளுங்கள் !
மனமாசுகளைக் வெல்லுங்கள் !
சுற்றுப்புறமாசுகளைக் களையுங்கள் !
மரங்களைக் கொல்லாதீர்கள் !
எண்ணங்கள் சுருங்கிக்
காய்ந்து கிடக்கும் சமூகத்தை
வண்ணங்களாக வார்த்தெடுங்கள் !
இயற்கைக்கும் நமக்குமான
இடைவெளியைக் குறையுங்கள் !
சமூகத்திற்கும் நமக்குமான
உறவை உயர்த்துங்கள் !
மரத்தோடு மனித நேயத்தை
வளர்த்திடுங்கள் !
ஏனெனில்
"இன்றைக்குச் செத்தால்
நாளைக்குப் பால் !
கவியாக்கம் இரா. விஜயலெட்சுமி,
பட்டதாரி தமிழாசிரியை,
தி.சுக்காம்பட்டி 621310.
மணப்பாறை கல்வி மாவட்டம்.
திருச்சி மாவட்டம்.
6382993075.
ஓவிய ஆக்கம்
கணபதி சுப்ரமணியன்– கோவை
வடிவமைப்புப்
பொறியாளர்