மனைவியை மாற்றுவோம்…!
முனைவர் பீ. பெரியசாமி
தமிழ்த்துறைத்தலைவர்
டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்)
விளாப்பாக்கம்- 632521.
முருகா! முருகா!
சொல்லுங்க அண்ணே!
எங்கடா இவ்வளவு வேகமா போயிட்டு இருக்க…
கோர்ட்டுக்கு தாண்ணே…
கோர்ட்டுக்கா ஏன்? என்ன ஆச்சு?
அட விவரம் தெரியாதா உங்களுக்கு?
என் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ண வக்கில்கிட்ட சொல்லி இருந்த. அத பத்தி விசாரிக்க இன்னிக்கி வரசொல்லி இருந்தாங்க அதான் போகலாமுனு….
என்ன உன் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணப் போறியா?
ஆமாண்ணே
ஏன்டா… உனக்கு எதுனா புத்திகித்தி கெட்டுபோச்சா .
அதெல்லாம் ஒண்ணுமில்லை… கல்யாணம் ஆகி ஐஞ்சு வருஷம் ஆயி போச்சி. ஏதும் விஷேசம் இல்லையானு எல்லாம் கிண்டலா கேக்குராங்க…. அதுமட்டுமில்லாம, இப்பவே எனக்கும் வயசு முப்பது ஆயிடுச்சு. இதுக்கு மேலேயும் அவள நம்பிகிட்டு கெடந்தா என் வம்சத்துக்கு வாரிசே இல்லாம போயிடும். அதான் அவள அறுத்து விட்டுபுட்டு வேறவொருத்திய கண்ணாலம் கட்டிகிலாம்னு கிளம்பிட்டேன்.
அட அறிவுகெட்ட முருகா…. இதையே உன் பொண்டாட்டியும் நினைச்சிருந்தா.. நீ இன்னைக்கு வெள்ள வேட்டி வெள்ள சட்டையோட கிளம்பி இருக்க முடியுமா…
அவ புள்ள பெத்து குடுக்காத்துக்கு நான் என்ன பண்றதுணே…
ஏண்டா புள்ளைய உன் பொண்டாட்டி என்ன தனியாவா பெத்துக்க முடியும்…
அதெல்லாம் நடக்க வேண்டியதெல்லாம் நல்லாதா நடக்குது. இருந்தும்….. அவ வயித்துலதான் எதுவும் தங்கல….
அவ வயித்துலதான் தங்கலனு உனக்கு யாருடா முருகா சொன்னது….
நம்ம மூல தெருவுல இருக்கிற மாரியாத்தா கோவிலு பூசாரியே சொல்லிபுட்டாரு. அதுமட்டுமில்லாம … இன்னும் மூணு மாசத்துல வேறவொருத்திய கண்ணாலம் கட்டலனா வம்சமே விருத்தியாகாதுணும் சொல்லிபுட்டாரு..
ஆமாம் டா… ஆமாம்… அவரு பெரிய டாக்டரு பாரு அவர் சொல்லிபுட்டாராம்… இவரு பொண்டாட்டிய அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டு புள்ள பொறக்கலனு டைவர்ஸ் வாங்க கிளம்பிட்டாராம்….
என்ன அண்ணே இப்படி சொல்ற….
வேற என்ன சொல்றது உன்கிட்ட… நீ பேசறத பாத்தா ஒருபக்கம் கோவ கோவமா வருது… இன்னொரு பக்கம் உன் அறியாமையை நினைச்சு பாவமாவும் இருக்கு.. நான் என்னத்த உனக்கு சொல்றது.
என்ன அண்ணே.. சொல்லுங்க..
அட முருகா…! உனக்கு புள்ள வேணும்னா…. மொதல்ல உன் பொண்டாட்டியோட ஒழுங்கா குடும்பம் நடத்தனும். அவள அம்மாவூட்டுக்கு அடிக்கடி அனுப்பிட்டு…. நீ இங்க தனியா கிடந்தா எப்படி புள்ள பொறக்கும். அதுவுமில்லாம…, அவளுக்குதான் பெரிய கொற இருக்குனு எவனோ சாமியார் சொல்றத எல்லாம் கேட்கறத மொதல்ல விட்டுட்டு டவுன்ல போய் ஒரு நல்ல டாக்டரா பாரு. இன்னிக்கு புள்ள பாக்கியம் இல்லாம இருக்கவங்களுக்கு பெண் நல மருத்துவர், குழந்தை நல மருத்துவர்னு நெறைய பேர் இருக்காங்க. நீ அவங்கள போய் பார்த்தா … யாருக்கு என்ன குறை, எப்படி சரி செய்றது, அப்படினு எல்லா ஆலோசனையும் சொல்லுவாங்க. கூடிய சீக்கிரம் உனக்கும் புள்ள பொறக்கும்.
அட போங்க அண்ணே…! இதுக்கெல்லாம் எம்புட்டு செலவாகும். இதுக்கு நான் புதுசா ஒரு கண்ணாலத்தையே பண்ணி புள்ள பெத்துட்டு போவேன்.
நீ புதுசா கட்டிகிணு வர பொண்ணுக்கும் புள்ள பொறக்கலனா…. என்ன பண்ணுவ…?
அதெப்படி பொறக்காம போவும். இந்தமுறை நல்லா இள வயசு பொண்ணா பாத்து கட்டிக்குவேன் இல்ல..
சரிடா முருகா…. உன் பொண்டாடியும் உன்ன மாதிரியே யோசிச்சு வேர ஒருத்தன கண்ணாலம் கட்டி உனக்கு முன்னாடி அவ புள்ள பெத்துக்கிட்டால்னா …. நீ என்ன பண்ணுவ…
அதெப்படி முடியும்…..!
அதுவும் முடியும் முருகா..! காலம் மாறிப்போச்சு..
அவ புள்ள பெத்துக்க தகுதியானவளா இருந்து… உன் ஒடம்புள எதுனா கொற இருந்ததுனா என்ன செய்ய முடியும்….?
ஆ…மாம்…
அதனால மொதல்ல உன் பொண்டாட்டிய மாத்தர எண்ணத்த விட்டுட்டு…, பொண்டாட்டிய நமக்கேத்தமாரி எப்படி மாத்தரதுணு யோசி…
அது எப்படிணே..!
மொதல்ல உன் பொண்டாட்டிய அவ அம்மாவூட்ல இருந்து கூட்டியாந்து ….. அவ சந்தோஷ படுற மாதிரி நடந்துக்க…
சரிணே நா இப்பவே போரேன்..
தெய்வான! தெய்வான!
வாங்க மாப்ள..! தெய்வான இப்பதா கடதெருவுக்கு யோயிருக்கா…
எல்லா எப்படி இருக்கீங்க அத்த…!
நல்லா இருக்கோம் மாப்ள, நீங்கதா…
புரியுது அத்த… இனி தெய்வான எந்த காரணத்துக்கும் ஆத்தாவூட்டுக்கு வராத அளவுக்கு நான் பாத்துக்குறேன் அத்த…. ஏதோ புத்தி கெட்டு இப்படியெல்லாம் நடந்து போச்சு என்ன மன்னிச்சிபுடுங்க அத்த…
நீங்க போயி என்ன மாப்ள.. மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு… நீங்க ரெண்டு பேரும் நல்லா இருந்தா அதுவே போதும்…
இதோ தெய்வான வந்துட்டா…
வா தெய்வான வா… வா நம்மவூட்டுக்கு போகலாம்…
ஆமாம், இவரு வேணும்னா கூப்பிடுவாறு…. இல்லனா வெட்டிவுட்டுபுட்டு இன்னொருத்திய கட்டிபண்ணுவாரு…. இதுக்கெல்லாம் இங்க யாரும் ஆளில்ல.. ஏதோ நான் சாகரவர எங்க அப்ப ஆத்தாளுக்கு தொணையா இருந்துபுட்டு செத்து போர…. நீங்க போயி உங்க புது பொண்டாட்டியோட சந்தோஷமா இருங்க… நா எல்லாம் வர மாதிரி இல்ல…
அட என்ன தெய்வான இப்படியெல்லாம் பேசுற. ஏதோ மனசு கெட்டு அப்படி நடந்துகிட்டேன். நீயே என்ன புரிஞ்சிகலனா நான் என்னத்த சொல்றது… ஒரு வாரிசு ஓணும்னு நினைச்சது என் தப்பா…
அதுக்கு ரெண்டு பேரும் போயி டாக்டர பாக்கலானு எத்தினி முறை கூப்பிட்டு இருப்ப நீ வந்தியா. அந்தம்மா உன் புருஷனோட வந்தாதா யாருக்கு என்ன பிரச்சன்னு பாக்க முடியும். அப்பதா மருந்து மாத்தர குடுத்து தீக்க முடியும்னு சொல்லிச்சி. நீ ஒரு மொறனா என் பேச்ச கேட்டிய. எனக்கென்னவோ…. உனக்கு புள்ள இல்லன்றது எல்லாம் பிரச்சனையா தெரியல… என்ன உட்டுட்டு வேறொருத்திய கட்டிகரதையே குறியா வச்சிட்டு இருக்கியோனு எனக்கு தோணுது…
அப்படியெல்லாம் இல்ல தெய்வான.. உன்னவிட பாசமான பொண்டாட்டி யாரு எனக்கு கெடைப்பா… நீ அப்டியெல்லாம் நெனைக்காத.. நீ கூப்டும்போது வராதது என் தப்புதான். நீ ஒடனே கிளம்பு நேரா அந்த டாக்டர் அம்மாவூட்டுக்கு ரெண்டுபேரும் போயி பாத்துகினே நம்பவூட்டுக்கு போலாம்.
ஆமாம் தெய்வான வாழக்கன்றது ரெண்டு பேரும் விட்டுகொடுத்து போறதுலத்தான் இருக்கு நீயும் மாப்ள சொல்றத கேட்டு கிளம்பு.. என்னத்தா சொகமா ஆத்தாவூட்ல இருந்தாலும் உலகம் உன்ன ஒரு மாதிரியாதான் பேசும். நான் கோழி அடிச்சு கொழம்பு வைக்கிறேன். ரெண்டு பேரும் நல்லா சாப்புட்டு கௌம்புங்க…
ஏதோ நீ சொல்றனு போறம்மா…
(மருத்துவமனையில்)
வா தெய்வான… எப்படி இருக்க….
வணக்கம் மா .. நான் நல்லாதான் இருக்கேன்…
இவருதான் உங்க வீட்டுகாரரா..
ஆமாமா இவரு தான் என் வூட்டுகார்ரு..
சரி ஏங்க இத்தனை நாளா தெய்வான கிட்ட சொல்லி அனுப்பியும் நீங்க வரல..
எனக்கு இவளுக்கு புள்ள பொறக்குமானே நம்பிக்க இல்லாம இருந்துச்சிமா.. அதான் வரல…
அப்படியெல்லாம் யாரையும் உடனே நினைச்சிடாதீங்க. இன்னைக்கு மருத்துவத்துறை எவ்வளவோ வளர்ந்திடுச்சி. தெய்வான பிள்ளை பெற முழு உடல் தகுதியோட இருக்கா.. அத நான் தெரிஞசிகிட்டுதான் .. உங்கள கூட்டிட்டு வர சொன்னேன். அவளுக்கு இத மொதல்லையே சொன்னனே. அவ உங்களுக்கு சொல்லலையா…
கண்ணீருடன் இல்லைங்கம்மா… எங்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, உன்ன டாக்டர் கூட்டியார சொன்னாங்கனு சொன்னா … நா இடிஞ்சி போயிடுவனோணு எங்கிட்ட அவ சொல்லவே இல்லம்மா..
முருகன் உங்க மனைவி உங்க மேல உசுரையே வச்சிருக்கா. இதுவே வேறு எவளாவது இருந்தா உன்ன புள்ள பெத்துகிற தகுதியே இல்லனு சொல்லிட்டு வேறொருத்தன கல்யாணம் பன்னி இருப்பா. இப்படி நீங்க வரலனு சொல்லியும் கட்டாய படுத்தி இங்க கூட்டினு வந்திருக்க மாட்டா….
ஆமாமா… நீ சொல்றது நெசம் தான்.. நான் தான் அவள தப்பா புரிஞ்சிகிட்ட….
சரிங்க முருகன்… இனியாவது அவள சந்தோசமா வச்சிக்கோங்க….
கட்டாயமா அவள நல்லா பாத்துப்பேம்மா…. அப்போ எங்களுக்கு எப்பதான் புள்ள பொறக்கும்…
நான் இப்ப சில டெஸ்ட் எல்லாம் எழுதி தரேன். அதெல்லாம் எடுத்துட்டு வாங்க அப்புறம் என்னனு பார்க்கலாம்…
சரீங்கம்மா….
(டெஸ்ட் ரிசல்ட் வந்தவுடன்)
முருகன் உங்களுக்கு ஒரு சின்ன பிரச்சனைதான். இது மருந்து மாத்திரையில ஐம்பது சதவீதம் சரியாகும்னா.. உங்க மன நிம்மதியில ஐம்பது சதவீதம் சரியாகும்.. நீங்க ரெண்டு பேரும் மனச விட்டு பேசி சந்தோஷமா இருக்கணும் கூடவே நான் கொடுக்கற மருத்து மாத்திரைங்களையும் தொடர்ந்து எடுத்துட்டு வந்தா மூன்றே மாசத்துல நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
சரிங்கமா நீங்க சொல்ற மாதிரியே செய்யுறோம்….
(மூன்று மாதம் கழித்து)
என்ன முருகா…! கோர்ட்டுக்கு போகலையா…!
கிண்டல் பண்ணாதீங்க அண்ணே..! இப்பதான் தெய்வான மாசமா இருக்காணு எல்லாருக்கும் இனிப்பு குடுத்துனு வரேன் நீங்க வேற…..
இதுதான் முருகா மனைவியை மாத்துறது… இங்கு மனைவி தாயானாள்., நீ தகப்பன் ஆனாய்… பெண் எங்கெல்லாம் மாறுகிறாளோ அங்கெல்லாம் ஆரவாரம் இல்லாமல் ஆணும் மாற்றம் கொள்கிறான்.
பெண் அனைத்தையும் மாற்ற வல்லாள்…