வியர்வையின் விதைகள்
நம்பிக்கையை நதியாக்கி
வியர்வையை விதையாக்கி
உழைப்பை உரமாக்கி
களைப்பெனும் களையகற்றி
வியன்ஞாலத்தை விதவிதமாய்
விந்தையாக்கிய கைகள்
உழைப்பாளியின் கைகளன்றோ !
பாரகத் தேரில்
பயணம் செய்வோரைப்
பருத்தியும் பட்டும்
பொருத்திப் பார்த்துப்
பகட்டாய்ப் பளபளப்பாக்கியது
பாட்டாளியின் கைகளன்றோ ?
அதளபாதாளம் அடிவரை சென்று
கட்டித் தங்கம்வெட்டியெடுத்து
அகிலம்முழுதும் அரிவையரை
அலங்கரித்து அழகாக்கியது
அயர்ச்சிகாணா கைகளன்றோ !
காட்டிலும் மேட்டிலும்
கால்கடுக்க நடந்தவன்
காரில் சொகுசாய்க்
காற்றெனப் பறப்பதும்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
விரையூர்தி கண்டதும்
வியர்வையின் விந்தையன்றோ
!
இரா. விஜயலெட்சுமி