4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 நவம்பர், 2021

நவராத்திரி 09 -சுரேஜமீ

 

நவராத்திரி 09

 




கருணை பொழியும் விழியுடையாள் கவலை விரட்டும் கரமுடையாள்

உருவில் குழந்தை வடிவைடையாள் உருக்கும் மொத்த அழகுடையாள்

தருவாய் நின்று தருகின்றாள் தரணிக்கெல்லாம் அருள்கின்றாள்

திருவாய் மலர்ந்து திசையெட்டும் தேவி நடனம் புரிகின்றாள்!

 

கொடுநோய் உலகில் ஒழிந்துமக்கள் கூடி வாழ்ந்து நிலையுயர

தடுக்கும் தடைகள் தான்விலகித் தரணி முழுதும் இயல்புநிலை

சடுதி யாக வரவேண்டும்! சங்க டங்கள் நீங்கியிங்கே

நெடிய பயணம் தொடரட்டும்! நேர்மை உலகை ஆளட்டும்!

 

பசுமை ஓங்கி வளரட்டும்; பாரில் பசியும் ஓயட்டும்!

நசுக்கும் அடிமை ஒழியட்டும்; நாளும் மேன்மை ஓங்கட்டும்!

வசைகள் இல்லா வாழட்டும்! வளத்தை பெருக்கி மகிழட்டும்!

இசையை உள்ளம் ரசிக்கட்டும்! இன்பம் எங்கும் நிலவட்டும்!

 

வானும் மாரி பொழியட்டும்! வாய்க்கால் வரப்பு நிறையட்டும்!

தேனில் வண்டு திளைப்பதுபோல் தேவை கிட்டி மகிழட்டும்!

ஊனை, கள்ளை உணவாக்கா உயிர்கள் போற்றி உயரட்டும்!

கானும் மீனும் வளரட்டும்! ககனம் பூமி சிறக்கட்டும்!

 

வேறு

 

ஒன்பான் இரவும் பூஜித்தோம்!

நம்பி நாளும் யாசித்தோம்!

எம்பால் இரங்கத் தான்கேட்டோம்!

அம்பி கையே அருள்கவென்றோம்!!

 

சுரேஜமீ