நெய்தல் நில பெண் தெய்வ வழிபாடுகள்
ஜா.சஜிகுமார்,
(பதிவு எண்: 12549),
முனைவர் பட்ட ஆய்வு மாணவர்,
தமிழாய்வு மையம்,
நேசமணி நினைவு கிறிஸ்தவக்கல்லூரி, மார்த்தாண்டம்,
ம.சு பல்கலைக்கழகம்,திருநெல்வேலி - 12
ஆய்வுச்சுருக்கம்
இந்த உலகம் பல்வேறுபட்ட மக்கட்தொகுதியாலானது.
ஒவ்வொரு மக்களுக்கும் அவர்களின் நம்பிக்கை பெரிது. அந்த நம்பிக்கையின்
வெளிப்பாடாய் தோன்றியதே சமயம்.
சமயத்தைப் பற்றியும் அச்சமயம் எடுத்துக்காட்டும் கடவுளையும் இவ்வுலகில் ஏற்றுக்கொண்டவர்களும் உண்டு, ஏற்றுக்கொள்ளாதோரும் உண்டு. அறிவியலை கற்றுத்தேர்ந்த வல்லுநர்கள். எண்ணற்ற
உயிரினங்கள் வாழும் இந்த பூமி என்பது ஒரு கோள். பூமியைச் சுற்றி வரும் கோள்களும்
பூமியும் எந்த பிடிப்பும் இன்றி தொங்கிக்கொண்டிருப்பது நம் அறிவுக்கு எட்டாத
ஆற்றல். இந்த அறிவுக்கு எட்டாத
ஆற்றலைத்தான் மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்றார்போல கடவுளாகப் பாவித்துள்ளனர். இந்த வழிபாட்டிலும் பெண் தெய்வ வழிபாட்டைப் புகுத்தியுள்ளனர். ஆணாதிக்கம்
நிறைந்த சமூகத்தில் பெண் தெய்வ வழிபாட்டைப் புகுத்தியதே சமூகத்தின் அடுத்த படிநிலை மாற்றம் எனலாம்.
திணைப்பாகுபாட்டில் ஒவ்வொரு நிலங்களும் அதனதன்
கடவுள் வழிபாட்டில் இன்றும் நிலைத்து நிற்கும் நிலையில் நெய்தல் நிலம் மட்டும் தன்
வழிபாட்டிலும் மதத்திலும் மாற்றங்களைப் பெற்று கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டைத் தழுவியுள்ளது. குறிப்பாக
கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டில் பெண் தெய்வ வழிபாட்டுமுறை மேலோங்கி இருப்பதைக் காண முடிகின்றது. கிறிஸ்தவம் யார்
பெயரால் தோன்றியதோ அவருக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைவிட அவர் வழியில் நடந்து
புனிதர் என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்ட பலருடைய நடுவில் பெண் புனிதர்கள் நெய்தல்
நிலத்தில் மேலோங்கி இருப்பதும், அவர்களின் பெயரால்
கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து ஆலயங்கள் எழுப்பியுள்ளதும் நெய்தல் நிலத்தின்
கண்கூடு எனலாம்.
கலைச்சொற்கள்
உறைதல், தொழுதல்,அரண், வேட்கை
முன்னுரை
பழந்தமிழ் சான்றோர்கள் நிலத்தை ஐந்து பகுதிகளாகப் பிரித்துள்ளனர். இவ்வகை
நிலங்களில் மனிதனின் தோற்றம் குறித்து பல்வேறு வகையான கருத்துக்கள் கூறிடினும், உறுதியான தகவல் இல்லை எனலாம்.
நாகரீகங்கள் ஆற்றுச்சமவெளிகளில் தோன்றியது. அவ்வாறு
தோன்றிய சமுகம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையைக் கடந்த பின் கூடி வாழ்ந்த சமூகம் பல்வேறு இனக்குழுக்களாகப் பிரிந்தது. ஒவ்வொரு நிலத்திலும் வாழும் மக்கள் தங்களை எதிரிகள் மற்றும்
விலங்குகளின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள தங்களுக்கென ஓர் தலைவனையும்
இயற்கையின் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மனித ஆற்றலை மீறிய ஒரு ஆற்றலை
எதிர்நோக்கியிருந்தனர். அதற்காக அவன் அறிவில் தோன்றியதே தெய்வங்கள். ஒவ்வொரு நிலம்
சார்ந்த மக்களும் தங்களுக்கென சில தெய்வங்களை வகுத்துக்கொண்டனர். அதன்
அடிப்படையில் நெய்தல் நிலத்தில் பெண் தெய்வ வழிபாடு பற்றி இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.
நெய்தல் நிலத்தின் தெய்வம்
“வருணன் மேய பெருமணல் உலகமும்”1 என்கிறது தொல்காப்பியம். நெய்தல் நில
மக்கள் வருணன் என்னும் கடவுளை வழிபட்டதாகச் சான்று ஆதாரங்களுடன் நமக்குத் தெளிவாகின்றது. பழைய பரதவர் எனப்படும் நெய்தல் மக்கள் முத்துக்களையும் வலம்புரி சங்குகளையும் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுத்தனர்.
வருணன் உலகம் முழுவதும் ஆளும் அதிகாரம் கொண்டவனாக
இருந்துள்ளார்.இருப்பினும் வருணன் தெய்வத்தின் புகழ் மறைந்து நெய்தல் நிலத்தின்
கிறிஸ்தவம் தழைக்கத்தொடங்கியது.
இறைவழிபாடு
நெய்தல் நில மக்களின் தெய்வம் வருணன் என்று தொல்காப்பியம் சூத்திரத்தின்
அடி கூறுகிறது. இருப்பினும் நெய்தல் மக்கள் இறைநம்பிக்கையுடையவர்கள், தங்களின் இருப்பிடத்தின் அருகிலும் பொதுவான இடங்களிலும் அமைந்துள்ள பனை
மற்றும் புன்னை மரங்களில் தங்களின் பழமையான தெய்வத்தைப் போற்றியும் வழிபட்டும் வந்துள்ளனர்.
“தொன்ழுது கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை”2
“கடவுள் மரத்த முள்மிடை குடம்பை”3
என்னும் வரிகள் உணர்த்துகின்றன.
நெய்தல் மக்கள் கடலை கடவுளாக வணங்கினர். தன் முகத்தைக் கடலுக்கும் முதுகை கரைக்கும் காட்டிக் கொண்டிருக்கும் மீனவன் தன் இரு கரம்
கூப்பி கடலை தொழுவான். கடலை அன்னை என்றும் அழைப்பான். என்பதைச் சங்க இலக்கிய எட்டுத்தொகை நூலான கலித்தொகை
“பெருங்கடற்றெய்வம் நீர் நோக்கித் தெளிந்து”4
மேலும் இறைவன் விரும்பி உறையும் பெரிய அலையினையுடைய
கடல் என்று நற்றிணை குறிப்பிடுகின்றது.
“தெண்டிரைப்
பெருங்கடற் பரப்பில் அமர்ந்துறை யணங்கோ
இருங்கழி மருங்கின் நிலைபெற் றனையோ”5
கடலோடு மீனவர்கள் காற்றையும் வழிபடுவர். கடலில்
பெரும்புயல் ஏற்பட்டு கடல் கலங்கி காட்சி தரும் வேளையில் காற்றுக்கடவுளை ‘காற்றவராயன்’ என்று இறஞ்சுவர். மேலும் சூரியனையும் அவர்கள்
வழிபட்டார்கள். என்பதனை,
“…………….ஓங்குதிரை
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி
ஏமுற விளங்கிய சுடர்”6
பரதவர் வழிபட்ட பெண் தெய்வங்கள்
பரதவர் ஊர் தேவதைகளை
வழிபட்டனர். இவர்கள் வாழும் ஒவ்வொரு குப்பத்திலும் ஊர்தேவதைகளுக்கு கோவில்கள் உண்டு. சில
கோவில்கள் பழமையானவை. கன்னியம்மன், முத்தாலம்மன், மாரியம்மன், படை வேட்டம்மன், எல்லையம்மன் என்ற பெயர்களால் இத்தேவதைகள் அழைக்கப்படுகின்றார்கள்.7
நெய்தல் நிலத்தில் சிவ வழிபாடு
‘சைவ நாயன்மார்கள் அறுபத்து மூவரில் ஒருவரான அதிபத்த நாயனார் என்பவர் பரதவர் குலத்தில்
பிறந்தவர். நாகப்பட்டினம் மாவட்டத்தில்
பிறந்தவர். நாள்தோறும் தமது வலையில் கிடைக்கும் மீன்களில் பெரிய மீனைச் சிவபெருமானுக்குக் காணிக்கையாகக் கடலில் விடுத்து வழிபாடு செய்து சிவபாதம் அடைந்தார் என்னும் செய்தி
குறிப்பிடத்தக்கது’8
மேலும் சிவபெருமானின் சாபத்தால் பார்வதிதேவி மீனவரின் மகளாய் தோன்றி, ஒரு மீனவ தலைவனால் வளர்க்கப்பட்டாள். என்றும் பின்னர் சிவபெருமான் மீனவக்
காளையாக உருவெடுத்து வந்து கடலில் மீனவர்க்கு பெருந்துன்பம் தந்த சுறா மீனை அடக்கி மீனவ மகளான பார்வதிதேவியை
மணந்தார் என்னும் செய்தியை திருவிளையாடல்
புராணம் கூறுகிறது.9
நெய்தல் நிலத்தில் கிறிஸ்தவம்
வருணனை தெய்வமாகக் கொண்ட
நெய்தல் நிலம் பல தேவதைகள் வழிபாட்டையும், சிவன்
வழிபாட்டையும் கொண்டாக இருந்தது. கி.பி 52 ஆம்
ஆண்டு கடல் வழியாக கிராங்கனூரிலுள்ள முசிறி துறைமுகத்தில் வந்திறங்கிய இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தோமையாரால் இந்தியாவில் கிறிஸ்தவம்
காலூன்றியது.10 தோமையார் பெரிய
அளவில் கிறிஸ்தவத்தைப் பெரிய
அளவில் பரப்பாவிடினும் கடந்த 16 ஆம் நூற்றாண்டில்
இந்தியாவில் வந்த இயேசு சபை குருவான புனித பிரான்சிஸ் சவேரியாரின் கிறிஸ்தவ பணி என்பது
குறிப்பிடத்தக்கது. தோமாவும் சவேரியாரும் இந்தியாவில் கால்பதித்துப் பணி தொடங்கியது நெய்தல்
நிலத்திலே என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் ஜவஹர்லால் நேரு குறிப்பிடுகிறார்.
ஐரோப்பிய நாடுகள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளும் முன்னரே கிறிஸ்தவம்
தென்னிந்தியாவில் கால்பதித்துவிட்டது.11
கிறிஸ்தவமும் பெண் தெய்வங்களும்
கத்தோலிக்க கிறிஸ்தவ மறைகோட்பாட்டின்படி மூவொரு கடவுள் வழிபாட்டை “தந்தை, மகன், தூய
ஆவி”அடிப்படையாகக் கொண்டது.12 கத்தோலிக்க திரு விவிலியம் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என இரு பெரும் பகுதிகளைக் கொண்டது. பழைய ஏற்பாடு முழுவதும் தந்தையின் செயல்பாடுகளையும் புதிய
ஏற்பாட்டில் நற்செய்தி என்று அழைக்கப்படும் நான்கு பகுதிகள் முழுவதும் தந்தையின்
மகனாம் கிறிஸ்துவை பற்றியதாகவும், அதற்குப் பின் வரும் கிறிஸ்துவின் சீடர்களின் கடிதங்கள் தூய ஆவியின் செயல்பாடுகளைப் பற்றியும் குறிப்பிடுகின்றது.13
இதில் இயேசு என்பவர் உலகிற்கு வர மிகப்பெரிய உதவியாக இருந்தவர் அவரின்
தாய் மரியாள். இந்த மரியாள் என்னும் பெண் திரு
விவிலியத்தில் பல இடங்களில் புகழப்படுகிறாள். மரியாள்
பெண்ணாக இருந்தும் இயேசுவின் மரணத்திற்குப் பின் இயேசுவின் சீடர்களை வலுவூட்டி வந்தார் என்று விவிலியம்
குறிப்பிடுகிறது. கிறிஸ்தவத்தில் பெண் தெய்வ வழிபாடு நுழைந்தது மரியாள் வழியாகவே.14
நெய்தல் நிலமும் பெண் தெய்வ வழிபாடும்
நெய்தல் நிலத்தில் பின்பற்றப்படும் கிறிஸ்தவ மதத்தில் மரியாள் வழியாகப் பெண் தெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம்
அளித்து வருகின்றனர். ஆனால் கத்தோலிக்க கிறிஸ்தவம் என்பது ஆராதனை என்பது
இயேசுவிற்கு மட்டும் மரியாளுக்கும் மற்ற புனிதர்களுக்கும் அளிக்கப்படுவது வணக்கம்
மட்டுமே15 என்பதை பலமுறை போதித்தும் மக்கள் பெண்
தெய்வமாகிய மரியாளுக்கும் அவரின் அடிச்சுவட்டை பின்பற்றி வாழ்ந்து புனிதர் என்னும்
நிலைக்கு உயர்ந்தவர்களையும் கொண்டாடி வருகின்றனர்.
பெண் தெய்வங்களும் புனித பூமியும்
இன்று நெய்தல் நில மக்களால் கொண்டாடப்படும் பெண் தெய்வங்களுக்கென்று
நெய்தல் நிலத்திலே பல ஆலயங்களை எழுப்பியுள்ளனர். கத்தோலிக்க திருச்சபையை
பொறுத்தமட்டில் ஆண் தெய்வங்களை விடப் பெண் தெய்வங்களுக்கே அதிகப்படியான ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளது.
கிறிஸ்தவத்தின் பெண் தெய்வமான மரியாளுக்கு பல்வேறு பெயர்களில் பல
இடங்களில் ஆலங்கள் உள்ளது. அவற்றில் தமிழ்நாட்டின் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில்
அமைந்திருக்கும் புனிதத் தலம்
உலக புகழ்பெற்றது. இந்த ஆலயம் அமைந்த வரலாறு என்பது வாய்மொழி இலக்கியம் வழியாக
அறியும் செய்தி எனலாம்.
வாய்மொழி இலக்கியத்தில் வேளாங்கண்ணி
பண்டைய தமிழகம்
ஏற்றுமதி இறக்குமதி மற்றும் வளங்கொழிக்கும் துறைமுக பகுதி எனக் குன்றா செழுமை கொண்ட
பகுதி. எனவே பல வெளிநாட்டவர்க்கும் இந்தியாவின் மீதும் அதன் ஒரு பகுதியான
தமிழகத்தின் மீதும் ஆவல் இருந்து வந்துள்ளது. மேலும் பல்வேறு போக்குவரத்துகள்
அறிமுகம் இல்லாத காலத்தில் கடல் வழி போக்குவரத்து என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அவ்வாறு போர்த்துக்கீசியக் கப்பல் ஒன்று கடற்பயணம் மேற்கொண்ட நேரத்தில் புயலில் சிக்கித் தவித்தனர். மேற்கத்திய நாடுகள்
பெரும்பாலும் கிறிஸ்தவத்தைத் தழுவியவை. அதனால் அந்த
கப்பலில் ஒரு மரியாளின் திருவுருவம் வைக்கபட்டடிருந்தது. புயலின் தாக்கம் அதிகமாகவே கப்பலின் மாலுமி அந்த அன்னை மரியாளின் திருவுருவத்திற்கு முன் மண்டியிட்டு வேண்டவே
புயல் அடங்கி கப்பலும் கடற்பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர். கப்பல் மாலுமி அன்னை மரியாளிடம்” எங்களை இந்த கொடிய ஆபத்திலிருந்து காப்பாற்றினால் கரை சேரும் பகுதியில்
மரியாளுக்கென்று ஆலயம் எழுப்புவதாக வேண்டிக்கொண்டனர். அதன்படி அந்த போர்த்துகீசிய கப்பல் கரை ஒதுங்கிய பகுதிதான்
நாகை மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி என்னும் பகுதி. அந்த இடத்தில் மரியாளுக்கென்று பேர்ச்சுகீசியரால் கட்டப்பட்டதுதான்
வேளாங்கண்ணி ஆலயம். இந்த பகுதியில் இன்றுவரை நடைபெறுவது முழுக்க முழுக்க பெண்
தெய்வ வழிபாடுதான்.16
இதர பெண் தெய்வங்கள்
கத்தோலிக்க மதத்தை மிகத்தீவிரமாக கடைப்பிடித்து வேதகலாபனை நடந்த காலத்தில் கிறிஸ்தவத்திற்காக
தன் உயிரைக் கொடையாக
வழங்கியவர்கள் திருச்சபை வரலாற்றில் புனிதர்கள் என அறியப்படுகின்றனர்.17 இவர்களில் பெண்கள் அதிகமானவர்கள். இவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய பத்தாயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களின் பெயரால்
பல இடங்களிலும் ஆலயங்கள் எழுப்பபட்டடுள்ளது. குறிப்பாக
நெய்தல் நிலத்தில் அவர்களுக்கென்று ஆலயங்களை எழுப்பி ஒவ்வொரு ஆண்டும் அவர்களின்
நினைவு நாளில் பல இலட்சங்களைச் செலவு செய்து விழா கொண்டாடி வருகின்றனர்.
தொகுப்புரை
· திணைப்பகுப்பில் குறிப்பிட்ட தெய்வ வழிபாட்டில் முற்றிலும் மாற்றம் பெற்றதாய் நெய்தல்
நிலம் விளங்குகின்றது.
· சிவபெருமான், பார்வதி, பல ஊர் தேவதைகள் வழிபாட்டு முறை
நெய்தல் நிலத்தில் பரவலாக இருந்துள்ள செய்தி அறியலாகிறது.
· ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பே தென்னிந்தியாவில்
கிறிஸ்தவம் தோன்றியுள்ளது.
· நெய்தல் நிலத்தில் கிறிஸ்தவத்தை விதைத்தவர்களில்
முக்கியமானவர்கள் புனித தோமையாரும், புனித பிரான்சிஸ் சவேரியாரும் ஆகும்.
· கிறிஸ்தவத்தில் பெண் தெய்வ வழிபாட்டிற்கு அச்சாணி
புனித மரியா.
· நெய்தல் நிலத்தில் பெண் தெய்வ வழிபாட்டிற்கு
முக்கியத்துவம் வழங்குவது அறியலாகும் உண்மை.
முடிவுரை
மனிதனின் எண்ணத்தில் உதித்த உருவத்திற்கு உருக்கொடுத்து அதற்கு இறைவன் என்று பெயரிட்டான். அந்த இறைவனாலே எல்லாம் நடக்கும் என்னும் நம்பிக்கையை கொண்டான். அந்த நம்பிக்கையின் ஒரு
படி வளர்ச்சியே பெண்தெய்வ வழிபாடு. அந்த வழிபாட்டு முறை இன்று நேற்றல்ல சங்க
இலக்கிய காலம் அதாவது கிறிஸ்துக்கு முன்னே நெய்தல் நிலத்தில் தோன்றியது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
துணைநூற் பட்டியல்
1.தொல்காப்பிய பொருளதிகாரம் அகப்பொருள்
சூத்திரம் 5, வ.உ.சிதம்பரம் பிள்ளை பதிப்பு 1919.
2.அகநானூறு புலியூர்க்கேசிகன் தெளிவுரை, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32-டீ, கிருஷ்ணா
தெரு,பாண்டி பஜார், சென்னை. பாடல்
எண்:303:3-4
3.அகம் புலியூர்க்கேசிகன் தெளிவுரை, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32-டீ, கிருஷ்ணா
தெரு,பாண்டி பஜார், சென்னை. பாடல்
எண்: 270:12
4.கலித்தொகை புலியூர்க்கேசிகன் தெளிவுரை, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32-டீ, கிருஷ்ணா தெரு,பாண்டி
பஜார், சென்னை. பாடல் எண்:131:1
5.நற்றிணை– புலியூர்க்கேசிகன் தெளிவுரை, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32-டீ, கிருஷ்ணா
தெரு,பாண்டி பஜார், சென்னை. பாடல்
எண்: 155:5-7
6.நற்றிணை– புலியூர்க்கேசிகன் தெளிவுரை, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32-டீ, கிருஷ்ணா
தெரு,பாண்டி பஜார், சென்னை. பாடல்
எண்: 283:6-8
7.சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் - டாக்டர் தி. முத்து கண்ணப்பன், அதிபத்தர் பதிப்பகம், 6, வசந்தா பிரஸ் சாலை, அருணாசலபுரம், சென்னை – 600
020, பக் 216.
8 சேக்கிழார் பெரிய புராணம் - அதிபத்த நாயனார் புராணம்
9.திருவிளையாடல் புராணம் - வலைவீசு
படலம்
10. . முக்குவர்: வரலாறு, வாழ்வியல், எதிர்காலம் (தொகுப்பு), வறீதையா கான்ஸ்தந்தின்,
நெய்தல் வெளி,
2010, பக்கம் 79.
11.Jawaharlal
Nehru, An Autobiography, Bombay, 1962, Page no:273
12. உரோமைத் திருப்பலி புத்தகம், தமிழ்நாடு விவிலிய மறைக்கல்வி மற்றும் வழிபாட்டு மையம் திண்டிவனம், பக்கம் 23, பதிப்பு 2018.
13. திருவிவிலியம், பொது மொழிபெயர்ப்பு, தமிழ்நாடு விவிலிய மறைக்கல்வி மற்றும் வழிபாட்டு மையம் திண்டிவனம், முன்னுரை, பதிப்பு 2018.
14. திருவிவிலியம், பொது மொழிபெயர்ப்பு, தமிழ்நாடு விவிலிய மறைக்கல்வி மற்றும் வழிபாட்டு மையம் திண்டிவனம், புதிய ஏற்பாடு பக்கம் 84, பதிப்பு 2018.
15. தாய்த்திருச்சபையின் பதில்கள்,அருட்தந்தை.சி.ஜேம்ஸ் பீட்டர்- 17- ஆம் பதிப்பு,2013, பக்கம் 102
16. வேளாங்கண்ணி ஆலய வரலாறு – அருட்பணி. பெல்லார்மின், நாஞ்சில் பதிப்பகம், நாகர்கோவில் 1995.
17. தாய்த்திருச்சபையின் பதில்கள்,அருட்தந்தை.சி.ஜேம்ஸ் பீட்டர்- 17- ஆம் பதிப்பு,2013, பக்கம் 114