நான் சாவித்திரி அல்ல....
உன் கற்பனைகளுக்கு
அப்பாற்பட்ட என் மனம்....
புன்னகையைப்
பரிசாக்கி
வெளிச்சத்தை
மட்டுமே
வெளிப்படுத்தி
உன் சடங்கு சம்பிரதாயங்களை
கடந்தே
பயணிக்கிறது....
எனக்காய்
அழவோ
ஆறுதல் சொல்லவோ துணியாத விழிகளையும் கரங்களையும்
நேசித்தாக
வேண்டிய நிர்பந்தங்களைச்
சுமந்தபடியே
நகர்கிறது....
என் வலிகளைப் புறந்தள்ளும்
உன்னை புறந்தள்ள
எத்தனை வலிகளையும்
தாங்கிய
என்னை
ஏளனமாய் பார்க்கிறாய்....
நல்ல
வேலைக்காரியாய்
மருமகளாய்
தாரமாய்
தாயாய்
இருப்பதிலேயே
என் வெற்றிக்
கோப்பையை பரிசளிக்கிறாய்...
எப்பொழுதும் நினைப்பதுண்டு
ஆணாய்ப் பிறப்பெடுக்க.....
ஓயாமல்
பாத்திரம் துலக்க,
சளைக்காமல்
சமையல் செய்ய,
துணிகளை துவைக்க,
வீடு பெருக்க,
வாந்தி எடுக்க,
வயிறு பெருக்க
வேண்டாம்
ஒரு ஜென்மம்...
மருத்துப் போய்விட்ட வாழ்க்கையொன்றை
வாழ்ந்து காட்ட
நீ சத்தியவானுமில்லை....
நான் சாவித்திரியுமில்லை...
கவிமுகில் அனுராதா