அதி ரகசியங்கள்
வானத்தை ஆகாயம் நிரப்பினால்
அது சூழ்மேகம்!
காதலைத் திரித்து – பிரித்து
நாண் ஏற்றி
பின்னத்துவங்கும் சூழலுக்குள்
ஒவ்வொரு உடலும் உயிர்த்துவம் பெறும்.
கவிதையின் உடலாய் காதல்…
காற்றின் மெல்லினம்
புயலின் சினச்சீற்றம்
நீரின் நதியோட்ட பாடலிசை
பித்து மனநிலையின் மூழ்மை
உறைதலும் உருகுதலும் ஆன படிமம்
எல்லாமும் அதுவே…!
யாருமறியா
மயான சடங்கென
நீண்ட ஒத்திகைக்கான வழிபாடாய்
முத்தமெனும் சிலிப்புணர்வு
அங்கு மேலெழும்…
காதலில் முத்தமிடல்
கண்கள் நிறைந்த வானமென
உடலை அனைத்துக்கிடக்கும் வழிநெறி
பெரும் பொருளும்
பொருளற்ற புரிதலும்
காதல் கவிதையின் அதி ரகசியங்கள்!