முதல் தலைமுறை கல்வி
நாங்கள் யாசிக்கவில்லை
உரிமையைக் கேட்கிறோம்.
உணர்ந்து
பாருங்கள்
வலிகளின் வன்மம்
உங்களுக்கும் புரியும்
தங்கத்தட்டுகள் வேண்டாம்
தகர டப்பாவையாவது கொடுங்கள்
தட்டிப் பிழைத்துக் கொள்கிறோம்..
அவமானத்தின் சின்னங்களல்ல
அடுத்த தலைமுறைகள்
நாங்கள்
காட்டை விற்று மேட்டை விற்று
படித்து தொலைத்தோம்
நாங்கள்.
அப்பனின் கனவுகளை நினைவாக்க
அவரின் இறுதி
ஊர்வலம் போவதற்கு முன்பாக
எங்கள் பணத்தில் இஞ்சி மிட்டாயாவது
வாங்கி கொடுக்க ஆசை.
இது கொஞ்சம் பேராசைதான்
கூட பிறந்தவள் முதிர்கன்னியானாள்
உங்கள் முழுநேர பஜ்ஜெட் கேட்டு
என்று விடியுமென காத்திருந்தவனுக்கு
நீங்கள் கொடுத்த பரிசைப் பார்த்து
பிச்சையெடுத்தாவது படியென்றாள் ஒளவை
நாங்கள் படித்துவிட்டு
பிச்சையெடுக்கிறோம்
இருந்ததையும் தொலைத்துவிட்டு
குருடன்
வீட்டு
யாசகர்களாய்
முதல் தலைமுறை கல்வி,
கனவுகளின் உச்சம் ,
இங்கே சிதறிகிடக்கிறது
வாழ்க்கையின் மிச்சம்
அறியாமலே!
- முனைவர். பீ.பெரியசாமி