4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 மே, 2023

ஜி.யு. போப்பின் தமிழ்த்தொண்டு - முனைவர் மயிலம் வேல்.கார்த்திகேயன்

 

ஜி.யு. போப்பின் தமிழ்த்தொண்டு

முனைவர் மயிலம் வேல்.கார்த்திகேயன்  

இணைப்பேராசிரியர்- தமிழ்த்துறை

காஞ்சிமாமுனிவர் அரசினர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

புதுச்சேரி 605 008.

 “வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி ”என்று பாரதியாரால் போற்றப்பட்ட மொழி  தமிழ்மொழி . மனிதன்  முதன்முதலில் பேசிய பழம் பெரு மொழிகளில் ஒன்றே தமிழ் மொழியாகும்.  அமிழ்தினும் இனிய செந்தமிழ்இ முதிர்ந்த இலக்கியச் செல்வத்தை உடையது.  கலைவாணர்களும்இ என்று பிறந்தவள் என்று உறுதியாகக் கூறமுடியாத தொன்மை வாய்ந்தவள் நம் தமிழ் அன்னை.

உலகின் மூத்த மொழியாக விளங்குகின்ற தமிழின் பழமையைஇ “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி” என்று புறப்பொருள் வெண்பா மாலை கூறுகின்றது.

“தமிழென்னும் அளப்பரும் சலதி ”(கம்பராமாயணம் தாடகை 38.) என்று தமிழின் சிறப்பைப் போற்றிப் பாடுகின்றான். காவியம் படைத்த கம்பன்,

                “இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்” என்று பிங்கல நிகண்டு சிறப்பித்துக் கூறுகிறது.

                “மதுரமான மொழி  தமிழ் ” என்று வால்மீகி குறிப்பிடுகின்றார்.

அரசியல், பொருளாதாரம், கல்வி, வாணிகம் போன்ற துறைகளில் ஏற்றமும் சிறப்பும் பெற்று விளங்கியதும் அன்றும் இன்றும் என்றும் வாழ்கின்ற மொழி வாழும் மொழி தமிழ்மொழியாம். தமிழ்மொழியின் சிறப்பினையும் பெருமையினையும் புகழினையும் அறியாதவர் யாரேனும் உண்டா ?  என்றால்  யாருமில்லை. என்றே உறுதிபடக் கூறலாம்.  தமிழ்மொழியின் சிறப்பினை அறிந்து தமிழ்த்தொண்டு புரிந்தவர்கள் பலராவர். அவ்வரிசையில் டாக்டர் ஜி.யு. போப் அவர்களும் ஒருவராகத் திகழ்கின்றார். ஏப்பிரல் 24 ஆம் நாள் அவருடைய பிறந்தநாளில் அவர் தமிழுக்குத் தொண்டாற்றிய பணிகளைக் குறித்துச் சிலவற்றைச் சிந்திக்கலாம்.

தமிழகம் சங்ககாலத்திற்கும் முற்பட்ட காலத்திலிருந்தே யவனர் என்னும் ஐரோப்பிய நாட்டவருடன் வாணிக உறவுகொண்டு விளங்கியதைச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. யவனரைத் தொடாந்து இசுலாமியர், போர்ச்சுக்கல், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரான்சு போன்ற பிற ஐரோப்பிய நாட்டவரும் தமிழகத்தோடு தொடர்பு கொள்ள விழைந்தனர்.  இவர்கள் வெறும் வணிகத் தொடர்போடு நில்லாமல் தம் சமயத்தையும் பரப்ப முற்பட்டனர். சமயப் பிரசாரத்திற்காகக் கிறித்தவ மதப் பாதிரிமார்களையும் உடன் அழைத்து வந்தனர். பாதிரிமார்கள் கிறித்தவத்தைப் பரப்பும் தொண்டினைச் செய்தனர்.

கிறித்துவ மதத்தைப் பரப்பும் பணியில் மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து முதலில் பயின்றனர்.  பயிலப்பயில பைந்தமிழின் இனிமையில் தம்மை மறந்து மனத்தைப் பறிகொடுத்து தமிழ்த் தொண்டு செய்யத் தலைப்பட்டனர்.  தம்மை மறந்தநிலையில் தமிழுக்குத் தொண்டு செய்கிறோம் என்பதை அறியாமல் தமிழுக்குத் தொண்டு புரிந்தனர்.  மதத்தைப்பரப்புவதோடு தமிழ்ப் பணியோடு தொண்டுசெய்து அழியாத புகழ் பெற்றவர்கள் பலராவர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ராபர்ட் டி நொபிலி, வீரமாமுனிவர், சீகன் பால்கு ஐயர், எல்லீஸ் துரை, கால்டுவெல், டாக்டர் ஜி.யு.போப் முதலானவர்கள். 

ஜி.யு.போப் அவர்கள் கனடா நாட்டில் பிரின்ஸ் எட்வர்டு தீவில் ஜான்போப், கேத்ரீன்  ஆகியோருக்கு நன்மகனாக, 1820 ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆம் நாள் பிறந்தார். ஜி.யு.போப் என்பதன் முழுப்பெயர் ஜார்ஜ் யூக்ளோ போப் . தந்தையாரின் வாணிபத்திற்காக எட்வர்டு தீவுப் பகுதியில் இளமைக்காலம் கழிந்தது. பிறகு 1826 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குக் குடும்பத்துடன் குடியேறினர்.  ஏறத்தாழ 19 வயதுவரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார். பின் இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908ஆம் ஆண்டு வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார்.  1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தர்.  புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களைப் பதிப்பித்தார். தமிழ்மீது பற்றுகொண்ட இவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

விவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணிபுரிவதற்காக வெஸ்லியன் சங்கம் சார்பாக, 1839 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்தார்.  கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார். சென்னைக்கு வந்து சாந்தோம் பகுதியில் தங்கினார். பிறகு அச்சங்கத்தால் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள சாயர்புரத்திற்குச் சமயத்தொண்டுக்காக அனுப்பப்பட்டார்.

ஆங்கில நாட்டைச் சேர்ந்த இவர் தமிழகத்தின் பலபகுதிகளான தூத்துக்குடிக்கு அருகில் சாயர்புரம், தஞ்சாவூர், உதகமண்டலம், பெங்களுர் முதலிய இடங்களில் தங்கிச் சமயப்பணி,  கல்விப்பணி,  தமிழ்ப்பணி முதலான நிலைகளில் தொண்டு புரிந்தார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், பள்ளிக்கூடங்களையும் சமயப்பள்ளி ( மிஷின் )களையும் நிறுவினார்.  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்து மேலைநாட்டவர்க்கும் தமிழின் சிறப்பைப் புலப்படுத்தினார்.

ஜி.யு.போப்பையர் எளிய இலக்கணநூல் மற்றும் உரைநடை நூல் எழுதியமை,  நூல்களை மொழிபெயர்த்தல், சில நூல்களில் சிறப்புமிக்கப்பாடல்களை மட்டும் மொழிபெயர்த்தல், சில நூல்களைப் பதிப்பித்தல்,  ஆங்கில இதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியமை முதலான பணிகளே இவரது தமிழ்க்கொடையாகும்.

திருக்குறள்,  திருவாசகம்,  நாலடியார் ஆகிய நூல்களை முழுவதுமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.  இவரது திருவாசக மொழிபெயர்ப்பினைக் கண்ட பேராசிரியர் சூலியன் வின்சன் அவர்கள்,  “இருவினை கடந்த செல்வன் இசைத்த வாசகத்தையெல்லாம். வருவிளையாட்டாற் போலும் மறுமொழியதனில் வைத்தீர்” என்று பாராட்டியுள்ளார்.  மேலும் புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்களில் சில பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 

தமிழ்ச்செய்யுள்கள் பலவற்றைத் திரட்டி, தமிழ்ச்செய்யுள் கலம்பகம் என்னும் நூலாக வெளியிட்டார்.  இங்கிலாந்து தேச சரித்திரம் என்னும் சிறந்த உரைநடை நூலையும் எழுதியுள்ளார். மாணவர்கள் எளிதில் உணரும் வண்ணம் Elementary Tamil Grammar எனும் எளிய தமிழ் இலக்கண நூலையும், Poets of the Tamil Lands, Extracts from Purananooru & Purapporul Venbamalai, The lives of the Tamil Saints  போன்ற இலக்கிய நூல்களையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். மணிமேகலைக் கதையை ஆங்கிலத்தில் உரைநடையாக எழுதியுள்ளார். 

Royal Asiatic Quarterly. The Indian Magazine போன்ற ஆங்கில இலக்கிய இதழ்களில் தமிழின் பெருமையை விளக்கும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.  தனது இனிய சொற்பொழிவுகளின் மூலமும் வெளிநாட்டில் தமிழன்னையின் சிறப்பைப் பரப்பினார். Royal Asiatic Society, இவருக்கு “வேத சாஸ்திரி” எனப் பட்டம் வழங்கியது.

ஆங்கில நாட்டில் பிறந்தவராயினும் தமிழ் மாணவனாகவே இறுதிவரை வாழ்ந்து மறைந்த பெரியார், தனது கல்லறையிலும் நான் ஒரு தமிழ் மாணவன் என்று குறிக்கச் செய்தார்.

திருக்குறள்

நீதி நூல்களில் காலத்தால் முற்பட்டதும் பொருட்சிறப்பால் உயர்ந்ததுமாகத் திகழ்வது திருக்குறளே.  அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால்களைக்கொண்டு 133 அதிகாரங்களையும் 1330 குறள்களையும் கொண்டதோர் நூலாகும். குறள்வெண்பாவால் இயன்ற முதல்நூல் திருக்குறளே. முதலடியில் 4 சீர்களும்இ இரண்டாமடியில் மூன்று சீர்களும் என 7 சீர்களில் சிறந்த உயர்ந்த பெருகிய பொருளைக் கொடுக்கின்றது.

வள்ளுவரையும் அவர்தம் குறளையும் போற்றாத புலவரே இல்லை எனலாம்.

            வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

            வான்புகழ் கொண்ட தமிழ்நாடு. (பாரதியார் கவிதைகள் செந்தமிழ்நாடு பா.7)

என்றும்,

கம்பனைப்போல், வள்ளுவன்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை என்று பாரதியார் பாடுகின்றார்.

            வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்

            உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கொரு நீதி (மனோன்மணீயம்)

என்று மனோன்மணிய நாடக நூலாசிரியர் திரு. சுந்தரம் பிள்ளையவர்கள் போற்றிப் பாராட்டியுள்ளார். 

அக்காலத்தில் வாழ்ந்த ஐம்பத்தேழு புலவர்கள் இவரைப் பாராட்டிக் கூறியுள்ள பாராட்டுரைகளையெல்லாம் தொகுத்துத் “திருவள்ளுவமாலை”என்று ஒரு நூல் வெளியிடப்பட்டுள்ளது. பாராட்டுரைகளே ஒரு தனிநூலாக அமையும் அளவிற்குச் சிறந்த நூல் திருக்குறள் ஒன்றே.

திருக்குறட் கருத்துகளைக் கையாளாத புலவர்களே இல்லை என்றே அறுதியிட்டுக் கூறலாம்.  சாதி, சமய, இன, மத, நாடு, மொழிபேதங்களைக் கடந்த ஒன்று. எம்மதத்தவரும், இனத்தவரும் தத்தமக்குரியது.  இது ஒரு சிறந்த இலக்கியமாகவும், சமய நூலாகவும், தத்துவ நூலாகவும், அவரவர் நிலைக்கேற்ப அமையும் சிறப்புடையது. 

திருக்குறள் உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதோடு ஒரே மொழியில் பல பெயர்ப்புகளும் வெளிவந்துள்ளன. சில மொழிகளில் நூல்முழுதும் மொழிபெயர்க்கப்படா விட்டாலும் சில பாக்களாவது மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  இந்திய மொழிகளில் தெலுங்கு, மலையாளம், இந்தி, வடமொழி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அயல்மொழிகளுள் இலத்தீன் மொழியில் வீரமாமுனிவரும், ஜெர்மன், பிரஞ்சுமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  ஆங்கிலத்தில் வ.வே.சு.ஐயர், தீட்சிதர், இராஜாஜி மற்றும் டாக்டர் ஜி.யு.போப் அவர்களும் மொழிபெயர்த்துள்ளார்கள்.

ஆல்பர்ட் சுவிட்சர் என்ற பெரியாரும், திருக்குறளின் பெருமையை உலக இலக்கியங்களில் திருக்குறளைப்போலச் சிறந்த அறம் உரைக்கும் நூல் வேறு இல்லை என்று கூறுவார்.  அத்தகைய நூலை ஜி.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் கருத்துரையோடு திருக்குறளையும் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.  கடவுள் வாழ்த்து என்னும் முதல் அதிகாரத்தில் முதல் குறளைக் காணலாம்.

            அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

            பகவன் முதற்றே உலகு      (குறள்.1)

ஜி.யு.போப்பின் English Translation and Commentary 

     The Praise of God

1.      A,  as its first of letters, every speech maintains:

The Primal Deity is first through all the world’s domains.

As the letter A is the first of all letters, so the eternal God is first in the world.

நாலடியார்

திருக்குறளுக்கு அடுத்த நிலையில் சிறப்பாக எண்ணப்படும் நூல் இதுவே. 

                            பழகுதமிழ்ச்சொல்லருமை நாலிரண்டில்

                         ஆலும் வேலும் பல்லுக்குறுதி

                         நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

என வழங்கும் பழமொழிகள் இதன் சிறப்பை விளக்கும். ஈரடிகளால் வள்ளுவர் சுருக்கமாக உரைத்துள்ள கருத்துக்களை நான்கடி வெண்பாக்களால் எடுத்துக்காட்டுடன் விளக்கிக்கூறும் பான்மையில் இதன் பாடல்கள் அமைந்துள்ளன.  வடிவாலும் கருத்தாலும் குறளின் விரிவாக்கமாகத் திகழும் இதனைத் திருக்குறளின் விளக்கம் என்றே சிறப்பித்துக் கூறலாம்.

சமண முனிவர்களால் பாடப்பட்ட நாலடியார் என்னும் நீதி நூல், 40 அதிகாரங்களும் 12 இயல்களும் 400 வெண்பாப் பாடல்களைக் கொண்டது. திருக்குறளைப்போலவே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால், என முப்பாலாகப் பகுக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன.  நூலமைப்பினையும், பொருட்சிறப்பினையும் உணர்ந்த ஜி.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். குறிப்பாக, அக்காலப் பழக்க வழக்கங்களையும், சமய நம்பிக்கைகளையும் வாழ்வியல் உண்மைகளையும் எடுத்துரைப்பது நாலடியாரின் தனிச்சிறப்பாம்.  அவ்வகையில்                 கல்வியின் சிறப்பைப் பற்றி நாலடியார் கூறும் திறம் சீரியதாகும்.

நாலடியாரையும் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த போப் அடிகளார் (Rev. G.U.Pope)  தமது நாலடியார் முன்னுரையில் தமிழிலும் வடமொழியிலும் உள்ள இலக்கியங்களின் காலத்தை வரையறை செய்யும்போது அறிஞர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய கருத்தொன்றை எடுத்துரைப்பார்.  தமிழ் அற இலக்கியங்களிலுள்ள பாடல்களை ஒத்த பலவற்றை வடமொழி அற இலக்கியங்களில் காணும் போதெல்லாம் வடமொழி நூல்கள் முன்னால் தோன்றியவை என்ற முடிவுடன் தமிழ்ப்பாடல்கள் அவற்றிற்குப்பின் அவற்றின் தழுவல்களாகத் தோற்றம் பெற்றவை என்று வாதிடுவது தவறு என்றும் தமிழ் வடமொழி நூல்களின் காலங்கள் தி;ட்டவட்டமாகத் தெரியாத நிலையில் இரண்டு மொழிகளிலும் உள்ள கருத்தொருமித்த பாடல்களை ஆய்வாளர்கள் மதிநுட்பத்தோடு கருத்துச்செறிவு, தெளிவு, இயல்பான தன்மை, முருகியல் சிறப்பு ஆகியவற்றை மனத்தில் கொண்டு ஒப்பிட்டுப் பார்ப்பார்களானால் தமிழ்ப்பாடல்களே முந்தியவை என்பதை உணரமுடியும் என்றும் போப் அடிகளார் உரைப்பது நடுநிலையாளர் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மையாகும். 

திருக்குறளும் நாலடியாரும் தமிழ்ச்சமுதாயத்தின் அறக்கொள்கைகளை விளக்குபவை என்று அறிவிக்கும் அடிகளார்

            குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையால்

கல்வி யழகே அழகு            (நாலடியார் கல்வி பா.131)

என்றும்,

                கல்வி கரையில கற்பவர் நாள் சில

            மெல்ல நினைக்கின் பிணிபல  தௌ்ளிதின்

ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர் ஒழியப்

பால் உண்குருகின் தெரிந்து.   (நாலடியார் கல்வி பா.135)

என்னும் பாடலின் சொல், பொருள், உவமை நலன்களை வியந்து பாராட்டுவார். 

நாலடியாரின் பாடல் ஒவ்வொன்றும் ஒரு கலைப்படைப்பாக, பட்டை தீட்டப்பெற்ற விலைமதிப்பற்ற வைரக்கல்லாக உருவாக்கப் பெற்றுள்ளதென்றும் அறக்கருத்தைத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் சொற்சிக்கனத்தோடும் எடுத்துச் சொல்கிறது என்றும் நானூறு பாடல்களையும் அவை கையாளும் உத்திகளின் அடிப்படையில் ஏழு வகைகளாகப் பிரிக்கலாம் என்றும் போப் ஐயர் குறிப்பிட்டுக் கூறுவார்.

சித்தாந்த சைவம் : பொருள் விளக்கம்

சித்தாந்த சைவம் பொருள் விளக்கம் என்பது முப்பொருள் உண்மை, முப்பொருள் இயல்பு, முப்பத்தாறு தத்துவங்கள், ஐந்துகலைகள், ஆறு அத்துவாக்கள் முதலானவற்றைக் குறிக்கும்.  சித்தாந்த கொள்கை விளக்கம் என்பது, இறைவனின் சொரூப நிலை, தடத்த நிலை முத்தியில் உள்ள ஆன்மாவின் நிலை முதலானவற்றைக் குறிக்கும். 

திருமுறைக் கருத்துக்களுக்கு விளக்கம் காணும்போது சைவசித்தாந்தக் கண்கொண்டு காண வேண்டும் என்று சமயப் பெரியோர்கள் கூறுவார்கள்.  சைவசித்தாந்தக் கொள்கைகளுக்கு முரணாகத் திருமுறைகளுக்குப் பொருள் கூறினால்,  அப்பொருள் பொருந்தாது என்பது மட்டுமின்றி, அது சிவ விரோதமானதும் ஆகும்.

இவ்வுண்மையைக் கருத்தில் கொண்டே திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் ஜி.யு.போப்பையர் அவர்கள், திருவாசக நூலின் முகவுரையில்

     The Caiva Siddhanta System is the most elaborate, influencial and undoubtedly the most mtrinsically valueable of all religious of India.  It is peculiarly the South Indian and Tamil religion: and ,ust be Studies by every one who hopes to understand and influence the great South Indian people.  The Vaishnava sect has also may in-fluential followers in the Tamil lands but these are Chiefly in migrants from the North”.

என்று குறிப்பிட்டுள்ளார்கள்.  இவ்வுரையின் தமிழாக்கம்

 “இந்தியாவில் உள்ள எல்லா மதங்களிலும் மிகுந்த செல்வாக்கு உடையது சித்தாந்த சைவமே ஆகும்.  அஃது உண்மையிலேயே, உள்ளார்ந்த பெரிதும் மதிக்கத்தக்க விரிவான கொள்கைகளை உடையது.  இச்சமயம் தென்னிந்தியர்க்கு உரியது: சிறப்பாகத் தமிழர்க்கே உரியது.  பெருமைக்குரிய  தென்னிந்திய மக்களைப்பற்றிப் புரிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் சைவசித்தாந்தம் கற்க வேண்டுவது இன்றியமையாததாகும்.  தமிழ்நாட்டில் வைணவத்தைப் பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.  ஆயினும் அவர்களுள் பெரும்பாலோர்இ வடநாட்டிலிருந்து வந்து தமிழ்நாட்டில் குடியேறியவர்களே ஆவர். 

டாக்டர் போப்பையர் அவர்களது கருத்திலிருந்து சைவசித்தாந்தம் தமிழர்க்கே உரியது என்பதும் தமிழ்நாட்டில் உள்ள சைவ சமயத்தினைத் தெளிவதற்குச் சைவசித்தாந்தக் கல்வி இன்றியமையாதது என்பதும் இனிதே பெறப்படுகின்றன. 

ஐரோப்பியக் கிறித்தவரான ஜி.யு.போப் அவர்களின் வருகையால்தான் தமிழ் மறுமலர்ச்சி பெற்றது என்றே கூறவேண்டும். குறிப்பிட்டுக்கூறப்பட்டுள்ள இவர்கள் மாத்திரமின்றி இன்னும் பல்லாயிரக் கணக்கான கிறித்தவர்கள் இன்னும் தொடர்ந்து தமிழ்ப்பணி புரிந்து வருகின்றனர் என்பது அறிந்து மகிழ்ந்து பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

திருவாசகம்

பன்னிரண்டு திருமுறைகளில் எட்டாந்திருமுறையாக விளங்குவது திருவாசகம்.  இந்நூல்   சிவபுராணம் முதல் அச்சோபதிகம் ஈறாக 51 தலைப்புகளில் 656 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் கருத்துக்கள் கற்போரின் ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் சிறப்பு நோக்கி “திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்”;என்னும் பழமொழி வழங்குவதாயிற்று.

திருவாசகத்தின் சிறப்பினால் ஈர்க்கப்பட்ட இராமலிங்க அடிகளார்,

            வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே 

தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ்சுவை கலந்து என்

            ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே   (திருவருட்பா)

 

வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி

நெஞ்சம் நெக்குருகி நிற்பவர் காண்கிலேம்

திருவாசகம் இங்கு ஒருகால் ஒதின்

கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்

தொடுமணற்கேணியில் சுரந்து நீர்பாய

மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப்பெய்தி

அன்பர் ஆகுநர் அன்றி

மன்பதை உலகில் மற்றையர் இலரே.  (நால்வர்நான்மணிமாலை.பா.4)

என்றும் சிவப்பிரகாசர் போற்றியுரைக்கக் காணலாம்.

மாணிக்கவாசகர் தம் மெய்யுணர்வை நினைவுகூர்ந்து தம் மனத்தின் நிலைக்கு வருந்துவது போல திருச்சதகம் பாடினார்.  மனத்தின் குறைபாட்டை அதனிடமே நொந்து கொள்வதுபோல பதிகம் முழுதுமே அமைகின்றது. இவற்றுள் மாணிக்கவாசகர் தாம் பெற்றுப் பற்றுக்களை அறுத்திட எண்ணித் துயரத்தை வெளியிடும் முறையும் நடையும் அவர் கலங்கிக் கண்ணீர்விட்டாற்போலவே கற்பாரையும் ஆக்கவல்லவை. இவைபோன்ற திருவாசகப்பாடல்களைக் குறித்துத் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப்

     Anyone who compares the nervid piety of our sage’s very beautiful, and generally very simple, lryics will feel with what force they must have struck the chord that vibrated then, as it vibrates still in millions of hearts. One touch of nature makes the whole world kin and no one can read the sage’s verses without profound emotion.  Scarcely ever has the longing of the human soul for purity and peace and divine fellowship found worthier expression.

என்று கூறியுள்ளதை இங்குக் காணலாம்.

மேற்குறிப்பிட்ட பாடல்களில் கூறப்படும் மனத்தின் குறைகள் வருமாறு:

1.             இறைவனை வேட்கையுடன் தேடவில்லை. துயரம் தாளாது தெருத்தோறும் அலறவில்லை.

   ஆடுகின்றிலை கூத்துடை யான்கழற்

     கன்பிலை என்புருகிப்

         பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை

  பணிகிலை பாதமலர்

         சூடுகின்றிலை சூட்டுகின் றதுமிலை

  துணையிலி பிணநெஞ்சே

         தேடுகின்றிலை தெருவுதோறலறிலை

  செய்வதொன்ற றியேனே.       (திருவாசகம் திருச்சதகம் 31 )

2.             சிவனின் திருக்கோலத்தைக் கோயிலில் கண்டு தன் அழிவின் அறிகுறியாகிய – உடல் நான்

மனம் நான்  ஜீவன் நான் என்னும் எண்ணம் அழிவதன் அறிகுறியாகிய  திருநீறு அவனது மேனியில் திகழ்வதைக் கண்டு அதன் உண்மையை உணர்ந்து உடற்பற்றை தன்னையே நேசிக்கும் பற்றை விடவில்லை.

3.             மனம் முன்பு பெற்ற சிவ அனுபவம் எல்லாம் இப்போது அவனைப் பிரிந்திருக்கும் நிலையில் அற்றுப்போய்விட்டனவே.  அவ்வாறு  அதனை மறந்து வி;ட்டது முறையா ?

அளவறுப்பதற் கரியவன் இமையவர்க்

     கடியவர்க் கெளியான் நம்

களவறுத்துநின் றாண்டமை கருத்தினுட்

     கசிந்துணர்ந் திருந்தேயும்

உளகறுத்துனை நினைந்துளம் பெருங்களன்

                   செய்ததும் இலை நெஞ்சே 

பளகறுத்துடை யான்கழல் பணிந்திலை

  பரகதி புகுவானே      (திருவாசகம். திருச்சதகம் 34)

இவ்வாறெல்லாம் அவர் மனத்தைக்கேட்பது அதனுடன் போராட ஆயத்தம் செய்வதைக் காட்டும்.  அப்போருக்கு வேண்டிய கருவியாகிய அன்பு மிகு – ஆற்றல் மிக்க அன்பு – தமக்கு வேண்டும் என்பார். இறைவனை  நோக்கிக் கூறுவாராய்

            போற்றி என்றும் புரண்டும் புகழ்ந்தும் நின்று

ஆற்றல் மிக்க அன்பால்  அழைக்கின்றிலேன் (திருவாசகம். திருச்சதகம் 45 )

ஆங்கில நாட்டவரான ஜி.யு.போப்இ மேலைநாட்டார்க்குத் தமிழகத்தின் கலைச்செல்வத்தைக் காட்டினார்.  நீதியின் நீர்மையை உணர்த்தினார்.  ஞானச் செல்வத்தை வழங்கினார்.  தமிழ்ப்பணியே தம் உயிர்ப்பணியாகக் கொண்டார் எனலாம். (Dr. G.U.Pope himself had truly said that Tamil Scholarship was the direct road to poverty.  Not with standing this disadvantage.  Dr.Pope had devoted almost sixty years of his life to the study of tamil Literature and to its critical examination.(Siddhanta Deepika Vol.P.192) டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை, கிறிஸ்துவத் தமிழ்த்தொண்டர் ப.11 )

ஜி.யு.போப் அவர்கள் திருவாசகத்தின்மீது கொண்டு பேரன்பினைக் குறித்து ஒரு செய்தி சைவ அன்பர்களிடையே உலவி வருகின்றது.  ஜி.யு.போப் அவர்கள் தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது கடிதத் தொடக்கத்தில் திருவாசகப்பாடல் ஒன்று எழுதிய பின்பு தான் பிற செய்திகளை எழுதுவார் என்ற செய்தி உள்ளது.  ஒரு அன்பர்க்குக் கடிதம் எழுதும்போது (பெயர் தெரியவில்லை)  ஒரு திருவாசகப்பாடலை  எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகிக் கடிதத்தின்மீது விழுந்து எழுத்தை அழித்துவிட்டது என்றும். அது திருவாசகத்தால் வந்த புண்ணியக் கண்ணீர் என்பதால்  அழிந்துபோன எழுத்தின் மீது மீண்டும் எழுதாமலேயே அக்கடிதத்தை அனுப்பியதாகக் கூறுவார்கள்.  இந்தக்குறிப்பு செவிவழிச் செய்தியாகவே வருகின்றது. போப்பின் திருவாசக மொழிபெயர்ப்புப் பதிப்புகளில் காணப்படவில்லை. நூல் ஆதாரங்கள் யாதொரு இடத்திலும் பதியப்படவில்லை என்பதனைத் திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் இன்னொரு செய்தியையும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரைக்கும் தமிழ்ச்சைவர்களுடைய தனிச் சொத்தாக இருந்துவந்த திருவாசக நிதிக்குவையைப் போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மேலைநாட்டுத் தத்துவ அறிஞர்களுக்குத் திறந்துவிட்டது என்றும்இ சொரணை கெட்ட தமிழர்களை வெட்கம் அடையச் செய்தது என்றும் தங்களுடைய பழமை குறித்துத் தமிழர்களைப் பெருமை கொள்ளச் செய்தது என்றும்இ என்றும் திருவாசகமணி பூரித்துப்போனார்.

– “… … the genuine and gigantic efforts of Dr.Pope in uttering ‘Open Seasame” to throw open the doors of te Treasure-cave of Thiruvachakam to the cultured Savants of the West , stung the Tamils of their callousness and startled them into an awakening and appreciation of their past”.

ஆங்கிலம் உலகப் பொதுமொழியாதலினால்இ அம்மொழியில் திருவாசகத்தை மொழிபெயர்த்ததினால் ஜி.யு.போப்.நம்முடைய மணிவாசகப் பெருமானைப் பலநாடுகளிலும் உள்ள பன்மொழி அறிஞர்களுக்கும் அறிமுகப்படுத்தினார் என்றும் இதைக்காட்டிலும் திருவாசகத்தையும் மணிவாசகரையும் உலகறியச்செய்வதற்கு வேறு சிறந்த வழி இல்லை என்றும் திருவாசகமணி அவர்கள் கருதினார் என்பது குறிப்பிட்த்தக்கது.

1867 முதல் 1871 ஆம் ஆண்டு வரை உதகையில் ஐரோப்பிய மாணவர்களுக்கு ஆசிரியராகப் பாடம் நடத்தினார். பின்னர் சிறந்த பள்ளியை உருவாக்கினார்.  சிறைத்தண்டனை பெற்றிருந்த ஐரோப்பியக் குற்றவாளிகளைக் கண்டு பேசுவார்.  இடைவிடாது பழைய தமிழ் நூல்களைக் கற்று வந்தார்.  பழைய ஏட்டுச்சுவடிகளைத் தேடிச் சேகரித்தார். பின் 1871 ஆம் ஆண்டு முதல் பெங்களுரில் பணியாற்றி  1872 ஆம் ஆண்டு தமது உடல்நலம் குன்றியதால் இங்கிலாந்து திரும்பினார். ஜி.யு.போப் அவர்கள் முதுமையில் தளர்ச்சியடைந்த சமயம் தமது நண்பரிடம் மூன்று விருப்பங்களை  வேண்டுகோளாகத் தெரிவித்திருந்தார்.

மூன்று இறுதி விருப்பங்கள்

1.                  இறப்புக்குப் பின் தனது கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக்கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும்  என்று வேண்டினார்.

2.                  தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.  பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் செல்வக் கேசவராயர் அவர்கள் தமிழன்பர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.

3.                  கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும்போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசகத்தையும் உடன் வைக்கவேண்டும் என்று வேண்டினார்.

காலங்கள் பல கடந்தாலும் தமிழ்ப்பணி மறவாதிருந்த ஜி.யு.போப் அவர்கள்

1908 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் மறைந்தார். அவர் மறைந்தபோது அவரின் வேண்டுகோள்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவாக,  

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பள்ளிக்கூடங்களையும் சமயப் பள்ளிகளையும் நிறுவினார்.  கிறித்தவத்தைப் பரப்ப வந்த பாதிரியாராக வந்தவர் தமிழைப் பரப்பும் ஞானியாக விளங்கினார். தமிழ் ஆங்கிலம் தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் வல்லவராகத் திகழ்ந்து மொழிபெயர்ப்புப் பணிகள், மொழிபெயர்த்துப் பதிப்புப்பணிகள்,  இதழ்ப்பணிகள் பல செய்திருந்தாலும் அவரது திருக்குறள் மற்றும் திருவாசகம் மொழிபெயர்ப்புகளே காலங்கள் பல கடந்தாலும் காலத்தால் அழியாத சிறப்பினைப் பெற்றுத் தந்துள்ளன என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இறந்தபிறகும் தன்னை ஒரு தமிழனாகவும் தமிழின்மீது தணியாத பற்றாளனாகவும் தனித்ததோர் அடையாளத்தையும் முத்திரையினையும் பதித்த பெருமைக்குரியவர் ஜி.யு.போப் என்றால் மிகையாகாது.

துணைநின்ற நூல்கள்:

1.     கம்பராமாயணம், தொகுதி.1. பதி.ஆசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், கோவை கம்பன் கழகம், கோவை பதிப்பு1994.

2.     திருக்குறள், பரிமேலழகர் உரை, பதி.ஆசிரியர். புலியூர்க்கேசிகன், பூம்புகார் பதிப்பகம் பிராட்வே, சென்னை -108. நான்காம் பதிப்பு 1986.

3.     திருவருட்பா, ஐந்தாம் திருமுறை,  அண்ணாமலைப்பல்கலைக்கழகம் இரண்டாம் பதிப்பு2004.

4.     திருவாசகம்,  ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமையாதீனம் மயிலாடுதுறை.இரண்டாம்பதிப்பு 1997

5.     நாலடியார், உரையாசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன், வர்த்தமானன் பதிப்பகம், தி.நகர், சென்னை.17.நான்காம் பதிப்பு 1999.

6.     நால்வர்நான்மணிமாலை, (உ.ஆ) வை.இரத்தினசபாபதி, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.முதற்பதிப்பு 1984.

7.     பாரதியார் கவிதைகள், சி.சுப்பிரமணிய பாரதி, பாரதி பதிப்பகம், தி.நகர், சென்னை.17. இரண்டாம் பதிப்பு மார்ச்சு 2001.

8.     புதிய தமிழ்இலக்கிய வரலாறுதொகுதி 1.  சாகித்ய அகாடெமி சென்னை.18.முதல்பதிப்பு 2013

9.     புறப்பொருள்வெண்பாமாலை, ஐயனாரிதனார், கழக வெளியீடு, சென்னை 1997.

10.   மனோன்மணீயம்,  உரையாசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன், வர்த்தமானன் பதிப்பகம், தி.நகர், சென்னை.17. இருபதாம் பதிப்பு,  ஜுலை 1993.