நம்பிக்கைக் கொள்
ஆடிக்காற்றில் ஆடிப் போனது மரக்கிளைகள் மட்டுமல்ல
குருவிகளின் குடும்பங்களும் தான்
கோடை இடி
கோபித்துக் கொண்டது
மேகதாவணையில் மின்னல் வெட்டு பருவமழை காலம்
பள்ளிப் பிள்ளைகளுக்கு சந்தோஷம் விடுமுறையின் புதல்வர்களாய்
மழை நாட்கள்
ஆயிரம் உயிர்களை அடைகாத்து
மனிதனை மட்டும் மிதக்க வைக்கும் அலைகடலே
கொஞ்சம் இரக்கம் காட்டு
கருவாடாய்
காய்ந்து போன சோதரர்கள்
காற்று இருக்குமோ
தண்ணீர் கிடைக்குமோ
சந்திரனே உண்மையை சொல்
சந்திக்க வருகிறோம்
நிரந்தர உறவுகளாய்
எலும்பில்லா உயிர்களை
ஏளனமாய் எரிக்கும் சூரியனே
நாக்கில்லா மனிதக் கூட்டம்
அவர்கள் மீதும் கருணை காட்டு வார்த்தைகளை தூய்மையாக்கு
இல்லையெனில் சாம்பலாக்கு சித்திரகுப்தனே
உன் புத்தகம் தீர்ந்து விட்டதா
புது அத்தியாயம் தொடங்கு
அனைத்து பக்கங்களையும் வெண்மையாக்கு
அனைத்தையும் வடிகட்டி
ஆயுளை நீட்டிக்கும் மரங்களே
தேவைகள் தீர்ந்த பின்
தீக்குளிக்க தீர்மானித்து விடாதே
உலக உயிர்கள்
உன்னைத்தான் நம்பியிருக்கு…
மனிதா
நம்பிக்கை கொள்
இயற்கைப் புனிதமானது
அதுவே புதுமையானது…