விளவங்கோடு வட்டாரப் பழமொழிகளில் ஒளவையாரின்
ஆத்திசூடியின் தாக்கம்
முனைவர்.ஜெ.ஜெபா
தமிழ் ஆசிரியை
செவந்த்-டே-அட்வென்டிஸ்ட் பள்ளி
விரிகோடு – 629 165
ஆய்வுச் சுருக்கம்
நாட்டுப்புற இலக்கியங்களிலே குறுகிய அமைப்புடையவை பழமொழிகள். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல் உடையன. மக்கள் மனதினிலே ஆழமாக பதிந்து நற்செயலை தூண்டச் செய்யவன பழமொழிகளே. இப்பழமொழிகளைக் கொண்டு மக்களின் பண்பாட்டையும், நாகரீகத்தையும் அளவிடலாம். நாட்டுப்புற மக்களின் அனுபவ அறிவே பழமொழியாக வெளிப்படுகிறது. விளவங்கோடு வட்டார பழமொழிகள் ஒளவையாரின் ஆத்திசூடியோடு ஒத்தக் கருத்துக்களை புலப்படுத்துகிறது.
கலைச் சொற்கள்
ஒளவையார், ஆத்திசூடி, பழமொழிகள், விளவங்கோடு, வாழ்வியல்.
முன்னுரை
பழங்காலத்து மக்கள் பட்டறிந்த உண்மைகள் பழமொழிகளாக வடிவம் பெற்றன. தமிழ் மக்களின் நாவிலே வழங்கப்பட்டு வரும் பழமொழிகள் ஒளவையின் ஆத்திசூடியை போல ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியே உள்ளன. நடைமுறைச் சிக்கல்களின் தீர்வுகளாகவும் பழமொழிகள் அமைகின்றன. அன்றாட வாழ்க்கை நடைமுறைகள் முதலான பண்பாட்டினை உணர்த்தும் தன்மையுடையது பழமொழி. விளவங்கோடு வட்டார மக்களிடையேயும் பரவலாக பழமொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தொன்மைச் சிறப்பு மிக்க இவ்வட்டார வாழ் மக்கள் பழமொழிகளை இன்றளவும் பயன்படுத்துகின்றனர். இப்பழமொழிகளில் ஒளவையாரின் ஆத்திசூடியானது எத்தகு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.
ஒளவையார்
ஆத்திசூடின் ஆசிரியர் ஒளவையார். இவர் மிகச் சிறந்த பெண்பாற்புலவர். தனது படைப்புகளின் வழி பல்வேறு நீதிக்கருத்துக்களைப் பட்டியலிட்டுள்ளார்.
ஆத்திசூடி
ஆத்திசூடி என்பது 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனப்பாடம் செய்து மனதில் இருத்திக் கொள்ளும் வகையில் சிறு சிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்துள்ளது ஆத்திசூடி.
தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள் குருகுலங்கள் முதல் இன்றும் பின்பற்றப்படுகிற கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துக்களைச் செல்லித் தருகின்ற பொருட்டு ஒளவையில் ஆத்திசூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.
பழமொழிகள்
உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களிடையே பழமொழிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாகரீகம் வாய்ந்த மக்களிடமும், நாகரீக முன்னேற்றம் இல்லாத இனக்குழு மக்களிடமும் சுருங்கிய வடிவங்கொண்ட அறிவுக்கூரிமையுடைய பழமொழிகள் வழங்கப்படுகின்றன. இவை அனுபவத்தில் கண்ட உண்மைகளின் வெளிப்பாடாகவே அமைகின்றன.
உலகுக்கு உணர்த்தும் உண்மையை ஒரு சிறிய வாக்கியத்தின் மூலம் சுருக்கிக் கூறுவது தான் பழமொழி. பழமொழி முழுமையாக இல்லாவிடினும் விளக்கிக் கூறும் போது முழுக்கருத்தும் வெளிப்படும் வகையில் அமைந்துள்ளன. சுருக்கமாக கூற வேண்டுமானால் நாட்டுப்புற மக்களின் ஆழ்ந்த அறிவையும், அனுபவத்தையும் பழமொழிகள் பிரதிபலிக்கின்றன. நாட்டுப்புறப் பழமொழிகள், மக்களின் வாழ்வோடு தொடர்புடையவை.
நாட்டுப்புற மக்களின் வாழ்வோடு பழமொழிகள் பின்னிந்துள்ளன என்றே கூறலாம். ஏடறியாத, எழுத்தறியாத மக்களால் இயற்றப்பட்டு பொது நிலையாக இவருடைய சொத்து என்று கூற முடியாத வகையில் அனைவரின் சொத்தாகவும், பொதுவானதாகவும் அமைந்தவை பழமொழிகள். மக்களை நெறிப்படுத்த உதவும் முதன்மையான கருவியே பழமொழி இப்பழமொழிகளைக் கொண்டு மக்களின் பண்பாட்டையும், நாகரீகத்தையும் அளவிடலாம். தொன்று தொட்டு மக்களால் பயன்படுத்தப்படும் பழமொழிகள் நாட்டார் வழக்காறுகளும் தனிச்சிறப்பிடம் பெற்று திகழ்கின்றன. மக்களின் இன்ப, துன்ப நிகழ்வுகளை, அனுபவங்களை நம்பிக்கையினை எளிதாகவும், இனிமையாகவும் சொல்லக் கூடியவை பழமொழிகள் வழி வழியாக, வாழையடி வாழையாக வளர்ந்து வந்துள்ள இப்பழமொழிகள் சங்க காலத்திலேயே இருந்துள்ளன.
மக்களின் அனுபவ முதிர்ச்சியையும், உண்மையையும் ஆழ்ந்த அறிவுக் கூறுகளையும் விளக்கும் சான்றாக பழமொழிகள் இன்றளவும் திகழ்கின்றன. “வெளிப்படையாகச் சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வு ஒரு வாக்கியத்தைப் பழமொழி என்றும் மற்றொரு வாக்கியத்தைப் பழமொழியன்று என்று உணர்த்துகிறது. ஆதலின் எந்த ஒரு இலக்கணமும் இந்த வாக்கியம் பழமொழி என்பதை வரையறுக்க இயலாது.
“தினந்தோறும் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களின் திரட்டே பழமொழியாகும் அறிவின் சுருக்கமே பழமொழி எனலாம். வாழ்க்கையின் உயிர் பண்பும், உணர்வுப்பண்பும், அறிவுப்பண்பும் பழமொழிகளின் கருவாக அமைகிறது. இது சிந்தனை ஆற்றலுக்கும், அறிவு வளர்ச்சிக்கும் பெருந்துணையாக உள்ளது. தமிழ்ப் பழமொழிகள் தமிழ் மக்களின் அறிவு களஞ்சியமாக கருதப்படுகின்றன.
விளவங்கோடு வட்டம்
“விளவங்கோடு வட்டம்” தமிழ் நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தின் மேற்குப் பகுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நெய்யாற்றன்கரை வட்டமும், கிழக்குப் பகுதியில் குமரி மாவட்டத்தைச் சார்ந்த கல்குளம் வட்டமும், தென் பகுதியில் அரபிக்கடலும், வடப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையும் அமைந்துள்ளது. இவ்வட்டம்1956 வரையிலும் கேரள திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. அதன் பின் 1956 நவம்பர் 1-ம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தனியொரு மாவட்டமாக உருவாகி அதனுள் விளவங்கோடு வட்டம் உதயமானது.
பழமொழிகளில் ஆத்திசூடியின் தாக்கம்
ஒளவையார் தனது ஆத்திசூடியின் வழி முன்வைக்கும் மிகப்பெரிய ஒர் அறக்கருத்து “அறம் செய விரும்பு” என்பதாகும். விளவங்கோடு வட்டாரத்தில் அறத்தை வலியுறுத்தக் கூடிய பலவேறு பழமொழிகள் காணப்படுகின்றன. “ஊரான் வீட்டுப் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” மனிதனின் வாழ்வில் பொது நலப்பற்று மிகமிகத் தேவையானது. தன்னைப் போல் பிறரையும் நினை என்பார்கள். இந்த நிலை வந்தால் பகை குறையும், மனித நேயம் வளரும். ஆதரவற்ற பிள்ளைகளுக்கும் உணவைப் பரிமாறிப் பேண வேண்டும் என்ற மிகப்பெரிய பெது நல அறத்தை மேற்காண் பழமொழி முன்வைத்துள்ளது.
பொறுமையைப் பற்றி ஆத்திசூடியானது,
“ஆறுவது சினம்”
என்கிறது. சினத்தை அடிப்படையாகக் கொண்டு,
“பொறுக்கும் மட்டும் பொறுப்பான் பிறகு கொப்பன் தான் பொறுப்பான்”
என்றும் பழமொழி வழங்கப்படுகிறது. ஒரு சிலர் தங்களது பேச்சினூடே ஒரு அளவுக்குத் தான் பொறுக்க முடியும் என்று கூறுவதுண்டு. பொறுமையாக இருக்கும் ஒருவரிடம் அவரைச் சினப்படுத்தும் விதத்தில் பேசிக் கொண்டே இருக்கிறார் ஒருவர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு அவரால் ஒரு அளவுக்கு மேல் பொருக்க முடியாமல் போகும் அப்போது இந்த பழமொழியைப் பயன்படுத்துவர். கொலத்துக்குத் தக்க கொணமும் இருக்கு” ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு குணம் உண்டு. ஒவ்வொரு சமுதாயத்தினரும் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்கு சம்பிரதாயங்களைக் கொண்டு விளங்குவர். இதனை குறிக்கும் வகையில் இப்பழமொழி உள்ளது.
“பொறுத்தார் பூமி ஆள்வார்”
இந்த பழமொழியில் எந்த ஒரு செயலை செய்யும் போதும் வருகின்ற இன்னல்களை பொறுமையாக இருந்து அந்த செயலை செய்து முடிக்க வேண்டும் என்றும் கருத்து அமைந்துள்ளது.
பெற்றோரைப் பேணிக் காக்க வேண்டும் என்னும் நோக்கில்,
“தந்தை தாய்ப் பேண்”
இப்பாடலை உள் வாங்கிய வண்ணம்,
“உள்ளத்துக் குற்றம் கோடி யிருந்தாலும்
பிள்ளைக்குள் தாய்க்கும் பிணக்கில்லை”
என்ற பழமொழி விளவங்கோடு வட்டாரத்தில் வழங்கப்படுகிறது. பிள்ளைகள் தவறு செய்யும் போது அதனைக் கண்ட தாய் கண்டிப்பார். ஆனாலும் அப்பிள்ளைத் தாயிடமும், தாய் அப்பிள்ளையிடமும் உள்ளார்ந்த பாசத்துடன் பழகுவர் இது போன்று பெரியத் தவறுகள் நடந்திருந்தாலும், குடும்பத்திற்குள் பிரச்சனைகள் இருந்தாலும் தாயின் மனநிலையும் பிள்ளையின் மனநிலையும் சேர்ந்தே இருக்கும்.
“இனிய பிறவியையும் இன்பமுள்ளத் தாயாரையும்
கடுகவே மறக்க வைத்தாள் கட்டழகி பொண்டாட்டி”
பெண்கள் புகுந்த வீட்டிற்குச் செல்கையில் அங்குள்ளவர்களை மதித்து அன்புடன் பழக வேண்டும். மாறாக சில பெண்கள் ஒருவரையும் மதிக்காமல் தனது மாமியாரையும் கவனிக்காமல் இருப்பர். அதோடு தன் கணவனையும் மாற்றிவிடுவர். இதனால் அக்குடும்பத்தின் அமைதி போய்விடும் எப்போதும் ஒரு விதக்குழப்பமே அங்கு நிலவும்இப்படிப்பட்டச் சூழ்நிலையில் இப்பழமொழியைப் பயன்படுத்துவர். தாய் என்பவள் மிகவும் சிறப்புடையவள். அத்தகையவரை எப்போதும் கைவிடக் கூடாது என்பதையும் இப்பழமொழி சுட்டுகிறது.
“தாயைப் போல பிள்ளை நூலை போல சேலை”
தாயைப் போன்ற குணநலன்களைக் கொண்டு நடக்கும் குழந்தைகளை பார்த்து இப்பழமொழியைக் கூறுவர். தாய் என்பவள் தனது பண்புகளைத் தன் பிள்ளைகளுக்கும் பகிரும் உன்னதமான படைப்பு என்பதை இதன் வழியாக உணர முடிகிறது.
செயலைச் செய்யும் போது அதன் காலத்தே செய்து முடித்தல் வேண்டும் அதனை பற்றி ஆத்திசூடியில் ஒளவையார் கூறும் போது,
“பருவத்தே பயிர் செய்”
என்கிறார். மழைக் காலத்தில் எந்த பயிர் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வெயில் நேரங்களில் எந்த பயிர் செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பயிர் செய்தல் வேண்டும். அதனையே,
“பருவமறிந்து பயிர் செய்”
என்கின்றனர். காலத்திற்கேற்ப பயிர் செய்யும் முறைகளை தெரிந்து வைத்துக் கொண்டு பயிர் செய்ய வேண்டும். அப்போது தான் நல்ல பலனும் கிடைக்கும் நிலமும் அதன் வளத்தினை இழந்து விடாமல் செழிப்பாக இருக்கும்.
விளவங்கோடு வட்டாரத்தில் உணவு முறைகளில் கீரைகளுக்கென்றே தனி இடம் உள்ளது.
“கீர சின்ன துண்ணாலும் தூர அறியலாமா”
என்ற பழமொழியானது கீரை சிறியது தான். ஆனாலும் அதில் உள்ள சத்துக்கள் அதிகம். அது போல சிலர் எளியவர்களாக இருந்தாலும் மிகவும் திறமைசாலிகளாக இருப்பார்கள் அவர்களை ஏளனமாக எண்ணி ஒதுக்கி விடக் கூடாது என்னும் கருத்தை இப்பழமொழி வலியுறுத்துகிறது.
முடிவுரை
விளவங்கோடு மக்களின் வாழ்க்கையில் பழமொழி முக்கிய இடம் பிடித்துள்ளது. உண்மையான கருத்துக்களைக் கூறும் விதமாக பழமொழிகள் அமைந்துள்ளன. அறம் அந்தந்தக் காலத்தே செய்யும் செயல்களை செய்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் இளமையில் கல்வி கற்க வேண்டும் என்று ஆணித்தரமாக கூறியுள்ளார். இவற்றின் மூலம் ஆத்திசூடியில் வியவங்கோடு வட்டார மக்களின் பழமொழியில் தாக்கம் புலப்படுகிறது.
சான்றெண் விளக்கங்கள்
1. நாட்டார் வழக்காறுகள், தே. லூர்து, மாணிவாசகர் பதிப்பகம், லிங்கிச்செட்டித் தெரு, சென்னை – 600 001
2. நாட்டுப்புறவியல் ஆய்வு, சக்திவேல்.சு., மாணிக்கவாசகர் பதிப்பகம், சென்னை.
முதன்மையானவைகள்
|