மயங்கா மரபின் மென் அறிமுகம்
(தலைமுறைக்கும் கனியாகும் வரலாற்றுப் பதியன்கள்)
கணியன் ஆற்காடன்
I. பாயும் ஒளி (முன்னுரை)
ஞாயிறு போற்றுதும் என்பது போன்றே, ஓர்
வாழ்வியல் மரபும் போற்றுதலாகிறது. மயங்கா மரபின் எழுத்துத் திறம் காட்ட எழுந்ததாக
அறிமுகமாகிறது தொல்காப்பியம். ஒலிக்கற்றைகளை சித்திரமாக்கும் சீரிய நுண்கலையே மொழியின்
எழுத்துக்களாயின. கீழடி, சிவகளை, அகழ்வாய்வு பானை ஓட்டு சிறுக்கல்கள், தமிழின் வாயிரம்
ஆண்டு அறிவியல், மொழியின் தொன்மையை உறுதிப்படுத்துகின்றன. சிந்துவெளி நாகரிகமும்,
வைகை நாகரிகமும் ஒரே இனத்தின் பண்பாட்டு தொடர்ச்சியாக பல்வேறு எச்சங்கள் மிளிர்கின்றன.
அந்த பெருஞ்சித்தி சோலையின் சில காட்சிகளை பார்ப்போம்: பயனுறுவோம்!.
II. சரித்திர உலா (ஆறு காட்சிகள்)
காட்சி 1: தொல்காப்பியம், உயிர்கள் பலவற்றையும்;
உறு, சுவை, ஒளி, ஓசை, நாற்றம், மனம், என்று ஆறு உணர்வுகளின் தொடர் அடுக்குகளாக
பிரித்து, ஓர் பரிமாண வளர்ச்சியாக முல்வைக்கிறது. சார்லஸ் டார்வினின் தற்காலத்து
கருத்தியல் சாயலை, அன்றே கண்டது தொல்காப்பியத்தின் தனிச்சிறப்பாகின்றது.
நிலத்தை; குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,
பாலை என ஐந்தாக வகைப்படுத்தி; ஒவ்வொன்றுக்கும், தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை,
பறை, தொழில், யாழ், பண், ஊர், நீர், மலர் என்று கட்டமைத்து, மகிழ்வுடன் மக்கள்
வாழ்ந்திருந்தனர். தமிழரின் வெள்ளந்திய வாழ்வியல்; குலதெய்வம், நடுகல், முன்னோர்
வழிபாடு என்று இயற்கையோடு இயந்திருந்தது.
ஆசிவக மதம்; புத்தம், சமணம் போன்றே,
கடவுள் கோட்பாடு சாரதது. அதன், “தற்செயல், அணுவியல், பெருவெடிப்பு கோட்பாடுகள”, தற்கால இயற்பியலை ஒத்திருப்பது வியப்பும்,
சிறப்புமாகும். துறவிகள் மலையின் குகைப்படுக்கைகளில் வாழ்ந்து, தாழிகளில் தவமிருந்து;
மாயத்தில் தோயாத மறையோர்களாய், மக்களுக்கு வாழ வழிகாட்டினர். முக்கிய குறியீடாக
யானையும், ஆறு வண்ணங்களில் விரிந்து, பதினெட்டு படிநிலைகள் கொண்டு இயங்கிய ஆசிவகத்தை,
அசோகரின் தந்தை பிந்துசாரர் மற்றும் கண்ணகியின் பெற்றோர் பின்பற்றினர். ஆசிவக
ஊழ் கோட்பாடு; குறிப்பாக தீயகூழ் மக்களை கலக்கமுற செய்தபோது பெளத்த, சமண, வைதீக மதங்கள்
ஊக்கமும், நம்பிக்கையும் தந்தன. எனவே ஆசிவகம் அழிந்தது! யானையின் வயிற்றை கிழித்து,
தோலை விரித்து, சிவன் தன் முதுகை போர்த்தியிருக்கும் அற்புதச் சிலை; கஜசம்ஹாரம்!
சைவம், ஆசிவகத்தை வென்றதின் வரலாற்றுப் பதிவு அது!.
மகான் புத்தர், ஆசிவகத்தால் ஈர்க்கப்பட்டார்
என்று அறிகிறோம். நாகர் என்ற தென்இந்திய மக்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்ததை
அம்பேத்கார் பகர்கின்றார். ஆசிவகம் தெற்கே இருந்து வடக்கு போனதா, இல்லை அங்கிருந்து
இங்கே வந்ததா, என்ற கேள்வி ஆய்வில் உள்ளது. மொத்த இந்திய வரலாற்றை தெற்கேயிருந்து,
தமிழ்மொழி வாயிலாக பார்க்கப்படவேண்டும்!. இதை பல ஆண்டுகளுக்குமுன், மனோன்மணியம்
சுந்தரனார் அறிவுறுத்தியது, நினைவு கூறத்தக்கது! ஆசிவகம் ஆதி தமிழ் மக்களின் முதல்
மதமாக இருந்திருக்க வாய்புள்ளது; இந்தியா முழுமையும் அதன் வீச்சு இருந்திருக்க கூடும்!
அதன் நூல்கள் என்று ஏதும் கிடைக்காதது வியப்பாகிறது!.
காட்சி 2: மயங்கா மரபு என்றால் என்ன? இதோ
சில எடுத்துக்காட்டுகள்: கணவன், ஒரு சிலம்பு கள்வன் என்று தவறுதலாய் குற்றம் சாட்டப்பட்டு
கொலையுண்டதும்; அவன் மனைவி ஒற்றை ஆளாய் அரசினிடம் வாதிட்டு தன் சிலம்பை உடைத்து
ஆதாரத்துடன் வழக்கை வென்றது மயங்கா மரபு! நீதி தவறிய அரசன், அரசி உடனே உயிர்துறந்தது
அம்மரபின் மாண்பு!- உயர் நீப்பர் மானம்வரின், என்பதாக!.
விளையாட்டாய் தேரோட்டிய இளவரசன், விபரீதமாய்
கொல்லப்பட்ட பசுங்கன்று! கன்றையிழந்து நீதிகேட்டு ஆராய்ச்சி மணி அடிக்கும் பசு! உண்மை
அறிந்த மன்னன், தன் மகனை தேர்சக்கரத்தின் கீழே கிடத்தி, கன்றைப் போன்றே மாய்த்ததும்,
அதே மயங்கா மரபுதான் - பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும், என்பதாக! நெல்லும் நீருமா
உயிர்? மன்னன் செங்கோலே! என அமைதியானது பசு! சமநீதியின் இக்காட்சி, சிலையாக இன்றைய
உயர்நீதிமன்றத்தில் துலங்குகிறது.
புது சைவ, வைணவ, மதங்கள்; சமண, பெளத்த
சமையங்களுடன் போட்டியிடுகின்ற காலம். ஆசிவகம் முற்றாய் வழக்கொழிந்து போயிற்று. பேரரசுகள்
வானளாவிய கோபுரங்களுடன், பெரிய கோவில்களை எழுப்பி, மாநகரங்கள் நிர்மாணித்தனர். தமிழ்நாடு
கோவில் தேசம் என்றாகியது. ஆனால் தமிழ் வழிபாட்டு மொழியாகவில்லை! அரசர்கள் சூழ்ச்சி
வலையில் வீழ்ந்தனர். தெய்வ மொழியில் இறையருள் பெறுதல், ராஜரிஷியால் முடிசூடல்,
சூரிய, சந்திர வம்சசேர்க்கை, பல்வேறு வேள்விகள், உயிர் பலிகள், சொர்கம், மோட்சம்,
பரிகாரங்கள் என எண்ணற்ற கபட கருத்துகள்! மரத்தில் மறைந்த மாமதயானை போல், யாகத்து
புகையில், மந்திர ஓசையில் மறைந்தது மயங்கா மரபு!. ஆரியப்படை கடந்த மறவர், அதன்
மாயையில் வீழ்ந்தனரா? சொல்லுவானேன்! மயக்கத்தில் மன்னன்; மயங்கா மரபுவழி மக்கள்!
காட்சி 3: ஆட்சி, அதிகாரம் துணையின்றி,
படைப்பாளிகளால் ஆக்கப்பட்டு, பாமரர்களால் பேசப்பட்டு இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாய்
தொடர்ந்து வாழ்வதால், தமிழ் செம்மொழி ஆனது! பின்னாளில் ராஜராஜன், பெரியகோவிலில்
தேவாரம் ஒலிக்கச் செய்தும், வட்டெழுத்தை தற்போதைய தமிழ் எழுத்தாக்கியும், அருள்மொழி
வர்மன் என்ற பட்டத்துக்கு தகுதியாகிறார்.
வள்ளுவனின் திருக்குறளை பட்டத்து யானை
மேல் வைத்து எந்த பேரரசனும் கொண்டாடவில்லை என்பது கவனிக்கதக்கது. நூலுக்கு பெயரில்லை,
ஆசிரியரும் யார் என்று தெரியவில்லை என்ற அலட்சியமா? கருத்துக்கள் அனைத்தும் அறிவார்ந்து
இருக்கிறதே என்ற அச்சமா? அறியோம்! தமிழ்நாட்டில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாதியில்,
மக்களாட்சி மலர்ந்த பின்பே; திருக்குறள், தமிழரின் பண்பாட்டு கலங்கரை விளக்கமாகி
ஒளிர்ந்தது.
“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற மணிவாசகம் உலகப் பிரசித்து பெற்று,
ஐக்கிய நாடுகள் சபையில் எதிரொலித்தது. இன்றைய அறிவியல், உலக சந்தை, அணு ஆயுதம்,
சுற்றுசூழல் என வாழ்வியலுக்கு பொருந்திய, தமிழரின் 'மெய் கீர்த்திகள்' சிலவற்றை
அணிவகுப்போம் 1) ஒன்றே குலம், ஒருவனே தேவன் 2)நீரின்றி அமையாது உலகு 3)உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே 4) ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் 5) எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்ல வாழிய நிலனே 6) செல்வத்துப் பயனே ஈதல் 7)பகுத்துண்டு பல்லுயிற் ஓம்புதல்
8)கற்றது கைமண் அளவே 9) அறிவுடையோனோடு அரசும் செல்லும் 10) கோடி தொகுத்தாலும் துய்த்தல்
அரிது 11) நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் 12) கீழிருந்தும்
கீழல்லார் கிழல்லவர் 13) மாட்சிமையில் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல்
அதனினும் இலமே 14) பழயன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, கால வகையினானே! மேற்சொன்ன
வைரவரிகள், மயங்கா மரபின் விழுமியங்களாகின்றன!
காட்சி : 4 வட இந்தியாவில், ஓர் முகமதிய
படையெடுப்பால், புத்த மதம் முற்றாய் அழியத் தொடங்கியது. நளாந்தா என்னும் ஆசியாவின்
மிகப்பெரிய நூலகம் தீக்கிரையானது. விகாரங்கள் தகர்க்கப்பட்டு, புத்தர் சிலைகள்
உடைத்தெறியப்பட்டு, பெரும் செல்வங்கள் சூரையாடப்பட்டன. பெளத்தர்கள் பெரும்பாலோர்
கொல்லப்பட்டும், எஞ்சியோர் நாட்டை விட்டே துரத்தப்பட்டோ, அல்லது இஸ்லாம் மதத்துக்கு
மாற்றப்பட்டோ அப்போர் முடிவுற்றது. தெற்கே; ஸ்ரீரங்கம், சிதம்பரம், மதுரை கோவில்களும்
அவ்வாறே தாக்கப்பட்டு, செல்வங்கள் சூரையாடப்பட்டு அழிவுற்றன.
இதற்கு முன்னர், ஆதிசங்கரர், கேரளாவின்
காலடியிலிருந்து புறப்பட்டு இந்திய திக்விஜயமாக பல நகரங்களை, மக்களை சந்தித்து, இந்தியாவின்
முடி என்னும் இமயமலை கோவில்களை தரிசித்து, மீண்டும் காலடி திரும்புகிறார். திசைக்கொரு
பீடம் /மடம் என நிர்மாணித்து இந்துமத மறுமலர்ச்சிக்கு வித்திடுகிறார். பிரிந்துபட்டு,
மிகவும் சண்டையிட்டுக் கொண்டிருந்த மெய்யில்லாளர்களை வாதில் வென்று; அவர்களை சமரசம்
செய்து, ஐந்து வகை தெய்வங்கள் கொண்ட: கணபதி, சைவம், வைணவம், சக்தி, ஆதித்தியன்,
வழிபாட்டினை நிறுவினர். பின்பு தென்இந்தியாவில் முருகன் முக்கியம் என்பதால்,
அதை சேர்த்து ஆறு தெய்வ வழிபாட்டை விஸ்தரித்தார். இன்றளவும் இவைகள் இந்துமத ஒற்றுமையை
நன்றே காத்துவருகின்றன.
இந்த சூழலில், மகான் புத்தனை, விஷ்ணுவின்
ஒன்பதாம் அவதாரமாக்கினார். தகர்ந்த பெளத்த விகாரங்கள் விஷ்ணு கோவில்களாக மாற்றி
புதுப்பித்தார். இச்செயல் சங்கரம் மீது சரித்திரகளங்கமாக உறைந்திருக்கிறது. பிறந்த
நாட்டிலிருந்து துடைத்தெறியப்படும் ஓர் விபத்திலிருந்து புத்த பிரானை காத்து இந்நாட்டில்
நிலைத்து வைத்தமைக்கு நிம்மதி கொள்ளலாம்! மாறாக; புத்தமதத்தை இந்நாட்டில் முற்றாக
புதைத்து அழித்ததாக்வும் சங்கரன் மீது பழி சொல்லலாம்.
இந்த தர்மசங்கடங்களில்; மயங்கா மரபின்
இமயங்களான புத்தர், சங்கர் இருவருமே அறிவார்ந்து நகைப்பதாகவே கொள்ளலாம் போலிருக்கிறது!
“வேதம், வேள்வி, மதம், மறுத்து ஆனந்தமயாமானவன் பிரம்மன்” என்கிறது. சங்கரரின் நிர்வாணாஷ்டகம்
எனும் நூல்! ஆசிவக, புத்த கருத்துகள்; வைதீக, சைவ மற்றும் வைணவற்றில், கலந்து
மக்களுக்கு நன்மை பயக்கின்றன - உணவில் உப்பு போல்!.
காட்சி: 5 இந்து மத மறுமலர்ச்சிக்கு, தென்
தமிழ்நாட்டிலிருந்து கிளம்பிய பெரும் இசைப் பிரவாகம், இந்திய தேசம் எங்கும் பிரவேசித்து
பக்தி இயக்கமாக பெரும் பங்காற்றியது. ஆதிசங்கரரின் திக் விஜயம் போல் பயனளித்தது!
தமிழ் பாசுரங்கள் புனைந்த ஞானக்கொழந்துகளாக 12 ஆழ்வார்களும், 63 நாயன்மார்களும்
முறையே வைணவ மற்றும் சைவ சமய வழிபாட்டுக்கு ஏற்றமும், அழகும் தந்தனர். தமிழில்
எழுந்த அப்பாசுரங்கள், திராவிட வேதம் என்று ஏற்கப்பட்டு ஐந்தாவதாக சேர்க்கப்பட்டது,
வரலாற்று வெற்றியாகிறது. திருபெரும்புதூர் ராமானுஜர் இதற்கு பெரிதும் காரணமாயிருந்தார்,
தமிழரால் போற்றப்பட்டார்!
பெண் புலவர்களில், ஆண்டாள் மிக்க பிரசித்தி
பெற்று விளங்கினார். திரு.அரங்கனை ஆண்டவள், தமிழை ஆண்டவள், புகழ்மிக்க “வாரணம்
ஆயிரம்”கொண்டு காலத்தை வென்றவள்! வட இந்திய மீராபாய்,
ஆண்டாளின் வழித்தோன்றல் என்று கொள்ளலாம்! நாடெங்கும் வர்ணாசரம பேதங்கள் பக்தி
வெள்ளத்தில் முழ்கியதால், கீழ்சாதி பண்டிதர் எல்லாம் போற்றப்பட்டனர். கோவில்
கருவறைக்குள் நுழைய முடியாத தமிழ், தெருவெல்லாம் ஓடி ஒலித்து நாடெல்லாம் சூழ்ந்தது,
மயங்காமரபின் இசை புரட்சி எனலாம்!.
காட்சி: 6 தஞ்சை பெரிய கோவில் ஓர் பொருளியல்
மேம்பாட்டு சின்னம், செறிந்த கலைக்கருவூலம்! அதுபோன்ற சோழர் காலத்து, சிதம்பர தாண்டவ
நடராஜரின் செப்புத் திருமேனி உலகப்புகழ் பெற்றது. இந்து மத அற்புத குறியீடாக இச்சிலை
உலகெங்கும் இல்லங்களை அலங்கரிக்கிறது. எடுத்த பொற்பாதம் கொண்டு ஆடும் நடன சிலை “ஆக்கமும்
அழித்தலும் உலகில் சமம்” என்ற அறிவியல் கருத்தியலுக்காக பாராட்டப்பெற்று;
ஜெனிவாவின் அணுப் பகுப்பாய்வு கூடத்தை சென்று அடைந்து, தமிழ் கலாச்சாரத்தை, அழகியலை,
உலோகவியலை எடுத்து இயம்புகிறது. இது மயங்கா மரபின் மற்றொரு எழில் உச்சம் என்றாகிறது.
பரதநாட்டியம், தமிழ் கலாச்சாரம் அளித்த
கலைக்கொடை எனலாம்! தொன்று தொட்டே, நாடகத் தமிழ் சிறந்து விளங்கி வந்ததை சிலப்பதிகாரம்
அறிவிக்கிறது. நாடக அரங்கு என்ன அளவில் இருக்கணும், மேடை என்ன உயரத்தில் அமைய வேண்டும்,
இசை கொண்டு நடனம் இயக்குபவனை, “அசையா மரபின் இசையோன்” என்றும் அரங்கேற்று காதை விளக்குகிறது.
ஆதியில், தேவதாஸிகள் என்பவரால், கோவில்
விழாக்களில் “சதிர்” என்று பாடிக்கொண்டே ஆடப்பெற்றது. பிறகு சுதந்திர இந்தியாவில்,
தேவதாஸி முறை ஒழிக்க சட்டமியற்றப்பட்டது. இந்தக்கலையும் கூடவே ஒழியும் தருவாயில்,
திருமதி.ருக்மணிதேவி அவர்கள் (சென்னை கலாஷேத்ரா நிறுவனர்) “சதிர்” என்பதில் உள்ள அதீத காம சொருபங்களை நளினப்படுத்தி,
நவீனப்படுத்தி, நடை, உடை, பாவனை, பாடல்கள், இசை கருவிகள் என அனைத்தையும் பண்படுத்தி;
குடும்பப் பெண்கள் ஏற்று, கற்று, ஆடும்படி வடிவமைத்தார். கோவில்களில் நடன சிலைகள்
கூறும் பரதநாட்டிய கரணங்கள், அவரது சொந்த நாட்டிய புலமை, சர்வதேச நாட்டியங்கள் பற்றிய
அறிவும் அனுபவமும் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த நாட்டியம், நன்முத்தாய் இன்றும்
ஒளிர்கிறது. அயல் நாட்டு தமிழ் மக்களிடமும் வழங்கிவருகிறது. ஆண்டுதோறும், சிதம்பரத்தில்
நிகழும் நாட்டியாஞ்சலி; உலகத் தமிழர் சேர்ந்து, கடந்த நாற்பது ஆண்டுகளாய் கொண்டாடுகின்றனர்.
இதுவும் மயங்கா மரபு தானே?!
III. அம்பறாத்தூணி (ஆறு முனைவு அம்புகள்)
மைக்கேல் உட் என்னும் உலகம் சுற்றிய
வரலாற்று ஆசிரியன், 2007 ல், பி.பி.சி இல் “இந்தியாவின் கதை” என்ற தொடரில்; “தமிழ்நாட்டு மக்களின்
பண்பட்ட கலாசார தொடர்ச்சி, உலகில் எங்சியிருக்கிற கடைசி தொன்மையான நாகரிகமாக இருக்கிறது” என்று வியந்து புகழ்ந்தார்!
தமிழ் பண்பாடு; இலங்கை, இமயம், ஆசியா
கடந்து பல்வேறு கண்டங்களிலும், தீவுகளிலும் பரவி வாழ்கின்றது. உலகெங்கும் சிதறியுள்ள
தமிழ் பெயருள்ள பழமையான ஊர்களே இதற்கு சான்று! புலம் பெயர்ந்தவர்கள், உலக குடிமக்களாக
விரிந்த மனம் படைத்து சிறக்கின்றனர்!
இவ்வளவு எழிலார்ந்த சித்திர சோலையின் சரித்திர
காட்சிகளாய் தொடரும் தமிழரின் வாயிரம் ஆண்டு நாகரிகத்தை, “மெய் கீர்த்திகளை”, மயங்கா மரபை பேணி; அதன் உலகளாவிய மறுமலர்ச்சிக்கு
இணைந்து முயல்வோமா? ஊர் கூடி இழுத்த தேர் திருவிழாவாக ! அதற்கு வேண்டிய முனைவுகளை
பார்ப்போம்:-
முனைவு:1 தமிழக கோவில்களில், தமிழ் வழிபாட்டு
மொழியாகவும், நீதிமன்றங்களில், வழக்காடு மொழியாகவும், ஆக வலியுத்துவோம். தமிழில்
அர்ச்சனை வேண்டும் என மக்கள் விழிக்க வேண்டும்!
கோவில்களால் சிறைப்பட்ட யானைகள், பூம்பூம்
மாட்டுக்காரனுடன் அலைகழிக்கப்படும் மாடுகள், ஜோசியக்காரனின் கூண்டு கிளிகள், என
வருந்தும்உயிரினங்களை விடுதலை செய்து நிம்மதியடைவோம்.
கழுமரங்களை தொழுதல், கழுவேற்றம் பற்றிய
சித்திரங்கள், ஏனைய கொடுர நினைவேந்தல்களை கோவிலில்களில் நிறுத்திவிடணும். சமைய வெறுப்பு,
காழ்ப்பு இல்லாத புதிய தலைமுறை உருவாக முயற்சிப்போம்.
“சிவன் சொத்து, குல நாசம்!” என்று கூறிக்கொண்டே, சிலை மற்றும் நகைத்
திருட்டுகள் தொடர்கின்றன! கோவில் சொத்துகள் முறையாக பாதுகாத்தும், பொது பணிக்கும்
செலவிடலாம். தவறின், கொள்ளைகள் தொடரும் ! ஐயமில்லை!!
முனைவு: 2 இனிமை, எளிமையான வழிபாட்டு முறைகளுக்கு
முயல்வோம். பக்தர்கள் மண்டை மீது தேங்காய் உடைத்தல்; ஏனைய உடலை வருத்தும் கோமாளித்
தனங்கள் ஆபத்தானவை! பயமுறுத்தும் வன்முறைகள், சர்க்கஸ் காட்சிகளாவன, சட்டத்தால்
அங்கீகரிக்கப்படாது!
கண் டிப் பழக்கமெல்லாம் மண் டிப் போக
வேண்டும் என்று முழுங்கி, ஏழு வண்ணத் திரைகளை விலக்கி, அருள் பெரும் சோதியை வணங்க
முயன்றார் ராமலிங்க வள்ளலார். இந்த வண்ணத் திரைகள், பழய ஆசிவக கோட்பாடைக் கூட நினைவு
படுத்தக்கூடியது. பிறகு, அந்த ஏழு திரைகளை தவிர்த்தார்; மதக் கூறியிடுகள் விடுத்தார்,
சைவ ஞானப்பழம்! பூசாரி, அர்சனை, ஆரதனை தட்டு, அதில் விழும் தூறல் துட்டு என்று
ஏக அனைத்தையும் களைந்து, ஓர் எளிய தீபம் போதும் என்றார்! ஓர் அறிவார்ந்த ஆன்
மீகத்துக்கு அடி எடுத்துக் கொடுத்தார்; சீர் செய்தார்!
புலால் மறுத்தானை எல்லா உயிரும் தொழும்
என்ற குறள் நெறியே; வள்ளாலாரின் தனிப்பெரும் கருணையானது! “வாடிய பயிரை கண்ட போதெல்லாம்
வாடினேன்”
என்று, ஊரில் தலைவிரித்தாடும்
பஞ்சத்தை படம் பிடிக்கிறார்; அது தீர, அருளை முன் நிறுத்துகிறார். பசிப்பிணி போக்கும்
மணிமேகலையின் அட்சயபாத்திர கருத்தியல் ஏற்றம் கொள்கிறது. அவர் தொடங்கிய அணையா அடுப்பும்,
அன்னதானமும் இன்றும் வளர்கிறது; பல அரசுகளும் இதை தொடாகின்றன. இதுவே மயங்கா மரபின்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பலாகும்! பசியற்ற சூழலில் தான்; அமைதி, அன்பு, அறிவு,
கலை, உழைப்பு எல்லாம் தழைக்கும்!
முனைவு: 3 தமிழர் இல்லங்களில், தூய தமிழ்
பேசி புழங்கணும்; குழந்தைகள் தமிழ் பெயர் சூடணும், கையொப்பம் தமிழில் மிளிரலாம்!
பிறப்பு, திருமணம், இறப்பு என்று எல்லா நிகழ்வுகளை தமிழ் மரபில்; ஏற்ற பாடல்களுடன்
இனிதே, ஏற்றமாய் நடத்திடலாம்!
தமிழ்நாட்டு சீர்திருத்த திருமணம், சட்டவடிவம்
பெற்று ஐம்பது ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. கேரளத்து, இடுக்கி சிவாநந்தர்; வள்ளுவன்
கோவிலில், குறள் ஓதி திருமணம் செய்விப்பது, நாற்பது ஆண்டுகளாய் உள்ளது. மேற்குவங்க
பெண் புரோகித குழுமம், தாகூரின் பாடல்கள் கொண்டு திருமணம் செய்விப்பது அறிகிறோம்!
இந்த முன்மாதிரிகள் மென் மேலும் பரவணும்: “நிறை மொழி மாந்தர் ஆணையின் கிளக்கும்
மறைமொழிதானே மந்திரம் என்ப!” என
தொல்காப்பியம் கூறுவது, மகிழ்ச்சியானது! ஏற்புடையது!
வள்ளுவன் ஓர் வான வரம்பன்! நாற்பதுக்கும்
மேற்பட்ட உலகின் மொழிகளில் குறள் அச்சாகி, யாங்கணும் நீக்கமற நன்றே நிறைந்திருப்பவன்.
யானைக்கு அதன் தந்தங்கள் கம்பிரமாவது போல, மயங்கா தமிழ்மரபுக்கு, திருக்குறள் “யானைக்
கோடு”ஆகிறது!
குறளின் கருத்துக்கள் பொது அறம் சார்ந்தவை;
மொழி, இனம், நாடு, மதம் என்ற பிரிவுகளை கடந்து, அனைத்து மக்களை நெறியுடன் நடத்தும்
உன்னதம் கொண்டுள்ளது. ஐம்பத்து ஐந்து சங்க புலவர்கள், திருவள்ளுவ மாலை எனும் நூலை
யாத்து, தொகுத்து போற்றினர்! குறிப்பாக கபிலரின் போற்றுதல் தனிச்சிறப்பாகிறதை காண்போம்:“சிறுபுல்ஙனி
தொங்கும் பனித்துளியில், அருகே உள்ள உயர் பனைமரம் முழுதும் பிரதிபலிப்பது போல்,
குறள் தன் இரு சிறிய அடிகளை கொண்டு, மனித வாழ்வியலின் ஒவ்வொரு உயரத்தையும் சொல்ல
வல்லது”! ஆகவே தான், “வள்ளுவன் தன்னை உலகுக்கே
தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று போற்றப்பட்டது. “உன் சீரிளமைத் திறம் அறிந்து செயல்
மறந்து வாழ்த்துதுமே” என்று தமிழ் மொழி வாழ்த்துப் பெற்றது!
முனைவு: 4 “முல்லைக்கு தேர் கொடுத்தான்
பாரி” என்பது, விளை நிலங்கள் போன்றே; காடு,
மலை, அருவி, ஆற்று, வளங்களும் இன்றியமையாதது என்னும் “மெய்கீர்த்தியாக”எடுத்துக் கொள்ள வேண்டும். கோவில் தலவிருட்சம்
போற்றப்படுவது; ஒளிச்சேர்க்கையின் அபூர்வத்தை உணர்த்தி, உலகத்து உயிரின – வலைப்பின்னல்
அதனாலேயே சாத்தியமாயிற்று, என்பதன் அறிவியல் குறியீடாகும்! உயிரினங்கள் அனைத்தும்
ஓர் பொது சமனினில் வாழ்தலே, மானுடம் தொடர ஏதுவாகும்! பூமியில வாழும் வொவ்வொரு
உயிரும், எரியும் ஓர் புனித ஙந்தா விளத்கென நாம் போற்ற வேண்டும். மண்ணுலகமே, ஓர்
உயிர்ப்பான அற்புத கருவறை என்றால் மிகையில்லை! மாயான் நாகரிகம், சுற்று சூழல் சீர்கேட்டாலும்,
கடும் வறண்ட வானிலையாலும் அழிந்ததாம்! இயற்கையின் எச்சரிக்கைகளை புரிந்து, அதனுடன்
இயைந்து பயணிப்போம்.சிந்துவெளி நாகரிக அழிவும் , இந்த கோணத்தில் நோக்க வேண்டியுள்ளது!
சரித்திரம் வழங்கும் பாடம்; பூகோள ஆரோக்கியம் முக்கியம் என்பதே! அறிவியல் மற்றும்
புது கண்டுபிடிப்புகள் அனைத்தும்; கணித சமன்பாடுகள் மற்றும் வரைபடங்கள் வாயிலாகத்தான்
வடிக்கப்படுகின்றன. அதன் விளக்க உரைநடை எந்த மொழியில் வேண்டுமானாலும் சாத்தியம்-
தமிழ் உட்பட! எனவே அறிவியல் முனைவுக்கு, மொழி எப்போதும் தடையில்லை என உணர்வோம்.
முனைவு: 5 வையத்து வாழ்வாங்கு வாழ்தல்,
மையக்குறிக்கோள்; வேற்று உலகம் பற்றிய கற்பனைகள், கருத்துக்கள், அனைத்தும் கவனச்
சிதறல்கள்; காலம் மற்றும் உழைப்பின் விரயம்! தீது இன்றி ஈட்டிய பொருளை தனக்கும்,
சார்ந்தோர்க்கும் பயனுறச் செய்து; சூழிய மலை,காடு, ஆறு, விலங்கள், விளை நிலங்களை
, அடுத்த தலைமுறைக்கும் பயனுற கொடுத்தலே, வாழ்வியல் சான்றாண்மை! மயங்கா மரபின் இலட்சியம்!
மயங்கா மரபு
“ மேல், கீழ் லோகங்கள் மறப்பீர், மண்ணுலக
மகத்துவம் அறிவீர்!
உயிர்கள் தோன்றி, மறைந்து, தொடரும், அண்டத்து
அதிசயம்உணர்வீர்!
எறும்பு முதல் யானை வரை, விதை தொடங்கி
பல பறவை என;
எல்லாமும், யாவையும் பாரினில் சொந்தங்களே!
ஆதலால்,
நிலம், நீர், காற்று, விசும்பினை, ஏதும்
பாழாக்காமல்;
சந்ததிக்கும் தந்து இனிதே விடைபெறுவோம்!
வீடு பேறு என்பதே மண் மீதுதான் ; மேகத்துக்கு
மேல் இடி, மின்னலே!
மயங்கா மரபிதன் மாட்சிமை போற்றுதும்!
மன்னுயிர் பிணைந்தே மானுடம் வாழுதும்”!!
முனைவு: 6 பல்லாணடு ஒழுக்கத்தால் ஈட்டப் பெற்ற
இந்த சான்றாண்மை, ஜீன்ஸ் என்றும் மரபணுவாக தேகத்தின் வழி பயணித்து அடுத்த தலை முறைக்கு
நன்மை பயக்கும். அல்லது, கருத்துத் தொகுதிகளாக ஊடகங்கள் வழியே கடத்தப்பட்டு, கற்றுணர்ந்து
பயன் பெறலாம்! புதிய ஆழ்ந்த படைப்புகள் தமிழில் தொடர்ந்து இயல்,இசை, நாடகமாக தழைத்து
வரணும். அறிவியல் துறைக்கு ஆக்கம் தேவை; புத்தகம், திரைப்படம், வலைத்தளம் வெகுவாய்
இதற்கு உதவிடும்.
மயங்கா மரபின் வாழ்வியல் பண்பாடு, அகிலம்
பரவிய காலச்சக்கரமாய் நலம் பயக்கட்டும்: உலக பொதுமை, மனித நேயம், அறம் - சார்ந்த
வாழ்வு!
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம்; நிலத்தின்
நயன் நோக்கி வாழும் குடி! என்றும் புது குறள் பரவட்டும்; இனிமை பூமியில் நிலவட்டும்;
புது தலைமுறைக்கு அவர்கள் அடிமனதுக்கும், ஆழ்மனதுக்கும் இவை நல்லதொரு படிமமாக செயலாற்றும்!
“இன்னாது அம்ம, இவ்வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே! ”*
என்கிறது ஓர் பழம் பாடல்; கவனத்தில்
கொண்டு பயணிப்போம்!
எத்தனையோ ஆபத்துக்கள், துயரங்களுக்கிடையேயும்,
உயிரினங்கள் யாவும் வாழ்க்கையை கொண்டாடி
மகிழ்தல் வெள்ளிடைமலை! அந்த நுட்பம் ந்மக்கும் இருக்கணும் தானே! மானமும், அறிவும்
மனிதர்க்கு அழகு; எச்சூழலிலும் ஆனந்தித்து பயணிப்பது, அழகுக்கு அழகு!!
IV. கதிர்மதியம் (ஆறு கீற்றுகள்)]]
இக்கட்டுரையின் பெருந்திரள் இனிதே முற்றிற்று!
பெருஞ்சித்திர காட்சிகளின் தொகுப்பாக விரிந்து, ஒரு மறுமலர்ச்சியை முன்மொழிந்து, மேவிய
பெரும் தமிழ் கனவை நனவாக்க, அனைவரையும் அழைத்திருக்கிறது! அடுத்து வரும் எஞ்சிய
சிறுந்திரள்; ஆலம் விழுது, ஆற்று ஒழுக்கு என குறுக்கு நெடுக்காய் ததும்பிய கீற்றுகதிர்களை
விளிக்கிறது! ஒரு முழுமைக்காக!
கீற்று:1 இந்தியா, ஓர் ஆன்மிக பூமி என்றும்,
தெய்வபக்தி மிகுந்த நாடு என்றும் கூறுவது நகைமுரண் என்றாகிறது! இங்கு தோன்றிய, ஆசிவகம்,
சமணம், பௌத்தம் எல்லாம் கடவுள் கோட்பாட்டை சாராதவைகள். தமிழர் நாகரிகமும்; இயற்கை
வழிபாடு, நடுகல், முதியோர் வழிபாடு என்று தொடங்கி; பின்னர்தால் வைதிகம். சைவம்,
வைணவம் முருகன், சக்தி வழிபாடுகளுக்கு சென்றுள்ளது. மதசார்பில்லாத தற்கால அரசுகள்
போன்றே, கடவுள் கோட்பாடு சாராத ஆன்மீகமும் சாத்தியம்; மக்கள் ஒற்றுமைக்கும், அரசு
முறைக்கும் அது உறுதுணையாவே இருந்தது!
கீற்று:2 தமிழல் அதிக நீதி நூல்கள் எழுந்த
காரணம், பல்வேறு சமூக சீர் கேடுகள் மண்டியிருந்ததால் போலும்! பாலை நிலத்தவன்
தொழில்: திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை, சூறையாடல் என்பன! பெண்புலவர் அதிகம்
ஏற்றம் கொண்டிருந்த ஒரு ச கத்தில்; பரத்தையர், வரைவின் மகளிர், ஆடல் மகளிருக்காக
ஒரு தெருவே ஒதுகப்பட்டுள்ளது வியப்பே! மிகத்தொன்மையான குடிவாழ்க்கை முறையின் துவக்கம்
என்பதால், அறம், ஒழுக்கம், நெறி எல்லாம், அப்போது தான் தோன்றியிருக்க கூடும்.
மகளிரின் துயரங்களை விவரித்து, துணிவுடன் அவர்கள் எதிர் கொண்டதை பெருமைபடுத்த
எழுந்த காப்பியமாகவே சிலப்பதிகாரம் தோன்றுகிறது. வரம் தரும் காதை அன்றாட வாழ்வியல்
அறக் கோட்பாடுகளை அழகுடன் இயம்புகின்றது. இந்த இறுதிக்காட்சிக்காகவே, மொத்த காப்பியமும்
படைக்கப்பட்டதாகிறது. ஞாயிறு போற்றுதும் என தொடங்கி, வாழ்வினை போற்றுதும், மகிழ்வை
துய்க்கவும் என வரம் வழங்கி நிறைவது, மிக்க அருமை! மொத்த மதுரையை எரித்தது ஏனோ? அறன்
வலியிறுத்தல்!
கீற்று:3 கடந்த
ஐம்பது ஆண்டுகளில், உலகின் ஜனத்தொகை இரட்டிப்பாகி உள்ளது. மற்ற ஜீவராசிகள், காடு,
மலை, ஆறுகள் சிதைந்தும், அழிந்தும் போயின. உலக வெப்பமயமாதல், குடிநீர் தட்டுப்பாடு,
தீடீர் பெருமழை மற்றும் வெள்ள அச்சுறுத்தல்கள், சுகாதார சீர்கேடுகள் என, நாம்
கழைக் கூத்தாக ஆடிக்கொண்டிருக்கிறோம். பழய ஜனத்தொகைக்கு மக்கள் மீண்டும் குறைந்தால்,
மிக்க நலமே! புலால் உண்ணாமை மது அருந்தாமை என்பது அருக்கும் சாத்தியமில்லை; இதில்
கவனமுடன் இருக்கணும்!
கீற்று:4 சோதனை அணுகுண்டு வானில் வெடித்து
சிதறி, ஆயிரம் சூரியன் போல் ஒளிர்ந்ததை, “பகவத் கீதையில் வரும் விஸ்வரூப காட்சி'” என சிலாகித்தார் ஒப்பன்ஹீமர் என்ற தலைமை
விஞ்ஞானி! பின்பு, ஜப்பான் மீது வீசப்பட்ட குண்டுகள் இரண்டாம் உலகப் போரின் முற்றுப்
புள்ளிகளாயின. என்றாலும், உலகம் ஒர் நிரந்தர அச்சத்தில் வீழ்ந்துள்ளது. “கெட்ட
போரிடும் உலகை வேறோடு சாய்க வழியுண்டா?” என்று ஐன்ஸ்டீன் கேட்க; “ஓர் உயரிய பண்பாட்டு செழுமையில் மனித
சமூகம் பல தலைமுறைகள் வாழ்ந்து பழகினால் சாத்தியம்” என்கிறார், சிக்மண்ட் ஃபிராய்ட். இனம்,
மொழி, மதம் பேதம் கடந்து, சக மனிதர்கள் மற்றும் சகல ஜீவராசிகளுடன் நன்கு இழைந்து
வாழ்தலே மயங்கா மரபின் இலக்கு எனலாம்! பழயன கழித்து, புதியன புகுத்தி போர்களை, கால்-பந்து/
தலை-பந்து போட்டியாக ஊக்குவிப்பது, உலக வல்லரசுகள்தான்!
கீற்று:5 தனி மனித முயற்சி, ஊழ் என்னும்
சூழ்நிலை விளைவு; இவைகள் இரண்டும் இணைந்தே, வாழ்வை வழி நடத்துவதாக குறளும் இயம்புகிறது.
நல்லவன், தீய கூழினால் சில நேரம் தோற்பதும்; மாறாக, கெட்டவன் நல் கூழினால் வெல்வதும்,
ஆற்றாமையை ஏற்படுத்துகிறது. கடவுள் இல்லையா? இருந்தால் நல்லாயிருக்குமே! என்ற எண்ணங்கள்;
பாவ புண்ணிய, மறுபிறவி, பரிகாரம் கருத்துக்கள் இதனால் எழுந்ததே! தனி மனித வாழ்வு நியாமில்லாத விளையாட்டாக இருக்கலாம்! பல தலைமுறை
சங்கிலி தொடர் ஒட்டத்தில், மொத்த சமூக முன்னேற்றத்தை நோக்கினால், அறம் சார்ந்த
வாழ்வே பயனுள்ளதாகிறது.
அதனாலேயே அறன் வலியுத்தப்படுகிறது, ஊழ்
புரியப்பட வேண்டியுள்ளது; சஞ்சலமற்று வாழ ஏதுவாகிறது. பெரியோரை வியத்தல், சிறியோரை
இகழ்தல் இரண்டையும் தவிர்த்தல் சிறந்தது! உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலாகட்டும்!
கீற்று:6 “தீனிக்கு கேடு, பூமிக்கு பாரம்” என்று தாழதவரைக்கும்; விறகு வெட்டி, ஞான
வெட்டி என, வாழ்வின் முயற்சிகள்யாவும் கண்ணியமானவைகளே. பேர், புகழ் என்பன ஊழன்
கூத்து சார்ந்தவை என்பதறிந்தோம்; அவைகள் வந்தால் கூடுதல் சிறப்பு, மகிழ்ச்சி; இல்லையென்றால்
இளிவோ, குறையோ ஏதுமில்லை ! புகழ் என்பதே, தகுதியானோர் சேர்ந்த குழுமம், ஒருவரை மெச்சித்
தருகின்ற அங்கீகாரம்! எனவே; புகழை பெறவும், பெற்றவரை பாராட்டவும், தகுதியான பண்பாளர்களாக
நாம் ஒவ்வொருவரும் விளங்குதலே, வள்ளுவன் சொன்ன இலக்கு! இந்த தேறல், தெளிதல் இணைந்தால்,
பெருந்தன்மையின் உயரங்களில் மகிழ்ந்து சஞ்சாரிக்கலாம்; வான் வழி வரும் நிலத்துண்டன்
தரிசனம் காணப் பெறலாம், வாழ்தல் சுபமாகலாம்!
V. தோயும் மது (முடிவுரை)
மணிமிடைப் பவளம், மனிதனும்
இயற்கையும் அன்றோ?
நெஞ்சம் துளிர் சஞ்சிவனி,
பளிங்கின் திரள் மயங்கா மரபு!
யாண்டும் பரவட்டும் மேன்
மரபின் வாழ் - வேர்!
வாரிப் பெருக்கி வளப்படுத்தி
உய்யும் வழி அஃதொன்றே!
பழந்தின்னிப் பட்டி, சோத்துப்
பாறை..... சிற்றூர்களே சொர்க்கங்களாய்.....
பெருகிய நகரங்கள், கழைக்கூத்தில்,
கரும்புகையில், திக்குமுக்காட;
காக்க வருகிறதாம் ஓர் புது
அலை: “செயற்கை ஙண்ணறிவு” என பேராம்!
விரிகடல் உலகின் விமோசனமோ?
வர வரத் தெரியும், பார்ப்போமே!
இனம், மொழி, மதம் கடந்த
“வாலறிவு மனிதம்” அவசியமாகிறது!
உயிர்கள் மேவும் சரணாலயமாய்,
பூமியின் மகத்துவம் அளப்பரியது!
இதையுரைக்க வந்ததுவே அறம்
கூறும் மென் அறிமுகம்; உறவிது,
சுவை கனி தரு பதியன்களாய்
செழித்தென்றும் வாழியவே!
பின் குறிப்பு:-
ü ஈந்துவக்கும் இன்பமல்லால் இன்பமில்லையென்ற
எழுந்த இக்கட்டுரை, ஓர் ஆற்றுப் படுகை என தோன்றுகிறது; மூன்றாயிரம் ஆண்டு நிகழ்வுகளை,
கருத்து வளங்களை, அடுக்குகளாக சேர்த்துள்ளது! நலன் விளைய ஏதுவாகட்டும்! நல்லதே விளையும்
நெஞ்சங்களை அன்பில் படுகை எனலாமோ? ஆடிப்பெருக்கென நல்வாழ்த்துக்கள்!
ü உலகத்து பல நாடுகளில், பல்லாயிரம் ஆண்டுகளாய்
பயன்பாட்டில் உள்ளது, சுவஸ்திகா என்னும் “நல்லாசி சின்னமும்” அதன் ஆயிரதிரிபுகளும். இது ஆசிவகம்
தந்த சுழல்குறியின் மறுஆக்கம் எனப்படுகிறது. மொகஞ்சதாரோ அகழ்வாய்வில், பாண்டிய மன்னர்
நாணயங்களில், இதே இலச்சினை கண்டெடுக்கப்பட்டது. திருச்சியை அடுத்த திருவெள்ளறை கோவில்,
பதினெட்டு படிநிலைகளுடன்; திருக்குளமே ஓர் சுவஸ்திகா வடிவிலும் அமைந்துள்ளது. இது
பற்றிய ஆய்வுகள் ஆசிவக வேர்களின் ஆதிதோற்றம், தொடக்கம் குறித்த கேள்விகளுக்கு விடை
அளிக்கலாம்.
ü சாரளந்தோறும் சந்திரோதயமான சிறு கட்டுரையில்;
விடுபட்டோர், விலக்கப்பட்டோர் மீது குறையேதுமில்லை.
ஆடி 18, ஆகஸ்டு 2024 / தமிழ்நாடு / இந்தியா
Author: Rtd. Professor/Engineering
PhD /WIPO Gold Medalist / +91 8939893732
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக