6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 4 ஜூன், 2025

ஈழத்தில் எழுந்த விரத புராணங்கள் - பா. ஜேசினி மதுஷிகா

 

ஈழத்தில் எழுந்த விரத புராணங்கள்

பா. ஜேசினி மதுஷிகா BA (Hons)

bjmadushika@gmail.com

“விரதம் என்பது மனம் நிலைத்திருக்க செய்தலாகும். வரிப்பது - விரதம், உணவு ஒழித்திருத்தலும், மிதமாக உண்டலும் தீயன நீக்கி, நல்லன உண்டலுமாகிய உணவு நியமமே விரதம் என வழங்குகிறது. இது விரதத்தின் முதற்படியேயல்லாது இதுவே விரோதமாகாது. அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி இறைவன் திருவடியில் நிலைத்திருத்தலை சிறப்பாகும். மனம் பொறிவழி செல்லாது தடுத்தல், புலனொடுக்கம் வாழ்க்கையின் செம்மைக்குத் தேவையானது. பொறிகள் அடக்க வேண்டுமானால் உணவு ஒடுங்க வேண்டும். “அன்னம் அடங்க அஞ்சும் அடங்கும்” இன்று உடல்நலம் பேணும் மருத்துவர்கள் கூட வாரத்தில் ஓரிரு நாட்கள் உணவைத் தவிர்ப்பது நன்மை பயக்கும் என்று கூறுகின்றார்கள். உடலின் மூலமாகத்தான் உத்தமனைத் தேட வேண்டும் உடலின்  இன்றியமையாமையைத் திருமூலர்,

“உடம்பினை முன்னம் இழுக்கென்  றிருந்தேன்

உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில்கொண்

உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே” என்று கூறுவார்.

அந்த வகையில் ஈழத்திலே இந்துமதமும் அது சார்ந்த வழிபாட்டு நடைமுறைகளும் வரலாற்றுக்காலம் முதலே நிலவி வந்தமைக்கு உறுதியான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும் கி.பி 13ம் நூற்றாண்டிலிருந்து ஈழத்தில் தமிழ் வாழ் பிரதேசங்களில் ஏற்பட்ட அரசுருவாக்கத்தைத் தொடர்ந்தே அங்கு இந்து மதம் மேலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. ஏறத்தாழ இதேக்காலப் பகுதியிலிருந்தே ஈழத்தில் நிலவி வந்த இந்து மதம் பற்றியும், இந்துப் பண்பாடு பற்றியும் அறிந்துக் கொள்வதற்கு வசதியான இலக்கியங்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றுள் புராண இலக்கியங்களின் தோற்றம் ஈழத்து இலக்கிய வரலாற்றிலும் இந்துமத வரலாற்றிலும் தனித்து நோக்குதற்குரிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. இப்புராணங்களினை அவற்றின் பாடுபொருளுக்கமைவாக மூன்றாக பகுத்து நோக்க முடியும்.

1)      தலைமை கூறும் புராணங்கள்

2)      விரத மகிமை கூறும் புராணங்கள்

3)      அடியார் பெருமை கூறும் புராணங்கள்

இவற்றில் விரத புராணங்களை நோக்கின் ஈழத்தில் தோற்றம் பெற்றனவாக ஆறு விரதப் புராணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம், பிள்ளையார் கதை, கந்தசஷ்டி புராணம், விநாயகர் சஷ்டி புராணம் என்பனவையே ஆகும். இவற்றுள் முன்னைய மூன்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வரத பண்டிதரினால் இயற்றப்பட்டவை.

அந்தவகையில் ஏகாதசி விரதம் பற்றி நோக்கின் புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகின்றது. “மார்கழி மாதம் ஏகாதசி விரதமிருந்து வழிப்படுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்” என்பது திருமால் வாக்கு. இதனால் இவ் விரதம் மகிமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்புராணம் ஏகாதசி விரத நிர்ணயத்தையும், மகிமையையும் அவ்விரதமனுஷ்டித்தோர் சரிதங்களையும் கூறுகிறது. சிவ விரதத்தைக் குறித்து புராணம் பாடியது போலவே வரத பண்டிதர் திருமால் விரதங்களும் சிறந்ததாகிய ஏகாதசி விரதத்தைக் குறித்து இப்புராணத்தைப் பாடியுள்ளார். “வடநூல் சொன்ன வழிகண்டு தண்ட தமிழால் வகுத்தல் செய்தான்… வரதராச பண்டிதன்” என இதன் பாயிரச் செய்யுள் பகரும்.

துவாதசியன்று அதிகாலையில் உப்புப், புளிப்பு இல்லாது சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை இவைகளை சேர்த்து பல்லில் படாமல் “கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!!!” என்று கூறி இலையில் உணவு இட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். பகலில் தூங்காமல் இருக்க வேண்டும் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 80 வயதுக்குற்பட்ட பெரியவர்கள் ஆகியோர் விரதம் மேற்கொள்ளத் தேவையில்லை என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன், சொர்க்கவாசல் திறக்கப்படுவது பற்றி புராணங்களில் ஒரு கதை கூறப்படுகிறது. இவ்விரதத்தை அனுட்டிப்பதால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிறது. உண்ணா நோம்பினால் நமக்குள் இருக்கும் மனப்பிறமை மற்றும் அகந்தை சிறிதளவு கூட இல்லாமல் முற்றிலும் மறைந்து விடுகிறது. அடிக்கடி சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்படுதல் முற்றிலும் மாறி மனம் முழுமையான அமைதி நிலையை அடைகின்றது. ஒவ்வொரு செயலிலும் சமூகமாகத் தீர்வை எடுக்க வழிவகை செய்கிறது, அனைத்து உயிர்கள் மேலும் மனிதநேயம் வளர்கிறது. இவையாவும் இவ் ஏகாதசி விரத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“முன்னுரைத்த புராணங்க டம்மிற் சொன்ன முறைமையெலா

மாய்ந்தவற்றின் முன்சொன்னான்போற்

பின்னுரைத்தா ரிம்முனிவர் சிலகிரந்தம் பேசுமிவை

யிரண்டைனையும் பேணி யந்தான்

மன்னுவித்தி யாரணியர் திரட்டி யொன்றாய் வடித்தெடுத்த 

கிரந்தத்தின் வழிநூல் கண்டு” (கால நிர்ணய சருக்கம், 3)

பிள்ளையார் கதை

வரதபண்டிதர் யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி நிலவிய காலத்தில் சுன்னாகம் என்னும் ஊரில் வாழ்ந்தார். இவர் போர்த்துக்கேய காலத்தில் அழிவுக்குள்ளான சைவமரபுகளை மீட்டெடுத்து மீளவும் மக்கள் மத்தியில் பரவுவதற்கு ஈடுபாடு காட்டினார். சைவவிரத புராணங்களை எடுத்துக் கூறும் நூல்களில் பிள்ளையார் கதையும் ஒன்றாகும். இது 744 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆகிய சிறியதொரு நூலே. ஆயினும் இது இலங்கை இந்து மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றது. விநாயகர் சஷ்டி விரதத்தை அனுட்டிப்பவர்கள் விரத காலம் இருபத்தொரு நாளும் இந்த நூலைப் பாராயணம் செய்கிறார்கள். விநாயக சஷ்டி விரதத்தை கூட அவர்கள் பெரும்பாலும் “பெருங்கதை விரதம்” என்றே கூறுகின்றனர். இந்த நூலிலே பல உபகதைகள் உள்ளன.

உமா தேவியார் பூமியிலே மானிடப் பெண்ணாகப் பிறந்து தவம் செய்து சிவபெருமானைத் திருமணம் செய்தமை, இருவரும் யானை வடிவம் பெற்று விநாயகரை ஈன்றருளியமை, தான் பெற்றுக் கொண்ட வரங்களின் பலத்தால் பூவுலகில் பெரும் கொடுமை செய்து வந்த கஜமுகாசுரனை விநாயகர் தம் தந்தங்களுள் ஒன்றை முறித்துக் குத்த, வீழ்ந்த கஜமுகாசுரன் மூசிகமாக உருமாறி தாக்கவர, விநாயகர் அதனை வாகனமாக்கிக் கொண்டமை, ஆவணி விநாயகர் சதுர்த்தி விரதத்தை தோற்ற தேவர்களின் முன் விநாயகர் நடனமாட, அதைப் பார்த்து சிரித்த சந்திரனுக்கு விநாயகர் சாபமிட்டார்.

விநாயகர், சந்திரனைக் கோபித்துச் சாபம் வாங்கியதைக் கண்ட தேவர்கள் விநாயக சஷ்டி விரதத்தை தோற்றார்கள் என்று கூறி, பூமியில் உள்ள மக்கள் இதை கடைபிடித்தனர்.

இந்நூல் காப்பு செய்யுள் ஒன்றினையும், கடவுள் வாழ்த்து பாக்கள் ஐந்திணையும், அவையடக்க செய்யுள் ஒன்றினையும், பாயிரச் செய்யுள் ஒன்றினையும் 258 பாடல்களைக் கொண்டு விளங்குகின்றது. 15 நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பக்ஷம் என்கின்றோம். கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை) சுக்லபக்ஷம் (வளர்பிறை)ஆகிய இந்த இரண்டு பக்ஷங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளின் (திதியில்) வருவது ஏகாதசி ஆகும். இது மார்கழி மாத சுக்லபக்ஸ (வளர்பிறை) ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக வணங்குகின்றோம்.

இப்புராணத்தில் பின்வரும் இதிகாசம் உள்ளது. இராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்ம தேவர்களுக்கு தரிசனமளித்து காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு “முக்கோடி ஏகாதசி” என்ற பெயரும் உண்டு.

தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது. துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்திலிருந்து வெளியே வந்து தேவர்களுக்கு, திருக்காட்சி அளித்து அருளாட்சி வழங்கினார். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒருவேளை மட்டும் உணவு சாப்பிட்டு மற்றும் ஏகாதசி அன்று காலையில் கண்விழித்து குளித்துவிட்டு, பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும். இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், பகவான் நாமங்களை சொல்லுவதுமாக இருக்க வேண்டும். ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி என்பர்.

பஞ்சபாண்டவர்கள் கண்ணபிரானிடம் விரத பலன் உடனே கிடைக்கவும், பகைவரை வென்று வாகை சூடவும், எத்தெய்வத்தை வழிபட வேண்டும் என்று வினவ கண்ணபிரான், ஆவணி விநாயகர் சதுர்த்தி விரத மகிமையையும் அதனை அனுட்டிக்கும் முறைகளையும் எடுத்துரைக்க அவர்களும் அவ்வாறே அனுட்டித்து எண்ணியவை எல்லாம் எய்தினார்கள்.

இவ்விரதமானது கார்த்திகை திங்கள் கிருஷ்ணப்பட்சப் பிரதமை முதலாக மார்கழி திங்கள் (வளர்பிறை) சஷ்டி இறுதியாக உள்ள இருபத்தொரு நாளும் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. இருபத்தோரிழையோடு கூடிய காப்பை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டி விரதத்தை ஆரம்பிப்பர். முதல் இருபது நாட்களும் ஒவ்வொரு பொழுதும் உணவு உண்டு இறுதி நாள் உபவாசம் இருந்து சுவாமி தரிசனம் செய்து உணவுண்டு இவ்விரதம் நிறைவு செய்யப்படும். இருபத்தொரு நாட்களும் விநாயகர் கதை கேட்பதும், விநாயகர் திருவிளையாடல்களை பேசக் கேட்பதும் புண்ணியமாகும்.

யாழ்ப்பாணத்தில் இருபத்தொரு நாளும் நியமமாக விநாயக வழிபாடு நடைபெறும் ஆலயங்கள் பல உள்ளன. இன்றும் சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்திலும், பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயத்திலும் இவ்விழா வெகுச் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.

“கரும்பு மிளநீருங் காரெள்ளுந் தேனும்

விரும்பி மவல் பலவும்

மேன்மை – லருந்திக்

குணமுடைய னாய்வந்து

குற்றங்க டிர்க்குங்

கணபதியே

யிக்கதைக்கு காப்பு”  (காப்பு)

விரத காலத்தில் தினமும் விநாயகருக்கு இளநீர், கரும்பு, மோதகம், அவல், எள்ளுருண்டை முதலியவற்றை நிவேதித்து வழிபாடு செய்வர். பிள்ளையார் பெருங்கதையைக் கேட்பதால் பொன், பொருள், கல்வி, புத்திர பாக்கியம் முதலான எல்லாச் செல்வங்களும் கிட்டும். விநாயகர் சதுர்த்தி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் சிறந்த வாழ்வு வாழ்வார்கள். நோற்காது அருகில் இருந்து கேட்பவர்களுக்கும் கேடு வராது. அவர்கள் எல்லா பிறவிகளிலும் சிறப்போடு வாழ்வார்கள் என பிள்ளையார் கதை புராணத்தில் குறிப்பிடப்படுகிறது.

சிவராத்திரி புராணம்

சிவராத்திரி புராணம் சிவராத்திரி விரத சரிதையைக் கூறும் நூலாகும். நைமிய சாரணியத்திலுறையும் மாதவர் வேண்டச் சூத முனிவர் கூறுவதாக புராணம் இயங்குகின்றது. சிவராத்திரி விரதத்தின் தோற்றத்தையும், அதனை தோற்றிடும் வகையினையும் கூறிய சூதமுனிவர், தொடர்ந்து சிவராத்திரி விரதத்தால் பலனடைந்த சுகுமாரன், அங்குலன், சவுமினி, கண்மாடபாதன், விபரிசன், குபேரன், சாலிகோத்திரன் ஆகியோருடைய கதைகளை விரித்துரைக்கும் வகையில் இந்நூல் செய்யப்பட்டுள்ளது. காப்புச் செய்யுள் ஒன்றினையும், கடவுள் வாழ்த்து இருபதினையும், பாயிரச் செய்யுள் மூன்றினையும், சிவராத்திரி யுற்பவச் சுருக்கம் முதலாகச் சாலிகோத்திரச் சுருக்கம் ஈறாகவுள்ள ஒன்பது சுருக்கங்களிலுள்ள 691 பாடல்களையும் கொண்டு விளங்கும் இச் சிவராத்திரி புராணம் மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் அமாவாசைக்கு முதல் நாள் இவ்விரத தினமாகும்.

சிவராத்திரி விரதத்தின் தோற்றம் குறித்து பல்வேறு புராணக் கதைகள் காணப்படுகின்றன. பாற்கடலில் விளைந்த நஞ்சினை சிவன் அருந்திய வேலை சிவனுக்கு ஏதும் கேடு நேருமோ என அஞ்சிய தேவர்கள் இரவு முழுவதும் விழித்திருந்த நாளே சிவராத்திரி என்று பிரிதோர் கதை கூறுகிறது. திருமாலும் பிரமனும் தங்களுக்குள் யார் பெரியவர் என தருக்கி நின்ற வேலை உலகைச் சூழ்ந்து ஆணவ இருள் அகலும் படியாக சிவபரம் பொருள் சூழப் பெரும் பிழம்பாகத் தோன்றி திருமாலும், பிரம்மனும் அடிமுடி காணா வகை நின்று அவர்கள் உண்மையை உணர்ந்த நிலையில் குளிர்ந்து இலிங்க வடிவில் காட்சிக் கொடுத்த நாளே சிவராத்திரி அனுட்டிக்கப்படுகின்றது. ஆணவ மயக்கத்தோடு கூடிய நிலையிலோ, கல்வியாலோ, செல்வத்தாலோ இறைவனைக் காண முடியாது. வணங்கிய உள்ளமே உண்மையை உணரவல்லது என்ற பேருண்மையே இக்கதையால் உணரப்பட வேண்டியது.

சிவராத்திரியில் லிங்கோற்பவ காலம் பிரதானமானதாகும். இவ்விரத காலத்தில் காலையில் நீராடி பகல் முழுவதும் உபவாசம் இருந்து சிவாலயத்தில் நெய் விளக்கேற்றி நான்கு சாமத்திலும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தோ அன்றேல்  திருத்தோத்திரங்களைப் பாடியோ சிவசிந்தனையோடு இருத்தல் வேண்டும். அடுத்த நாள் அதிகாலை பாரணம் செய்தல் வேண்டும். சிவராத்திரியில் ஒரு தடவை பஞ்சாட்சரம் செபித்தால் ஏனைய நாட்களில் நூறு தடவை ஜெபித்ததற்கு சமம் என்று கூறப்படுகிறது. சிவராத்திரி இரவில் ருத்ர ஜபம் செய்ய வேண்டியது அவசியம். வில்வ இலைகளை சிவபெருமானுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

சிவராத்திரி விரதத்தை அனுட்டிப்பதன் சிறப்பை விளக்குவதாக ஒரு கதை நிலவுகிறது. குரங்கு ஒன்று வில்வ மரத்தின் மீது அமர்ந்து இரவு முழுவதும் இலைகளை பிய்த்து கீழே போட்டுக் கொண்டே இருந்தது. இலைகள் விழுந்த இடத்தில் இறைவனின் இலிங்கத் திருமேனி அன்றைய இரவு மகாசிவராத்திரி விடியும் வேளையில் அறியாமல் செய்த வில்வார்ச்சனைக்கு இறைவன், குரங்கை மறுபிறவியில் சக்கரவர்த்தியாக பிறக்க அருள் செய்தார். சக்கரவர்த்தியாய் பிறந்தவரே முசுகுந்த சக்கரவர்த்தி அறியாமல் செய்த சிவபூஜைக்கே இவ்வளவு பெரிய பதவியை அருள்வார் என்றால், அறிந்தே சிவபூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் எவ்வளவு இருக்கும் என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ள “சக்கரவர்த்தியாய் பிறந்தாலும் தன் குரங்கு முகம் மாறக்கூடாது” என்று வேண்டிக் கொண்டார்.

உயிருக்கு பயந்து மரத்திலே ஏறி வேடன், கீழே விழுந்து விடக்கூடாது என்று இரவெல்லாம் விழித்திருந்து இலைகளை பறித்து போடுகிறான். அதுவே சிவார்ச்சனை ஆனது. அதன் பலனாக அவன் மறுபிறவியில் ராமனையே தோழனாகக் கொள்ளும் குகப் பதவியை அடைந்தான். இவையாவும் சிவராத்திரி விரதத்தின் மகிமைகளாகும்.

இந்த உலகில் உள்ள சகலவிதமான உயிரினங்களாகவும், பிறக்கும் ஜீவாத்மா, இறைவனை அடையும் பரிணாம வளர்ச்சியை சொல்லி, பிறவியின் பெரும் துயரைச் சொல்லி, “இறைவா உன் திருவடி கண்டதால் நான் இப்போது வீடுபேறு உற்றேன்” என்னும் சிவ புராண வரிகளை நாம் மனமுணர்ந்து பாடும் போது உண்மையிலேயே சிவன் அருளும், தரிசனமும் பரிபூரணமாக கிடைக்கும்.

“புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகிப் 

பல் விருகமாகிப் பறவயாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய் தேவராய்ச்

செல்லா அ நின்ற இத் தாவர சங்கமுத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்.”

நான்கு கால பூஜைகளுக்குரிய அபிஷேக திரவியங்களை கொஞ்சம்மேனும் வழங்கினால் வறுமை அகலும், வஸ்திரம் வழங்கினால் கேட்கும் வரம் கிடைக்கும், தூப தீப கைங்கரியங்களுக்கு உதவினால் சகலவிதமான செல்வங்களும் எம்மை வந்து சேரும் என சிவராத்திரி விரதப் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீமந்தனி விரத புராணம்

வித்துவான் ச. பூபாலபிள்ளை மட்டக்களப்பு புளியன் தீவை பிறப்பிடமாகக் கொண்டவர். இவரால் இயற்றப்பட்டதே “சீமந்தனி புராணம்” ஆகும். இது சோமவார விரதத்தின் மேன்மையை எடுத்துரைக்கும் முகமாய் சீமந்தனி வரலாறு கூறப்படுகின்றது. இவ் விரதமானது சோமவாரம் என்று அழைக்கப்படுவது திங்கட்கிழமையை குறிக்கும். ஆகையால் திங்கட்கிழமை அன்று வரத்தை மேற்கொண்டு, ஸாம்ப பரமேஸ்வர பூஜை செய்வதும், சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி மாதங்களில் முதல் திங்கட்கிழமை அன்று சோமவார விரதத்தை ஏற்று பூஜை செய்யலாம். அல்லது 14 ஆண்டுகள் வரை தொடர்ந்து சோமவார விரதம் அனுஷ்டிக்கலாம். முக்கியமான ஆவணி மாதத்தில் பூஜை செய்வதும் விசேஷம்.

ஆர்யவர்த்த நாட்டை வீரத்திலும், சீலத்திலும் சித்ரவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். தவமிருந்து பெற்றெடுத்த குழந்தைக்கு சீமந்தனி என பெயர் வைத்தான். இவருடைய பிறந்த நாட்குறிப்பை ஆராய்ந்து பார்த்த காலக் கணிதர்கள், இவள் தனது 14வது வயதில் “மங்கல மிழப்பாள்” என்று கூறினர். இதனைக் கேட்ட தந்தை மிக வருத்தத்தோடு இருந்தார். இச்செய்தியை உணர்ந்து சீமந்தனி யாக்ஞவல்லிய முனிவரின் மனைவியாகிய மைத்திரியிடஞ் சென்று சொன்னாள், அவள் சோமவார விரதத்தைக் கடைப்பிடிக்குமாறு கூற அவளும் முறைப்படி அதை மேற்கொண்டாள். பிறகு நிடத்தே மன்னனாகிய சந்திராங்கதன் என்பவனை மணம் முடித்தாள். யமுனையில் நீராடும் போது பிலத்துவார வழியே நாகலோகம் சென்றனன் சந்திராங்கதன். கணவன் மறைந்ததும் மங்கலநானும் நீக்கப்பட்டது. ஆனால் மீண்டு வந்து சந்திராங்கதன் புனர்வாழ்வளித்தான்.

“பொருவிறவ வியாசன் முன முறைப்பக் கேட்டுக்

புராணமுனி புகன்ற சில தகதைடதமமிற்

சுருதிமுத லாகமங்க ளனைத்துங்கூறுஞ்

சுடர்மதி நாள் விரதமதை மேனா னோற்றுப்…”    (பாயிரம் 10)

 

இவ்விரதத்தை ஆண்கள், பெண்கள் அனைவரும் கடைப்பிடிக்கலாம். முக்கியமாக ஆவணி மாதத்தில் இப்பூஜை செய்வது விசேஷம். இப்பூஜைக்கு மஞ்சள் பொடி, குங்குமம், சந்தனம், பூமாலை, வெற்றிலை, பாக்கு, சாம்பிராணி, மாவிலை, வாழைப்பழம், நல்லெண்ணெய், வஸ்தரம், பஞ்சாமிர்தம், பஞ்சகவ்யம், பசுவின் பால் என்பது அவசியமாகும். இவ்விரதத்தை மேற்கொள்வதால் பிரிந்த குடும்பம் ஒன்று சேர, வெகு தூரத்திலுள்ளவர்கள் தன் இருப்பிடத்திற்கு வந்து சேருவர். திருமண பாக்கியம் அமைய, மாங்கல்யம் நிலை பெறும். இதில் காப்புச் செய்யுள் ஒன்றும், பாயிர செயல்கள் பத்தும், நீங்களாக சீமந்தனி புராணத்திலேயே ஆரியவர்தச் சருக்கம் முதலாக பாவனைச் சருக்கம் ஈறாக அமைந்துள்ள பத்து சருக்கங்களிலேயே 789 செய்யுள்கள் காணப்படுகின்றன.

கந்தசஷ்டி புராணம்

நா. சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவராலேயே கந்தசஷ்டி புராணம் ஈழத்தில் தோற்றம் பெற்றது. இப்புராணத்தில் முருகனை வேண்டியற்றப்படும் கந்தசஷ்டி விரதத்தின் மாண்பினையும், அவ்விரதத்தை நோக்கும் முறையினையும், அவ்விரதத்தாற் பயன்பெற்றோர் சரிதைகளையும், இந்நூலிற் காணலாம். சூராதிகள், பார்க்கவி, இந்திரன், அகத்தியர், தெய்வானை முதலியவர்களின் சரிதங்கள் ஈண்டு இடம்பெறுகின்றன. சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் இப்புராணத்தை சூதமுனிவர் மாதவருக்கு உரைப்பது போன்று நடத்திச் செல்கிறார்.

“ஆதியாயணுவாயறிவாயொளிர்

சோதிதாள் பணி சூதமுனிவரன்

மாதவத்தர் மன மகிழ் வெய்தவே

நீதிசால்கந்தசட்டி நிகழ்த்துவான்.”       (கந்தசஷ்டி சருக்கம் - 1)

இது காப்புச் செய்யுளொன்றும், வாழ்த்துச் செய்யுளொன்றும், கடவுள் வாழ்த்துப்பாக்கள் மூன்றும், முகவுரைப் பாடல்கள் மூன்றும், முகவரைப் பாடல்கள் ஏழும் நீங்கலாகக் கந்தசஷ்டி சருக்கம் முதலாக, கந்தசஷ்டி வரைவுறுத்த சுருக்கம் ஈறாகவுள்ள 8 சுருக்கங்களில் 998 செய்யுள்கள் காணப்படுகின்றன.

கந்தசஷ்டி விரதம் தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் தொடங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல், கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் 12 கொண்டே ஒரு திருமுகன் உதித்தனன். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்தசஷ்டிக் காலமாகும். இதை இந்துக்கள் விரதமாக மேற்கொள்கின்றனர். இவ்விழாவில் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் “சூரன் போர்” என்றும் சமய நிகழ்வு நாடகப் பாணியில் இடம்பெறும். சூரசம்ஹாரத்தின் முடிவில் முருகன் மாமரமாக நின்று சூரனைத் தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம், சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும், மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார்.

இவ் ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல் போனவர்களும் கூட மாதந்தோறும் வரும் சுக்கிலபட்சத்து சஷ்டியில் முருகப்பெருமான் விரதம் மேற்கொள்ளலாம்.

“பொன்னழகு மின்னிவரும்

வண்ணமயில் கந்தா

கண்மலரில் தன்னருளைக்

காட்டிவரும் கந்தா…”

கொடுங்கோலாட்ச்சி செய்த ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயமலத்தின் வடிவாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமாள் அழித்து நீங்காத சக்தியை நிலைநாட்டிய உன்னத நாள் இதுவாகும். விரதத்திற்கு முதல் நாளன்று வீட்டினை சுத்தப்படுத்தி, விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி, காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றி விபூதி பூசி, வணங்கல், அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று. கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்தசஷ்டி விரதம் பிடிப்போர் காலையில் நீராடி தீர்த்தத்தை உட்கொண்ட பின்னர் இவ்விரதத்தை மேற்கொள்வர். சிலர் ஆறு நாட்களும் எவ்வித ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும், ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தை பூர்த்தி செய்வர்.

இவ்விரதத்தின் போது கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் என்னவென்று சொல்ல முடியாத மன அமைதி பெறும்.

அவ்விரதத்தை மேற்கொள்வதால் குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும், இவ்விரதத்தை கடைபிடிப்பது நன்று. சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். பெண்களுக்கு இது சிறந்த விரதம் ஆகும். வேண்டுவன யாவும் இடம்பெறும். இலங்கையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயம் ஏனைய கந்தன் ஆலயங்களிலும் இவ்விரதம் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றது.

ஈழத்தில் இவ்விரத புராணங்களின் தோற்றம் என்பது வெறுமனே ஒரு பக்தி உணர்ச்சியின் வெளிப்பாடாக மட்டும் அமையவில்லை. அவை குறிப்பிட்ட காலகட்டச் சமூகத் தேவையின் வெளிப்பாடாகவும் அமைந்தன. இன்றும் இப்புராணங்கள் விரத காலங்களில் பாராயணம் செய்யப்படுகின்றன.

வித்துவ சிரோன்மணி பொன்னம்பலபிள்ளை முதற்கொண்டு, இலக்கண வித்தகர் நமசிவாய தேசிகர் வரையிலான வித்துவான்கள் பலர் இப்பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இங்கனம் குறிப்பிட்ட காலகட்டத் தேவையின் வெளிப்பாடாக எழுந்த விரதபுராணங்கள் மக்கள் மத்தியில் மத உணர்வை வளர்வதில் ஆற்றி வந்த பங்களிப்பை இன்றும் உணர்வு பூர்வமாக பாராயணம் செய்யப்படும் படனம் செய்யப்பட்டு வருவதால் அறியலாம்.

உசாத்துணை

1.   நடராசா.கு. F.X.C., (1970), “ஈழத்து இந்து நூல் வரலாறு”, குமரன் புத்தக இல்லம், கொழும்பு, பக். 66 – 101.

2.   இந்து மக்களுக்கு ஒரு கையேடு, (2006), அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு, பக் - 129.

3.   இந்து ஒளி, (2007), அகில இலங்கை இந்து மாமன்றம், பொன்விழா சிறப்பு மலர், பக்- 3-19.

4.   இந்துக் கலைக்களஞ்சியம் தொகு-6 (சி-சௌ), இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய விவகார அலுவலகம் இலங்கை, பக்- 118- 119.

5.   பூபாலபிள்ளை. ச., (1928), “சீமந்தணி புராணம்”, ஜீவா பதிப்பகம் இலங்கை, பக் - xi – xii.    

கருத்துகள் இல்லை: