6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 4 ஜூன், 2025

வியத்தகு வீரமாமுனிவரின் தமிழ்த் தொண்டுகள் - பா.மோகனா,

 

வியத்தகு வீரமாமுனிவரின் தமிழ்த்  தொண்டுகள்

பா.மோகனா,

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,

முத்துக்குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

சிக்கராயபுரம், சென்னை-69

mail-id:mohanayuvi1986@gmail.com 

ஆய்வுச் சுருக்கம்

தமிழ் மீது உள்ள தனியாத ஈர்ப்பால் பல நூற்றாண்டுகளாக அயல்நாட்டு அறிஞர்கள் பலரும் தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றி இருக்கிறார்கள். அவர்கள் வழியில் தற்போது வரை பலரும் தொண்டாற்றியும் வருகின்றார்கள். இவ்வாறு ஓயாமல் தமிழ்த் தொண்டாற்றியவருள் குறிப்பிடத்தக்கவரும் நம் நெஞ்சை விட்டு நீங்கா இடம் பிடித்தவருமான வீரமாமுனிவர்  தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் செய்த தொண்டுகள் ஏராளம். இவர் தமிழ் இலக்கணம், அகராதி, உரைநடை எனப் பல துறைகளிலும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார். இவரின் இப்பணி தமிழ் மொழி வளர்ச்சிக்கும் இலக்கியத்தின் புத்துணர்வுக்கும் வித்திட்டது என்றால் அது மிகையல்ல. அத்தகைய சிறப்புடைய வீரமாமுனிவரின் தமிழ் தொண்டினை நினைவு கூற வேண்டியது மிக மிக அவசியம் என்பதை விளித்துக் கூறும் நோக்கில் இவ்வாய்வு அமைகிறது. 

முன்னுரை

தமிழ் இலக்கிய வரலாறு பன்னீராயிரம் ஆண்டுகளாக நிலவி வருவதை இறையனார் களவியல் உரை விளம்புகிறது. உலக மொழிகள் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவை. உலகின் முதல் மொழியாக மிடுக்குடன் மிளிர்வது தமிழ். அத்தகு தொன்மையான  சிறப்புடைய தமிழுக்கு அச்சுக்கலை முதல் ஆராய்ச்சி துறை வரை பல்வேறு நிலைகளில் அயல்நாட்டு தமிழறிஞர் வியக்கத்தக்க  வகையில் பணியாற்றியுள்ளனர் என்றால் அது மிகையல்ல. எனவே அதை விளித்துக்கூறும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

வீரமாமுனிவர்: (1680 -1747)

“ இத்தாலி நாட்டுப் பாதிரியார். இயற்பெயர் கான்ஸ்டாண்டியர் ஜோசப் பெஸ்கி. மதுரை தமிழ் சங்கத்தார் கொடுத்த பட்டம் தைரியநாதர். தைரியநாதர் என்பதை தான் வீரமாமுனிவர் என்று மாற்றி வைத்துக் கொண்டார். வீரமாமுனிவருக்கு தமிழ் கற்பித்தவர் சுப்பிரதீபக் கவிராயர்”. (தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம் ப.225)18 ஆம் நூற்றாண்டில் இயேசு பெருமானின் திருத்தொண்டராக தமிழ்நாட்டுக்கு வருகை தந்த வீரமாமுனிவர் 1711 முதல் 1847 வரை தீந்தமிழுக்கும் திருமறைக்கும் விழைந்து உழைத்துள்ளார். 30 வயதில் தமிழ்நாடு வந்தவர் 37 ஆண்டுகள் தமிழ்த்தொண்டு செய்தார்.

“வீரமாமுனிவருக்கு தமிழ் இலக்கியச் சோலையில் அழிவில்லா உருவச் சிலை ஒன்று அமைந்திருக்கிறது கண் உள்ளவர்கள் கண்டு  கொள்ளலாம்” என்று பி. சீறி. ஆச்சார்யா “நான் அறிந்த தமிழ்மணிகள்” என்னும் நூலில் (ப. 289) கூறியுள்ளார். 

ஐந்திலக்கண நூலாகத் தாம் இயற்றிய “தொன்னூல் விளக்கம்” குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படுகிறது எளிதாகவும் தெளிவாகவும் பயன்பட வேண்டும் என்று எண்ணித் தாமே அதற்கு உரையும் எழுதி “திருமறைச் செந்தமிழ் தேசிகர்” என்று புகழ் பெற்றுள்ளார்.

மறைமொழி வாயினன், மலிதவத்து இறைவன், நிறைமொழிக் குரவன், நிகரில் கேள்வியன் என்று எல்லோரும் ஏற்றுப் போற்றும் வீரமாமுனிவரின் வித்தகத் தமிழ்ப் பணிகள் வியந்து பாராட்டுத்தக்கவை.

“அகராதி ஆக்கம், இலக்கணப் படைப்பு, எழுத்து வரிவடிவச் சீர்திருத்தம், உரைநடை மறுமலர்ச்சி, கடித இலக்கிய வளர்ச்சி, காப்பியப் புனைவு, சித்த மருத்துவ நூலாக்கம், சிறுகதைத் தோற்றம், சிற்றிலக்கிய எழுச்சி, தமிழ்-இலத்தின் உறவுப் பாலம், மொழியில் முனைப்பு, வள்ளுவத்தை வையக நூலாக்கும் முயற்சி, சமய நல்லிணக்க சால்பு என்று பல்வேறு துறைகளில் முறையாகவும் நிறைவாகவும் தொண்டாற்றியுள்ளார்.

இயேசுவின் தந்தை யோசேப்புக்கு வாடாதமாலை என்று பொருள் தரும் தேம்பாவணிக் காப்பியத்தை இயற்றியுள்ளார். 1730 ஆம் ஆண்டு வீரமாமுனிவர் திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தின் மொழியில் ஆக்கியுள்ளார். நூற்று நாற்பது மொழிகளில் திருக்குறள் வெளிவரவும் ஒளிதரவும் வீரமாமுனிவர் முன்னோடியாக விளங்குகிறார். 1732ஆம் ஆண்டு பெயர், பொருள், தொகை, தொடை எனும் நான்கு நிலைகளில் அருஞ்சொற்களுக்குப் பொருள் காணும் வகையில் சதுரகராதி வழங்கியுள்ளார்.இது தமிழின் முதல் அகராதி இதன் மூலம் “தமிழ் அகராதியின் தந்தை” என போற்றப்பட்டார். பதினையாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு விளக்கம் நல்கும் “சதுரகராதி” மொழிக் களஞ்சியமாகத் திகழ்கிறது. தமிழின் முதல் ஏளன நூலான “பரமார்த்த குரு கதை” எழுதியவர். 

       1743 ஆம் ஆண்டு தமிழகத்தின் பேச்சு மொழி அகராதியை ஒன்பதாயிரம் சொற்களுக்கு விளக்கம் தரும் வகையில் ஈந்துள்ளார். 1744 ஆம் ஆண்டு போர்த்துக்கீசு தமிழ் - இலத்தீன் அகரதியை இயற்றியுள்ளார். பிரஞ்சு - தமிழ் அகராதியையும் வழங்கியுள்ளார். 

சவலை வெண்பா, மணிமாலை, எண் வகைப் புத்தணிகள் ஆகியவை வீரமாமுனிவர் தொன்னூல் விளக்கம் வாயிலாக வழங்கியுள்ள புதுக்கொடைகள் ஆகும். தமிழில் எகர ஏகாரங்களையும் ஒகர ஓகாரங்களையும், ஒற்றைக் கொம்பு இரட்டைக் கொம்பு வேறுபாடுகளையும் தெளிவாக எழுத உதவி யவர். இத்தகைய வரிவடிவம் மாற்றத்தை தாம் கொண்டு வந்த செய்தியை கொடுந்தமிழ் இலக்கண நூலில் பெருமிதத்தோடு பேசியுள்ளார்”. (முதுமுனைவர் பா.வளனரசு தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டு தமிழறிஞர்கள் 27 July 2024)

இவ்வாறு பல துறைகளில் தமிழ் மொழிக்கு தொண்டு செய்த வீரமாமுனிவர் தமிழ் வசன நடையையும் வளர்ப்பாராயினர். கிறித்தவ மத போதகம் செய்யும் உபதேசியர்களுக்காக வீரமாமுனிவர் ஒரு வசன நூல் எழுதினார். அதற்கு ‘வேதியர் ஒழுக்கம்’ என்று பெயரிட்டார். அந்நூல் வீரமாமுனிவர் இயற்றிய உரைநடை நூல்களில் தலைசிறந்ததாகும் என்கிறார் போப்பையர். 

வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம், ஞானக் கண்ணாடி, குருவின் கதை, ஞான விளக்கம் திருச்சபைக் கணிதம் ஆகிய ஒன்பது உரைநடை நூல்களையும் வழங்கியுள்ளார். பதினெட்டு இயல்களுடன் நூற்று நாற்பது உட்பிரிவுகள் கொண்ட வேத விளக்கம் தமிழில் பொருள் அட்டவணை தந்த முதல் நூலாகும். நிருபம்,பொதுநிருபம் என்று இரண்டு கடித இலக்கியங்களை நல்கியுள்ளார். “வீரமாமுனிவர் தமிழ் இலக்கியத்தின் தாந்தே”(Dante della lingu Tamil)என்று போற்றப்படுகிறார். (தனிநாயகம் அடிகளார்,தமிழ்த்தூது பக். 23 )

திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, அன்னை அழுங்கல் அந்தாதி, அடைக்கல மாலை, அடைக்கல நாயகி வெண்கலிப்பா, தேவாரம், வண்ணக் கலைகள் ஆகிய சிற்றிலக்கிய ஏடுகள் ஏழினை ஈந்துள்ளார்.

கிறித்தவ தமிழ்த் தொண்டர் வீரமாமுனிவர்

         திருச்சி சந்தா சாகிப்பிடம் திவானாகப் பணிபுரிந்தவர். ஆர்க்காட்டு நவாபின் மருமகன் சந்தா சாகிபைச் சந்தித்து அளவளாவி, விழுமிய துறவி என்னும் பொருள் தரும் “இசுமாத்து சந்நியாசி” என்று பாராட்டப்பட்டார். சந்தா சாகிபு தன் தாத்தா சததுல்லாகான் பயன்படுத்திய தந்தப்பல்லக்கை வீரமாமுனிவருக்கு வழங்கியுள்ளார். வீரமாமுனிவர் மாசற்ற இயேசுநாதர் காட்டிய நெறியைத் தமிழகம் எங்கும் பரப்பி வெற்றி கண்டவர். பல்வேறு துறைகளில் நூல்கள் இயற்றித் தமிழ் மொழிக்குச் செயற்கரும் பணி செய்து சிறப்புற்றவர் என்று பெரும்புலவர் பண்டாரம் நம்பியார் “தமிழ் வளர்த்த தைரியநாதர்”என்னும் நூலில் போற்றிப் புகழ்ந்துள்ளார்.(பக் .157)

முடிவுரை

     திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்று நம் முன்னோர்கள் கூறியதற்கும் மேலாகத் தமிழர்கள் இன்று உலகெங்கும் பரவி தமிழை வளர்த்து வருகிறார்கள். உலக நாடுகளோடு அளவளாவி தமிழ் மொழி வளர்ச்சியை போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள். இவ்வாறெல்லாம் உலகின் பல நாடுகளில் புகழோடு விளங்கும் தமிழ் மொழியை மேலும் ஒளிரச் செய்வதில் நாமும் பெருமுனைப்போடு ஈடுபடுவோம். 

துணைநூற்பட்டியல்

1.   முனைவர் தேவிரா, தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம், நந்தினி பதிப்பகம், சென்னை- 101.

2.   முதுமுனைவர் பா. வளனரசு, தமிழுக்கு வளம் சேர்த்த அயல் நாட்டுத் தமிழறிஞர்கள் ( 27 ஜூலை 2024)

 

கருத்துகள் இல்லை: