இந்து
சமய வழிபாட்டில் சூரிய நமஸ்காரம் பெறும் முக்கியத்துவம்
பா. ஜேசினி மதுஷிகா BA (Hons)
ஆய்வுச் சுருக்கம்
மனித வாழ்வின் உண்மையான நோக்கம் மனிதன்
எவ்வளவு பொருள் ஈட்டி எவ்வளவு வசதியாக வாழ்கின்றான் என்பதில் இல்லை. மனிதன் எவ்வளவு
தேக ஆரோக்கியத்துடனும், மனஉறுதியுடனும் வாழ்கின்றான் என்பதே. தன்னிடம் உள்ள அனைத்துப்
பொருள்களை ஒருவன் இழந்த பின்பும் அவன் மனஉறுதியுடனும் தேக ஆரோக்கியத்துடனும் உறுதியாக
முன்னேறுவானாயின் அவனது நிலை மென்மேலும் உயருமே தவிர தாழ்வடையாது.
இன்றைய சமுதாய இளைஞர்கள் பொருள் ஈட்டுவதில்
அக்கறை காட்டும் அளவிற்கு தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. “சுவர் இருந்தால்
தான் சித்திரம் வரைய முடியும்” என்ற பழமொழியை மறந்து விட்டனர். அவர்களது உணவு முறை,
பழக்கவழக்கங்கள் மேலும் அவர்களை பலவீனமாக்குகின்றன. நாகரிகத்தை நோக்கி நகருவது அவசியமாயினும்
அது எம் தேக ஆரோக்கியத்தை இழக்கச் செய்து விடக் கூடாது.
இன்றைய சமுதாயத்தினரின் தேக ஆரோக்கியத்தைக்
கட்டியெழுப்ப பல யோகாசன நிலையங்கள், உடற்பயிற்சி
கூடங்கள் வழிகாட்டி வருகின்றன. உண்மையில் பணத்தை வழங்கி மறந்த எமது பாரம்பரிய கலைகளை
நாம் புதிதாகக் கற்பது போல் கற்று வருகின்றோம்.
இவ்வாய்வானது இன்றும் நாம் மறந்த எமது
தொன்மை மிகுந்த தேகப் பயிற்சி கலையான சூரிய நமஸ்காரத்தையும் அதன் முக்கியத்துவம் பற்றியதாகும்.
இன்றைய சமுதாயத்தினருக்குச் சூரிய நமஸ்காரம் பற்றித் தெரியுமா? அவர்கள் இக்கலையை மறக்க
காரணம்? தெரிந்திருந்தும் அதனைத் தொடர்ந்து கடைபிடிக்கத் தவறியது ஏன்? மீண்டும் எம்மிடையே
இக்கலையை கொண்டு வருவது எவ்வாறு? சூரிய நமஸ்காரத்தினால் கிடைக்கும் பலன்கள் என்ன? போன்றன
இவ்வாய்வின் பிரச்சனைகளாகும். இவ்வாய்வு விவரண ஆய்வாக அமைகிறது.
சூரிய நமஸ்காரம் சூரியன் வெளிப்படும்
நேரத்தில் மேற்கொள்ளப்படும் பெரும்பாலும் காலை வேளையில் செய்வது சிறந்தது. காலை வேளையில்
செய்ய நேரமில்லாதவர்கள் மாலையில் மேற்கொள்ளலாம். சூரிய நமஸ்காரம் விஞ்ஞான முறையில்
உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தி ஒருமிக்க செயற்படுத்தும் ஓர் அற்புதக் கலையாகும்.
இது எம் உடலை சூரியசக்தியுடன் ஒத்திசைத்து இயங்க உதவுகிறது. சூரியக் கதிர்களை எமது
உடல் உள்வாங்கி அதன் சக்தியை உணர உதவுகின்றது. விஞ்ஞான ரீதியில் விட்டமின் ஏ வானது
காலை வேளையில் சூரிய சக்தி உடலில் படுவதனால் உடலால் தோல் கலங்களில் தொகுக்கப்படுவதாக
ஆய்வுகள் அறியத்தருகின்றன. சூரிய நமஸ்காரம் மூலம் எமது உடலில் வெப்பம் உயர்த்தப்படுகின்றது.
தொன்மையான இந்து சமயமானது சூரிய நமஸ்காரம் சூரியனிற்கு வழங்கும் கௌரவமாகப் போற்றப்படுகின்றது.
பிரபஞ்சத்தின் சக்திகள் அனைத்தையும் ஆளும் சூரிய சக்தியைப் போற்றும் முகமாக அமைகின்றது.
அவனின்றி அணுவும் அசையாது என்பது சூரியனிற்கே பொருந்துகின்றது.
எமது உடலின் அனைத்து அங்கங்களும் இழையங்களும்
தொகுதிகளும் தொடர்ச்சியான சூரிய நமஸ்காரத்தின் மூலம் புத்துயிர்ப்பு அடைகின்றது. உடல்
நெகிழ்வுத் தன்மை பெறுகின்றது. எமது உடலையும், மனதையும் கட்டுப்படுத்த எம்மால் முடிகின்றது.
இராமாயண, மகாபாரத புராணங்களில் நாம் கேள்வியுற்ற ரிஷிகள், முனிவர்கள் சூரிய நமஸ்காரத்தை
மேற்கொண்டமைக்கான ஆய்வுகள் காணப்படுகின்றன.
இன்று அனைத்து இனத்தவரும் உலகம் முழுவதும்
யோகாசனம் எனக்கூறிச் செய்யப்படும் உடற்பயிற்சி கலையின் மூலாதாரம் சூரிய நமஸ்காரம் ஆகும்.
மனக்குழப்பத்தையும், உடல் சோர்வையும் நீக்கி வாழ்வின் புதிய தேடலை உணர வைப்பதற்கு உதவும்.
சூரிய நமஸ்காரத்தின் தொன்மையை இன்றைய சமுதாயத்திற்கு உணர்த்தவும் இதன் விஞ்ஞான பூர்வமான
பலன்களையும் உடல்சார், மனம்சார் அசௌகரியங்கள் நோய் நிலைமைகளை முறையான பயிற்சியின் மூலம்
குணமாக்க முடியும் போன்ற சூரிய நமஸ்காரம் பற்றி அறியாத பல விடயங்களை இன்றைய சமுதாயத்திற்குத்
தெரியப்படுத்துவதே இவ்வாய்வாக அமையும் எனலாம்.
திறவுச் சொற்கள்
சூரிய நமஸ்காரம்,
தேக ஆரோக்கியம், பயிற்சி, சூரியன், யோகாசனம்.
ஆய்வு அறிமுகம்
ஆரம்பக் காலங்களில் செய்யப்பட்ட பல தேகபயிற்சிகளின்
தொகுப்பில் சிறப்புற்று முதலிடம் பெறுவது சூரியநமஸ்காரம் ஆகும். சூரியநமஸ்காரம் அவரவர்
வயதுக்கேற்றப்படியும் தற்போதைய உடல்நிலைக்கேற்றப்படியும் மெதுவாகவோ அல்லது விரைவாகவோ
செய்ய இயலும்.
எட்டு முதல் பன்னிரண்டு வயதுடையோர் தினந்தோறும்
25 முதல் 50 நமஸ்காரங்கள் வீதமும், பன்னிரண்டு முதல் பதினாறு வயதுடையோர் 50 முதல்
150 நமஸ்காரங்களும், பதினாறு வயதிற்கு மேற்பட்டவர்கள் 150 தொடக்கம் அதிகப்படுத்திக்
கொண்டு 300 வரை நமஸ்காரங்களைச் செய்ய வேண்டும். சூரியநமஸ்காரம் செய்ய ஆரம்பித்து தொடர்ச்சியாகச்
செய்யின் சிறந்த பலன் கிட்டும். (பாலாசாஹேப், பீ. ஏ., 1928:5)
சூரியநமஸ்காரம் பன்னிரண்டு நிலைகளைக்
கொண்டது. இவை சுவாசத்தை ஆழமாகப் பேணி முழு உடலையும் மனதுடன் ஒருமிக்கும் வகையிலாக அமைகின்றன.
சூரியநமஸ்காரத்தின் வகைகள்
சூரியநமஸ்காரம் காலத்துடன் பலவகை மாறுதல்களை
ஏற்படுத்தி திரிபுற்றுள்ளது. அந்தவகையில் மூன்று
வகை சூரியநமஸ்காரங்கள் காணப்படுகின்றன.
•
அஷ்டாங்க
சூரியநமஸ்காரம்
•
ஹத
சூரியநமஸ்காரம்
•
ஐயங்கார
சூரியநமஸ்காரம்
சூரியநமஸ்காரம் செய்யும் முறையும் அதன் 12 நிலைகளும்
மனதை ஒரு நிலையில் கட்டுப்படுத்தி மனஉறுதியை
ஸ்தீரமாகப் பேணுவதற்கு மந்திரங்கள் மனதிற்குள் ஓதப்படுகின்றது. எனவே சூரியநமஸ்காரத்தை
வெறுமனே செய்யாமல் மனதிற்குள், சூரியனை நோக்கி மந்திரங்கள் சொல்லுவதன் மூலம் மேலும்
இப்பயிற்சி பலன் தரும்.
இவ்வாறாக ஓதப்படும் மந்திரம் “ஓம் சூரியாய
நம” என சூரியநமஸ்காரம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. (ரெங்கன், ஜி. எம்.,
1942:42)
சூரிய நமஸ்காரத்தின் பன்னிரெண்டு
நிலைகள்
1.
பிராணமாசனம் (Pranamasana)
2.
ஹஸ்தா உத்தானசனா (Hasta
Uttanasana)
3.
ஹஸ்தா பதாசனா (Hasta
Padasana)
4.
அஷ்வா சஞ்சலனாசனா (Ashwa
Sanchalanasana)
5.
தண்டசனா (Dandasana)
6.
அஸ்டாங்க நமஸ்காரம் (Ashtanga
Namaskara)
7.
புஜங்காசனம் (Bujangasana)
8.
அதோ முக ஸ்வனாசனா (Adho
Mukha Svanasana)
9.
அஷ்வா சஞ்சலனாசனா (Ashwa
Sanchalanasana)
10.
ஹஸ்தா பதாசனம் (Hasta
Padasana)
11.
ஹஸ்தா உத்தானசனா (Hasta
Uttanasana)
12.
தடாசனம் ஃ பிராணமாசனம் (Tadasana
/ Pranamasana)
இந்நிலைகளில் ஒன்று தொடக்கம் நான்கு
வரையான நிலைகளும் முறையே பன்னிரெண்டு தொடக்கம் ஒன்பது வரையான நிலைகளும் ஒரே பயிற்சி
அமைப்பைக் கொண்டவை.
இப்பன்னிரெண்டு நிலைகள் கிரமமாக செய்துமுடிப்பின்
அது ஒரு சூரியநமஸ்காரமாக கருதப்படும் அதாவது ஒரு சுற்று.
சூரியநமஸ்காரத்தின் போது மனிதனின் பின்வரும்
எட்டு அங்கங்களும் பயன்படுத்தப்படுகின்றன. தலை, இதயம், கால்கள், கைகள், தோள்கள், முழங்கால்,
பார்வைக்குரிய கண், வார்த்தைகளின் உச்சரிப்பு, மனமும் சித்தமும். சூரியநமஸ்காரம் செய்வதற்கு
ஏழு அடி நீளமும், இரண்டரை அடி அகலமும் உள்ள இடம் இருந்தால் போதும். நிலமட்டமானது சமதரையாகக்
குன்றும் குழியுமற்று, கற்கள் போன்ற கூர் பொருட்களற்ற வழுக்காத நிலமாக அமைதல் வேண்டும்.
இப்பயிற்சியின்போது இலேசான பாரமற்ற துணிகளை அணிவது சிறந்தது. ஆண்கள் மேலாடை அணியாமலும்
செய்யலாம். சூரியன் உதிப்பதற்கு முன் உட்கொள்ளாமல் சூரியநமஸ்காரம் செய்வது நன்று. அதிகாலையில்
எழுந்து குளித்துவிட்டு இப்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.
1. முதலாவது நிலை – பிராணமாசனம்
நிலத்தின் மீது வழுக்காத ஒர் துணியை
விரித்து அதன் மீது கால்களைச் சேர்த்து விரலின்
நுனிகள் ஒன்றையொன்று தொடுமாறு சூரியன் உதிக்கும் திசையான கிழக்குத் திசை நோக்கி நிற்றல்
வேண்டும். மாலை நேரம் சூரியநமஸ்காரம் செய்வோர் சூரியன் மறையும் திசையான மேற்குத் திசையை
நோக்கி நிற்றல் வேண்டும். கைகள் இரண்டையும் மார்பின் மேல் முன்னோக்கி குவித்து உள்ளங்கைகளை
பொருத்தி வைத்துக்கொள்ள வேண்டும். நன்றாக சுவாசத்தை உள்ளிழுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தலையை நேராகவும், உடலை நிமிர்த்தியும் வைத்துக் கொண்டு மந்திரத்தை உச்சரித்து முழு
மனதையும் உடலுடன் ஒருமிக்க கொண்டு வர வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி பின்பு
வெளிவிடல் வேண்டும். இது மெதுவாக செய்யப்படல் அவசியம். ஏனைய எல்லா நிலைகளிலும் சுவாச
செயன்முறை இவ்வாறாக அமைய வேண்டும். சிறிது சிரமமாக இருப்பினும் அவரவர் தேகத்தின்ஃசக்தி
வலிமைக்கேற்ப மூச்சு உள்ளிழுத்தல், வெளிவிடலை மேற்கொள்ளல் சிறந்தது.
2. இரண்டாம் நிலை - ஹஸ்தா உத்தாசனா
சுவாசத்தை உள்ளிழுத்தப்படி கைகளைக் கூப்பிய
வண்ணமே உயர்த்தி முதுகெலும்பை, உயர்த்திய கைகளை காதோடு அண்மித்து பின்புறமாக வளைக்க
வேண்டும். இடுப்பை சற்று முன்தள்ளி கால்களை மடிக்காமல் பின்புறம் வளைய வேண்டும். இதன்
போது உடலை விறைப்பாக ஒரு இழுவையின் கீழ் வைத்திருப்பது போன்று இருக்கும். பின்பு சுவாசத்தை
வெளிவிட வேண்டும்.
3. மூன்றாம் நிலை - ஹஸ்தா பதாசனா
சுவாசத்தை இரண்டாம் நிலையில் வெளியிட்டப்
பின் மீண்டும் நிமிர்ந்த நிலையை அடைந்தவுடன் மீண்டும் சுவாசத்தை உள்ளிழுத்து முன்னோக்கி
வளைந்து கால் விரல்களின் நுனியை கைகளின் நுனிவிரல்கள் தொடவேண்டும். இதன் போது முழங்கால்கள்
வளையக்கூடாது. இது ஆரம்பத்தில் சிரமமாக இருப்பினும் ஆரம்பப் பயிற்சிக் காலங்களில் கால்
நுனியை தொட பயிற்சி செய்து சிறிது பயிற்சி முடிய முழங்காலை நிமிர்த்தி சரியான நமஸ்காரத்தைச்
செய்ய முயற்சிக்க வேண்டும். உடலை வளைக்கும் போது மூக்கானது முழங்காலை தொடும் வண்ணம்
முகம் அமைய வேண்டும். இப்பயிற்சியின் இறுதியில் சுவாசத்தை வெளியிடல் வேண்டும்.
4. நான்காம் நிலை - அஷ்வா சஞ்சலனாசனா
சுவாசத்தை நன்கு உள்ளிழுத்து கைப்புயத்தை
வளைக்காமல் உள்ளங்கைகளிரண்டையும் தரையில் ஊன்றி தலை தோள்பட்டையுடன் நேராக அமையுமாறு
நிமிர்த்தி, வலது காலை பின்புறம் நன்கு தூரமாக நீட்டி, நீட்டப்பட்ட காலினுடைய முழங்காலும், விரல்களும்
நிமிர்ந்திருக்கும் புயங்களுக்கு சரியாக நிலத்தைத் தொட வேண்டும். இடது காலை நிலத்தில்
ஊன்றிய உள்ளங்கைகளுக்கு இடையில் முழங்காலை மடித்து ஊன்ற வேண்டும்.
5. ஐந்தாம் நிலை - தண்டசனா
சுவாசத்தை நன்கு உள்ளிழுத்து இடது காலையும்,
பின்புறம் நன்கு தூரமாக நீட்டி பாதத்தின் நுனிவிரலால் நிலத்தை ஊன்றி உள்ளங்கையை நிலத்தில்
ஊன்றிப் புயத்தை வளைக்காமல் முழங்காலை மடிக்காமல் உடலை உயர்த்த வேண்டும். பாதங்களுடன்
உடலை நேராக பேண வேண்டும். இதன் போது புயங்கள் நிலத்துடன் செங்கோணமாக ஃ 90° அமைக்கும்
வண்ணம் அமைய வேண்டும்.
6. ஆறாம் நிலை - அஸ்டாங்க நமஸ்காரம்
மெதுவாக முழங்காலையும் புயங்களையும்
தரையுடன் கீழ் நோக்கிக் கொண்டு வருவதுடன் சுவாசத்தை வெளிவிட வேண்டும். இதன்போது பெருவிரல்கள்,
உள்ளங்கைகள், முழங்கால்கள் நிலத்தைத் தொடும். முகத்தின் கீழ்த்தாடை நாடி (Chin) மார்பினை மேற்பாதத்தில் தொடும்படி தரையில்
மார்பையும், நெற்றியையும் தொட செய்ய வேண்டும். இதன் போது மூக்கானது தரையை தொடக்கூடாது.
வயிறு தரையில் படாத வண்ணம் இடுப்புடன் உள்ளிழுத்து உயர்த்தி வைத்திருக்க வேண்டும்.
இதன்போது இடுப்பை தன்னால் இயன்றவரை உயர்த்த வேண்டும். உள்ளிழுத்த சுவாசத்தை முழுவதுமாக
வெளியிட வேண்டும்.
7. ஏழாவது நிலை - புஜங்காசனம்
இதை விளங்குவதற்காக நாகபாம்பின் நிலைப்
போல என்று கூறப்படும். (Cobra Pose)
ஆறாம் நிலையிலிருந்து மெதுவாக நெஞ்சுப்பகுதியை நிமிர்த்திக் கொண்டு வந்து பின்புறமாக
வளைக்க வேண்டும். முள்ளந்தண்டை தோள்பட்டையுடன் சேர்த்து பின்புறமாக வளைக்க வேண்டும்.
மூச்சை உள்ளிழுப்பதனூடாக மார்பை மெதுவாக உயர்த்திப் பின்பு மூச்சை மெதுவாக வெளிவிடல்
வேண்டும். பாதத்தின் விரல் நுனிகள் தரையுடன் கிடையாக அல்லது சமாந்தரமாக அமைய வேண்டும்.
8. எட்டாவது நிலை – அதோ முக ஸ்வனாசனா
சுவாசத்தை உள்ளிழுத்து ஐந்தாம் நிலைக்கு
வரவேண்டும். புயங்கள் நேராக வைக்கப்பட்டு இடுப்பு, முதுகு, தலை ஒரே வரிசையில் இருக்கச்
செய்து தற்போது பாதத்தால் நிலத்தை ஊன்றி இடுப்பை நன்கு உயர்த்த வேண்டும். உள்ளங்கையை
தரையுடன் தொட செய்து நகர்த்தாமல் புயங்களை சரிவாக வைத்து முழு உடலையும் “ஏ” அடையாளத்தினை தலைகீழாக திருப்பின் “டூ” இவ்வாறு
அமையுமாறு கொண்டுவர வேண்டும். முழங்கால்கள் மடியக்கூடாது.
9. ஒன்பதாவது நிலை - அஸ்வா சஞ்சலாசனா
இது நான்காம் நிலையின் பயிற்சியே அங்கு
வலது காலை பின்புறம் நீட்டியது போல இங்கு இடது காலை பின்புறம் நீட்டி வலது காலானது
தரையில் ஊன்றிய உள்ளங்கைகள் இரண்டிற்குமிடையே முழங்காலை மடித்துக் கொண்டு வரப்படும்.
இதன் போது இடதுகாலின் முழங்கால், பாதத்தின் நுனி நிமிர்ந்திருக்கும் வண்ணம் அமையும்.
எட்டாம் நிலையிலிருந்து ஒன்பதாம் நிலைக்கு
வரும் போது இடதுக் காலை நன்றாக நீட்டி வலதுக் காலை புயங்களுக்கிடையே கொண்டு வருவதுடன்
இடுப்பையும் நெஞ்சப்பகுதியையும் மெதுவாக கீழே கொண்டு வர வேண்டும். மூச்சை உள்ளிழுத்து
வெளிவிடல் நான்காம் நிலை போன்றே அமைய வேண்டும்.
10. பத்தாம் நிலை - ஹஸ்தா பதாசனம்
இது மூன்றாம் நிலை போன்றது. ஒன்பதாம்
நிலையிலிருந்து பத்திற்க்கு வரும் போது இடது காலை மடித்து உள்ள இழுத்து இரு கால்களையும்
நிமிர்த்துக்கொள்ள வேண்டும். இதன் போதும் முழங்கால்களை மடித்து இந்நிலையை அடைய முடியும்.
பின்பு கைகளினை பாதத்தின் விரல்களின் நுனியை தொடுமாறு வைத்து முழங்கால்களை மெதுவாக
நீட்ட வேண்டும். தலையானது முழங்காலை தொடும் வண்ணம் உடலை நன்கு வளைக்க வேண்டும். மூச்சை
இழுத்து வெளியிட மூன்றாம் நிலை போன்று அமைய வேண்டும்.
11. பதினோராம் நிலை - ஹஸ்தா உத்தானசனா
மூச்சை உள்ளிழுத்து வளைந்த நிலையிலிருந்து
நிமிர்ந்து புயங்களை கூப்பிய வண்ணம் தோள்பட்டையும் உடலையும் பின்னோக்கி வளைக்க வேண்டும்.
கால்கள் தரையுடன் நேராக அமைய முள்ளந்தண்டை வளைக்க வேண்டும். உடல் இழுவைக்குட்பட்டு
அமைதல் வேண்டும். இது இரண்டாம் நிலையை ஒத்தது.
12. பன்னிரெண்டாம் நிலை - தடாசனம் ஃ பிராணமாசனம்
மூச்சை மெதுவாக வெளிவிட்டப்படி நிமிர்ந்த
நிலைக்கு வந்த பின்பு உடலை நேராகப் பேணப் புயங்களைக் கீழே இறக்கி உடலுக்கு சமாந்தரமாகக்
கொண்டு வந்து உடலைத் தளர்வாகப் பேண வேண்டும். உடலிலும் மனதிலும் இவ் இறுதி நிலையில்
உள்ள உணர்வை எமது உள்ளுணர்வு உணர வேண்டும்.
இவ்வாறு மீண்டும் பிராணமாசனம் நிலையிலிருந்து
பன்னிரெண்டு நிலைகளினூடாகச் சூரிய நமஸ்காரப் பயிற்சியைத் தொடர வேண்டும்.
வியக்கவைக்கும் சூரியநமஸ்காரத்தின்
பயன்கள்
சூரியநமஸ்காரத்தின் ஒவ்வொரு நிலைகளும்
உடலின் வெவ்வேறு பாகங்களுக்கு பயிற்சி வழங்குகின்றது.
முதலாவது நிலை
கழுத்து, இதயம், கைகள், தோள்பட்டை என்பவற்றின்
தசைகளையும் அவற்றை என்புடன் இணைக்கு இணையங்களுக்கும் வலுவை வழங்குகின்றது. அத்தோடு
நரம்புத் தொகுதியைச் சிறிது தளர்வடையச் செய்து மனித சிந்தனையைச் சாந்தமடையச் செய்கிறது.
உள்ளிழுத்து வெளிவிடும் சுவாசமானது உடல் முழுவதும் ஒட்சிசன் ஏற்றப்பட்ட குருதியைக்
கொண்டு செல்வதோடு கலசுவாசத்தின் மூலம் வெளியேறிய காபனீரொட்சைட்டு வாயுவை வெளியேற்றுகின்றது.
உட்சுவாச வெளிசுவாச பயிற்சி உடலைப் புத்துயிர்ப்படைய செய்கின்றது. சுவாசப்பயிற்சி மனதிற்கும்
ஒரு அமைதியைத் தருகின்றது. தீய எண்ணங்களை வெளியேற்றி நல்லெண்ணங்கள் உள்வருவது போன்ற
உணர்வை அளிக்கின்றது. அதிகாலைப் பொழுதில் கதகதப்பான சூரியஒளி எம்மீது படும்போது அது எமது ஆத்மசக்தியை வலுவூட்டும் (யரசய) அது எமது மனதின் சிந்தனையின்
கூர்மையையும் மேம்படுத்தும்.
இரண்டாம் நிலை
இதன்போது சுவாசப்பைகள் நன்கு விரிவடைந்து
அதிகளவான ழு2 உள்ளெடுக்க உதவுகின்றது. அத்துடன்
உடல் தசைநார்கள், தோள்பட்டை, முள்ளந்தண்டு என்பன வளையக்கூடிய தன்மை பெறுகின்றது (குடநஒைடிடைவைல).
இதன் போது முழங்கால், முன்னங்கை, பின்னங்கை, முதுகெலும்பு என்பன விறைப்பாகவும், உறுதியாகவும்
வைத்துக்கொள்ள வேண்டும். இதை தளர்வாக இருப்பின் பயன்தராது.
மூன்றாவது நிலை
இந்நிலையில் தொடையின் பிற்பாக தசைநார்கள்,
அரைப்பகுதி இடுப்பு என்பவற்றிற்கு பயிற்சி வழங்கப்படும். பொதுவாக இப்பகுதிகளில் காணப்படும்
நினநீர்த் தொகுதிகள் உடலில் உள்ள நோயாக்கி கிருமிகளை அழிக்கவல்லது. இப்பயிற்சி மூலம்
அத்தொகுதிகள் வலுவடையும். தோள்பட்டையுடன் புயங்களை இணைக்கும் தசைநார்களும் வலுவடையும்.
முழங்காலை வளைக்காது குனியும்போது அடிவயிற்றினதும் இரைப்பையானதும் தசைபகுதிகள் இறுகி
உறுதியடையும்.
நான்காவது நிலை
இது உடலை நன்கு வளைக்க உதவுகின்றது.
வலதுக் காலை பின்புறம் நீட்டும் போது வலது தொடை தசை நார்கள் இழுவையடைவதுடன் மடிக்கப்பட்டு
இருக்கும். இடது கால் தொடை மண்ணீரல் எனும் முக்கிய அங்கத்தை அழுத்தி அதன் தொழிற்பாடுகளை
சீராக்குவதோடு இடது கால் நீட்டப்படும் போது தொடை தசைநார்கள் வலுவாவதுடன் வலது கால்
மடிக்கப்பட்டு அது ஈரலை அழுத்தி சீராக்கும். மனித உடலில் அதிகளவு அனுசேப தாக்கங்கள்
நிகழ்த்தும் அங்கங்களில் ஈரலும் முக்கிய இடம் வகிக்கின்றது. இதன் போது பாதங்களின் நுனி,
முழங்கால் என்பன உறுதியடையும்.
ஐந்தாம் நிலை
புயங்கள் வலுவடையும். முள்ளந்தண்டு ஒரே
கோட்டில் அமைவதால் முள்ளந்தண்டில் ஏற்பட்டுள்ள பிடிப்புக்கள், தசை அழுத்தங்கள் என்பன
விலகும். உடலெங்கும் இறுகி உள்ள தசைகள் தளரும். உள்ளங்கையும் பாத நுனியும் முழு உடல்
பாரத்தைத் தாங்குவதனால் வலுவாகும். உடலில் இரத்த ஓட்டம் சீராகும்.
ஆறாவது நிலை
இது முள்ளந்தண்டிற்க்கும், முதுகிற்க்கும்
நெகிழ்வுத் தன்மை அளிக்கிறது. இது இறுக்கத்தையும் தகைப்பையும் இல்லாதுச் செய்கிறது.
நெஞ்சறைப் பகுதியின் விலா என்புகள் வளைவதனால் உறுதி வழங்குகின்றது.
ஏழாவது நிலை
இது உடலெங்கும் பல அங்கங்களுக்கு குருதி
விநியோகத்தை சீராக்குகிற்றது. பெரும்பாலும் கீழ் அவையத்தின் எலும்புகளுடன் இணைந்துள்ள
தசைகளை தளர்வடையச் செய்கிறது. இடுப்புக் குழியில் அமைந்துள்ள சிறுநீரகம், அதிரினல்
சுரப்பிகளிற்க்கு அதிகளவு குருதி விநியோகம்
நடைபெறுவதோடு, கருப்பை சூலகங்கள் போன்ற அங்கங்களுக்கும் பயிற்சி கிடைக்கின்றது.
தலைப்பகுதி மேல்நோக்கி உயர்த்தப்படுவதால் தொண்டையின் தசைநார்கள் கழுத்து தசைகள் வலுவடைய
பயிற்சி கிடைக்கிறது. சுவாசப் பாதை சீராகின்றது.
எட்டாவது நிலை
இது தோள்பட்டைக்கும் முள்ளந்தண்டுக்
கம்பத்திற்கும் பயிற்சி அளிக்கின்றது. முள்ளந்தண்டுக் கம்பம் வளைவடைந்துக் காணப்படுவதால்
அது நெகிழ்வுத் தன்மை அடைகிறது. முள்ளந்தண்டை வட்டத்தட்டுகள் வலுவடைகின்றன. புயங்கள்
வலுவடைகின்றன. இங்கு வயிற்றின் இருபுறமும் தோள்களும் பயிற்சி அளிக்கப்படுகின்றது. சுவாசப்
பயிற்சி மேலும் உடலை வலுவூட்டும்.
ஒன்பதாம் நிலை தொடக்கம் பன்னிரண்டாம்
நிலைகள் வரை முதல் நான்கு நிலைகளின் பயிற்சிகளைப் போன்றே உடலை வலுவூட்டும்.
இப்பன்னிரெண்டு நிலைகள் மனதை வலுவூட்டும்
விதம் வியப்பூட்டும் செயலாகும். இப்பயிற்சியின் போது மனதை ஒரு இடத்தில் குவிக்க முடியும்.
பெரும்பாலும் எம் முன்னோர்கள் அவர்களது இஷ்ட தெய்வங்களை மனதில் நிலைநிறுத்துவர். இல்லையேல்,
சுவரில் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து அதனை பார்த்த வண்ணம் செய்யலாம். அல்லது சூரியன்,
மஞ்சள், செம்மஞ்சள், நிற வட்ட வடிவங்கள் கொண்ட படங்களையாவது பயன்படுத்தலாம். தொடர்ந்து
சூரியநமஸ்காரத்தினை செய்து வர எமது மனம் ஒவ்வொரு விடயத்திலும் கவனம் செலுத்தும் தன்மை
(குழஉரள) அதிகரிக்கும். தீராத மனக்குழப்பங்கள், சஞ்சலங்கள் இல்லாது போகும். பிரச்சனைகள்
கையாளும் விதம் தெளிவடையும். மன்னிப்பு வழங்குதல், விட்டுக் கொடுத்தல், அமைதியடைதல்,
உணர்வுகளை புரிந்துக் கொள்ளல் போன்ற பண்புகள் வளர்ச்சியடையும்.
சூரிய சக்தி பற்றிய விஞ்ஞான விளக்கம்
எமது பால் வீதியில் உள்ள அனைத்து கோள்கள்
சூரியனின் ஈர்ப்பு சக்தியினால் தான் சூரியனை சுற்றி வலம் வருகின்றன. புவியில் உள்ள
அனைத்து ஜீவராசிகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ சூரிய சக்தியில் தங்கி உள்ளன. சக்தியை
ஆக்கவோ அழிக்கவோ முடியாது. வேறொரு வடிவத்திற்கு மாற்ற முடியும். எனவே தான் புவியில் உள்ள சக்திகள் சூரிய சக்தியிலிருந்து
மாற்றம் பெற்று வந்தவை ஆகும். புவியின் முதல் உற்பத்தியாளர்களான தாவரங்கள் சூரிய சக்தியைக்
கைப்பற்றி நீர், காபனீரொட்சைட்டு வாயுவின் மூலம் ஒளித்தொகுப்பு செய்து இரசாயன சக்தியாகச்
சேமிக்கின்றது. இவ் இரசாயன சக்தி உணவு மூலம் உயிரினங்களுக்குச் சென்று பயன்படுகின்றது.
சூரியன் இல்லாவிடின் புவியில் ஒரு உயிரினம்
கூட வாழ முடியாது. புவியானது முழுவதுமாக பனிக்கட்டி பாறைகளால் மட்டுமே காணப்படும்.
சூரியன் ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்வினதும் உதயமாகும். இருளை கிழித்து உலகிற்கு ஒளித்
தருகின்றது. இந்து சமயத்தில் இச் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக தான் தமிழ் வருடத்தின்
தைப் பிறப்பாகிய ஜனவரி 14, தைத்திருநாள் கொண்டாடப்படுகின்றது.
புவிக்குச் சூரிய ஒளி கதிர்ப்பின் மூலம் பெறப்படுகின்றது. இது
சூரிய ஒளிச்சக்தியை போட்டோன்களாக கொண்டு வருகின்றது. ஒளிச்சக்தியானது மின்காந்த அலை
சக்தியாகும். இதுவே சக்தியை கடத்துகிறது.
சூரியன் பற்றிய பழமையான ஆதாரங்கள்
தேவார திருப்பதிகங்களில் இரண்டாம் திருமுறையான
திருஞானசம்பந்தர் பாடிய கோளாறு பதிகம் நவக்கிரகங்களினதும், சூரியனும் இருப்பைச் சான்றாகக்
காட்டுகிறது.
கீதையில் கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு, “பிரகாசமான
சூரியனில் இருப்பவர், அவர்தான் பூமி அதன் முழுமை அல்லது விரிவாக்கம், அவர் தான் பரந்து
விரிந்த வானில் உள்ளார். அவர்களுள் வாசு தேவனோ, விருஷ்ணிவன்ஷிகன், பாண்டவர்களில் தனஞ்சயன்
முதலிய யாவரும் உள்ளடங்குவர். அவர் தான் இறைவன்” என கூறியதாகவும், மேலும் ஸ்ரீ கிருஷ்ணர்
கீதையில் “நான் சூரியனுக்கு சகாப்தத்தின் தொடக்கத்தில் என்றும் அழியாத இந்த யோகத்தை
கற்பித்தேன். அதை சூரியன் தன் மகனுக்கு அனுப்பினான். அதைத்தான் மகனாகிய மனு நினைவாக
சேமித்து வைத்துள்ளான்” என்றும் கூறியதாகப் யோக - தர்ஷன் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(பதஞ்சலி., 2010 : 80, 10)
இன்றைய இளைஞர் சமுதாயம் இச்சூரியநமஸ்காரக்
கலையைக் கடைப்பிடிக்கத் தவறியது ஏன்?
இவர்கள் நவீனக் கல்வி முறைகளை தேடிச்
செல்கின்றனரே தவிர பண்டையக் கல்வி முறைகளை கைவிட்டு விட்டனர். அத்துடன் நகரமயமாக்கல்
மூலம் அனைவரும் நகரங்களில் குடியேறி இருப்பதனால் ஆன்மீக, ஆரோக்கிய வாழ்வை மறந்து இயந்திர
வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டனர். சூரியநமஸ்காரம் பற்றி தெரிந்திருந்த முன்னோர்கள்
அதாவது எமது பாட்டன் பரம்பரையினர் சமுதாயம் குறைந்து வருவதால் இதைப் பற்றி எடுத்துரைக்க
எவரும் இல்லை. இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பதால் நூலகங்களில் மாத்திரமே
இருக்கும் பண்டைய கலைகள் தொடர்பான நூல்களை தேடுவோர் யாரும் இல்லை. மேலைநாட்டு உடற்பயிற்சி
கலைகளில் ஈடுபடுவது நாகரிகமானது என்ற எண்ணங்களை இதற்கு காரணம்.
சூரியநமஸ்காரம் தற்போதைய சமுதாயத்திற்குத்
தான் மிகவும் அவசியமென கருத்தப்படுவதன் நோக்கம்
எமது மூத்த தலைமுறையினருக்கு அன்று இருந்த
உடல்நிலை, மனவலிமை இன்று எம்மிடையே இல்லை. அன்று புற்றுநோய், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு,
சுவாச நோய்கள் போன்ற நோய்கள் காணப்படுவதும், கேள்விப்படுவதும் மிக அரிது. ஆனால் இன்றோ
வீட்டுக்கு வீடு இந்நோய்கள் இருப்பதை நாம் கேள்விப்படுகின்றோம். அன்று இறப்பு நிகழ்வதாயின்
அது நன்கு வயது வந்து இயற்கையாக நிகழும். ஆனால் இன்று பிறக்கும் குழந்தைக்கும் மூளை,
இருதயம் போன்ற முக்கியமான அங்கங்களில் கோளாறு ஏற்படுகின்றது. அன்று வீட்டுக்கு வீடு
எட்டு முதல் பத்து குழந்தைகள் இன்றோ செயற்கை கருத்தரிப்பு, சோதனைக் குழாய் குழந்தைகள்
என நிலைமை மாறியுள்ளது. எதனால் என சிந்திப்பின் உணவு பழக்க வழக்கங்களால் மட்டுமல்ல.
எமது வாழ்க்கை கோலத்தாலும் தான். இன்று பத்து மணி நேரம் தொழில்களில் அமர்ந்த வண்ணமே
இருக்கின்றார்கள். படிகளில் ஏறுவதை விட தன்னியக்க மின் உயர்த்திகளை பயன்படுத்துகிறார்கள். எல்லா இடங்களிற்கும் வாகனங்களை
எதிர்பார்த்து இருக்கின்றார்கள். எமது பண்டைய பாமர மக்கள் இந்நமஸ்காரங்களை பற்றி அறியாவிடினும்
அவர்களது உடல் உழைப்பும் வயல்களில் செய்யும் வேலைகள், பாரம் தூக்குதல், அதிகாலையில்
குளிர் நீரில் கிணறு குளங்களில் குளித்தல் போன்ற பழக்கவழக்கங்கள் அவர்களை வலுவாக்கியது.
இன்றைய சமுதாயத்தினரிடம் தற்கொலைகளும்
அதிகரிக்க மனவலிமை இன்மை காரணமாகும். நாம் இழந்த இவ் ஆரோக்கியங்களை இந்நாளில், உலகில்
பெற சூரிய நமஸ்காரம் நல்ல வழிகாட்டியாக அமையும். அனைவரும் தினமும் சூரியநமஸ்காரம் செய்ய
பழக வேண்டும். பெரியோர்கள் வீட்டில் உள்ள சிறியவர்களையும் வழிநடத்தல் வேண்டும். பாடசாலைகளிலும்
இதனை பயிற்றுவிக்க வேண்டும். பாடநூல்களில் இது பற்றி தெளிவுபடுத்த வேண்டும்.
சூரிய நமஸ்காரம் செய்யக்கூடாதவர்கள்
•
கர்ப்பிணிப்
பெண்கள்
•
உடல்
உபாதை உள்ளவர்கள்
•
அறுவை
சிகிச்சை நடைபெற்றவர்கள் செய்தவர்கள் சிறிது காலத்திற்கு தவிர்ப்பது நல்லது.
சூரியநமஸ்காரம் செய்யும் போது
மேற்கொள்ளும் தவறுகள்
•
ஆசன
நிலைகளினை முறையாக கிராமமாக செய்யாமை.
•
நன்கு
உணவருந்திய பின் செய்கின்றமை.
•
உடலை
தவறான நிலைகளில் தானப்படுத்தல்.
•
மது
அருந்துதல், புகைத்தல் போன்ற பழக்கவழக்கங்களை கொண்டிருத்தல்.
•
சுவாசத்தை
உள்ளிழுத்து வெளிவிடலை முறையாக செய்யாமை.
•
ஆசனங்களை
வேகமாகச் செய்து களைப்படைதல்.
போன்றவை முறையாக
பலனை தராது. ஆகவே இவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.
சூரியநமஸ்காரத்தின் பண்டைய சான்றுகள்
பி. எம். லெஸ்ஸர் லாசிரியோ என்பவர்
1924 ஆம் ஆண்டு ீாலளைஉயட ஊரடவரசந இந்த பத்திரிகையில்
“சுவாச உட்சுவாசங்களைக் கிராமப்படுத்திக்; கொண்டபடியால் நான் ஆரோக்கியம் அடைந்தேன்.
நீங்களும் அவ்விதம் பலன் அடையுங்கள். “ஒரு நாள் ஒரு விடயத்தைக் கண்டுபிடித்தேன். பிராண
வாயு என்ற பொருள் உண்டு. அது சாஸ்திர புராணங்களில் கூறியிருக்கும் ஒருவிதமான கற்பனை
அல்ல. உண்மையான வஸ்து என தெரிந்தேன்.” எனக் கூறியிருப்பதாகச் சூரியநமஸ்காரம் எனும்
நூலில் கூறப்பட்டுள்ளது. (ஸ்ரீமான் பாலாசாஹேப் பந்து, பீ. ஏ., 1928:22)
நிறைவுறை
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஆகும்.”
என்ற கூற்றுப்படி உடலை சிறப்பாக ஏதும் குறையின்றி வைத்திருப்பின் எமது இலக்குகளை நாம்
விரைவில் அடையலாம். உடம்பே கோயில், உணவே அமிர்தம் என்றபடி கோயிலாக உடலை வைத்து மனமாகிய
கர்ப்பகிருகத்தில் இறைவனை நிலை நிறுத்தி உத்தமமான வாழ்க்கை வாழ்வதே மனித குலத்தின்
நோக்கமாக அமைய வேண்டும். திருமூலர் திருமந்திரத்தில்,
“உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்பினுள்ளே உத்தமன் கோயில் கொண்டான்
என்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே”
எமது உடம்பை இழுக்கென எண்ணுவதைத் தவிர்த்து
எங்கும் நிறைந்த பரம்பொருள் என்னுள்ளேயும் நிறைந்து உள்ளார் என பாடுவதாக பயன் தரும்.
யோகாசனங்கள் நூலில் கூறப்படுகின்றது. (நவராஜ் செல்லையா, எஸ்., 2022:10)
உடலை தெய்வம் வாழும் தேகமாக்க எம் முன்னோர்கள்
எமக்களித்த செல்வங்கள் தான் சூரியநமஸ்காரம் முதலான யோகாசனங்கள். எனவே சூரியநமஸ்காரம்
பற்றி எடுத்துக்கூறி எமது எதிர்கால சந்ததியினருக்கும் இதை பற்றி எடுத்துக்கூறி இக்கலை
பேணிப் பாதுகாக்கும் முகமாகவே இவ்வாய்வு அமைந்துள்ளது.
உசாத்துணைகள்
1.
ஸ்ரீமான்
பாலாசாஹேப் பந்து, பி. ஏ., 1928, சூரியநமஸ்காரம், மல்லேஸ்வரம் எஸ். என். சிம்ஹ வெளியீடு
பங்களுர்.
2.
ரெங்கன்,
எம், ஜி., 1942, சூரியநமஸ்காரம், ஜி. எம் ரெங்கன் தேகப்பயிற்சி வெளியீடு, சேலம்.
3.
நவராஜ்
செல்லையா, எஸ்., 2002, பயன்தரும் யோகாசனங்கள், ராஜ்மோகன் பதிப்பகம், சென்னை.
4.
சுவாமி
அட்காதாதானந்த், ஜி., 2010, யோக - தர்ஷன், ஸ்ரீ பரம்ஹன்ஸ் சுவாமி அட்காதானந்த் ஜி ஆசிரம
அறக்கட்டளை, மும்பை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக