6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 மே, 2026

வயலூர் முருகன் முக்தி அட்டகம் - முனைவர் பீ. பெரியசாமி

 

வயலூர் முருகன் முக்தி அட்டகம்

காப்பு

(கைத்தல நிறைகனி விநாயகரைப் போற்றி)

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனைச் செந்தமிழ் பாடிடச் சீரருள் ஈவாய்

வயலூர் இறைவனின் மலரடி போற்றவே முன்னின்று காத்திடுவாய் முன்னவனே!

 

பாடல் 1: சரணாகதி

முத்தைத் தருதிருப் புகழ்மணம் கமழும் வயலூர் வாழும் குமரகுருவே

பித்துப் பிடித்தலை பேயன் எனையும் உன் பொன்னடி சேர்த்திட வேண்டுகின்றேன்

இப்பிறப் பெனும்பெருங் கடலினை நீந்திட ஏதுமோர் வழியிலை எனக்கிறைவா

மெய்ப் பொருள் நீயென உனைச்சரண் அடைந்தேன் வேலவா முக்தியைத் தந்தருள்வாய்!

 

பாடல் 2: வேண்டுதல்

சந்தத் தமிழ்தந்த அருணகிரி நாதர்க்குத் தாளம் வழங்கிட வந்தவனே

பந்தப் பாசங்கள் அறுத்திட உனது வேற்படை ஏந்திநீ வந்திடுவாய்

இந்த உடலினை நிலையென நம்பி இளைத்தேன் எளியேன் இனிப்பொறேன்

வந்தெனை ஆட்கொண்டு வயலூர் அமர்ந்தவா முக்தியைத் தந்தருள்வாய்!

 

பாடல் 3: சரணாகதி

வாழிட மென்றுயான் வாழ்ந்தஇப் பூமியில் வந்தன துன்பங்கள் ஓயவில்லை

ஏழிசை நாயகா உன்புகழ் பாடிட எண்ணமும் செயலும் இணையவில்லை

பாழிடம் என்றெனைப் பாராதுன் கருணைப் பார்வையால் எனைமாற்றி விடு

வேழ முகவனின் தம்பியே வயலூரா முக்தியைத் தந்தருள்வாய்!

 

பாடல் 4: வேண்டுதல்

வள்ளி மணாளா வான்புகழ் தேவா வயலூர் மருவும் சண்முகனே

அள்ளி யணைக்கும் தாயினைப் போல அடியேன் பிழையைப் பொறுத்திடுவாய்

கள்ளிடை நாறும் மலரெனக் கசந்தஎன் கர்ம வினைகளைத் தீர்த்திடுவாய்

வெள்ளி மயிற்பரி ஏறிநீ வந்தென் முக்தியைத் தந்தருள்வாய்!

 

பாடல் 5: சரணாகதி

"முத்தைத் தரு"வென அடியெடுத்துத் தந்த முக்கண்ணன் ஈன்ற முதிர்கனியே

சொத்தைத் தமிழைச் சுவைக்கின்ற தேவே சூரன் தனைவென்ற காவலனே

பத்தர்கள் போற்றும் பன்னிரு கரத்தனே பாதம் ஒன்றே கதியெனவே

மெத்தவும் உன்னையே நம்பி நின்றேனுக்கு முக்தியைத் தந்தருள்வாய்!

 

பாடல் 6: வேண்டுதல்

அறுமுகங் கொண்டு அமர்ந்தோய் வயலூரில் ஆறுதல் தந்தெனை ஆட்கொள்வாய்

மறுபிறப் பென்னும் மாயையில் சிக்கி மாய்ந்திட விடாதே மால்மருகா

உறுதுணை நீயன்றி வேறெவர் இங்குண்டு உள்ளக் கவலைகள் ஒழித்திடுவாய்

வெறுமை அகற்றி விமலனே அடியேற்கு முக்தியைத் தந்தருள்வாய்!

 

பாடல் 7: சரணாகதி

திருவடி நீழலே தவம்செய்மிடமெனத் தெளிந்தேன் வயலூர் மன்னவனே

வருவதும் போவதும் உன்னருள் என்றே வாழ்ந்திட நீயருள் செய்திடப்பா

குருவென வந்துஎன் குறைதனை நீக்கிக் குமரனே எனைநீ அணைத்திடுவாய்

பெருமதி கொண்டவர் போற்றிடும் தேவா முக்தியைத் தந்தருள்வாய்!

 

பாடல் 8: பலன்

வயலூர் அமர்ந்த வேலவன் மீதிந்த அட்டகம் பாடித் துதிப்பவர்யார்

துயரம் ஒழிந்து தொல்வினை நீங்கித் தூயநல் வாழ்வு பெற்றிடுவார்

அயர்வினை நீக்கும் அறுமுகன் அருளால் அநித்திய வாழ்வு நீங்கிடுமே

உயர்கதி தந்து உமையவள் மைந்தன் முக்தியை ஈந்தே காப்பவனே!

 

சுபம்

கருத்துகள் இல்லை: