6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 மே, 2026

அன்னை மீனாட்சி செல்வப் பாமாலை - முனைவர் பீ. பெரியசாமி

 

அன்னை மீனாட்சி செல்வப் பாமாலை

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

 

1. அறம் (துணிவு, அறிவு, வலிமை, புகழ்)

அஞ்சுவ தில்லை அடியேன் உனதுஅருள் அஞ்சனம் கண்ணில் இருக்கையிலே!

நஞ்சினை உண்டவர் நாயகி நீயென் நாவினில் அறிவுப் புனலாவாய்!

வஞ்சனை நீக்கும் வலிமை தந்து வையகம் போற்றும் புகழ்தந்து

தஞ்சமென வந்த அறநெறி காக்கத் தாயே மதுரை அரசியே!

 

2. பொருள் (செல்வம், தானியம், பெருமை, நற்பேறு)

குன்றாப் பொருளும் குறையாத் தானியம் குலவிடும் இல்லம் நிறையவே!

நன்றே நினைக்கும் பெருமை தந்து நற்பே றெல்லாம் பெருகவே!

மின்றாழ் சடையான் மாறன் மகிழும் மின்னற் கொடியே மீனாட்சி!

பொன்றா நிதியம் உன்னருள் அன்றோ பொற்கமலத் தேவி அருளுவையே!

 

3. இன்பம் (அழகு, இளமை, மக்கள் பேறு, இனிய வாழ்வு)

அகத்தின் அழகும் புறத்தின் பொலிவும் அழியா இளமை ஆற்றலும்

சுகத்தைய் ஈனும் நன்மக்களும் சுற்றமும் சூழக் கருணைசெய்!

மகத்துவன் சொக்கன் மணந்த தேவி மங்கல வாழ்வின் ஊற்றேநீ!

ஜகத்தின் இன்பம் உன்னடி நிழலில் தழைக்கக் கண்டேன் சங்கரியே!

 

4. வீடு (கல்வி, வெற்றி, நீண்ட ஆயுள், பேரின்பம்)

கலையாத கல்வி வெற்றியும் தந்து காலனை வெல்லும் ஆயுள்தந்து

தொலையாத இன்பத் திருவீடு காட்டும் தூயநல் ஞானச் சுடரேநீ!

அலைபாயும் நெஞ்சம் அடங்கிட உனது அருட்பெரு வெளியில் அமர்த்திடுவாய்!

மலையத்துவசன் பெற்றெடுத்த மணியே மதுரை மீனாட்சித் தாயே!

 

 

கருத்துகள் இல்லை: